search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220390"

    • கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்தார்.
    • சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர்.

    இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து புறப்பட்டு நேராக திருச்கோடு வந்தனர்.

    பின்னர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் ராஜகோபுரம், படிக்கட்டு, மேற்கு புற வாசல் மற்றும் கோவிலுக்குள் அனைத்து பகுதிகளையும், வீடியோ காட்சிகள் பதிவான இடங்களையும் பார்வையிட்டனர்.

    கோகுல்ராஜ் தொடர்பாக கோவிலில் பதிவான வீடியோ காட்சிகளில் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வைத்து அந்த இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் சுவாதியும், கோகுல்ராஜிம் கோவில் கொடி மரம் வழியாக வரும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் கோவிலுக்குள் இருந்து 2 பேரையும் அழைத்து கொண்டு வெளியேறுவதையும் அந்த இடத்தையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலெட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
    • ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அதிரடி.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து தற்கொலை செய்த தினேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் தினேசின் குடும்பத்தினர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் சென்றனர்.

    இதுபற்றி தினேசின் தந்தை போஜன் கூறுகையில் நானும், எனது குடும்பத்தினரும் பணிக்கு சென்றபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டு சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர்.

    கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

    மேலும் விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 பேர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சேலம் மாநகர சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பழைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று தனிப்படையில் இணைந்தனர். இவர்கள் விரைவில் பணியை தொடர உள்ளனர்.

    • 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.
    • வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012 மார்ச் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடல் கல்லணை செல்லும் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியை நாடி சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7-ந்தேதி அன்று நடைபெற்றது.

    அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    • அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
    • சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செம்பட்டு:

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து கேட்டறிய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி: ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வந்த பிறகு ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?

    கேள்வி: விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் சொல்ல முடியும்.

    கேள்வி: புதிதாக உண்மை கண்டறியும் சோதனை ரவுடிகள் மீது நடத்த உள்ளதாக சொல்கிறார்களே?

    பதில்: கிடையாது, விசாரணை முடிந்ததற்கு பிறகு தான் கூறுவோம்.

    கேள்வி: ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

    பதில்: 10 வருடங்களில் என்ன நடந்தது என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆறு மாதங்களில் என்ன செய்தோம் என்று நாங்கள் சொல்ல முடியும்.

    கேள்வி: வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற போகிறீர்கள். அதற்கு முன் கொலையாளிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதா?

    பதில்: சொல்ல முடியாது.

    கேள்வி: விசாரணை பழைய முறையில் நடைபெறுகிறதா? ஏதேனும் மாற்று முறையில் நடைபெறுகிறதா?

    பதில்: இப்போது சொல்ல முடியாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

    கேள்வி: விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?

    பதில்: 100 சதவீதம் ஒத்துழைக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து திருவெறும்பூர் போலீஸ் நிலையம் சென்ற டி.ஜி.பி ஷகீல் அக்தர் அங்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை நிலை எப்படி உள்ளது, வேறு யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உண்மை கண்டறியும் சோதனை யாருக்காவது மேற்கொள்ள வேண்டுமா, முதலில் யாருக்கு இந்த சோதனை செய்ய வேண்டும். என்பது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    • ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டி.ஜி.பி. ஷகில் அக்தர் முன்பு ஆஜராக உள்ளனர்.
    • கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    அதன் பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் மனித உரிமை மையத்தின் இயக்குநர் வக்கீல் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சரும், ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணையின் போக்கு குறித்து அவ்வப்போது விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.

    இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டி.ஜி.பி. ஷகில் அக்தர் முன்பு ஆஜராக உள்ளனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகு வழக்கில் முக்கியம் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

    சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல் அக்தர் நாளை திருச்சி வருகை தர இருக்கிறார்.

