search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம்"

    • மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த 5-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் 6 காலங்களில் நடந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது. இங்குள்ள ஒரு அறைக்கு உள்ளே சென்ற வள்ளலார், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, அங்கு சித்தி பெற்றார். அந்த அறை திறக்கப்பட்டு, தீபம் காண்பிப்பதே திருஅறை தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

    அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்தில் நடந்த திருஅறை தரிசனத்துக்காக, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியை சத்திய ஞானசபையில் இருந்து பூக்களால் அலங்கரித்து காலை 6 மணிக்கு தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகையை ஊர்வலம் சென்றடைந்தது. இதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. திருஅறை முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற்றது

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க நடந்தது.
    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்டவை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவராய நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம் செய்து 6 கலசங்கள் வைத்து கலசபூஜை, மாங்கல்யபூஜை, ஸ்கந்த யாகம், சுப்ரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கான சடங்குகள் நடைபெற்றன.



    பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.10 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’ ‘ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனைக்கு பின் ஓதுவார்கள் தேவாரம் பாடினர். பின்னர் கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண விழா நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சுந்தரமூர்த்திசிவம், சந்திரமவுலி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் உமா, சவுமிய நாராயண கவராய நாயக்கமார் கட்டளை உறவின்முறை தக்கார் பாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வெங்கிடுசாமி, நிர்வாகிகள் பரமானந்தம், பரசுராமன் மற்றும் 11 ஊர் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    தைப்பூசம் என்றதும் பழநியும் பாத யாத்திரையும்தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    தைப்பூசம் என்றதும் பழநியும் பாத யாத்திரையும்தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள். பாதயாத்திரையாக பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்த பூமியல்லவா செட்டிநாடு.

    திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், கோவை, பொள்ளாச்சி, பட்டுக் கோட்டை, அறந் தாங்கி என பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத் திரையாக பழநிக்கு வருகின்றனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது செட்டிநாடு. தொடங்கி வைத்த பெருமைக்குரியவர்கள் நகரத்தார் எனப்படும் செட்டிமக்கள்தான்.

    வியாபாரம், செழிப்பதற்கு இறையருளே காரணம். அதன் மூலம் கொழிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, இறைவனுக்கே போய்ச்சேர வேண்டும் என விரும்பி, அதை செயல்படுத்தியும் வருகின்றனர் செட்டி மக்கள். ஆன்மிகம், வியாபாரம் இரண்டும் இரண்டு கண்கள் அவர்களுக்கு காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை முதலான பெரிய நகரங்களைக் கொண்ட அற்புதமான பகுதி செட்டிநாடு.

    மலேசியா, சிங்கப்பூர் என கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்றவர்களில் பெரும்பாலானோர் செட்டிமக்கள்தான். கடிதமோ கணக்கோ பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, அடுத்து ‘சிவமயம்‘ என்று எழுதுபவர்கள். சிவனாருக்கு தரும் முக்கியத்துவத்துடன் முருகப்பனையும் வணங்கினர். தங்கள் வாரிசுகளுக்கு அழகப்பன், பழநியப்பன், வேலப்பன், முருகப்பன், முருகம்மை, தெய்வானை, அழகம்மை, வள்ளியம்மாள் என்றெல்லாம் பெயர் சூட்டினர்.

    மழைக்காலம் முடிந்து, பனிக்காலமும் கடந்த நிலையில் குதூகலமானார்கள் செட்டி மக்கள் சிலர். ‘அப்பாட இனி உப்பு வியாபாரத்துக்கு கிளம்பலாம் என சந்தோஷத்துடன், வண்டியில் உப்பு மூட்டைகளை ஏற்றியபடி ஊர் ஊராகச் சென்று விற்றனர். ஒட்டன்சத்திரம், ஆயக்குடியைக் கடந்து பழநியை நெருங்கும் போது உப்பு மூட்டைகள் அனைத்தும் வீற்றிருக்கும். கையில் உள்ள காசு பணத்தை எண்ணிப் பார்த்து இது தர்மத்துக்கு அது முருகப்பெருமானுக்கு என்று சொல்லி கொண்டு மலையேறினர். முருகனை கண்ணார தரிசித்தனர். ‘இந்தாப்பா உன் பங்கு’ என்று லாபத்தின் ஒரு பகுதியை உண்டியலில் போட்டனர். மலை இறங்கியதும் இயன்ற அளவில் அன்னதானம் செய்து வண்டி பூட்டி ஊர் திரும்பினர்.

