search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
    • பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

    பெங்களூரு:

    அசாமை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான பாத்திமா கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக அரசு பஸ்சில் சென்றார். அவருடன் மகன் மற்றும் மாமியாரும் சென்றனர்.

    அந்த பஸ்சில் வசந்தம்மா (52) என்ற பெண் கண்டக்டராக இருந்தார். பஸ், ஹாசன் அருகே உதயாபுரா பகுதியில் சென்றபோது, பாத்திமாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது மாமியாரும், பஸ்சில் பயணம் செய்த சக பயணிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

    பின்னர் அவரை பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை சாலையோரம் நிறுத்த சொல்லிய வசந்தம்மா, பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டார். பின்னர் தான் வைத்திருந்த பெட்சீட்டை வைத்து மற்ற பெண் பயணிகள் உதவியுடன் பஸ்சில் வைத்தே பாத்திமாவுக்கு வசந்தம்மா பிரசவம் பார்த்தார்.

    அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சக பயணிகள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். அந்த பெண், ஏழ்மையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா, தன்னிடம் இருந்த பணம் மற்றும் சக பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.1,500-ஐ அவரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், அவரது பச்சிளம் பெண் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் சாந்திகிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தனர்.

    பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு தான் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பாத்திமாவுக்கு அவர் பிரசவம் பார்த்தார்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்த கண்டக்டர் வசந்தம்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
    • தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் அன்னவாசலில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து வெள்ளையம்மாளை ஏற்றிக்கொண்டு பரம்பூர் அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை சுபாஸ் சந்திரபோஸ் ஓட்டினார். அப்போது வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே வெள்ளையம்மாளுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் அருண்பாண்டியன் பிரசவம் பார்த்தார். இதில் வெள்ளையம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் பரம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    • கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
    • தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து சென்ற போது பிரசவம்
    • பிரசவம் பார்த்த இருவருக்கு உறவினர்கள் நன்றி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி(வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் தனலட்சுமி தற்போது 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் சின்னவெண்மணி கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கு பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த தனலட்சுமியை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பிரசவ வலி அதிகமானதால் உடனடியாக அவசரகால மருத்துவ நுட்புனர் ஆனந்தராஜ் அவருக்கு முதலுதவி அளித்தார். அப்போது செல்லும் வழியிலேயே தனலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாயையும், சேயையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனலட்சுமியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் பாபுவிற்கும், முதலுதவி சிகிச்சை அளித்த ஆனந்தராஜுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    ஓட்ஸ் கஞ்சி, காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிடவேண்டியது அவசியம். ஒவ்வோர் இரண்டு, மூன்று மணிநேர இடைவெளிக்கும் நடுவே உணவு உட்கொள்ளலாம். இனிப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது, பால் அருந்துவது நல்லது. சுறா வகை மீன்களைச் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும். தண்ணீர் தினசரி நான்கு லிட்டர் பருகலாம். புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்புக்கு மிகவும் நல்லது. முட்டை, பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    • மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.
    • இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    "வைத்தியர் ஐயா, புதுசா கல்யாணமான என் பொண்ணு வாந்தி வாந்தியா எடுத்து, மயக்கம் போட்டு விழுந்துட்டா, நீங்க தான் வந்து என்னனு பாத்து நல்ல செய்தியா சொல்லணும்" என்று திருமணமான புதுமணப்பெண்ணின் வாந்தி, பித்த வாந்தியா? அல்லது கர்ப்ப வாந்தியா? என்று நாடி பார்த்து கணித்து சொல்லும் காலம் மலையேறிவிட்டது. இனி அதைப்போன்ற காட்சிகளை பாக்கியராஜ் படங்களில் தான் பார்க்க முடியும். நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளும் பரிசோதனை கிட் வைத்து மாதந்தோறும் பரிசோதனை செய்து அவர்களே உறுதி செய்துகொள்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    திருமணமான அடுத்தடுத்த மாதங்களில் சிறுநீர் சோதனை அட்டையில் இரட்டை கோடு வந்ததும் தம்பதிகளுக்கு அளவளாவிய மகிழ்ச்சி. பெண்கள் தம் வயிற்றில் கருவை சுமப்பதில் தான் (மகப்பேறு காலம்) அவர்களுக்கு உச்சகட்ட ஆனந்தம். அவர்களுக்கு தாய்மை மிகப்பெரிய பரிசு. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக இருப்பது என்பது மிகச்சிறந்த உணர்வு. அத்தகைய மகப்பேறு காலத்தில் அவர்கள் சமாளிக்கும் உடல் உபாதைகள் ஏராளம். மகப்பேறு காலத்தின் முதல் 3 மாதங்களில் மசக்கை எனும் கர்ப்பகால வாந்தியை சமாளிப்பது பலருக்கு மிகக்கடினம்.

