search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    • ஊட்டியிலிருந்து 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மைதானம் பகுதியில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், உத்தரபிரதேசம்,குஜராத், கர்நாடகா மாநிலம் கோலார்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை வியாபாரிகள் ஏலம் முறையில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போதிய சீசன் இல்லாத காரணத்தால் தற்போது ஒரு நாளைக்கு தலா 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    மேலும்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 25 லோடு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 20 லோடு உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500 க்கும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.750 முதல் 850 வரை விற்பனையாகிறது. இதனால் ஊட்டி உருளைக் கிழங்குகளின் விலை அதிகமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளின் விலை குறைவாகவும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • கிருஷ்ணராஜ் இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அப்பாஸை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(37). இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.

    கிருஷ்ணராஜ் கடந்த 11-ந் தேதி தனக்கு சொந்தமான ேமாட்டார்சைக்கிளை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.

    இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். தொடர்ந்து இரவு வெகு நேரமானதால் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வேலைக்கு சென்று விட்டு வந்த கிருஷ்ணராஜ் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் அண்ணாஜி ராவ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராஜின் வாகனத்தை மற்றொரு நபர் ஓட்டி சென்றது கண்டு அவரை கையும், களவுமாக பிடித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையை சேர்ந்த அப்பாஸ்(47) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சபரிகிரி (வயது27). தனியார் கம்பெணியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சபரிகிரிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார். இதையடுத்து கயல்விழி குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்ப வந்து வீட்டின் கதவை திறந்த போது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் சபரிகிரி திறக்காதால் கயல்விழி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சபரிகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
    • அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை,

    கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பெண் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த ெபண் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

    அந்த பெண்ணை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த இடத்தை மது குடிப்பதற்கும், பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு யாராவது அழைத்து வந்து உல்லாசமாக இருந்து விட்டு அந்த பெண்ணை கொலை செய்தார்களா என்றும் தெரியவில்லை.

    இதனால் அந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளங்களை அனைத்து போலீஸ்நிலையங்களுக்கும் அனுப்பி பெண் மாயம் தொடர்பாக வழக்கு எதுவும் உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண் சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை போட்ட ஜாக்கெட்டும், ஊதா நிறத்தில் வெள்ளை கோடு போட்ட துணியும் அணிந்துள்ளார். உடல் தீயில் கருகியதால் வேறு எந்த அடையாளங்களையும் போலீசாரால் தெரிவிக்க முடியவில்லை.

    இதுதவிர அந்த பகுதியில் திரியும் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தன்று அந்த பகுதிக்கு சென்றது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் தெரிந்தால் தான் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியும் என ரத்தினபுரி போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    • கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    கோவை,

    தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படுமென இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (குழாய் பதிப்பு பிரிவு) டி.எஸ் நானாவரே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், கோவையும் ஒன்று. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். உட்பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதித்து வருகிறோம்.

    கோவையில் மட்டும் 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பணி 2027-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். மற்ற மாற்று எரிபொருள்களைவிட இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி) 30 சதவீதம் விலை குறைவானது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எனவே, கோவையில் 300 இயற்கை எரிவாயு விநியோக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    மேலும், குழாய் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். தற்போது நாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாடு 6.50 சதவீதமாக உள்ளது.

    இதை 2030-ம் ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மலைப்பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிப்பது சிரமம். திரவ பெட்ரோலிய வாயுவானது (எல்பிஜி) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டுக்கு தேவையான இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) இங்கேயே போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
    • அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு தனி இடம்.

    சூலூர்,

    சூலூர் வாரச்சந்தையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்று கூடினர்.

    அப்போது வாரச்சந்தையில் விவசாயிகள் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

    வாரச்சந்தை சுங்க கட்டண வசூலிப்பாளர், விவசாயிகளுக்கு வார சந்தையில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டிய அதிகாரம் பேரூராட்சிககு உட்பட்டது.

    சந்தையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சுங்கம் வசூலிக்கவே தான் இந்த சந்தையில் ஏலம் எடுத்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு குறைவான கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு மூட்டைக்கு 50 ரூபாய் சுங்க கட்டணமாக வசூலிப்பது கூடாது என தெரிவித்தனர்.

    மேலும் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் விற்பனையாளர்களுக்கு இதனால் எவ்வித இட யூறும் ஏற்படாது என்றார்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரச்சந்தையில் கூடியதால் அப்பகுதிக்கு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மதிமுக கோவை மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு என சூலூர் வாரச்சந்தையில் தனியிடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தர். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்
    • போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தி பெற்றோரை காவல் நிலையம் வரவைத்தனர்

    கோவை,

    பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் யதுகிருஷ்ணன் (வயது 25). இவர் தனியார் லாட்ஜியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கன்னித்தமிழ் (26). கல்லூரி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். அவர்கள் கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் படி கன்னித்தமிழ் கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் யதுகிருஷ்ணனுடன் சேர்ந்து ஜோதி நகர் விநாயகர் கோவில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.

