search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.
    • டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என்ற அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ஒரு பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையை சிபிஐயிடம் கொல்கத்தா ஐகோர்ட்டு ஒப்படைத்தது.

    கடந்த 14-ம் தேதி நள்ளிரவு, ஒரு மர்ம கும்பல் புகுந்து ஆஸ்பத்திரியை சூறையாடியது.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்களின் 24 மணி நேர போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. நேற்றுமுன்தினம் காலையில் இருந்து நேற்று காலைவரை போராட்டம் நடந்தது.

    மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும், ஆஸ்பத்திரிகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த போராட்டம் காரணமாக, அனைத்து மாநிலங்களின் போலீஸ் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பி வைத்தது.

    அதில், உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    இப்போது இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டம்-ஒழுங்கு நிலவர அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைக்கு பேக்ஸ் அல்லது இ-மெயில் அல்லது வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

    இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

    இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

    அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

    நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
    • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் தங்களின் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

    ஒரு சமூகமாக பெண்களுக்கு பாதுகாப்பான, மதிப்புமிக்க வீடு மற்றும் பணியிடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இப்போது இல்லையென்றால் எப்போது? நடவடிக்கைக்கான நேரமிது" என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். 

    • சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
    • சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால் தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால், தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.

    இச்சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.

    அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

    அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருபத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     


    மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மாநில அரசுகள் இது தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

    • மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இச்சம்பவம் மருத்துவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண்பயிற்சி டாக்டர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் பிரபு சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர்கள் ஜெகதீசன், விஜயராஜ், ராஜ்குமார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
    • நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

    அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.

    • இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.

    இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.

    • பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை, முதுகலை பயிற்சி டாக்டர்கள் இன்று 2-வது நாளாக டாக்டர்கள் , பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.

    பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.

    புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் , அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் டாக்டர். கீர்த்தி தலைமையில் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தனர். மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    • அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
    • சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

    தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, க.விலக்கு, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி உள்ளிட்ட இடங்களில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அந்த பிரிவில் பெயர் பதிவுகூட நடைபெறவில்லை. ஆனால் அவசர சிகிச்சை மற்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.


    இதேபோல் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி, பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மற்ற சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து எந்த விவரமும் தெரியாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

    ×