    இப்படி செழித்து வளர்ந்த இவர்களின் கனவில் தோன்றிய முருகன், என்னை தரிசிப்பதற்காகவே பழநிக்கு வாருங்கள். நடந்தே வாருங்கள். உங்கள் வம்சத்தை இன்னும் செழிக்கச் செய்கிறேன் என்று அருளினாராம். காரைக்குடி (வெள்ளை குமரப்பச்செட்டியார்), கண்டனூர் (சாமியாடி செட்டியார்) மற்றும் நெற்குப்பை (பூசாரி செட்டியார்) ஆகிய ஊர்களில் இருந்து தனித்தனியே கிளம்பிய செட்டிமார்கள், குன்றக்குடியைக் கடந்ததும் ஓரிடத்தில் சந்தித்து பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    சேர்ந்தே பழநிக்கு நடந்து சென்று முருகனை தரிசித்தனர். இந்த மனநிறைவை ஊர் மக்களிடம் சொல்லி மகிழ்ந்தனர். பிறகு நகரத்தார் பலரும் யாத்திரை செல்லத் தொடங்கினர். பழநியும் பாதயாத்திரையும் செட்டி நாட்டில் இன்னும் பரவியது. காலப்போக்கில் நாட்டார் எனப்படும் அம்பலகார இன மக்களும் பாத யாத்திரை சென்றனர். பின்னர் அந்தப் பகுதி மக்கள் அனைவருமே பழநி பாதயாத்திரையை மேற்கொண்டனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதும் செல்கின்றனர்.

    “அழகன் முருகனை வணங்குவதில் சைவ வைணவ பாகுபாடு இல்லை. ஜாதி வித்தியாசங்களும் கிடையாது. ஆண், பெண் பேதமும் இல்லை. கார்த்திகை அல்லது மார்கழியில் மாலை அணிந்து பச்சை நிற வேட்டியை கட்டிக் கொண்டு, விரதம், பூஜை, அன்னதானங்களில் ஈடுபட்டு, தைப்பூச நாளுக்கு ஏழு நாட்கள் முன்னதாக பாதயாத்திரையை தொடங்கி விடுவார்கள். அவர்கள் வளம் பெறுவதைக் கண்ட பிறரும் பின்னர் காவடி எடுக்க ஆரம்பித்தனர். இன்று பழனியாண்டவரைக் காணப் பல லட்சம் பேர் காவடியுடன் சென்று தங்கள் பக்தி காணிக்கையை செலுத்தி பயன் அடைகின்றனர்.
    வடலூர் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி கடந்த 20-ந்தேதி சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது.

    இதேபோல் வள்ளலார் அவதரித்த இடமான மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வடலூர் தர்ம சாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து 21-ந்தேதி (திங்கட்கிழமை) சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

    ஜோதி தரிசனம் முடிந்த பின்னர், மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு, சித்தி பெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும். அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக, சத்தியஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட் கள் அடங்கிய (பேழை) பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

    காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அந்த பெட்டி பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க வடலூர் சத்தியஞானசபையில் இருந்து மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பல்லக்கை கருங்குழியை சேர்ந்த மீனவர் சமூகத்தினர் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.

    கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட பிள்ளையார் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்கம் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்று, வழிபட்டனர்.

    11.30 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகைக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அப்போது அங்கு கிராம மக்கள் பழம், சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்று, வழிபட்டனர். இதைத் தொடர்ந்து திருஅறை தரிசனம் நடைபெற் றது. சித்தி வளாக திருமாளிகையில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில், 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க, திருஅறை தரிசனம் தொடங்கியது.

