search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதம்பம்"

    • சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.
    • ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

    "வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

    சோழவளநாடு சோறு உடைத்து, பூழியர்கோன்

    தென்னாடு முத்து உடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை

    நன்னாடு சன்றோர் உடைத்து".

    சேர, சோழ, பாண்டிய மற்றும் தொண்டை நாடுகளின் சிறப்புக் குறித்து, ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

    சேரநாடு யானைகள் மிகுந்து இருப்பது..

    மேன்மை உடைய சோழவளநாடு நெல்வளத்தை உடையது..

    பாண்டியனது தென்னாடு முத்து விளையும் சிறப்பை உடையது..

    நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டு உள்ள தொண்டை நாடு சான்றோரை உடையது என்பது இப்பாடலின் வெளிப்படையான பொருள்.

    ஔவைப் பிராட்டி, நம்மை உய்த்து உணரச் செய்த பொருள் ஒன்று இப்பாட்டில் உள்ளது. அதனைக் காண்போம்:

    தொண்டை நாட்டில் வாழும் சான்றோர்களைக் குறித்துப் பாடிய ஔவையார், மற்ற நாடுகளில் உள்ள விளைபொருள்கைக் குறித்துப் பாடினார் என்பது ஏற்புடைதாக இல்லை என்பார் சான்றோர்!

    "தொண்டை நாடு சான்றோர்களை உடையது" என்று வெளிப்படையாகச் சொன்னதை வைத்து, மற்றதை உய்த்து உணரச் செய்தார்.

    "மலைநாடு" என்பது சேரநாடு எனப்படும். இப்போதைய கேரளம். இது வேழம் உடைத்து.

    வேழம் என்றால் யானை மட்டும் அல்ல, கரும்பு என்றும், இசை என்றும் பொருள் உண்டு.

    எனவே இனிமையான மக்களை உடையது சேரநாடு என்று பொருள் கொள்ளலாம்.

    "மேன்மை பொருந்திய சோழநாடு சோறு உடைத்து."

    சோழநாட்டில் நெல் நிறைய விளைவதால், சோறு உடையது என்பது அல்லாமல், அதற்கு ஒரு உள்ளுறை பொருளும் உள்ளது என்று அறிதல் வேண்டும்.

    "சோறு" என்ற சொல்லுக்கு, "வீட்டின்பம்", "மோட்சம்" "முத்தி" என்றும் பொருள் உண்டு.

    சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274-ல், 190 திருத்தலங்கள் சோழநாட்டில் தான் உள்ளன.

    பெருஞ்சிறப்பாக, சைவர்களுக்குக் கோவில் எனப்படும் "சிதம்பரம்" உள்ளது.

    வைணவர்களுக்குக் கோவில் எனப்படும் "திருவரங்கம்" உள்ளது.

    தில்லையை வணங்க முத்தி..

    திருவாரூரில் பிறக்க முத்தி..

    என்பார்கள் சான்றோர்.

    சோழ நாட்டின் பெருமைக்கு இன்னும் என்ன வேண்டும்?.

    இத்தகைய சோழநாட்டில் வாழ்பவருக்கு வீட்டின்பம் அல்லது மோட்சம் உறுதி என்பதால், "சோழநாடு சோறு உடைத்து" எனப்பட்டது என்பர் சான்றோர் .

    "பாண்டி நாடு முத்து உடைத்து".

    முத்து என்னும் சொல்லுக்கு, "வெளிப்படுவது" "விடுபடுவது" என்றும் பொருள் உண்டு.

    சிப்பியில் இருந்து வெளிப்படுவது முத்து எனப்பட்டது.

    "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள்.

    பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும்.

    அந்த சீர்மிகு பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மணிவாசகர் இறையருளால் முத்தி நிலையைப் பெற்றார்.

    எனவே, பாண்டி நாடு முத்து உடைத்து எனப்பட்டது.

    போற்றுவோம் தமிழையும் - தமிழ் நாட்டையும்!

    -பி.டி அரசு

    • சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
    • கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

    கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது..

    கம்பராமாயணத்தில் தாடகையை வென்று ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு திரும்பி வருகிற போது அவன் கால் பட்டு அகலிகை பெண்ணாகிற தருணத்தில் ,

    " இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

    இனியிந்த வுலகுக்கெல்லாம்

    உய்வண்ணம் அன்றி மற்றோர்

    துயர் வண்ணம் உறுவதுண்டோ

    மைவண்ணத்து அரக்கி போரில்

    மழைவண்ணத்து அண்ணலே

    உன் கை வண்ணம் அங்கு கண்டேன்

    கால் வண்ணம் இங்கு கண்டேன் "

    என்கிற பாடல் வரும்..

    'வண்ணம்' என்கிற ஒரே சொல் விதவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. கண்ணதாசன் இதே உத்தியை திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..

    " பால்வண்ணம் பருவம் கண்டு

    வேல்வண்ணம் விழிகள் கண்டு

    மான்வண்ணம் நான்கண்டுபாடுகிறேன்

    கண்வண்ணம் அங்கே கண்டேன்

    கைவண்ணம் இங்கே கண்டேன்

    பெண்வண்ணம் நோய்

    கொண்டு வாடுகிறேன்"

    " யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

    தானோக்கி மெல்ல நகும்" என்கிற குறளை

    " உன்னை நான் பார்த்த போது

    மண்ணை நீ பார்க்கிறாயே

    மண்ணை நான் பார்த்த போது

    என்னை நீ பார்க்கிறாயே"

    என்று எளிமைப்படுத்திப் பாடியிருப்பார்..

    சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.

    "ஆட்டுவித்தால் ஆரொருவருவர் ஆடாதாரே

    ஓட்டுவித்தால் ஆராரொருவரா ஓடாதாரே"

    என்பது தேவாரத்தில் வருகிற அப்பர் பாடல்.

    இவர் 'கண்ண' தாசனல்லவா ? தேவாரப் பாடலின் வரிகளைத் தூக்கிப் போய்,

    "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

    கண்ணா..

    ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே

    கண்ணா"

    என்று வைணவத்திற்கு மதம் மாற்றியிருப்பார்..

    பெரிய புராணத்தின் 'திருநீலகண்டர் புராணத்தில்' கணவன் புறமாதரோடு உறவு கொண்டதால் வெகுண்ட நீலகண்டரின் மனைவி 'எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்' என்று சிவன் மீது ஆணையிட்டு அவர் தொடக் கூடாதென்று கட்டளையிடுவார்..

    இந்தக் கருத்தை கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..சிவாஜியை மனைவி ஜெயலலிதா 'தொடக்கூடாது' என்று சொல்லி விடுவார்..அப்போது பாடுகிற பாடலில்தான் பெரிய புராணம் இணைந்து கொள்ளும்..

    " நிலவைப் பார்த்து வானம் சொன்னது

    என்னைத் தொடாதே..

    நிழலைப் பார்த்து பூமி சொன்னது

    என்னைத் தொடாதே.. "

    என்று தொடங்கி,

    " புதியதல்லவே தீண்டாமை என்பது

    புதுமையல்லவே அதை நீயும்சொன்னது

    சொன்ன வார்த்தையும் இரவல் தானது

    திருநீலகண்டரின் மனைவி சொன்னது" என்கிற வரிகள் வருகிற போது புராணம் எட்டிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதை வேறொரு பரிமாணத்தில் மாற்றியிருப்பார்..

    சந்தேகமே இல்லாமல் கண்ணதாசன் தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..!

    -மானசீகன்

    ×