search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு தொகுதி"

    • பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது.
    • காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுகிறது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அதே வேளையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுவதால், ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனையும் மீறி ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.

    இது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தபடி உள்ளனர். மேலும் தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் ஒரே தொகுதியில் தனித்தனியாக மல்லுக்கட்டுவது மற்ற கட்சிகளின் மத்தியிலும் பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.

    இந்நிலையில் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் ஆனி ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் முடிந்தது.

    குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாரதிய ஜனதா அரசு அழித்து வருகிறது. ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் அவர் சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
    • காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    இதன் காரணமாக அனைவரின் பார்வையும் வயநாடு தொகுதியில் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்து விட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தனது பிரசாரத்தை ஆனி ராஜா தொடங்கிவிட்டார்.

    அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து அவரும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் ராகுல் காந்தியை தோற்கடித்து, வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்ற முனைப்பில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதேவேளையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இன்னும் பிரசாரத்துக்கு தொகுதிக்கு வரவில்லை. அவர் ஏப்ரல் 3-ந்தேதி வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது வருகைக்கு பின் வயநாடு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும். அதே நேரத்தில் ஆனி ராஜா மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருமே ராகுல்காந்தியை தாக்கி பேசுவதையும், அவரை தொகுதி மக்கள் விரும்பவில்லை என்று கருத்து கூறியபடியும் தங்களின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொகுதியில் இருப்பதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனி ராஜா கூறியதாவது:-

    நான் தொகுதியில் இருப்பேனா அல்லது தற்போதைய எம்.பி. போன்று விருந்தினராக இருப்பேனா? என்பதை இங்குள்ள வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நான் அவர்களுடன் தான் இருப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சி சுரேந்திரன் கூறும்போது, 'தேர்தலில் வெற்றி பெற்றால் முழு காலத்துக்கும் வாக்காளர்களுடன் இருப்பேன். தற்போது பதவியில் இருப்பவரை போல் எம்.பி.யாக இருக்க முடியாது. செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்தாலும், பின்தங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் எம்.பி.யாக ராகுல்காந்தி தோல்வியடைந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்' என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார்.
    • ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ராகுல்காந்தி இன்றும் வரவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இருந்தபோதிலும் ராகுல் காந்தி எப்போது வருவார்? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ராகுல்காந்தி வருகிற ஏப்ரல் 3-ந்தேதி கேரளா வருகிறார். அவர் அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் ரோடு-ஷோ செல்கிறார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரசாரத்துக்காக கேரளாவில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 26-ந்தேதிக்கு முந்தைய நாட்களில் கேரளாவுக்கு மீண்டும் வருகிறார். அப்போது அவர் வயநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    ராகுல்காந்தி வருகை அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல்காந்தியை வரவேற்க தயாராகி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவரது பிரசார பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராகுல்காந்தியும் பிரசாரத்துக்கு வந்துவிடும் பட்சத்தில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது.
    • ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜனதா கடந்த 2-ந்தேதி 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது.

    அதன்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது வயநாட்டில் அவர் மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்று இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாட்டின் அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதசார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காகவும், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதற்காகவும் பா.ஜனதாவை எதிர்த்து போராடி வீழ்த்துவதே இந்தியா கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.

    ஆனால் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை இல்லை. கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. பா.ஜனதா எந்த ஆதாயமும் பெற அனுமதிக்க முடியாது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டது.

    வேட்பாளரை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. காங்கிரஸ் முடிவு எடுக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் அந்தஸ்து உள்ள ஒரு தலைவரை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் நிறுத்த முடியுமா? என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு டி.ராஜா கூறி உள்ளார்.

    • முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியீடு.
    • திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தனது முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுபோல், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் (ராஜ்னம்த்லோன்) பூபேஸ் பேகல், மாண்டியாவில் வெங்கட்ராம கவுடா, டி.கே.சுரேஷ் குமார் பெங்களூரு ஊரகத்திலும் போட்டியிடுகின்றனர்.

    • பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    களமச்சேரி காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்க தலைவராக இருந்து வந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தன்னை காங்கிரசார் அவமதித்துவிட்டனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம், சுயமரியாதையுடன் செயல்பட முடியாத நிலை காங்கிரசில் இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பத்மஜாவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    சாலக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பத்மஜா போட்டியிடலாம் என்று கூறப்பட்டாலும், வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. இதனால் வயநாடு தொகுதியிலேயே அவர் போட்டியிடலாம் என தெரிகிறது.

    திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கேரள மாநில தலைவர் கே. முரளீதரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    • அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொச்சி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் அவருக்கு வயநாடு தொகுதியில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது.

    இந்த தடவையும் அவர் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிராணி ஏராளமான நலத்திட்டங்களை செய்து வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார். இதனால் அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.

    எனவே 2-வது தடவையாக வயநாடு தொகுதியில் களம் இறங்க அவர் நினைத்திருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வயநாடு தொகுதி யில் டி.ராஜாவின் மனைவி அனிராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வயநாடு தொகுதியில் அனிராஜா தீவிர பிரசாரம் செய்யும் பட்சத்தில் அங்கும் ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று ராகுல் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தடவையும் ராகுல் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இன்னொரு தொகுதி எது என்று ஆலோசித்து வரு கிறார்கள். வயநாடுக்கு பதில் கர்நாடகா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி யில் ராகுலை போட்டியிட வைக்கலாமா? என்றும் ஆலோசனை நடக்கிறது.

    இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது உத்தரபிரதே சத்தில் சரிவு ஏற்பட்ட நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் போட்டியிட்டார். அதே போன்று ராகுலும் கர்நாடகாவுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே வயநாடு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. எனவே வயநாடு தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்து விட்டு ராகுலை சாதகமான தொகுதிக்கு இட மாற்றம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி.
    • மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

    கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்க உள்ளது.

    அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டி யிடுகிறார்.

    இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா கூறியிருப்பதாவது:-

    வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு.

    எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.
    • கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதியை அனைத்து கட்சிகளுமே மிகவும் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கின்றன. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று அனைத்து கட்சிகளும் ஆலோசித்து வருகிறது.

    கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறையும் அவரே போட்டியிட உள்ளார். அவர் கடந்த தேர்தலில் வயநாடு மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    அங்கு தோற்றுவிட்ட நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த முறை ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
    • வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும்.

    திருவனந்தபுரம்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார்.

    அதே போல வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்ள திட்டமிட்டு உள்ளது. மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்து உள்ளன.

    டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும்.

    எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கருதுகிறது. இந்தியக் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டுக்கு எதிராகப் போட்டியிடுவது எதிர்மறையாகக் கருதப்படலாம் என்று அந்த கட்சி கூறுகிறது.

    இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "எங்கள் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் இறுதி முடிவு எடுக்கும். குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என்றார்.

    கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து கூற உரிமை உண்டு. வயநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் களமிறக்குமாறு நாங்கள் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • ராகுல் காந்திக்கு மாவட்ட தலைமையகமான கல்பேட்டை பகுதியில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
    • 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சித்திக் தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார்.

    இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 4-ந்தேதி அவருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்தனர். இதனையடுத்து தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

    மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு அவர் தனது தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டார். 12 மற்றும் 13-ந் தேதிகளில் கேரளா சென்று தொகுதி மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வயநாடு வருகிறார். அவருக்கு மாவட்ட தலைமையகமான கல்பேட்டை பகுதியில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சித்திக் தெரிவித்தார்.

    • காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
    • விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    கோழிக்கோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    ×