search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
    • கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபட உள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

    ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும்.
    • இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத் "நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்" என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.

    மேலும், சோம்நாத் தனது சுயசரிதையில் தனது முன்னோடியான சிவனைப் பற்றி சில விமர்சனக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

    அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், " ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின் போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    இதுபோன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும். அவற்றில் ஒன்று ஒரு நிறுவனத்தில் பதவிகளை பெறுவது தொடர்பான சவால்கள். இவை அனைவரும் கடக்க வேண்டிய சவால்கள்.

    அதிகமான நபர்கள் குறிப்பிடத்தக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். நான் அந்த குறிப்பிட்ட விஷயத்தை வெளியே கொண்டு வர முயற்சித்தேன். இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை" என்றார்.

    சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடைந்தது குறித்த அறிவிப்பில் இருந்த தெளிவின்மை குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    • பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன.
    • அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    சென்னையில் ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 18வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

    ஜேப்பியார் கல்விக்குழும நிறுவனர் மறைந்த டாக்டர். ஜேப்பியார் ஆசியுடன் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ரெஜினா ஜே முரளி தலைமை தாங்கினார்.

    இதில் பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன.

    முதுகலை பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சுபவர்ஷினி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவில் உரையாற்றிய நம்பி நாராயணன், "உங்களை திருப்திப்படுத்தும் செயலை செய்வதன் மூலமாக மட்டுமே நீங்கள் கலாம் போன்று உருவாக முடியும்" என மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுரை வழங்கினார்.

    அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

    மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு இல்லாமல் எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் படிப்புகள் இல்லை.

    ஏனெனில் அந்த பொறியியல் படிப்புகளில் பயன்படுத்தும் கருவிகளை உருவாக்குவது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு. தான் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தகுதி வாய்ந்த பொறியாளர் என்கிற எண்ணம் வந்தது. அதற்கு தான் செய்த பிராஜெக்ட் தான் காரணம்.

    பட்டம் பெற்ற உடன் பணம் சம்பாதிக்கும் நிரப்பந்தம் ஏற்படுவதால் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு சேர்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூட்டல் கழித்தல் வேலை தான் செய்கின்றனர்.

    செய்யும் பணி திருப்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

    வாழ்வில் முக்கியமானது உங்களை உருவாக்கும் சிறந்த திட்டங்கள் தான். அதனை கண்டறிய வேண்டும். உங்களை திருப்திபடுத்தும் வேலை தான் உங்களை அப்துல் கலாம் போன்று உருவாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது.
    • மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிவி-டி1 என்ற சோதனை ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ந்தேதி விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

    இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் அதிக சோதனை பணிகளை இஸ்ரோ வரிசைப்படுத்தி உள்ளது. குறிப்பாக, இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டால் (ஐ.ஐ.எஸ்.யு) வடிவமைத்து உருவாக்கப்பட்ட 'வியோமித்ரா' என்ற 'பெண்' ரோபோ எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட இருக்கிறது.

    இதில் குறிப்பாக, இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஏர்-டிராப் டெஸ்ட் (ஐஏடிடி) மற்றும் பேட் அபார்ட் டெஸ்ட் என்ற 2 அறிவியல் சோதனைகள் செய்யப்பட உள்ளது.

    அடுத்து வரும் 4 சோதனைகளில் டி.வி-டி2 ராக்கெட் சோதனை 2-வதாக இருக்கும். ஏற்கனவே அனுப்பிய டிவி-டி1 ராக்கெட் போல் இல்லாமல், டிவி-டி2 ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்த உடன், விண்கலத்தின் அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மீண்டும் நிலைப்படுத்துவதற்கான ஒரு கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டிருக்கும்.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. இது எதிர்காலத்தில் சாத்தியமாகும். அத்துடன், டிவி-டி1 ராக்கெட்டில் இருந்து கடலில் உப்பு நீரில் விழுந்த விண்கலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    இதை மீண்டும் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்து வருகிறோம். இதற்காக விண்கலத்தை திறந்து சுத்தம் செய்து என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் பொருத்தமான சோதனைத் திட்டத்திற்கு அதை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படும் '2040-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது உட்பட, இந்தியாவிற்கான லட்சிய விண்வெளிப் பயண இலக்குகளில் முதன்மையானது ககன்யான் ஆகும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை.
    • சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக பதவி வகித்து வருபவர், சோம்நாத் (வயது 59). கேரளாவை சேர்ந்த இவரது பதவிக்காலத்தில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை ஈட்டி வருகிறது.

    நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பியது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை என பல்வேறு சாதனைகள் இவரது தலைமையில் நடந்துள்ளது.

    இந்த பணி நெருக்கடியின் மத்தியிலும் அவர் தனது வாழ்க்கை பயணத்தை புத்தகமாக வெளியிட முடிவு செய்து சுயசரிதை எழுதியுள்ளார். இதை கேரளாவை சேர்ந்த லிபி பதிப்பகம் வெளியிடுகிறது.