    சிலருக்கு இந்த மசக்கை கர்ப்பகாலம் முழுவதும் குமட்டி, குமட்டி வாந்தி எடுக்கும் நிலை, மகளிரை துன்புறுத்தும். கர்ப்ப காலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன் முக்கியமாக பீட்டா-எச்சிஜி எனும் சுரப்பு அதிகரிப்பால் இந்த மசக்கை உருவாகும். திருமணமான பெண்கள் மாதவிலக்கு தள்ளி போவதுடன் இந்த மசக்கை உண்டாவதை கர்ப்ப காலத்தின் அடையாளமாக கொள்ளலாம். உண்ட உணவு சிறிது கூட வயிற்றில் தங்காமல் அப்படியே வாந்தியாகி பெண்களை சோர்வடையச்செய்யும். அதற்கான தீர்வை தேடுபவர்கள் ஏராளம்.

    கர்ப்ப காலத்தில் மருந்துகளை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை உலக அளவில் விடுத்த முதல் நிகழ்வு 1960 களில் நடந்த தாலிடோமைடு என்ற மருந்தால் ஏற்பட்ட விபரீதம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தது. என்னவெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மசக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட இந்த மருந்தால் ஜப்பான், கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறந்த சிசுக்கள் பலவும் கை,கால் குறைபாடுள்ளவையாக இருந்தது குறிப்பிடத்தக்க வருத்தம் தரும் நிகழ்வு. ஆனால் அவர்களுக்கு சித்த மருத்துவம் தரும் எளிய மருந்து 'மாதுளை மணப்பாகு'.

    சித்த மருத்துவ கணிப்புப்படி அதிகரித்த பித்தம் ஒன்றிணைந்து, இந்த மசக்கையை உண்டாக்குவதால் மாதுளை பித்தத்தை குறைத்து வாந்தியை நிறுத்தும் தன்மை உடையது. இது மிகவும் பாதுகாப்பானது. மாதுளையில் அதன் நிறத்திற்கு காரணமான அதிகப்படியான ஆன்தோசயனின் நிறமிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தையும் நல்ல போஷாக்கையும் அளிக்கும் மாதுளம் பழம் என்பது பலரும் அறிந்தது. அதனைக் கடந்து கர்ப்பகாலத்தில் மாதுளை பழச்சாற்றினை எடுத்துக்கொள்ள பிறக்கும் குழந்தை அழகாகவும்,புத்தி தெளிவாகவும் பிறக்கும் என்பது வாய்மொழி செய்தி அந்த வரிகளை உறுதி செய்கின்றன நவீன அறிவியலின் சில ஆய்வுகள்.

    மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் தன்மையுள்ள பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு நன்மையையும் தோலிற்கு அழகையும் கொடுக்கக்கூடியது. அதில் உள்ள வேதிப்பொருட்களால் கர்ப்பகாலத்தில் கருவின் மூளையில் ஏற்படும் காயங்களை தடுத்து, புத்தி தெளிவை உண்டாக்குவதாக எலிகள் மீது நடத்திய ஆய்வுமுடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் நஞ்சுக்கொடியின் அழுத்தத்தை குறைத்து, தடைபட்ட கருவளர்ச்சியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு மருத்துவ பயன்களை 'மாதுளை மணப்பாகு' அள்ளிக்கொடுக்கும்.

