search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 134241"

    ஈரோட்டில் முதன் முறையாக இன்று நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
    ஈரோடு:

    தென் மாவட்டங்களில் மட்டுமே களை கட்டி வந்த ஜல்லிக்கட்டு போட்டி இப்போது வட மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் இந்த ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜல்லிக்கட்டை நேரில் காண ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர். பலர் நின்று கொண்டும் பார்த்தனர்.

    போட்டியை காலை சரியாக 8.30 மணிக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக கலெக்டர் கதிரவன் தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையும் சீறி பாய்ந்து ஓடியது. காளைகளை அடக்க முதலில் 100 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    பாய்ந்து வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் தயாராக காத்திருந்தனர்.

    ஒவ்வொரு காளையும் துள்ளி குதித்து பாய்ந்து ஓடிய போது காளையர்களும் மாடுகள் மீது பாய்ந்து அடக்கினர். பல காளைகள் இளைஞர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஓடியது. மேலும் பல காளைகளின் திமிலை காளையர்கள் பிடித்து அடக்கினர்.

    அவர்களுக்கு 3 அமைச்சர்கள் தங்க காசுகள் பரிசாக வழங்கினர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியின் போது ஒலி பெருக்கி மூலம் வர்ணனை செய்யப்பட்டது. ‘‘இதை யாரும் அடக்க முடியாத முரட்டு காளைகள் அடக்கி பாருங்கள்’’, ‘‘இப்போது பாய்ந்து வருவது காங்கயம் காளை இதை அடக்க யாரும் உண்டா?’’ என இளைஞர்களை உசுப்பேத்தி கொண்டே இருந்தனர்.

    போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களும் ‘‘என்ன காளையாக இருந்தாலும் அதை அடக்க நாங்கள் தயார்’’ என்று துணிச்சலுடன் காளைகளை அடக்கினர்.

    காளைகளை அடக்கி வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க பரிசு, தங்க காசுகள் மற்றும் செல்போன், வாட்ச் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் போது 2 காளைகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. உடனே அதன் உரிமையாளர்கள் வந்து தங்கள் மாட்டை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

    கூட்டம் அதிகமாக திரண்டதால் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் காயம் அடையும் மாடு பிடி வீரர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு இவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

    ஆக மொத்தத்தில் ஈரோட்டில் முதன் முறையாக நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை(14-ந் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக தஞ்சை ஆடக்காரதெருவில் கார்த்தி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு சொந்தமான வெள்ளையன், கரிகாலன் என்ற 2 மாடுகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாட்டை அடக்க வருபவர்களிடம் இருந்து எப்படி பிடிபடாமல் தப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த 2 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக காளை மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடு தான் எங்களது முதல் குழந்தை. அதனை நாங்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மாடுகளுக்கு வீரியம் குறையாமல் இருப்பதற்காக தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சி அளித்து வருகிறோம்.

    பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவுகளாக காளை மாடுகளுக்கு அளித்து வருகிறோம். மாடு பிடித்து செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டோம். திரும்ப அழைத்து வரும் வரை உணவு கூட சாப்பிட மாட்டோம். எங்களது மாட்டை இதுவரை யாரும் அடக்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பிரிட்ஜ், பேன், பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வாங்கியுள்ளது. எனது காலத்துக்கு பிறகும் எங்களது குழந்தைகள் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். #Jallikattu

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. #Jallikattu

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும்.

    காளைகள் துன்புறுத்தப்படுவதை காரணம் காட்டி 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இருப்பினும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

    இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி அரசின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளை பங்கேற்க செய்வோர் அதற்கான உரிய சான்றிதழை கால்நடைத்துறையிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் நாளை (2-ந் தேதி) முதல் வருகிற 12-ந்தேதி வரை காளைகளுக்கு உடல் தகுதி சோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    காளைகளின் உயரம் 120 செ.மீட்டராக இருக்க வேண்டும். காளையின் வயது குறைந்தபட்சம் 8 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    கொம்பின் கூர்மைத் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உள்ளதா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள்.

    பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். பதிவின் போது காளையின் உரிமையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ்போட்டே, ஆதார், ரேசன் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. கேலரிகளும், தடுப்பு வேலிகளும் அமைக்க சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம், நீச்சல் பழகுதல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #Jallikattu

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது. #Jallikattu
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக சில ஆண்டாக போட்டி நடத்தப்படாததால் வாடிவாசல் பகுதி களையிழந்து காணப்பட்டது.

    இந்தநிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சங்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில்தான் நடத்தப்படும். அதன்படி 2019-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக தச்சங்குறிச்சியில் கேலரி அமைக்கப்பட்டு வரும் காட்சி.

    மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருப்பதற்கான கேலரி, போட்டி நடத்தப்படும் திடலில் அமைக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் போட்டியில் தங்கள் காளை வெற்றி வாகை சூடவேண்டும் என்பதற்காக காளை மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை காளையின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். அதே போல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிக்கான அனுமதி டோக்கன் கடந்த 2 நாட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 850 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களை கட்டியுள்ளது. #Jallikattu


    அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

    அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

    பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

    அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



    கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தில் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 550-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் சமயபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 31), மலையப்பநகரை சேர்ந்த ராமு (26), திருவெறும்பூரை சேர்ந்த தமிழ்(24), கோக்குடியை சேர்ந்த ரோஸ் (53), செல்வகுமார் (33) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த செல்வகுமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், நாற்காலிகள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோக்குடி பொதுமக்கள் செய்திருந்தனர். 
    திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் தூய மங்கள அன்னை ஆலயத்தின் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதையடுத்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களை மிரட்டி சென்றன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன.

    அடக்க முயன்றபோது காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் கல்லணை தோகூரை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), புள்ளம்பாடியை சேர்ந்த ஆல்வின்(23), வரகூரை சேர்ந்த ரஞ்சித்(21), திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்(35) உள்பட 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை திருமானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். 
    கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் நாட்டை சேர்ந்த வாண்டான்விடுதியில் முத்துகருப்பையா, முத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 604 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து சென்றன. அதனை 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் இளம்பரிதி, அழகர்சாமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி, வாண்டான்விடுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    ×