search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சம்"

    சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறி, தாய்லாந்தில் தவித்து வந்த இளம்பெண்ணுக்கு கனடா பிரதமர் அடைக்கலம் அளித்துள்ளார். #RahafMohammedalQunun #Saudiasylumseeker #Canadaasylum
    ஒட்டாவா:

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

    அவரது இந்த நடத்தைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தனது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அஞ்சிய ரஹாஃப், வழியில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் வந்து சேர்ந்தார்.

    பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். டுவிட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஒரு வாரத்தில் அவருக்கு டுவிட்டரில் சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் குவிந்தனர். 

    அகதியாக வந்த தன்னை தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம். சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய அந்த இளம்பெண், அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது டுவிட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

    அதேவேளையில், அவருக்கு டுவிட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல்களும் வந்ததால் திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். எனினும், #SaveRahaf என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் #SaveRahaf வைரலானது. 

    இதற்கிடையில், அவருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

    உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.



    இந்நிலையில், அவரது நிலைமையை கண்டு மனமிரங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு,  ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தார். இதையடுத்து, மனித உரிமை அமைப்பு அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து போலீசார், குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் ரஹாஃப் டொரான்ட்டோ நகருக்கு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். 

    சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக டுருடேயு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை ஏற்கனவே பூசலில் இருக்கும் சவுதி-கனடா உறவில் மேலும் விரிசலையும், பகையையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்திவரும் சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் கனடா அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனடாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் சவுதி துண்டித்து விட்டது. ரியாத்தில் இருந்த கனடா தலைமை தூதரும் திருப்பி அனுப்பப்பட்டார். 

    சவுதி அரசுக்கு எதிராக வலைத்தளங்களில் (பிளாக்) கருத்து வெளியிட்ட பலரை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களில் கனடா நாட்டின் கியூபெக் நகரில் வசிக்கும் ரைஃப் படாவி என்ற பெண்ணின் சகோதரரான சமர் படாவி என்பவரும் ஒருவராவார். 

    சமர் படாவி உள்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தற்போது கனடா அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

    இத்தனை விவகாரங்களுக்கு இடையில் சவுதி பெண்ணுக்கு கனடா தஞ்சமளித்துள்ள சம்பவம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆத்திரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. #RahafMohammedalQunun  #Saudiasylumseeker #Canadaasylum #JustinTrudeau #SaveRahaf
    அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #DonaldTrump #AsylumClaims
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நாட்டினர், அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’ வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப் விமர்சித்து வந்தார்.

    நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும், மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க வர முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் எல்லையில் அவர் பல்லாயிரக்கணக்கில் படை வீரர்களை குவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சி.என்.என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி, அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.

    இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும், அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும் சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.

    இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது” என கூறியது.

    ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த கொள்கை முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட் டுள்ளது.
    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறார். ஜெயஸ்ரீயும் வாணியம்பாடி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்கிற வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐகொந்தம் கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமி கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வருகிறார். சதீஷூம், அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற இளம்பெண்ணும் காதலித்தனர்.

    ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பிறகு, பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார், 2 காதல் ஜோடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
    சேலத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள மாங்குப்பையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23). டிரைவர். பழையூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (19). பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் இன்று சித்திரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி இளைஞரணி தலைவர் சுப்பிரமணி உடனிருந்தார்.

    ×