search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர்.
    • நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் அவரை உருட்டு கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    கோவை,

    சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோவையில் உள்ள 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில அமைப்புகள் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதனை முன்னிட்டு 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி உள்ள 3 வணிக வளாகங்கள் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் தடையையும் மீறி இன்று புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள வணிகவளாகத்தை தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சர்புதீன் தலைமையில் திரண்டு முற்றுகையிட திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் தடுப்புகளையும் மீறி த.மு.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திரைப்படம் வெளியாகி உள்ள வணிக வளாகத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 வணிக வளாகங்களில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படுகிறது. பாதுகாப்பு கருதி மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் படத்தை பார்க்க வரும் போது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

    மெட்டல் டிடெக்டர் மூலமாக பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே மால்களில் அனுமதிக்கப்படுகின்றனர். உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மட்டுமின்றி கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேய்ச்சலுக்கு வந்த மாட்டை சிறுத்தை கொன்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ்.

    இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை ஒன்றை வனப்பகுதியினுள் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி இழுத்து சென்றுள்ளது.

    பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது அங்கு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை, பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிந்தராஜ் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காரமடை வனத்து றையினர், அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் வைத்து பசு மாட்டினை சிறுத்தை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுவை ஆய்வு செய்த போது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஐடிஐயின் முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
    • போலீசாரின் உதவியுடன் 17 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2017-19, 2018- 2020,2019-2021ம் கல்வியாண்டில் இங்கு ஐடிஐயில் படித்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது.

    மேலும், மாணவர்களின் கல்வியாண்டு முடிந்த பின்னரும் அவர்களுக்கான சான்றிதழை வழங்காமல் மாணவர்களை இழுத்தடிப்பு செய்ததாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன் இந்நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஐடிஐ-யில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் மற்றும் அவர்கள் கட்டணத்தை விட அதிகமாக கட்டிய ரொக்கப்பணத்தை வழங்குவதாக மாணவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனிடையே சான்றிதழ் மற்றும் பணத்தை இழந்த 17 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஐடிஐயில் படித்தபோது தங்களிடம் பணம் கையாடல் செய்துள்ளதுடன், சான்றிதழ்களும் வழங்கவில்லை என புகார் அளித்தனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், உதவி இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் உள்ளிட்டோர் ஐடிஐயின் முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

    அதன்பின் கல்லூரியில் படித்து சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் இழந்த பணத்தை விரைவில் பெற்று தருவதாக கூறியதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுச்சென்றுள்ளனர். மேலும், இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "ஐடிஐ . முதல்வர் தங்களிடம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை பணத்தை பெற்றுள்ளார். ஆனால், கூடுதலாக பணம் கட்டினால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என தொடர்ந்து தங்களிடம் கூறி வந்தார். ஆனால், நாங்கள் கல்லூரிக்கு கட்ட வேண்டிய அனைத்து தொகைகளையும் கட்டியுள்ளோம். இவர் எங்களிடம் பெற்ற பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் கட்டவில்லை என நிர்வாக அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். எனவே, எங்களுக்கு கல்விச்சான்றிதழையும், எங்களிடம் பெற்ற கூடுதல் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். போலீசாரின் உதவியுடன் 17 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

    இதுகுறித்து கல்லூரியின் செயலாளர் கூறுகையில்,"ஐடிஐயின் முதல்வர் தங்களது கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும், அவர் ஐடிஐயில் படித்த மாணவர்களிடம் பெற்ற கல்வி கட்டணத்தை முறையாக நிர்வாகத்திற்கு கட்டாமல் இருந்துள்ளனர். இது மாணவர்கள் மூலம் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கல்லூரியின் நிர்வாகம் தரப்பில் முதல்வருக்கு கடந்த 29-ந் தேதியில் இருந்து வரும் 12-ந் தேதிக்குள் மாணவர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சான்றிதழ் கேட்டுச் சென்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

    • சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம்புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோபனா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி ஆசிரியை சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 4 வருடத்தில் சோபனா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • சந்தன மரத்தை கடத்தியதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
    • வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (53), குணசீலன் (40), சுதாகர் (33), சரவணன்(33), ரமேஷ்(28), கோவிந்தசாமி(43), இளவர சன்(33) ஆகிய 7 பேரையும் பிடித்தனர்.

    மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற அவர்கள் மீது கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெட்டி கடத்திய மற்ற 5 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.
    • வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். நேற்று மாலை அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவைகள் 5 பேருக்கு வழங்கினார்.

    கீழ்புனாச்சி ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் வனப்பகுதிக்குள் புதர் போல் காணப்படும் உன்னி செடியிலிருந்து சேர், டேபிள், அழகு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

    அதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பணம் மற்றும் பொருள் உதவி வழங்கினார். ஆதிவாசி பழங்குடியினர்களுக்கு தண்ணீர் வசதி, பொருள்கள் தயாரிக்கும் இடத்திற்கு செட், உன்னி செடிகளை கொண்டு வருவதற்கு வாகன வசதி ஆகியவைகளை வனத்துறை அமைச்சரிடம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் கண்டிப்பாக செய்து தருவதாக உறுதி அளித்தார்.

    அதன் பின்பு சில தினங்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் இரவில் அபூர்வமாக காணப்பட்ட மின்மினி பூச்சி காணொளியை பார்வையிட்டு அதை புகைப்படம் எடுத்த ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகியோர்களை வாழ்த்தினார். மேலும் வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

    ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக கூறினார்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • 2 பேர் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் சாலை வெல்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் இவரது மனைவியுடன் பெட்டி கடையில் இருந்துள்ளார்.

    அப்போது கடைக்கு வந்த ஜடையம்பாளையம் புதூர் குறிஞ்சி நகரை சேர்நத அருன்குமார் (25), சிறுமுகை சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபக்(21) ஆகியோர் கடையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் இவரது மனைவி ஆகியோரிடம் குடிபோதையில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீராமையும் இவரது மனைவியையும் அருன்குமார், தீபக் ஆகியோர் தாக்கி உள்ளனர்.

    இதையடுத்து இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அருன்குமார், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ஏகமூர்த்தி (வயது 47). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு யமுனா என்ற மனைவியும், ஹர்சிகா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஏக மூர்த்தி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார். 1-வது மலையில் சென்ற போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மருத்துவ குழுவினருடன் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    டாக்டர்கள் ஏகமூர்த்தியை பரிசோதனை செய்த போது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் டோலி மூலம் ஏகமூர்த்தியின் உடலை கீழே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. காந்திபுரம் நகர பஸ் நிலையத்திற்கு உட்புறமும் வெளிப்புறமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பானக்கடைகள் என பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர். அப்போது கடையின் உரிமையாளர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்
    • தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் கோரிக்கை களுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    • சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.
    • வன ஆர்வலர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது.

    இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.

    வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில் வன ஆர்வலர் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.

    ×