    மாதுளை மட்டுமல்லாமல் மசக்கையில் பலனளிக்கும் பல மூலிகை கடைசரக்குகள் உள்ளது. மசக்கையில் இருந்து விடுபட இஞ்சியை அவ்வப்போது நீரில் அல்லது பாலில் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளலாம். பல வெளிநாடுகளில் கூட 'மார்னிங் சிக்னஸ்' எனப்படும் மசக்கை வாந்தியை கட்டுப்படுத்த இஞ்சியை மருந்தாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாலில், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொண்டாலும் வாந்தி குறையும். டீ, காபிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். புதினா இலைகளை தேநீராக்கி குடிப்பதன் மூலமும் பலன் பெறமுடியும். கர்ப்ப காலத்தில் மசக்கை வாந்தியால் ஏற்படும் சத்துக்கள் இழப்பையும், கருவில் வளரும் மகவுக்கு தேவையான போஷாக்கையும் ஈடுகட்ட இரும்புசத்து மாத்திரைகளையும் பாதுகாப்பான சத்துமருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

    சித்த மருத்துவத்தில் உள்ள 'அயசெந்தூரம்' மற்றும் 'அன்னபேதி செந்தூரம்' ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அத்துடன் நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்து, சத்துக்களை உள்ளடக்கிய அமிர்த பெட்டகமாக உள்ளதால் அதனையும் எடுத்துக்கொள்ளலாம். அதியமான் அவ்வைப்பாட்டிக்கு கொடுத்த நெல்லிக்கனியைப் போல, பெண்கள் தம் கருவில் உள்ள மகவிற்கும் கொடுத்து வருங்கால சந்ததியின் ஆயுள்ரேகையை கருவிலேயே உறுதிசெய்யலாம்.

    மேலும் 'கருவேப்பிலை சூரணம்' எனும் சித்த மருந்தையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து அனீமியா எனும் ரத்தகுறைவு நோய்க்கு தீர்வு தரும். கருவேப்பிலை ஈர்க்கினை சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமிட்டு குடிப்பதாலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இயற்கையாய் கூடும். மசக்கை வாந்தியும் நிற்கும். கர்ப்ப கால அசீரணமும் நீங்கும். மசக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அசீரணம், புளியேப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் ஏற்பட்டு அவர்களைத் துன்புறுத்தும். இதற்கு ஏலக்காய் முதன்மையாக சேர்ந்த 'ஏலாதி சூரணம்' என்ற சித்த மருந்து உதவும்.

    அவ்வப்போது இதனை எடுத்துக்கொள்ள நன்மை தரும். மேலும் இதனால் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் தோலில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம் குறையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு பகுதியில் வலி போன்ற உபாதைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நல்லது. இந்த வலிகளுக்கு வெளிப்பிரயோக சித்த மருந்துகளை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மிக்கது உள் மருத்துவம் மட்டுமல்ல. வெளி மருத்துவமும் கூட தான். அந்த வகையில் இடுப்பு பகுதிகளை வன்மையாக்க 'உளுந்து தைலம்' என்ற சித்த மருந்து நற்பலன் தரும்.

    அதை ஐந்தாம் மாதம் முதலே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த துவங்குவது நல்லது. வலியை குறைக்க 'பிண்ட தைலம்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். 'குந்திரிக்க தைலம்' என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவ தசைகள் தளரும். மகப்பேறுகாலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் பருவங்களில் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சித்த மருத்துவம் பட்டியலிடுகிறது. அவற்றை முறையாக சித்த மருத்துவர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவத்திற்கு வழிகோலும்.

