search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன்"

    சென்னையில் போராட்டம் நடத்தி கைதான விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #Farmersstruggle

    சென்னை:

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் மின் அழுத்த கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 11 உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மற்ற மாநிலங்களைப் போல் பூமிக்கடியில் புதைவடங்கள் மூலம் கொண்டு செல்லும்படி வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக கடந்த 15 நாட்களாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காததால் சென்னைக்கு திரண்டு வந்து நேற்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தினார்கள். இந்தபோராட்டத்துக்கு கொங்கு ராஜாமணி, திருப்பூர் செந்தில், வக்கீல் ஈசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அனைவரும் மீண்டும் நேற்று இரவு சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 460 விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள இரண்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபங்களில் இருக்கும் விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு அரசுசெவி சாய்க்க வேண்டும் என்றார். #Farmersstruggle

    கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GasCylinder #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை திடீர் திடீரென்று உயர்த்தப்பட்டு மக்கள் மீது பொருளாதார சுமை ஏறுவதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நேற்றைய தினம் இந்திய ஆயில் நிறுவனம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலை கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம், மானியம் இல்லா சிலிண்டர் என எதுவாக இருந்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, மக்கள் படும் கஷ்டம், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    எனவே, மத்திய அரசு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலாவது உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறுஅவர்கூறியுள்ளார். 
    ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்

    நம் நாட்டில் ரெயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்தாகும். பொது மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் ரயில்கள் பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக அன்றாடம் பயணிக்கும் ரெயில் பயணிகளுக்கு ரெயிலின் சேவை மிகவும் இன்றியமையாத ஒன்று. எனவே ரெயில்வே துறையானது ரெயில்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

     


    மேலும் ரெயில்வேயில் பணிபுரிகின்ற பணியாளர்கள் நலன் காக்க வேண்டிய நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

    குறிப்பாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், சென்னை, பெரம்பூரில் உள்ள எலக்ட்ரிக்கல் ஒர்க்ஷாப்பை மூடும் முயற்சியை கைவிட வேண்டும், குறைந்த பட்ச சம்பளம் ரூ.28,000 வழங்கவும், பே மேட்ரிக்ஸ் உயர்த்தவும் முன்வர வேண்டும், ஒர்க்ஷாப்பின் இன்சென்டிவ் ரேட்டை உயர்த்த வேண்டும், பெஞ்ச் மார்க்கின் பெயரால் அலவுடு டைம் குறைக்க வேண்டாம், சேப்டி கேட்டகிரியில் உள்ள 2.5 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். #GKVasan

    மறைந்த மூப்பனாரின் பிறந்த நாளான நாளை த.மா.கா.வினர் விவசாயிகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில் ஜிகே வாசன் தலைமையில் நாளை கோவையில் விவசாயிகள் தினம் மாநாடாக நடைபெறுகிறது. #GKVasan #moopanar
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மக்கள் தலைவர் மூப்பனாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 19-ந் தேதியை ‘விவசாயிகள் தினமாக’ கோவை, சிங்காநல்லூரில் கொண்டாடுகின்றனர்.

    தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக, பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டவராக, அரசியலில் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத் தன்மை கொண்டவராக விளங்கியவர் மூப்பனார்.

    தமிழக விவசாயத்திற்காக, விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட மக்கள் தலைவர் மறைந்த மூப்பனாரின் பிறந்த நாளான நாளை த.மா.கா.வினர் ஆண்டு தோறும் விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாளை (ஞாயிறு) மூப்பனாரின் 87-வது பிறந்த நாள் விவசாயிகள் தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    எனது தலைமையில் நாளை மாலை கோவை, சிங்காநல்லூரில் விவசாயிகள் தினம் மாநாடாக நடைபெறுகிறது.

    இதில் த.மா.கா.வின் நிர்வாகிகள், துணை அமைப்பினர், தொண்டர்களுடன் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மக்கள் தலைவர் புகழ் பாடுவோம். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan #moopanar
    பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளை போன்று பொது இடத்தில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளது. #GKVasan
    சென்னை:

    மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதில் மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக அமுல்படுத்தும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாற்றுத்தினாளிகள் மட்டுமல்லாது பொதுவாகவே பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரபு நாடுகளில் இருப்பதுபோல் பொதுமக்கள், குற்றவாளியின் உறவினர்கள் மத்தியில் பொது இடத்தில் வைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி என்று தெரிந்ததும் காலம் கடத்தாமல் உடனடியாக தூக்குதண்டனை கொடுக்கும் அளவுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.



    காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களது முகத்தை மூடக்கூடாது. இதுபோன்று இழி செயலில் ஈடுபடுவோர் முகம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மக்கள் முன்னிலையில் அவர்கள் அவமானப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவலி லலிதாம்பிகை, செயலாளர் மகேஸ்வரி, த.மா.கா. நிர்வாகிகள் ஞானதேசிகன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், அனுராதா அபி, அண்ணாநகர் ராம்குமார், சைதை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GKVasan
    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஜிகேவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான முறையில் தொடர்ந்து நடைபெற்று மக்கள் நலன் காக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வர வேண்டும்.

