search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு"

    • காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு அனுப்பம்பட்டு, பழவேற்காடு, வன்னிப்பாக்கம், தேவம்பட்டு, நந்தியம்பாக்கம், அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தடப்பெருக்பாக்கம் ஊராட்சி முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வீடுகளில் பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதித்த கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், கொசு மருந்து தெளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. #Dengue #Swineflu
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்ப சாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார்.

    இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Dengue #Swineflu

    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) டாக்டர் சேகர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நோயாளிகளிடமும், சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் விதம், டாக்டர்களின் கவனிப்பு குறித்தும் கேட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில், அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள்.

    அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனும், நல்ல நிலையில் இருக்கிறான். விரைவில் குணமாகி வீடு திரும்புவான்.

    அடுத்த 2 மாதங்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு டாக்டர், நர்சு உள்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு உரிய 15 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதேபோல், ஊசியும் 2 ஆயிரம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
    தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். இதனையொட்டி டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

    அப்போது ‘மே ஐ ஹெல்ப் யூ’ மையத்தில் இருந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கவும், பொது இடங்களில் லைசால் மூலமாக சுத்தம் செய்யும், கை கழுவும் பழக்கத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிலும், அரசு அலுவலகங்களிலும் தேவையற்று கிடக்கும் பொருட்களிலும் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சல்களை தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ‘டாமி புளூ’ என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தலாம்.

    அரசு மருத்துவ நிலையங்களில் 19.75 லட்சம் ‘டாமி புளூ’ மாத்திரைகள் இருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் தேவைப்பட்டாலும் வாங்கி கொள்ளலாம்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 23 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 66 பேர் உயிரிழந்து உள்ளனர்.



    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்ற நல்ல நிலையில் வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 3 ஆயிரத்து 800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பிரச்சினை இதுவரை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu
    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிளைப்பாக்கம் ஊராட்சி பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 27). இவருக்கு கடந்த 4-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த ஜோசப்(37) என்பவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பிள்ளைப் பாக்கத்தில் மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்ற பரிசோதனை செய்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளனவா என கண்டறிந்து அதை அழித்தல், ஊராட்சி முழுவதும் பிளிச்சிங் பவுடர் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுத்தல், புகை மருந்து அடித்து கொசுவை அழித்தல், அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி காய்ச்சலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் ஆகியோர் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி நிலைகண்டறிந்து 3 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். #DenguFever

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பலி அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரின் விளக்கம் விந்தையாக உள்ளது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #Mutharasan #Swineflu #Dengue

    சென்னை:

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலி அதிகரித்து கொண்டே உள்ளது மிகுந்த கவலையளிக்கின்றது.

    பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

    சென்னை, சேலம், திருவள்ளுர், மதுரை, கடலூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரம் என அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி, உயிர்களை பலி வாங்கி வரும் செய்திகள் நாள் தவறாமல் நாளேடுகளிலும், தொலைக் காட்சிகளிலும் முதன்மை செய்திகளாக வருகின்றது.


    ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் இத்தகைய நோய்கள் கொசுக்களால் பரவி வருவதை அரசு நன்கு அறியும்.

    சுகாதாரப் பணிகளை செம்மையாக, காலத்தில் மேற் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறியதால் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகி வருகின்றன.

    சுகாதாரத் துறை அமைச்சர் பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கூறுவது விந்தையாக உள்ளது.

    தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு, மனித உயிர்களை காக்க, தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முத்தரசன் கூறி உள்ளார். #Mutharasan #Swineflu #Dengue

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியான நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளது.

    வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதமாக அதிகரித்துள்ளது.

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரத்தை பேணி பராமரிக்காத தொழிற் சாலைகள், நிறுவனங்கள், வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    டெங்கு கொசுக்கள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதமும் விதித்து வருகிறார்கள். என்றாலும் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மிக, மிக சவாலாக உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதலே டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு மாதமாக பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு டெங்கு பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. குறிப்பாக கடந்த மாத இறுதியில்தான் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக வேகமாக பரவி நிறைய பேரை நிலை குலைய செய்துள்ளது.

    கிராமங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள்தான் டெங்கு வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தி அதிகமாகி விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை அரசு பொது மருத்துவமனையில் பதிவான தகவல்களின்படி 917 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். தற்போது சுமார் 600 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. நேற்று அரசு மருத்துவமனைகளில் சுமார் 2700 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

     


     

    தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. பருவ மழை அதிக அளவில் பெய்வதால் டெங்கு பாதிப்பவர்கள் குறைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவுவது அதிகாரிகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார குறைவு காரணமாக பன்றிக் காய்ச்சல் மிக, மிக எளிதாக பரவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே வீட்டில் யாராவது ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலும் உடனே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள விழிப்புணர்வு பிரசாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எவ்வளவு விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் பன்றிக் காய்ச்சல் வந்த பிறகும் பலர் அசட்டையாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர். நேற்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முத்துகிருஷ்ணன், செல்வம் இருவர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் இது வரை 34 பேர் பலியாகி விட்ட நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதுமான மருந்து, மாத்திரைகள் கைவசம் இருப்பதால் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு சுமார் 3,600 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி கை கழுவுங்கள் என்ற பிரசாரம் தீவிரமாகி உள்ளது. #Swineflu #Dengue

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Denguefever
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் பலியாகி வருகின்றனர்.