    'நிலவு குடிச்ச சிம்ஹங்கள்' என மலையாளத்தில் பெயரிடப்பட்டு உள்ள இந்த புத்தகம் அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    உண்மையை சொன்னால், என்ஜினீயரிங் சேர வேண்டுமா? அல்லது பி.எஸ்.சி. படிக்கணுமா? என்று கூட தெரியாத ஒரு சாதாரண கிராமத்து இளைஞரின் கதைதான் இது.

    அவரது குழப்பங்கள், வாழ்க்கையில் அவர் எடுத்த சரியான முடிவுகள் மற்றும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவர் பெற்ற வாய்ப்புகள் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை. மாறாக வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும்போதும் மக்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிப்பதற்கு ஊக்குவிப்பதே இதன் ஒரே நோக்கம்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்த வரலாற்று வெற்றிதான் என்னை புத்தகம் எழுத தூண்டியது.

    பல திறமையானவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் நம்பிக்கையின்மையும் ஒன்றாகும். இதை அவர்களுக்கு வெளிப்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம் ஆகும்.

    ஏனெனில் நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டவன். அதை பல்வேறு நிகழ்வுகள் வழியாக புத்தகத்தில் விவரித்து இருக்கிறேன்.

    இவ்வாறு சோம்நாத் கூறினார்.

    சுயசரிதையை ஏன் மலையாளத்தில் எழுதினீர்கள்? என்ற கேள்விக்கு, 'நான் ஒரு மலையாளி. அத்துடன் தாய்மொழியில் எழுதுவது வசதியாக உள்ளது' என்று சோம்நாத் பதிலளித்தார்.

    இந்த புத்தகத்தில் சோம்நாத்தின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, சந்திரயான்-3 போன்றவற்றின் கதைகளும் விவரிக்கப்பட்டு உள்ளன.

    • குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது.
    • தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.

    அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

    மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால் பல நாடுகளும் இஸ்ரோ வாயிலாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.

    இதற்காக மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தது.

    இதில் குலசேகரப்பட்டினம் தேர்வானது. புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இந்த ஊர் அமைந்திருப்பதும் தட்பவெப்ப சூழல் ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்கு சாதகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

    இதற்காக குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தற்போது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கு தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினம் வருகிறார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. மாநில அரசும் தேவையான நிலத்தை கையகப்படுத்தி தந்து விட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

    பிரதமர் மோடி டிசம்பர் மாதம் வருகை தந்து அடிக்கல் நாட்டி இதை தொடங்கி வைக்க உள்ளார். அவர் வருவதற்கு முன்பே தற்காலிக ஏவுதளம் அமைத்து சிறிய ரக குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவுவதை பிரதமர் பார்வையிடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து இது பற்றி விளக்கி கூறி உள்ளார்.

    இதேபோல் ராமேசுவரத்தில் பாம்பன் இடையே புதிய ரெயில்வே தூக்கு பாலம் உள்ளதால் அந்த பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டனர்.
    • சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன.

    விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக "க்ரூ எஸ்கேப் சிஸ்டம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும். அதன்படிஇந்த முதல் கட்ட சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.

    திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் பாராசூட்டுகளுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது.

    இந்நிலையில், சோதனை முறையில் விண்ணில் ஏவ அனுப்பப்பட்ட ககன்யான் விண்கலம், பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு, சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    4 டன் எடை கொண்ட விண்கலத்தை கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    • மோசமான வானிலையால் சோதனை ஓட்டம் தாமதமானது.
    • சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன.

    விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த விண்கலம் மனிதர்களை தரையில் இருந்து விண்ணில் 400 கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் செல்லும். அங்கு புவி தாழ்வட்ட பாதையில் விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி முதல் கட்ட சோதனை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரி விண்கலத்தை சுமந்து செல்ல டிவி-டி1 என்ற சிறிய ரக ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டில் மாதிரி விண்கலத்தை இணைத்து விண்ணில் ஏவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாதிரி விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக "க்ரூ எஸ்கேப் சிஸ்டம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும்.

    இதை முதல் கட்ட பரிசோதனையாக பரிசோதித்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டது. 3 விண்வெளி வீரர் கள் ககன்யான் விண்கலத்தில் அனுப்பப்பட இருப்பதால் 3 பாராசூட்டுகள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிவதை சோதித்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து ககன்யான் மாதிரி விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த ஒரு வாரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வந்தனர். இதற்கான கவுண்ட் டவுன் நேற்று இரவு தொடங்கியது.

    விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரும் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் முதலாக நடத்துவதால் இந்த சோதனை திட்டம் அனைத்துத் தரப்பினராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மோசமான வானிலை நிலவியதால் மாதிரி விண்கலத்தை விண்ணில் செலுத்துவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தனர். 8.30 மணிக்கு மாதிரி விண்கலம் பறக்கும் என்று தெரிவித்தனர்.