    அப்போது அந்த அறையின் முன்பாக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற மகா மந்திரத்தை உச்சரித்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று, திருஅறையை தரிசனம் செய்தார்கள். மாலை 5 மணி வரையில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருஅறை தரிசனத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.
    எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்திலோ அல்லது அந்த தினத்தையொட்டியோ பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    உத்தரயாண புண்ணிய காலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் கருதப்படுகின்றன. வசந்த காலத்தின் தொடக்கமாக தை மாதம் கருதப்படுகிறது. இதனால் தான் தை மாதம் முதல் நாளில் சூரியனை வணங்கிவிட்டு நாம் பணிகளை தொடங்குகிறோம். தேவர்களுக்கு பகல் பொழுதாக விளங்கும் இந்த காலத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் பெருவிழாக்கள், வழிபாடுகள் நடத்துவது சிறப்பு ஆகும்.

    பழனியில் உத்தரயாண புண்ணிய காலத்தில் தைப்பூசம், மாசித் திருவிழா, பங்குனி உத்திர திருவிழா, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி மாதத்தில் அன்னாபிஷேகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதங்கள் பழனியில் திருவிழாக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பழனியில் உத்தரயாண புண்ணிய காலத்தில் நடைபெறும் முதல் திருவிழா தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது தைப்பூசத் திருவிழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக பழனிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் தான். பழனி தைப்பூச திருவிழாவுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சென்னையில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்றுள்ள பழனி பாதயாத்திரையை தொடங்கி வைத்தவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையை தொடங்கி வைத்தனர். பின்னர் இந்த பாதயாத்திரை வழிபாடு தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. இதன் காரணமாக பழனி தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் சிறப்பு பெற்றுள்ளது.

    பாதயாத்திரையின்போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி செல்வதும் முக்கிய அம்சம் ஆகும். காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார். நோய் தீர வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், குடும்ப பிரச்சினை தீர வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், ஆண் குழந்தை வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று பழனிக்கு லட்சக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர்.

    பழனி முருகனுக்கு காவடிகள் எடுப்பதால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம் ஆகும்.

    தைப்பூசத் திருநாள் அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். சிவபெருமான் உமா தேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்து தரிசனம் அளித்த தினம் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, இரணியவர்மன் எனும் மன்னன் சிவபெருமானை நேரில் தரிசித்ததும் இந்நாளிலேயே. இக்காரணத்தினால்தான் தைப்பூசம் அன்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூச நாளில் குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும் என்பர்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை அன்று புனர்ப்பூச நட்சத்திர தினத்தில் தான் சமாதியானார். இதனால்தான் அவர் சமாதியான வடலூரில் தைப்பூசத் திருநாள் அன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர்.
    பழனி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகளை தங்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வருகின்றனர்.
    பழனி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகளை தங்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வருகின்றனர். பக்தர்கள் சுமந்து வரும் காவடிகள் வருமாறு;-

    மயில்தோகை காவடி, தீர்த்த காவடி, அலகுக்காவடி, பறவைக்காவடி, சுரைக்காய் காவடி, தானியக்காவடி, இளநீர்க்காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, பால் காவடி, பஞ்சாமிர்த காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, பூக்காவடி, முள்ளுமிதி காவடி, சர்க்கரை காவடி, கற்கண்டு காவடி, மலர்காவடி, காகிதபூக் காவடி, அலங்கார காவடி, கூடை காவடி, செருப்பு காவடி, விபூதி காவடி, அன்னக் காவடி,

    கற்பூரக் காவடி, வேல் காவடி, வெள்ளி காவடி, தாளக்காவடி, பாட்டுக்காவடி, ஆபரணக் காவடி, தாழம்பூ காவடி, சந்தனக்காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, சர்ப்ப காவடி, அக்னி காவடி, அபிஷேக காவடி, தேர்க்காவடி, சேவல்காவடி, சாம்பிராணிக் காவடி, மயிற்தோகை அலங்கார காவடி, ரத காவடி ஆகிய காவடிகள் உள்ளன.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி இன்றுஅதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.

