search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
    • நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருகே சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாகவும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகிலுள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டன.

    இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
    • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

    ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கினர்.

    153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அதை இயக்கிய விமானிகள் இருவர் அரை மணி நேரம் உறங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி படிக் ஏர் விமானத்தின் விமானம் ஒன்று சென்றது. அதை இயக்கிய விமானி மற்றும் இணை விமானி இருவரும் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 2 மணி 35 நிமிடத்தில் ஜகார்டாவில் தரையிறங்க வேண்டும். இந்த பயணத்தின் போது விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி தன்னுடன் காக்பிட்-இல் இருந்த இணை விமானியிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். இணை விமானி அதற்கு அனுமதி அளித்ததால், விமானி உறங்கியுள்ளார். அனுமதி அளித்த இணை விமானியும், சிறிது நேரத்திலேயே அசதி காரணமாக உறங்கியுள்ளார். 28 நிமிடங்கள் விமானி மற்றும் இணை விமானி உறங்கியுள்ளனர்.

    இருவரும் உறங்கி கொண்டிருந்த போது, ஜகார்டா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானியை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இருவரும் உறங்கி கொண்டிருந்ததால், விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 28 நிமிடங்கள் உறங்கிய இணை விமானி அதன் பின்னர் விழித்துக் கொண்டு விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார்.

    இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
    • புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்.

    இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பிரபோவோ சுபியாண்டோ அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


    இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு இந்தோனேசிய மக்கள் மற்றும் அதிபராக தேர்வாகி இருக்கும் பிரபோவோ சுபியாண்டோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த இந்தோனேசிய அதிபர் தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


    "எங்களது தேர்தல் குறித்த உங்களின் வாழ்த்து செய்திக்கு நன்றி பிரதமர் மோடி. இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் உங்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    ஜகார்த்தா:

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

    கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.

    • அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேசமோ ஏற்படவில்லை என தகவல்

    அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்தமான் நிகோபார் தீவில் புதன்கிழமை காலை 7.53 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இந்தோனேசியாவை தொடர்ந்து இப்போது அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம் என்பது வழக்கமான ஒன்றதாகிவிட்டது. அடிக்கடி அங்குள்ள தீவுகள் அதிர்ந்த வண்ணமே உள்ளன.

    • இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
    • ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார்.

    தஞ்சாவூர்:

    உலக சிட்டோ ரியு கராத்தே கூட்டமைப்பு ஜகார்த்தா இந்தோனேசியாவில் 10-வது சர்வதேச அளவிலான சிட்டோ ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.

    ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார். பெண்கள் குமித்தே பிரிவில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி தேவதர்ஷினி வெண்கலம் வென்றார்.

    சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி சந்திப் குமார், கோச் கரண், பொன்னியின் செல்வன் ஆகியோர் இறுதிச்சுற்று வரை சென்றனர்.

    மேலும் போட்டியில் வடுவூர் நிவேதா, தஞ்சாவூர் பவதாரிணி, அரியலூர் நடராஜன், தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஜெய்தேவ், வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி ஜெய் ஜோஷிகா ஆகியோர் போட்டியில் பங்கு பெற்றனர்.

    வெற்றி பெற்ற வீரர் ,வீராங்கனைகளை தலைவர் அருண் மச்சையா, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.

    • பிரதமர் நரேந்திர மோடி ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா செல்கிறார்.
    • இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவதால், பிரதமர் மோடி நாளை மாலை இந்தியா திரும்புகிறார்.

    இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 7) மாலையே இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால், இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை தனியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    • வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்
    • மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என வழக்கறிஞர் தெரிவித்தார்

    அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது.

    தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இப்போட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்.

    அவ்வகையில், மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டிகள் இம்மாதம் 3ம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

    ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

    தற்போது 3 பெண்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என அவர்களின் வழக்கறிஞர் மெல்லிஸா அங்க்ரேனி கூறினார்.

    அவர் இது சம்பந்தமாக கூறியதாவது:

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, 'உடல் சோதனை' மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியிடும் பெண்களை மேலாடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். போட்டியில் பங்கு பெற்ற பெண்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலாய்ட் அல்லது பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் இதற்கு காரணம் கூறியுள்ளனர்.

    இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் ஒரு போட்டியாளர் கூறுகையில், "எனது உரிமைகள் மீறப்பட்டதாக நான் உணர்கிறேன். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. நான் தூக்கத்தை இழந்து விட்டேன்." என்றார்.

    "ஒரு மூடிய அறையில் உடல் சோதனைகள் செய்யப்பட்டது. அங்கு சில ஆண்களும் இருந்தனர். கதவு முழுவதுமாக மூடப்படவில்லை, இதனால் வெளியில் உள்ளவர்களுக்கும் உள்ளே நடைபெறுவதை பார்க்க முடிந்தது" என மற்றொரு போட்டியாளர் தெரிவித்தார்.

    தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா தெரிவித்துள்ளார்.

    உலக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை, 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொள்வதாகவும் கூறியது.

    போட்டியாளர்களின் வயது, உடல் எடை மற்றும் உயரத்தின் விகிதாசாரத்தை சரி பார்க்க உடல் பரிசோதனைகள் இயல்பானவை என்றாலும் போட்டியாளர்கள் நிர்வாணமாக இருக்குமாறு கேட்கப்படுவதில்லை என முன்னாள் மிஸ் இந்தோனேசியா மரியா ஹர்ஃபான்டி கூறியுள்ளார்.

    ×