search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242595"

    • 12-ந் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.
    • 14-ந் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது.

    திருமருகலில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக திரளான பக்தர்கள் பூக்களை தட்டுகளில் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

    பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி பூச்சொரிதல் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 12-ந் தேதி தீமிதி உற்சவமும், 14-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இதில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதையொட்டி நகரத்தார்கள் சார்பாக 52-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் அம்மன் மின் அலங்காரத்தில் நான்கு ரத வீதி பவனி வந்தார். இதில் பெண்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.

    அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதல் விழா, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நேற்று இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது.
    • தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது பூமாயி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 89-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதல் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அம்பாளுக்கு பூத்தட்டு எடுத்தும், பால்குடம், கரகம், மது எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பால், சந்தனம், பன்னீர், மஞ்சனம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்கள் மூலம் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சந்தனகாப்பு அலங்காரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார்.

    இரவு பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு கொடியேற்றத்துடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 10-ம் நாளன்று காலையில் தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    • கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 9-ந் தேதி பங்குனி கடைசி வார ஞாயிற்றுக் கிழமையையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும் பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது.

    • சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. அதையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பு மின்அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார்.

    பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு மேல் பூப்பல்லக்கில் மாரியம்மன் புறப்பாடாகி அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கோவிலை சென்றடைந்தார். அங்கு மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூடை, கூடையாக பூக்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • வழியெங்கும் கிராமங்களில் அம்மனுக்கு ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
    • பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம், சிலையை வைத்து தட்டு மற்றும் கூடைகளில் பூக்களை எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதில் துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் மேலாளர் தண்டபாணி மற்றும் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து நேற்று இரவு துறையூரில் இருந்து டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம் மற்றும் பூக்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். வழியெங்கும் கிராமங்களில் அம்மனுக்கு ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

    உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்களை கொண்டு சென்று, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். சமயபுரத்தில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டனர்.

    • பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    • சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து கூடைகளில் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும், பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் புதுத்தெரு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்குள்ள முத்துமாரியம்மனுக்கு காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து 23-வது ஆண்டாக புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து மேளதாளங்கள் முழங்க கடைவீதி, சன்னதி வீதி வழியாக பூக்களை கூடைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதேபோல் சமயபுரம் அம்பலக்காரதெரு பொதுமக்களின் சார்பாகவும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டது. விழாவையொட்டி சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு கோவில் சார்பில் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு சாற்றினர். அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடிய, விடிய பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர்.

    • பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • இன்று வரை பூக்களை கொண்டு செல்வார்கள்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த பூச்சொரிதல் விழா பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் பூக்களை எடுத்துக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    அதன்படி திருச்சி குதுப்பா பள்ளம் பொதுமக்கள் சார்பில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இதில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருச்சி மாநகர் பகுதிகளில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு செல்வார்கள். நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

    • மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.
    • நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக தொடங்கியது.

    மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும்.

    விழாவையொட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீதும், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கூடைகளிலும் தலையிலும் பூக்களை சுமந்தும், கையில் ஏந்தியும் வந்து அம்மனுக்கு சாத்தினர்.

    இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று இரவு முதல் நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு வருவார்கள்.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலி லும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

    அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.

    மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்று கள் உள்ளது. தட்சன் யாகத் துக்குச்சென்ற தாட்சாய ணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது.

    இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினை களும் அணுகாது, சகல சவு பாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோ றும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.

    முதலில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றுவார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 12-ந்தேதி பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் 12, 13-ந்தேதிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் போலீசார் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, ஆட்டுச்சந்தை பிரிவுரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவுரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

    மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையானயளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ துறையினர் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவுவாயில், கோவிலுக்கு செல்லும் கடைவீதி, போலீஸ் நிலையம் அருகில், திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 2 நாட்கள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாமை அமைக்க வேண்டும்.

    இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இருபக்கங்களிலும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரமைத்து, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்பு துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

    அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்கக்கூடாது. கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கோவில் வளாக பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும்.

    இந்த விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்திட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×