    அலங்காநல்லூர் கம்மாபட்டியைச் சேர்ந்த வர் ராஜபாண்டி மகன் கணேஷ் பாண்டி (வயது8). உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு கணேஷ்பாண்டி பரிதாபமாக இறந்தான்.

    வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் சரவணன் (39) தொழிலாளி. பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் நள்ளிரவு 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் கமுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (57) வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தும் பல னின்றி அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

    இந்த நிலையில் மேலும் 116 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 98 பேர் வைரஸ் காய்ச்சலாலும், 15 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever
    தமிழகம் முழுவதும் பரவி வருவதால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியான சம்பவம் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் உயிர் பலியும் ஏற்படுவதால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திருநின்றவூர், கோமதிபுரத்தை சேர்ந்தவர் நாதுராம் (38). திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே அடகு கடை நடத்தி வந்தார்.

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாதுராம் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 11). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சில நாட்களாக ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

    டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 161 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே உள்ள பெத்தானூரை சேர்ந்தவர் ராஜா (28), லாரி டிரைவர். காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. பன்றி காய்ச்சலால் தான் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சக்திவேல் மனைவி வாணி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(29). என்ஜினீயர்.

    கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கோபிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் மாவட்டத்தில் 650 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வியாபாரி முகமது ரபீக் (வயது41) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

     


    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 18 பேரும் என மொத்தம் 81 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஷா. இவருடைய மகன் ரியாஸ் (7). இந்த சிறுவனுக்கு, மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

    உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், ரியாசை அரக்கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

    தொடர் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. ரியாசின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது. அதற்குள், சிறுவன் ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

    திருச்சி அரசு மருத்துவ மனையில் புதுக்கோட்டையை சேர்ந்த மங்கையர்க்கரசி என்ற பெண் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் முதல் கட்ட பரிசோதனை நடத்தினர். ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருந்த போதே வலிப்பு ஏற்பட்டு மங்கையர்க்கரசி இறந்தார்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சியை சேர்ந் தவர் விவேகானந்தன். இவரது மகன் சரவணன் (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சரவணன் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தான். சம்பவத்தன்று வீட்டில் படுத்திருந்த சரவணன் திடீரென கோமாநிலைக்கு சென்றான். இதையடுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அதற்குள் சரவணன் பரிதாபமாக இறந்தான். அவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிகிறது.

    தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தினி (வயது 26). 8 மாத கர்ப்பிணி. இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

    மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சாந்தினி சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தினி பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue

    டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

    அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

    பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

    கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.



    பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary

    டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் நாளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆலோசித்தார்.



    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் நாளை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்கின்றனர். காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்படும் சிறப்பு வார்டுகளையும் ஆய்வு செய்கின்றனர். நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமும் கிராமம் கிராமமாக கண்காணிக்க உள்ளனர்.

    டெங்கு, பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு உள்ளது. எனவே காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஏற்கெனவே 17 விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது மேலும் 2 விருதுகள் கிடைத்துள்ளது. தாய்-சேய் நலம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டெல்லியில் விருது வழங்கப்பட்டது. அதை முதல்-அமைச்சரிடம் வழங்கி இன்று வாழ்த்து பெற்றோம்.

    இதே போல் சுகாதாரம், குடிநீர், மருத்துவ செயல்பாடு உள்ளிட்ட 34 அளவீடுகளை கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி ஆயோக் துணைத்தலைவர் கையால் நாகை கலெக்டர் விருது பெற்றுள்ளார். இதற்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், நினைவு பரிசும் கிடைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை 19 விருதுகளை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar

    மாமல்லபுரம் பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பீதியை தொடர்ந்து அரசு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், தேவநேரி, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இன்று காலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் இருக்கிறதா? என்று அறிய ரத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.

    இதை வரிசையில் நின்று கவனித்த மற்ற சாதாரண சளி, இருமல், தலைவலி மற்றும் தொடர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் பயத்தில் தங்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்களிடம் கட்டாய ரத்த பரிசோதணைக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களிடையே நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் போதிய விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து நோயாளிகளை சமாதானப்படுத்தினர்.

    ×