search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனவிலங்குகள்"

    முதுமலையில் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருகின்றன.
    மசினகுடி:

    இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் முதுமலை உள்பட 4 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. இந்த 4 புலிகள் காப்பகங்களில் முதுமலையில் மட்டுமே அதிக புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. தற்போது முதுமலையில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு புலிகள் வாழ ஏற்ற காலநிலை, உணவு, வாழ்விடம் போன்றவை இருப்பதே முக்கிய காரணம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக லண்டான எனப்படும் களை செடிகள் அதிக அளவில் இருப்பதால் புலிகள் மறைந்து வாழ வசதியாக உள்ளதாக கூறுகின்றனர். இதனிடையே மழை காலத்தில் முதுமலை வனப்பகுதி பச்சை பசேல் என காட்சி அளிக்கும்.

    அப்போது புதர்களில் புலிகள், காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என எந்த வனவிலங்குகள் இருந்தாலும் அவற்றை நாம் எளிதில் பார்க்க முடியாது. ஆனால் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்பதால் முதுமலையில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதி பசுமையை இழந்து காணப்படும்.

    குறிப்பாக மரங்கள் இலைகள் இன்றி காட்சி அளிக்கும். புதர்களில் உள்ள செடிகளில் இருக்கும் இலைகளும் கீழே விழுந்து விடுவதால், அங்கு வனவிலங்குகள் மறைந்திருந்தாலும் எளிதில் பார்க்க முடியும். இதனால் கோடை காலத்தில் அதிகமான வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் காண முடியும். இந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் முதுமலையில் கோடை காலம் தொடங்கி கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டுத்தீயும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டுயானைகள் என வனவிலங்குகள் புதர்களில் இருந்து வெளியே வருவதை அடிக்கடி காண முடிகிறது.

    காலை அல்லது மாலை நேரங்களில் புலிகள் காப்பகத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ள சாலை ஓரங்களில் உலா வரும் இந்த வன விலங்குகள் வனத்துறை ஊழியர்களையோ அல்லது சுற்றுலா பயணிகளையோ பொருட்படுத்தாமல் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுக்கின்றனர்.

    வாகன சவாரியின்போது சுற்றுலா பயணிகள் பார்க்கும் புலி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை, பார்த்த இடம் மற்றும் நேரம் ஆகிய தகவல்களும் தெப்பகாட்டில் உள்ள முன் பதிவு மையத்தில் தினந்தோறும் எழுதி வைக்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உள்ளிட்ட காரணங்களால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
    தேன்கனிகோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகேயுள்ள நாட்ராம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெம்பன் மற்றும் சிவனப்பா. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். நேற்று இரவு வனவிலங்குகளை வேட்டையாட அதேபகுதியில் உள்ள பஞ்சள்துணை என்ற கிராமத்திற்கு இவர்கள் சென்று உள்ளனர். 

    அப்போது அங்கு சித்தராமையா என்பவரின் வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் இருவரும் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கிய அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி 2 பேர் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் பணிகளை தொடங்கி வைத்தார். வரும் 18-ம் தேதி வரை பணி நடக்கிறது.

    இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்பர்கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்கள் குறித்தும், கணக்கெடுப்பு நடத்துகின்றனர். வன சரக அலுவலர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன், அப்பர்கோதையாறு பாலாஜி ஆகியோர் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். கணக்கெடுப்பின் போது செங்கல்தேரி வனப்பகுதியில் புலிகளின் கால்தடங்கள், எச்சங்கள் கிடைத்துள்ளன.
    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி காணப் பட்டது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. இந்த நேரத்தில் கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

    இதனால் சுற்றுலா தலங்களை கண்டு களித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மலை அணில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் முதுமலை பகுதிக்கு திரும்பியது.

    தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரூ- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகள் அதிகமாக தென்படு கிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு களிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் வாகனங்களை நிறுத்தி கூச்சலிட்டு வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    அவ்வாறு தொந்தரவு செய்யும் போது காட்டு யானைகள் திடீரென தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
    ×