    இந்தக் கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை தடையில்லாமல் தொடர வேண்டும். மேலும் நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் இரு அவைகளிலும் ஆரோக்கியமான வாக்குவாதத்திற்கு உட்பட்டு அவையானது சுமூகமாக நடைபெற வேண்டும்.

    அதே நேரத்தில் அவையில் தேவையில்லாமல் கூச்சல், குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்கப்பூர்வமான முறையில் விவாதம் நடத்துவதற்கான சூழலுக்கு மத்திய பா.ஜ.க. உறுப்பினர்களும், எதிர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் கொடுத்தால் தான் நாட்டு மக்களுக்கும் நல்லது; நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்தது.

    குறிப்பாக மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக திட்டங்களை அறிவித்து, நிலுவையில் உள்ள மக்கள் விரும்பும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் முன்வர வேண்டும். ஏற்கனவே ரயில்வேத்துறை உட்பட பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை தொடர்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், கச்சா எண்ணெய் விலையை கட்டுப் படுத்துவதற்கும், வங்கி மோசடிகளை தவிர்ப்பதற்கும், முதலாளிகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்வதற்கும், ஊழல், லஞ்சம், சுரண்டல் ஆகியவை நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், மீனவர்கள் பிரச் சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும், பாலியல் பலாத்காரத்துக்கு தூக்குதண்டனை கொடுப்பதற்கும், பெண் உரிமை, பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிப்பதற்கும், சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக் கக்கூடாது என்பதற்கும், வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கும், மதவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும், மக்கள் ஏற்கமுன்வராத, விரும்பாத திட்டங்களை முடக்குவதற்கும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும், நிவாரணத் தொகையையும் கொடுப்பதற்கும் முக்கிய முடிவுகளை எடுத்து அதற்குண்டான அறிவிப்புகளை நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாட்களிலே அறிவித்து அவைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில் காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தின் முடிவில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு இந்த மாதம்(ஜூலை) 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியோடு இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுவதோடு, வருகின்ற மாதம் தோறும் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்பதில் மேலாண்மை ஆணையம் கண்காணிப்பை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக் கின்ற முதல் வெற்றியாகும். எனவே தற்போதைய மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan
    உடனடியாக பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan #Aimshospital
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் இப்போது மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிமுடித்து, அதனை செயல்படுத்த வேண்டும்.

    தமிழக மக்கள் நலன் காப்பதில் அதிலும் மக்களின் உடல்நலன் காப்பதில் தமிழக அரசுக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் திட்டமிட்டப்படி அனைத்து வசதிகளுடனும் நடைமுறைக்கு வந்து, மக்களுக்கு சிறப்பு மருத்துவச் சேவை தொடர்ந்து கிடைத்திட தனது பங்களிப்பை முறையாக அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Aimshospital
    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கும் உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.



    ஈரான் நாட்டில் தனியாரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற தமிழக மீனவர்களை கடத்தல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த நிலையில் இருந்த மீனவர்கள் தாங்கள் நாடு திரும்பினால் போதும் என்ற சூழலில் தங்களது குடும்பத்தினரோடு தொடர்புகொண்டு நடந்த பிரச்சினைகளை கூறியுள்ளனர். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு ஈரான் நாட்டோடு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மீனவர்கள் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தையும், பாஸ்போர்ட்டையும் ஈரான் நாட்டிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இதற்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
    காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் கருத்துக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GKVasan #kumaraswamy
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், மேலாண்மை ஆணையம் அமைப்பது சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி கர்நாடக முதல்-மந்திரி பேசியது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் மனதில் மிகுந்த வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய இறையாண்மையை காப்பேன் என்றும் சட்டப்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கர்நாடக முதல்-மந்திரி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது மிகவும் வருத்தத்துக்கு உரியது. எனவே, கர்நாடக முதல்-மந்திரி நியாயத்துக்கு உட்பட்டு, நீதிக்கு தலைவணங்கி, மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு சாதகமாக பேசுவதும், செயல்படுவதும் தான் உகந்தது. மத்திய பா.ஜ.க. அரசு இனியும் பொறுமை காக்காமல் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினரை குறுகிய காலக்கெடுவிற்குள் நியமிக்க கட்டயாப்படுத்தி, மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #kumaraswamy
    டெல்டா விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #DeltaFarmers #GKVasan

    அவனியாபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அந்தியோதயா ரெயில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் வரை இடை நில்லாமல் செல்கிறது. அதை பயணிகள் வசதிக்காக கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    3-வது நீதிபதியை உடனடியாக நியமித்து உரிய காலத்தில் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.

    முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எப்போது, எவ்வளவு கால அவகாசம் என்பதை இறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

    காவிரி விவகாரங்களில் கர்நாடகத்தில் மழை பெய்து தண்ணீர் திறப்பது போல் இயல்பாக மாதந்தோறும் நீர் திறக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

    காவிரி நீர் விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் வராததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகத்திடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #GKVasan

    தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

    இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews

    ×