    13 அடி நீள அலகு குத்தியபடி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த சிவகாசி திருத்தாங்கள் பக்தர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருந்த திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அரோகரா கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நின்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    வடலூரில் சத்திய ஞானசபையில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்தும் விதமாக கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். அதில் கடந்த 1872-ம் ஆண்டு சன்மார்க்க கொடியேற்றி முதல் ஜோதி தரிசனத்தை நிகழ்த்தினார்.

    அன்று முதல் மாதம் தோறும் பூச நட்சத்திர தினத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு வருகிறது. அதே போல ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

    இந்தஆண்டு 148-வது ஜோதி தரிசன விழா சத்திய ஞானசபையில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி‘ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர்.

    இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சத்தியஞானசபையில் இரவு 7 மணிக்கு திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணி, 10 மணிக்கு நடைபெற்றது. அதன் பின்னர்  நண்பகல் 1 மணிக்கு நடக்க உள்ளது.

    இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



    தொடர்ந்து இந்த ஜோதி தரிசனம் இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஏழு திரைகளை நீக்கி நடைபெறுகிறது.

    தைப்பூச ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார்களில் வந்து குவிந்தனர்.

    வடலூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்களாக காணப்பட்டன. சத்திய ஞானசபையில் அமைக்கப்பட்டுள்ள அணையா அடுப்பில் தொடர்ந்து சமையல் செய்து தர்மசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வடலூரில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

    தர்மசாலை மேடையில் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகின்றன.

    தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள தால் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தைப்பூச ஜோதிதரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
    தைப்பூசத்திருநாளில் விரதம் இருந்து எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும்.
    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. முருகனின் அருளைப்பெற தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். தைப்பூசத்திருநாளில் விரதம் இருந்து எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும்.

    விரதம் இருப்பது எப்படி?

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

    அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.

    தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் வரும்.

    கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.

    தொழில் மேன்மை உண்டாகும். தைப் பூசம் அன்று குழந்தை களுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம் 
    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.
    ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில் தான் முருகப் பெருமான், சூரபதுமர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்காக பார்வதிதேவி, ஞான வேலை வழங்கிய நல்ல நட்சத்திர நாள் தான் பூசம் நட்சத்திரமாகும். பூச நட்சத்திரம் ஒரு போற்றும் நட்சத்திரம். போராட்டமான வாழ்வைப் பூந்தோட்டமாக மாற்றும் நட்சத்திரம். அந்த நட்சத்திரத் திருநாள் வருகிற 21.1.2019 (திங்கட்கிழமை) வருகிறது.

    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.

    நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து, அதன் பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் உடனுக்குடன் நற் பலன் காணலாம்.

    தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது தைப்பூசம் தான். உலகமெங்கும் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் தான் தை மாதமாகும். அந்த மாதத்தில் வரும் பூசத்தைத் தான் மாதப் பெயரோடு இணைத்து ‘தைப்பூசம்’ என்று அழைக்கின்றோம். அந்த அற்புதமான நாளில் முருகப் பெருமானை வழிபட்டு கொண்டாட மார்கழி மாதத்திலேயே பக்தர்கள் மாலைபோடுவார்கள். காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்துக் கவசப் பாராயணங்களைப் படித்து வழிபடுவார்கள். பதிகம் பாடி பரவசமடைவார்கள்.

    முருகப்பெருமானை ‘ஆறுமுகசாமி’ என்றும் அழைக்கின்றோம். திருநீறு அணிந்த முகத்தோடு அவரைச் சென்று வழிபட்டால் அருளும் தருவார்; பொருளும் தருவார். அருணகிரிநாதர் ஆறுமுகத்திற்கும் அழகான விளக்கம் சொல்கிறார். சிவனுக்கு ஓம்காரம் உரைத்த முகம் ஒன்று. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று. சூரனைச் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று. சூரனை வதைத்த முகம் ஒன்று. வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று. தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.