    மாறாக, நஞ்சுக்கொடி மகவின் கழுத்தை சுற்றி இருத்தல், அதிக எடை உள்ள மகவு, அதிக ஆபத்துமிக்க பிரசவம் என்று கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரசவத்திற்கு பின் நல்லபலன் தரும். கர்ப்ப காலத்தில் கடைசி மாதங்களில் 'பாவனபஞ்சாங்குல தைலம்' என்ற சித்தமருந்து பெரும் பயனளிக்கும். கருப்பையானது விரிவடையும் போது அதன் பின்பகுதியில் உள்ள மலக்குடலை அழுத்தும்போது மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவே பின்னாளில் பல பெண்களுக்கு மூலவியாதிக்கு வித்திடும். அவர்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை பயன்படுத்த கர்ப்ப சூடு, சிறுநீர்ப்பாதை எரிச்சல், மலச்சிக்கல் இவற்றை போக்கும்.

    மேலும் கர்ப்பத்தில் குறைவான பனிக்குடநீரைக் கொண்டுள்ள பெண்களுக்கு தண்ணீர்விட்டான் எனும் மூலிகை சேர்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். நவீன வாழ்வியலில் துரித உணவுகளை அதிகம் நாடும் பெண்கள் கர்ப்ப காலத்திலே சர்க்கரை நோயில் அகப்பட்டு கொள்வதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது. நடை பயிற்சி, உடல் பயிற்சி, இயற்கை உணவு முறைகள் இவற்றை பின்பற்ற மறந்தக்காரணத்தால் 'ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' எனும் கர்ப்ப கால நீரிழிவு பலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் மாறிவிடுகிறது.

    அதற்காக சித்த மருத்துவம் கூறும் உணவு முறைகளும், மருத்துவ முறைகளும், யோகாசன பயிற்சி முறைகளும் பின்பற்றுதல் அவசியம். அந்த வகையில் மற்றொரு சவாலான நோய்நிலை கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் அதாவது 'ஜெஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன்'. இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

    இல்லாவிட்டால் பிரசவகாலத்தில் வலிப்பினை ஏற்படுத்தி பல்வேறு சிக்கல்களை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்தும். பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் சித்த மருத்துவம் கூறும் யோகாசனப் பயிற்சிகளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தனித்தனி முறைகளை பயிற்சி செய்து வருவது நல்லது. இதனால் தாய்க்கு மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். கருவில் வளரும் மகவுக்கும் ஆரோக்கியம் கிட்டும்.

    முதல் மூன்று மாதங்களில் தாடாசனம், உத்தனாசனம், சேது பந்தாசனம், பூர்ணதிதலி ஆசனம், கட்டிசக்ராசனம் ஆகியவற்றுடன் பிராணாயாமம் செய்தல் சிறப்பானது. கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்களில் தாடாசனம், கட்டி சக்ராசனம், வஜ்ராசனம், அனந்தாசனம், சீதலி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம் இவற்றை பயிற்சி செய்தல் நல்லது. கடைசி மூன்று மாதங்களில் அர்த்த திதலி ஆசனம், பூர்ண திதலி ஆசனம், பிராணாயாமம், தியானம், மற்றும் ஓய்வு நிலை பயிற்சிகளை செய்தல் நல்லது. இவை சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

    கர்ப்ப காலத்தின் போது கணவனின் கையைப்பிடித்து சிறிது தூரம் மேற்கொள்ளும் உல்லாச நடை கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தை உண்டாக்கி மன உறுதியையும், ஆனந்தத்தையும் தரும். இதனை புரிந்துகொண்டு ஆண்கள் செயல்படுவதும், அவர்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவரச வாழ்வியலில் அவசியமான ஒன்று. இயற்கை உணவும், வாழ்வியல் நெறிமுறைகளும், இன்னும் பல சித்த மருத்துவமுறைகளும் காலம் கடந்து நம்மை காத்துக்கொண்டு நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நலப்பெட்டகமாக உள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்தல் எளிய சுகப்பிரசவத்திற்கு மட்டுமின்றி மெய்நலத்திற்கும் வழிவகுக்கும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
    • பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவையை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவருக்கு கடந்த வருடம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள நல்லபுள்ளியை சேர்ந்த அனிதா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அவர்களது ஊரான நல்லபுள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இதற்கிடையே பிரசவத்தின்போது, அனிதாவுக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே தாயும், சேயும் இறக்க காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயும், சேயும் மரணம் அடைந்தது குறித்து அறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கேரளாவில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்
    • அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை.

    தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்; எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

    குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

    இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.

    சிசேரியனுக்குப் பின்…

    சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

    அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.

    • சிசேரியன் அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
    • அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.

    இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

    குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.

    குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.

    • துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.
    • ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும்.

    பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், காலம் முழுவதும் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் நோய்நிலைகளுள் முக்கிய இடம் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். அதில் மூலநோயின் வலியும், வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எதிரிக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது என எண்ணுவார்கள் இந்நோயால் அவதிப்படுபவர்கள்.

    மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமும், மறந்து போன பாரம்பரிய வாழ்வியல் நெறிமுறைகளும் மூலநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாக உள்ளன என்பது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், பெண்களுக்கு பிரசவ காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் கருவில் உள்ள மகவு கருப்பையில் வளர்ந்து அதன் பின்னே உள்ள மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது.

    கிட்டத்தட்ட 40 சதவீதம் பெண்கள் பிரசவத்தின் போதும், பிரசவத்தின் பின்னரும் மூல நோய்குறிகுணங்களால் அவதியுறுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. இந்த வருத்தமளிக்கும் புள்ளி விவரம் பல ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நோயின் தாங்க முடியாத குறிகளோடு, பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டி, குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உரியது. இத்தகைய குணத்திற்கே பெண்களுக்கு விருதுகள் பல குவியவேண்டும். ஆனால் எதையும் எதிர்நோக்காமல் அன்றாட வாழ்வினை நகர்த்துவது அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.

    'குழந்தை பிறந்து நாலு நாள் தான் ஆச்சு, மலம் கழிக்கும் போது ரத்தம் சிதறுகிறது அதோடு வலியும் எரிச்சலும் அதிகமா இருக்கு' என்று மருத்துவரை அணுகும் பெண்கள் பலர் இத்தகைய வேதனையை எண்ணித் துடிப்பது அதிகம். பிரசவத்திற்கு பின்னர் கருப்பையில் இருந்து வெளியேறும் குருதியுடன், மூலநோயில் வெளிப்படும் குருதியும் ஒன்று சேர்ந்து பெண்களை ரத்த சோகை நோய்க்கு அடிமையாக்கி இன்னும் உடலை சோர்வாக்கும். இந்த மன வேதனையால் தாய்ப்பால் சுரப்பும் குறையக்கூடும்.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமும்,பித்தமும் மலக்குடலில் ஒன்றிணைந்து மூல நோயை உண்டாக்குகிறது. இதனை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்ற தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணப் பாடல் வரிகளால் அறியலாம். அதாவது மலக்குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றிணைந்து மலச்சிக்கலையும், நோய்நிலையையும் உண்டாக்கி குறிகுணங்களை தோற்றுவிக்கிறது.

    ஆகவே வாதம்,பித்தம் தணிக்குப்படியான அதாவது வாயுவையும், சூட்டையும் குறைக்கும்படியான சித்த மருத்துவம் கூறும் மூலிகைகளை பயன்படுத்த மூல நோயில் நல்ல தீர்வு எட்ட முடியும். சோற்றுக்கற்றாழை, கடுக்காய், திரிபலை, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணை, பிரண்டை, வெங்காயம், துத்தி போன்ற பல எளிய மூலிகைகள் மூலநோய்க்கு பயன்தருவதாக உள்ளன.

    சுவைகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆறு சுவைகளும் நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டுவது அவசியம். இனிப்பையும்,காரத்தையும் அதிகம் கொண்டாடும் நாம் மற்ற சுவைகளை கொண்டாடுவதில்லை. சுவை மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தின் ஒரு அங்கம். ஆறு சுவைக்கும், உலகில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும், உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக, ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் ஆறு சுவைகளும் கொண்ட ஒன்று எளிய சித்த மருத்துவ மூலிகையான 'கடுக்காய்' தான். இந்த கடுக்காய் மூல நோய் வகைகள் அனைத்திற்கும் நல்ல பலன் தரக்கூடியது.

    மூலநோயில் மகத்துவமிக்க மூலிகையான துத்தி இலை என்ற கீரையை அறிந்திடாத தமிழ் சமூகம் இல்லை எனலாம். துத்தி கீரை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உண்டாகும் வீக்கத்தை குறைத்து அதன் வலி, வேதனையை போக்கும். பிரண்டை எனும் எளிய மூலிகையும் மூல நோயில் நிவாரணம் தரும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்த்துகொள்வது என்பதும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும் எளிய வழி.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபலை எனும் மருந்து வீக்கத்தை குறைப்பதுடன் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையை குறைக்கும். இதனை மோரில் கலந்து எடுத்துக்கொண்டால் பலன் தரும். தொட்டால் சிணுங்கி என்ற தொட்டால் இலைகள் சுருங்கும் தன்மையுடைய மூலிகை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் இலைகள் பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் வாதத்தையும்,பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும்,பேதி மருந்துகளை எடுத்தலும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். சித்த மருத்துவம் கூறும் எளிமை வழிமுறையாக ஆமணக்கு எண்ணெய்யை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறைந்து நோய்குறிகளை குறைக்கும். மூலநோயில் எரிச்சலால் அவதியுறும் பெண்கள் கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும். இதனை 'குமரி எண்ணெய்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.

    மூல நோயில் உண்டாக்கும் ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்க்கலாம்.

    ழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும். இம்பூறல் எனும் மூலிகை ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம். மேலும் சங்கு,சிலாசத்து, படிகாரம், நாகம் ஆகிய உபரச,உலோகப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பற்ப மருந்துகளும் இந்நோய் நிலையில் உதவும்.

    மூல நோயால் அவதியுறும் பெண்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவுமுறைகளை பின்பற்றுவது அவசியம். வாழை,உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், டீ,காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். ஆகவே பெண்கள் அவரவர் உடல் நிலைக்கு பொருந்தும்,பொருந்தாத உணவுகளை அறிந்து எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். இது மூலம், ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரும். இதனை சித்த மருத்துவம் 'மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்று குறிப்பிடுகிறது.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கருணைக்கிழங்கு லேகியமும், தேற்றான் கொட்டை லேகியமும் மூல நோயால் அவதியுறும் பெண்களுக்கு பெரிதும் உதவும். இதனை இன்னும் சில சித்த மருந்துகளோடு ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால் நோய்நிலையில் மாற்றம் வரும். மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம்,சிவதை சூரணம் ஆகிய சித்த மருந்துகள் உதவும்.

    ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும். இது 'குழந்தைகளை தாய்போல் வளர்க்கும்' என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கலை தீர்க்கவும், உட்சூட்டைக் குறைக்கவும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள நார்சத்து மூலநோயில் நன்மை பயப்பதோடு, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.

    எண்ணெய் தோய்ந்த பொருட்களும், மசாலா மிதக்கும் பொருட்களும், அசைவ உணவுகளும் குடலில் வாதம் மற்றும் பித்தத்தைக் கூட்டி மூல நோயாளிகளின் வலியை,வேதனையை பெருக்கி மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தும். ஆகவே நவீன வாழ்வியலை விடுத்து, துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.