    விரைவில், இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருப்பதாக, சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை சென்னை அல்லது பெங்களூருவில் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
    • மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்திய பிரியா (வயது20). இவர் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (23). இந்த நிலையில் சத்திய பிரியாவை, சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி சதீசை கைதும் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பான விசாரணையை கடந்த 15-ந்தேதி பிற்பகலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கினார்கள். முதலில் சம்பவம் நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில் என்ஜின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ரெயில் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சதீஷ், மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. தற்போது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக மாணவி சத்தியபிரியாவின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்து டி.வி. மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்கள் ஆகியோரிடம் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி இன்று ஆலந்தூர் போலீசார் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயாரும், போலீஸ் ஏட்டுமான ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

    தொடர்ந்து மாணவி படித்த தனியார் கல்லூரி, மாணவியின் தோழிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு சதீஷின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சதீஷ், மாணவி சத்திய பிரியாவை பின்தொடர்ந்து சென்றது முதல் அவரை ரெயில் முன்பு தள்ளி விட்டது வரை அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சத்தியபிரியா தள்ளிவிடப்பட்ட மின்சார ரெயிலின் என்ஜின் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி சத்திய பிரியாவை கொலையாளி சதீஷ் எப்படி தாக்கி தள்ளினார். எவ்வளவு தூரத்தில் இருந்து அவர் விழுந்தார்? மாணவி மீது ரெயில் மோதிய பின்னர் எவ்வளவு தூரத்தில் நின்றது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் என்ஜின் டிரைவரின் தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இந்த தகவல்களும் கொலையாளி சதீசுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சிறையில் உள்ள கொலையாளி சதீசிடம் மேலும் பல தகவல்களை பெற அவரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக முறைப்படி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    சதீசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த 13-ந்தேதி மதியம் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர கொலையாளி சதீசை ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைப்பாக்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். டி.எஸ்.பி. புருஷோத்தமன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இதுபோன்ற முக்கியமான வழக்குகளை 3 மாதத்தில் முடிப்பதற்கு எப்போதுமே திட்டமிடுவோம்.

    அந்த வகையில் சத்யா கொலை வழக்கும் 3 மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். இந்த வழக்கில் கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவோம் என்று தெரிவித்தார்.

    மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் நிலைய பகுதியிலும் கொலை சம்பவம் நடந்த இடம் நோக்கி கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த 3 கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ரெயில்வே போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் இந்த வீடியோ காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளில் மாணவி சத்யா, கொலையாளி சதீஷ் ஆகியோர் ரெயில் நிலையத்துக்குள் வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    ஒரு கண்காணிப்பு கேமராவில் மாணவி சத்யாவை சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் காட்சியும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை சம்பவம் நடந்தபோது ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். சதீஷ், சத்யாவை பின் தொடர்ந்து சென்றது முதல், கொலை செய்தது வரை இந்த வழக்குக்கு தேவையான அனைத்து முக்கிய ஆதாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முழுமையாக திரட்டி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் மாம்பலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணை நேற்று காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், ரெயில்வே போலீசார், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை வைத்து அடுத்தகட்ட விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர்.

    மாணவி கொலையில் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலரை இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சாட்சிகள் தெரிவிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்படுகிறது. மாணவிக்கு சதீஷ் தொடர்ச்சியாக கொடுத்த தொந்தரவுகள் பற்றியும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் கிடைத்த தகவல்களும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி மாணவி சத்யா கொலையில் கொலையாளி சதீசுக்கு எதிராக அனைத்து வலுவான ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் உச்சப்பட்ச தண்டனையில் இருந்து சதீஷ் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தொடங்கினர்.

    முதற்கட்டமாக நேற்று சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் 1500 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள், வாக்குமூல விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்தநிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    அவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விட்டு இன்னும் ஒரு சில தினங்களில் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டும் என தெரிகிறது.

    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.
    • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்க உள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க உள்ள நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் டி.எஸ்.பி.க்கள், 3 டி.எஸ்.பி.கள், அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கோவை, அக்.6-

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

    கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துபோனார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரடியாகவே விசாரணை மேற்கொண்டார்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பல நபர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதுவரை தனிப்படையினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொடநாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ. அதிகாரி நியமனம்

    தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு பிறப்பித்தார்.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டு விட்டதால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று உடனடியாக விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×