search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்கியது"

    கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் ஜெயநகர் தொகுதியில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 1,11,689 வாக்காளர்கள் (55 சதவீதம்) வாக்களித்தனர்.



    இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தது.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத்தை விட 427 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். #KarnatakaPoll #Jayanagar #JayanagarCounting
    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. ஜூன் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். #MBBSAdmission #MBBSApplication
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில்  நடப்பு கல்வியாண்டில் (2018-19) மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்களை பெறலாம்.



    www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. #MBBSAdmission #MBBSApplication
    கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைப்பதற்காக தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1053 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக இன்று அணையில் இருந்து 2064 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்நிலையில் புதிய மதகு அமைப்பதற்காக, தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தற்காலிக மதகை அகற்றிய பின், புதிய நிரந்தர மதகு அமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது அணையின் தரைபாலம் மூழ்கி நீர் செல்வதால் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் தற்போது 31.10 அடியாக உள்ளது. இதே போல் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.66 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 640 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை இன்று தொடங்கியது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியானவர்களின் உடல்களில் மாணவி ஸ்னோலின், சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடல்கள் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் பதப்படுத்தி வைக்கப்பட்டன.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



    அதன்படி மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்தனர். அவை அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது.

    சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா, தமிழரசன் ஆகிய 6 பேரின் உடல்கள் அடுத்தடுத்த நாட்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்னோலின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கடந்த 3-ந்தேதி அவரது உடலையும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் பிரேத பரிசோதனையே செய்யாமல் இருந்த அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் கோர்ட்டு உத்தரவுக்காக தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஜிப்மர் டாக்டர் மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த 2 டாக்டர்கள் மேற்கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து உடல்களும் இன்று இரவுக்குள் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி உள்ளிட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது கடை பிடிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டது.

    ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் வினோத் மற்றும் தூத்துக்குடி மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  #thoothukudifiring

    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் விசைப்படகுகள் குறிப்பிட்ட காலத்தில் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    அரசின் அறிவிப்புப்படி குமரி மாவட்ட கிழக்கு கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வருகிற 15-ந்தேதி வரை இந்த தடைக்காலம் முடிவுக்கு வரும்.

    மேற்கு கடற்கரையில் இன்று முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இனி ஜூலை 30-ந்தேதி வரை மேற்கு கடற்கரை மீனவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

    இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மேற்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதால் குமரி மாவட்ட மக்களுக்கு மீன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

    அடுத்து மேற்கு கடற்கரையில் தடைக்காலம் தொடங்கும்போது, கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்குவார்கள். இதனால் மீன்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்காது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் குமரி மாவட்டம் முழுவதும் 15 நாட்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஒட்டு மொத்தமாக யாரும் மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் கட்டுமரங்கள், வள்ளங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள்.

    இதில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கும். இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் இன்று தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கேற்ப நேற்று மாலை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

    இதையடுத்து கேரளாவில் இன்று (29-ந்தேதி) தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கேற்ப நேற்று மாலை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.

    கேரளாவின் பல பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் குற்றால அருவியில் வெள்ளம் கொட்டத்தொடங்கியது.

    கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை மூலம் தான் கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா, மராட்டியம் மற்றும் வட மாநிலங்களிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாடு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மூலம் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் சராசரியாக 60 சதவீத மழை பெய்யும் என்று 2 நாட்களுக்கு 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்திய கடலிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் அலைகளின் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Tamilnews
    ×