search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    • எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

    வேலூர் :

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்று. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர் கவர்னர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இணைப்பு பாலமாக இருக்க வேண்டியவர் கவர்னர். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னரே தவிர, கவர்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு. இதை உணராமல் தமிழ்நாடு கவர்னர் மட்டுமல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கவர்னர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர்.

    நளினி உள்ளிட்ட 6 பேரை சட்டப்படி விடுதலை வழங்குவதற்கு முகாந்திரம் இருந்ததாலேயே சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இதில், விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஆனால் மத்திய அரசு 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அல்லது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை தான் கையாள்வார்கள் என்பதற்கு சீராய்வு மனு ஒரு சான்று. இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது.

    அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று அவர் கூறினால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கரைய விட்டு விட்டார். கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க. ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று நகைச்சுவையாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும்.
    • அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    கடலூர்:

    கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    இதுபோல் சம்பவம் எதிர் வருங்காலங்களில் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு நீதி விசாரணை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழக ஆளுநர் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார்.

    திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. சார்பில் தெரிவிப்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக தெரிகிறது‌.

    மத்திய அரசு பொதுவான எச்சரிக்கை அறிவித்துள்ளனர். கோவையில் நடக்க போகுது என்றோ? முஸ்லிம் நபர் இதில் ஈடுபட உள்ளார் என்றோ? யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை செயல்படவில்லை என அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

    ஆனால் முதலமைச்சர் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உடனடியாக பரிந்துரை செய்தார்‌. கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம் .

    கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும். அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாஜகவினர் காலூன்ற எண்ணுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் காலூன்ற முடியாது. வட மாநிலத்தைப் போல் வன்முறையை தூண்டி அதன் மூலம் குளிர் காயிலும் என எண்ணுகிறார்கள்.

    தமிழகம் என்றும் சமூக நீதிக்கான மண்ணாகும். மதவாதம் அரசுக்கு அனுமதி இல்லை என தேர்தல் சமயத்தில் மக்கள் பாடம் கண்டிப்பாக புகட்டுவார்கள். நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜனதா பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரம் தி.மு.க. கூட்டணியில் வலுவான கட்சியாக அங்கம் வகித்திருக்கும் திருமாவளவன் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அளவில் அரசியலில் இடம்பெற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் காரணமாகவே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு கருத்துக்களை கூட முன் வைத்தது உண்டு. அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பா.ஜனதாவும் இதையேதான் விரும்புகிறது.

    திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. மிக கடுமையாக விமர்சித்து கொள்கிறோம். ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம்.

    பா.ஜனதாவில்கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. இந்த நிலையில் திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதும் எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று கூறி இருப்பதும் மறைமுகமாக திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் பா.ஜனதாவில் இந்த புதிய அணுகுமுறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

    • இந்திய கடலோர காவற்படை தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது.
    • அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகிறது.

    அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான தேசிய அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையானது இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமைகளை முற்றாக அழிக்கும் வகையில் உள்ளது. இது 'ஒரே தேசம்- ஒரே மொழி' எனும் இந்தியப் பன்மைத்துவத்திற்கு எதிரான மேலாதிக்கப் போக்காகும்.

    அடுத்து, இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை- ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது.

    அதேவேளையில், இந்திய கடலோர காவற்படை தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது. அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 1-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

    சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

    யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல. அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில் வேறு எந்த கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க.வினர் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவில்லை. இதன் மூலம் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்த அவர்கள் கருதுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை.
    • சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

    அப்போது திருமாவளவன் தரப்பு வக்கீல், இந்த ஊர்வலத்தினால் மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ஐகோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு கோர மனுதாரருக்கு உரிமை உள்ளது.

    அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது. திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும்.
    • 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.

    காரனை:

    மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.

    சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.  


    இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதிய பாகுபாடு தொடர்வதாக கூறி அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவில் டவுன் வடக்கு ரதவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளர்கள் டேனியல் சிங், சதுரகிரி, முருகன், சுரேஷ், சுந்தர் தமிழப்பன், இக்பால் கதிரேசன், திருமாவேந்தன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது. இது போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலை குனிவு. இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்து சொல்வோம்.

    அகில இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது. தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்.

    கிறிஸ்தவர்களை திட்டமிட்டு திருக்குறளை தவறாக மொழி பெயர்த்து விட்டார் என சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்துகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை.
    • மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அக்டோபர் 2-காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.

    ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடது சாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்னும் கேள்வி எழுகிறது.

    பல்வேறு காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது.

    ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் வி.சி.க.வும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.

    இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த "சமூக நல்லிணக்க மனித சங்கிலி" அறப்போராட்டத்துக்கு எமது தோழமை கட்சிகளான ம.தி.மு.க., ம.ம.க, த.வா.க., நா.த.க., எஸ்.டி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்.எல்-வி), த.பு.க. என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தி.க., தி.வி.க., த.பெ.தி.க., போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும்.

    எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.

    எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளன்று நடக்கவுள்ள எமது 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும்.
    • நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி ஏனாதியில் அம்பேத்கரின் உருவ சிலையை அகற்றியதோடு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக தான் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த நடைமுறை இந்தியாவில் எங்குமே கிடையாது.

    வெளிநாட்டில் புகழ்பெற்ற இடங்களில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிலை வைப்பதில் பல்வேறு பிரச்சினை உள்ளன. சேலம் ஏனாதியில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் பொதுமக்களையும், வி.சி.க. கட்சியினரையும் அடித்து துன்புறுத்தப்பட்டனர். வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைப்பது கலாச்சார விழா என்கிறனர்.

    அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அறிவித்த நிலையில் இதையே காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் தடை விதித்திருப்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி.

    சமூக மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2-ல் நடத்தப்படும். அதற்கு உச்சநீதிமன்றத்திலும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் அனுமதி பெற்று நடத்தப்படும்.

    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும். அந்த 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி. நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

    நாங்கள் 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரி இருந்தோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருந்த 50 இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குனரை கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
    • விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு 28-ந்தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்காரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    அக்டோபர் 2-ந்தேதி வி.சி.க. சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு இன்று காலையில் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் திருமாவளவன் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

    மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள் எனவும் திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

    தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.

    • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
    • இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×