search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப அலை"

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
    • தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


    இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர். 

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வழக்கமாக வெப்ப நிலை அதிகரிக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதத்தில் படிப்படியாக அதிகரித்த வெப்ப நிலை ஒரு சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை எகிறியது. வட தமிழக உள் மாவட்டங்களில்தான் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

    மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலும் புழுக்கம் இருந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருவதால் வெளியே மக்கள் செல்லவே பயப்படுகிறார்கள்.

    குறிப்பாக வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பகலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து உள்ளது.

    ஈரோடு, சேலம், கரூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. இன்றும் 110 டிகிரி வரை வெப்பம் தாக்கியது.

    சுட்டெரிக்கும் கோடை வெயில் பெரும்பாலான மாவட்டங்களில் நீடித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வெப்ப அலை தாக்கம் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு நாட்களும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் தவிர ஏனைய பிற மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை 5 நாட்களுக்கு மட்டும் முன் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படும். அந்த வகையில் வருகிற நாட்கள் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், அதாவது 110 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும்.

    காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதம் ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதம் ஆகவும் இருக்கக் கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    இயல்பை விட 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாக்கினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி, வால்பாறை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    அகர்தலா:

    வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை :

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட் டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளுக்கு நன்னீர் ஆதாரங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

    இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இமயமலைப் பகுதியில் இருக்கும் ஏரிகளின் விரிவாக்கத்திற்கும் புதிய ஏரிகள் உருவாவதற்கும், பனிப்பாறை விரிவடைதல் வழிவகுக்கிறது. பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகும் இந்த நீர்நிலைகள் பனிப்பாறை ஏரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

    இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளுக்கு நன்னீர் ஆதாரங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனிப்பாறை விரிவடைவதால் ஏரி வெடிப்பு, பெரு வெள்ளங்கள் போன்ற குறிப்பிடத்தக்க அபாயங்களும் ஏற்படுகின்றன. இது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

    மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது. இதன் விளைவாக கீழ்நோக்கி திடீர் மற்றும் கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது.

    கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளை உள்ளடக்கிய நீண்ட கால செயற்கைக்கோள் படங்கள் பனிப்பாறை ஏரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 2016-17 ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில், 89 சதவீதம் அதாவது 676 பனிப்பாறை ஏரிகள் 1984-ம் ஆண்டில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளன.

    கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகுவதால், ஏரிகள் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தின் அபாயமும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
    • வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் தொடங்கி மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் உச்சத்தை அடையும்.

    ஆனால் இந்த வருடம் கோடை வெயில் முன் கூட்டியே தாக்கி வருவதால் பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

    தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் உஷ்ணத்தில் அவதிப்படுகிறார்கள்.

    14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக இருப்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொது மக்கள் கோடை வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப ஸ்டோக், மயக்கம், சோர்வு ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பதாக்குதல் அதிகரித்து வருவதால் சென்னை வானிலை மையமும் பொதுமக்களுக்கு அவ்வப்போது முன்னெச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றது.


    இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலை என்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படக் கூடியவைதான். சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலை என்கிறோம். காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும் போது உடலில் சூடு ஏற்படும். பல பிரச்சினைகள் வரும்.

    தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட் டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் கடல் காற்று உள்ளே வரும் போது வெப்ப நிலை குறையும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்கக்கூடும். ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்.

    வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
    • இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அதிக வெப்ப தாக்கத்தினால் தூர்தர்சனின் கொல்கத்தா பிரிவில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா ஸ்டுடியோவிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இது தொடர்பாக லோபமுத்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "செய்தி வாசிக்கும் அறையில் உள்ள ஏர் கண்டிஷனர் சரியாக வேலை செய்யவில்லை.இதனால், ஸ்டுடியோவில் அதிக வெப்பம் காணப்பட்டது. நான் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வரவில்லை. என்னுடைய 21 வருட பணி அனுபவத்தில், 15 நிமிடங்கள் அல்லது அரை மணிநேர ஒளிபரப்பில், எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

    ஆனால், இந்த முறை செய்தி வாசித்து முடிக்க 15 நிமிடங்கள் மீதமிருக்கும்போதே, வறட்சியாக உணர்ந்தேன். டி.வியில் வேறு செய்தி ஓடியபோது, மேலாளரிடம் தண்ணீர் பாட்டில் தரும்படி கேட்டேன். தண்ணீர் குடித்து முடித்ததும் மீதமுள்ள செய்தியை வாசிக்க வேண்டி இருந்தது.

    வெப்ப அலை செய்தியை வாசித்து கொண்டிருந்தபோது, பேச முடியாமல் திணறினேன். பேசி முடித்து விடலாம் என முயன்றேன். டெலிபிராம்ப்டரும் மங்கிப்போனது. எனக்கும் இருண்டதுபோல் தோன்றியது. அப்போது, அப்படியே மயங்கி நாற்காலியில் சரிந்து விட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

    அப்போது சிலர் ஓடி வந்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் நினைவு திரும்ப உதவினர். இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    • வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது.
    • ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்குகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கேரளாவில் வருகிற 26- ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் மாநிலத்தில் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும், மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக வெயில் அடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது.

    இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் அவசரமாக கூடி ஆலோசித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரசாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    ×