    இப்படி ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனை தைப்பூச தினத்தில் வழிபாடு செய்தால், வையகம் போற்றும் வாழ்வு அமையும்.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்குச் சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் கந்தனை கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வழிபடுவர். குன்றக்குடி, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களுக்கும் சென்று ஆறுபடைவீடுகளில் அருகில் இருக்கும் கந்தப் பெருமானை பாத யாத்திரையாகச் சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாத யாத்திரையாக செல்ல முடியாதவர்கள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    பூச நட்சத்திரம் அன்று சூரபத்மனை வென்று மயிலும் சேவலுமாக மாற்றினார். அந்த நாளில் வழிபாடு செய்தால் இனிய வாழ்க்கை அமையும். காலையில் விரதம்இருந்து பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி கந்தரப்பம் நைவேத்தியம் செய்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    தொட்டதெல்லாம் துலங்கவும், சொல்லும் வார்த்தை வெல்லவும் பட்ட துன்பம் தீரவும், பகைஅனைத்தும் மாறவும், வெற்றி வாய்ப்பு சேரவும், வேலன் வள்ளியோடு நீ சுற்றி வந்து காக்கவா! சுகம் அனைத்தும் சேர்க்கவா! என்று பாடுங்கள். வள்ளி மணாளன் உங்களுக்கு வரங்களை அள்ளி, அள்ளித் தருவான். தெள்ளுத் தமிழ் முருகன் திருவருளைப் பெறுவதற்கு பூசத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். அன்றைய தினம் இல்லத்தில் வழிபடுவோர் பஞ்சமுக விளக்கில், 5 வகை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, 5 வகை நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    சிவல்புரி சிங்காரம்
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழாவில் நாளை திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுதான்.

    இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச் சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மறு தினம் (21-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. அன்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை அடையும்.

    தைப்பூச திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் பழனி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இது தவிர திண்டுக்கல் - பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

    பக்தர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் ஏற்படுத்தி தரப்பட் டுள்ளது. இது தவிர வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதான முகாம்களும், மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாத யாத்திரை பக்தர் களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து பழனி வழியாக கோவை செல்லும் பஸ்கள் பாத யாத்திரை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தால் செம்பட்டி சந்திப் பில் இருந்து பழனி பைபாஸ், ரெட்டி யார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளி மந்தயம் சந்திப்பு, புதிய தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் செம்பட்டி சந்திப்பில் இருந்து கன்னிவாடி, மூலச் சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு வழியாக பழனி செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து பழனி செல்லும் பஸ்கள் திண்டுக்கல் - பழனி பைபாஸ் ரோடு சென்று ரெட்டியார்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு, தொப்பம்பட்டி, புது தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும்.

    தேனி, மதுரையில் இருந்து கோவை செல்லும் லாரிகள் செம்பட்டி சந்திப்பில் இருந்து வத்தலக்குண்டு பைபாஸ், பழனி பைபாஸ், தாடிக்கொம்பு, அகரம் ரோடு, இடையகோட்டை, கள்ளி மந்தயம், தாராபுரம் வழியாக கோவை செல்ல வேண்டும்.

    கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து மதுரை செல்லும் லாரிகள் கோவையில் இருந்து மதுரை செல்லும் கார்கள், பஸ்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! முருகன் வேறு, வேல் வேறு அல்ல!
    * முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்
    * அறுவரும் ஒருவர் ஆன நாள் -கார்த்திகையில் கார்த்திகை
    * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
    * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி
    * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்

    இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே - தைப்பூசம்!

    “வேல்” என்றால் என்ன?

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
    ‘வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
    ஆகவே, வேல் என்றால் -வெற்றி என்று அர்த்தமாகும்.
    ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் -வேல்!
    ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுகிறான்!
    வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!
    சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!
    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடுன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது: பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
    ஈழத்தில் செல்வர் சந்நிதி,
    மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில்
    எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.
    வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
    * வேலின் முகம் -அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
    * வேலின் கீழ் நுனி - வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
    வேல் - பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
    ஈட்டி - அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!
    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
    ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், “வேலை” முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும்கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!
    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.
    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!
    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!
    எனவே வேலை மனம் உவந்து வழிபடுங்கள் முருகன் அருள் முழுமையாக கிடைக்கும்.
    ×