    பின்னர் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் பெற்றோரை போலீசார் பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

    இதேபோல ஆனைமலை அருகே சித்தூரை சேர்ந்த வர் தினேஷ் குமார் (26). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 2 ½ வருடங்களாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, காங்கயம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    ஒரேநாளில் பொள்ளாச்சி, ஆனைமலை போலீஸ்நிலையங்களில் 2 காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    • போலி நகைகள் கொடுத்து இதற்கு முன்னரும் மோசடி செய்துள்ளனர்.
    • காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவைப்புதூரை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65), அவரது மகன் விவேக்(35). இவர்கள் கடந்த 5-ந் தேதி காந்திபுரம் ராம் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்கு சென்று 24 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 800 பணம் பெற்றனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் நகையை ஆய்வு செய்த போது அந்த நகைகள் போலி எனவும், தங்க முலாம் பூசியது என்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தினர் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த விசு (22) என்ற பைனான்சியரிடம் தந்தை, மகன் இருவரும் தங்க முலாம் பூசிய செம்பை கொடுத்து பணம் மோசடி செய்திருப்பதும், அந்த வழக்கில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களை கைது ஜெயிலில் அடைத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலதண்டபாணி மற்றும் அவரது மகன் விவேக் மீது காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அவர்கள் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேறு நிறுத்தத்தில் இறங்கி கொள்ள ெசான்னதின் பேரில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் மோகன் பிரபு(17). பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

    இதற்காக மோகன்பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர், மோகன் பிரபுவிடம் பஸ் சிங்காநல்லூர் செல்லாது, ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு கூறினார்.

    அதற்கு அவர் கண்டக்டரிடம் ஏன் தகவல் பலகையை மாற்றாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் மோகன் பிரபுவை தகாத வார்த்தைகளால் பேசினார். பஸ்சை நிறுத்தி எழுந்து வந்த டிரைவர், மோகன் பிரபுவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி இறக்கி விட்டு சென்றார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மோகன் பிரபு ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆனந்த கிருஷ்ணன், பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீேழ விழுந்து விட்டார்.
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

    முரளி என்ற பெயிண்டர் தன்னுடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய 2 பேரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். 9.30 மணி அளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க தொடங்கினர். சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்தார். மற்ற இருவரும் கயிறை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழே விழுந்து விட்டார்.

    நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்ததின் தலையின் பின் பகுதி சுவரில் மோதியது. காயம் அடைந்த அவரை உடன் வேலை பார்த்தவர்களோ, அக்கம்பக்கத்தினரோ மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஒரு மணி நேரத்துக்கு பின் 108 ஆம்புலன்சு அங்கு வந்து சந்திரனை மீட்டுச் சென்றது. அரசு ஆஸ்பத்திரியில் சந்திரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுபற்றி வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மனித நேயம் மறத்து போய் விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

    • ரூ.6.80 லட்சத்துக்காக தந்த 5 காசோலைகளில் 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது.
    • பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் அதனால் போலீசில் புகார் செய்தனர்

    கோவை,

    கோவை போத்தனூரில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையை சேர்ந்த ஆயில் கடை உரிமையாளர் அனித் நிர்மல் ராஜ் (43) என்பவர் ரூ.6.80 லட்சத்துக்கு ஆயில் வாங்கினார். பின்னர் அதற்கு உண்டான தொகைக்கு 5 காசோலைகளை நிறுவனத்தினரிடம் கொடுத்தார். அவர்கள் அந்த காசோலையை வங்கியில் செலுத்தி ரூ.2 லட்சம் எடுத்தனர்.

    மீதமுள்ள 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது. இதனை தொடர்ந்து நிறுவனத்தினர் அனித் நிர்மல் ராஜிடம் நீங்கள் கொடுத்த காசோலைகளில் பணம் இல்லை. எனவே மீதமுள்ள ரூ.4.80 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இது குறித்து ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அனித் நிர்மல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழை பெய்துள்ளது.
    • 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் உள்ள பெள்ளாதி, மொங்கம்பாளையம், மொள்ளேபாளையம், சின்னத் தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை, கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 216 மி.மீ மழையும், குறிப்பாக அதில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 44 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெள்ளாதி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்து ஓடி வருகிறது.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியதாவது:-

    தொடர் கனமழையின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெள்ளாதி குளம் தற்போது நிறைந்து தடுப்பணையின் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதனால் தங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும், குடிநீர் பற்றாக் குறை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், குளத்தில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும் எனவும், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் பாசன வசதியினை முழுமையாக பெற முடியும். எனவே, பொதுப்பணித்துறையினர் இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×