    8.30 மணிக்கு மீண்டும் மாதிரி விண்கலத்தை விண்ணில் ஏவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தொடர்ந்து வானிலையில் சாதகமான நிலை காணப்படவில்லை. எனவே 2-வது முறையாக மாதிரி விண்கலம் விண் ணில் ஏவப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது. 8.45 மணிக்கு மீண்டும் ககன்யான் மாதிரி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

    8.45 மணிக்கு வானிலை சீராகி சாதகமான நிலை இருந்தது. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் மாதிரி விண்கலத்தை விண்ணில் ஏவும் பணிகளில் ஈடுபட்ட னர். ஆனால் துரதிருஷ்டவசமாக ராக்கெட் எரிபொருள் எரியூட்டப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் திட்டமிட்டபடி தீப்பற்றினால் தான் ராக்கெட் குறிப்பிட்ட வேகத்தில் விண்ணுக்குச் செல்ல முடியும்.

    ஆனால் அதில் எப்படியோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடைசி 5 வினாடிகள் மீதம் இருந்த நிலையில் மாதிரி விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்துவதை நிறுத்தினார்கள். இதன் காரணமாக 3-வது முறையாக மாதிரி விண்கலம் விண்ணுக்கு செலுத்துவது தடைபட்டது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், "மாதிரி விண்கலத்தை செலுத்துவதற்கான எரிபொருள் எரியூட்டுவதில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள திடீர் இடையூறை ஆய்வு செய்து வருகிறோம். அடுத்து எப்போது ஏவப்படும் என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்" என்றார். அதன்படி 10 மணிக்கு மீண்டும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    3 முறை மாதிரி விண்கலம் ஏவுவதில் தடைபட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்புடன் காணப்பட்டனர். ககன்யான் மாதிரி விண்கலம் ஏவுவதை நேரில் பார்க்க வந்தவர்களும் கவலையான முகத்துடன் இருந்தனர்.

    இந்நிலையில், 10 மணிக்கு மீண்டும் ககன்யான் மாதிரி விண்கலத்தை விண்ணுக்கு ஏவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தடவை அனைத்து ஏற்பாடுகளும் துல்லியமாக இருந்ததால் ராக்கெட் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக பறந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ககன்யான் மாதிரி விண்கலத்தை விண்ணில் சுமார் 16.6 கிலோமீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று, அதன்பிறகு அதில் இருந்து மாதிரி விண்கலத்தைப் பிரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது.

    அதன்பிறகு மாதிரி விண்கலத்தில் இருந்து 3 பாராசூட்டுகளில் வீரர்கள் தரைஇறங்குவது போன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பாராசூட்டுகள் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் தூரம் என்ற வேகத்தில் தரை இறங்கியது. இந்தப் பணிகள் அனைத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சரியாக நடந்தன.

    குறிப்பிட்ட நேரத்தில் பாராசூட்டுகளுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது. அந்த விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மீட்டனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் பாராசூட்டுக்கள் மூலம் அந்த மாதிரி விண்கலம் வங்கக்கடலில் மிதந்து கொண்டு இருந்தது. இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் அதை மீட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதன்மூலம் விண்ணுக்கு மனிதர்களை பாதுகாப்புடன் அனுப்பும் திட்டத்தின் முதல் கட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

    • மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது.
    • சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதற்காக கவுண்ட்டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    அதன்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், 8.30 மணிக்கு தாமதமாக சோதனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 8.30 மணிக்கு தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமானது.

    மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது. மீண்டும் 8.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பின்னர் 3வது முறையாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ககன்யான் திட்டத்திற்கான முதல்கட்ட சோதனை ஓட்டம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறினார்.

    • முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலனை தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பி மீண்டும் அதை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும். அங்கிருந்து கலன் மீட்கப்படும்.

    இதற்காக கவுண்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    கடல் நீரில் கலன் விழுந்த உடன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள். ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

    • பூமியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது.
    • பாராசூட்டுகள் சுமந்து வந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக தரை இறக்கி சோதனை பார்க்கப்படுகிறது.

    விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குக் திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை வருகிற 2025-ம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டு உள்ளது. இந்த பணியின் மூலம், மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி முதல் சோதனை ராக்கெட் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம், 'குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்' என்று அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதியை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

    இந்த சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒரே ஒரு உந்து சக்தி (பூஸ்டர்) கொண்ட திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது பூமியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது. இதில் சோதனைகளுக்காக சிஎம்.பேரிங் மற்றும் இன்டர்பேஸ் அடாப்டர்களுடன் குரு மாட்யூல் மற்றும் குரு எஸ்கேப் சிஸ்டம்களுடன் அவற்றின் வேகமாக செயல்படும் திட மோட்டார்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

    'குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்' என்று அழைக்கப்படும்' விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதி' ராக்கெட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற உடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடுகிறது. இதனை பாராசூட்டுகள் சுமந்து வந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக தரை இறக்கி சோதனை பார்க்கப்படுகிறது.

    இந்த முதல் கட்ட சோதனையில் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதமடையாமல் கடலில் பத்திரமாக தரை இறங்குகிறதா? என்று சோதித்து பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் விழுந்த உடன் இதனை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் இதனை மீட்டு மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள்.

    ராக்கெட் ஏவப்படுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர் உள்ளிட்ட விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்இந்தியாவின் ககன்யான் திட்டம்.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதில் அனுப்புவதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பும்.

    அதன் பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டு உள்ளது. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

    விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

    இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது.

    இந்த நிலையில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதை பத்திரமாக மீட்டெடுப்பதாகும்.

    ×