    மூலநோய் எரிச்சலுக்கு எளிய வீட்டு வைத்திய மருந்து மோர் தான். மோரை உணவுப்பொருளாக பார்க்காமல் மருந்தாக பார்ப்பது சித்த மருத்துவம். அதனை மூல நோயின் எரிச்சலால் அவதிப்படும் பெண்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. எளிமையாக சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய்யை பயன்படுத்த நோய்க்காரணத்தை குறைத்து நன்மை பயக்கும். எரிச்சல் உள்ளவர்கள் அவ்வப்போது சீரகம் அல்லது சோம்பு இவற்றில் ஒன்றை கசாயமிட்டு குடிக்க குறிகுணங்கள் விரைவில் மாறும். மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் பயன்படுத்தலாம். நார்சத்து அதிகமுள்ள பிஞ்சு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கி மூலநோய் மற்றும் ஆசனவெடிப்பு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    மூலக்குடோரி தைலம் என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. அதாவது கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெய்யும் சேர்ந்தது தான் இந்த மருந்து. மிக எளிய மருத்துவ முறைகளே சித்த மருத்துவத்தில் பல்வேறு வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்து மூல நோயின் எரிச்சலை போக்கும்,உட்சூட்டினை நீக்கும். இதில் சேரும் குங்கிலியம் எனும் மூலிகைப்பிசின் பித்தத்தை குறைத்து வீக்கத்தை குறைக்கும்.

    மூல நோயால் அவதியுறும் பெண்கள் சித்த மருத்துவம் கூறிய ஆசனப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். பாலாசனம், பாவன முக்தாசனம், வஜ்ராசனம், விபரீத கரணி, பத்த கோணாசனம், அர்த்த மச்சேந்திராசனம், ஹாலாசனம் ஆகிய ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ள அபானவாயு வெளியேறி மூல நோயின் வேதனையை குறைக்கும். அதோடு சீரணத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும். அத்துடன் இடுப்பு தசைப் பயிற்சி செய்வதும் நல்லது.

    மூல நோயின் பெரும்பாலான அறிகுறிகள் குழந்தை பிறப்புக்கு பின்னர் தன்னிச்சையாகவே பல பெண்களுக்கு குறைந்துவிடுகிறது. உணவில் நார்ச்சத்து அதிகரிப்பதன் மூலமும், மலச்சிக்கலை போக்குவதன் மூலமும் இந்த நோய் நிலையின் குறிகுணங்களில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.

    காலை விரதமும், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதும், தினசரி ஒரு லிட்டருக்கு குறைவான நீராகாரங்களை எடுத்துக்கொள்வதும், உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளாததும் மூலநோயில் தாபிதத்ததை உண்டாக்கி குருதிப்போக்கை உண்டாக்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    இந்த ஆய்வுமுடிவுகள் கூறுவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவம் கூறிவிட்ட மூலநோய்க்கான காரணமுறைகளோடு பொருந்துவது என்பது ஆச்சர்யத்திற்குரியது. ஆக சித்த மருத்துவம் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்தலே அடுத்த தலைமுறையை நோயிலிருந்து காத்து மகிழ்ச்சியான வளமான வாழ்விற்கு அடித்தளமிடும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • தற்போது 'சிசேரியன்' பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.
    • உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.

    கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது 'சிசேரியன்' எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி.

    சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.

    சிசேரியன்: குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல் நலம் காரணமாக, தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.

    தற்போது சிசேரியன் அதிகரிக்க காரணம் என்ன?

    தாமதமான திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவ தால் 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையே சிசேரியன் அதிகரிக்கக் காரணம். இது தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சிசேரியன் செய்ய நேரிடும்.

    சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை மருத்துவர்கள் எப்போது தீர்மானிக்கிறார்கள்?

    கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதைப் பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. அதே சமயம், கடைசி நேரத்தில் சிசேரியன் தேவைப்படும் சூழலும் ஏற்படும். இரட்டைக் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் சிசேரியன் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, தாய் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.

    முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதா?

    முதல் குழந்தை பிறப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கர்ப்பப்பையை குறுக்கே வெட்டி தையல் போட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்கையில் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டு.

    சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி எப்போதும் அவசியம். உணவு முறையிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    ×