search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
    • வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும்.

    அகமதாபாத்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்களில் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழையும். குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தேவையான மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி `பாரதிய விண்வெளி நிலையம்' என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது.

    இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார். 

    • நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது.
    • இந்த விண்கலத்தில் இருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

    சந்திரனில் சாதித்த சந்திரயான் 


    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வுசெய்ய இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி அனுப்பியது. விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது.

    நிலவில் கால் பதித்த 4வது நாடு இந்தியா


    நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விண்வெளித்துறையில் இந்தியா படைத்த முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    ஆதவனை நோக்கிப் பயணித்த ஆதித்யா எல்-1


    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெற்றது.

    • சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியது.
    • இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்தின் உயரிய விருதான லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டது.

    ஹுசாவிக்:

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கவுரவித்துள்ளது.

    இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்தார்.

    • இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது.
    • இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவ ஆய்வுக்காக அனுப்பிய சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது. இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, அதில் இருந்து பிரக்யான் என்ற ரோவரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்தது.

    இதைத்தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு '2023- லீப் எரிக்சன் லூனார்' என்ற உயரிய பரிசை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், இதற்கு நன்றி தெரிவித்து காணொளி செய்தியை அனுப்பினார்.

    • விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சோதனைக்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வருகிற 2025-ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.

    சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உள்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியாக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் (15 லட்சம் கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்படும்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 14 புவி நாட்களில், இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.

    சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனம் (ஆர்.எல்.வி.) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (எக்போசாட்- எக்ஸ்-ரே போலரி மீட்டர் (செயற்கைகோள்)), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் எந்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

    2023-2024-ம் ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள எக்போசாட் இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் (ஸ்பேஸ் டக்கிங் சோதனை) என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    2035-ம் ஆண்டில் "இந்திய விண்வெளி நிலையம்" (பாரதிய அண்டாரிக்ஷா நிலையம்) தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வு திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார்.

    இந்தியாவின் விண்வெளி திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.
    • சூரியனின் தெளிவான புகைப்படத்தை ஆதித்யா எல்1 படம் பிடித்துள்ளது.

    ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படும் எடுத்துள்ளது.

    200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.

    சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவம் குறித்தான தெளிவான புகைப்படத்தை ஆதித்யா எல்1 படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    • சூரியனை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா-எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
    • இதில் உள்ள சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

    பெங்களூரு:

    சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வுசெய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

    2 நாட்களில் SWIS ஆல் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது.

    ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியைச் சுற்றி நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
    • உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.

    ஓசூர்:

    ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


    பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.

    அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

    • சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது.
    • சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

    அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, "சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் 6 மாதங்களாகும். இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மட்டும் 350 கிலோவாகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணற் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும்.

    அதேபோல், சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாகும்" என்றனர்.

    • சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களானது.
    • வடக்கு பசிபிக் கடல்பகுதியில் ராக்கெட் பாகம் விழுந்துள்ளது.

    பெங்களூரு:

    சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது. சந்திரயான்-3 திட்டமும் வெற்றி அடைந்தது.

    இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

    நவம்பர் 15-ம் தேதி (நேற்று) இந்திய நேரப்படி மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது.

    புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    • இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
    • திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது, சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிக்கட்டி பறப்பதாகவும், சந்திரயான்-3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.

    அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார்.

    இதையொட்டி விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது.
    • சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும்.

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அடுத்து நிலவை நோக்கிய சந்திரயான்-4 திட்டத்தை ஜப்பான் உடன் இணைந்து இந்தியா செயல்படுத்த உள்ளது. நிலவு துருவ ஆய்வு பணி ('லூபெக்ஸ்') என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் 'ரோபோட்' எந்திரங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த 'லூபெக்ஸ்' திட்டமே சந்திரயான்-4 எனும் பெயரில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்தியாவும், ஜப்பானும் இணைந்து எந்திர ரோபோடிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேண்டரை நிலவிற்கு அனுப்பும் திட்டம் தான் 'லூபெக்ஸ்'. இந்த திட்டத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான (ஜாக்ஸா) இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது. இந்த நிலையில், சந்திரயான்-2 திட்டத்திற்கு பிறகு சந்திரயான்-3 திட்டம் 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் தரையிறங்காத காரணத்தால், சந்திரயான்-2 திட்டத்தின் நீட்சியாக சந்திரயான்-3 இருந்தது.

    தற்போது சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது. இதையடுத்து இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவின் ஆய்வு 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சந்திரயான் திட்டத்தின் நீட்சியாக 'லூபெக்ஸ்' இருக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கான முன்னோட்டமாக இந்திய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நேரில் சந்தித்து 'லூபெக்ஸ்' திட்டம் குறித்தும், சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா விண்கலம் எடுக்கும் தரவுகளை பகிர்வது தொடர்பாக விவாதித்துள்ளனர். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 'லூபெக்ஸ்' திட்டத்தில் உள்ள லேண்டர் இந்தியா சார்பிலும், ரோவர் ஜப்பான் சார்பிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சந்திரயான்-3 திட்டத்தில் அறிவியல் ஆய்வுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தான அனைத்து தகவல்களும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்திற்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக 'லூபெக்ஸ்' திட்டம் இருக்கும். இந்த திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவருக்கு ஆயுட்காலம் 6 மாதங்களாகும். இதில் பொருத்தப்பட உள்ள லேண்டர் மற்றும் ரோவரின் எடை 350 கிலோவாகும். நிலவின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய எந்திர கைகள் 'லூபெக்ஸ்' திட்டத்தில் ரோவரில் இருக்கும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் படிமங்களையும், நீர் மூலக்கூறுகளையும் சேகரிக்க முடியும்.

    சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் சந்திரயான் 4-ல் பணியாற்ற மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×