என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எக்ஸ்"
- சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
- முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.
டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?
எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
- பட்டியலில் முதல் இடத்தில் லூயி வியுட்டன் CEO பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்
- பணக்காரர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் (52) உலக பணக்காரர்கள் வரிசையில் தற்போது 3-ஆம் இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டின் ஃபேஷன் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான லூயி வியுட்டன் (Louis Vuitton) நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) உள்ளார். இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உள்ளார்.
2022 அக்டோபர் மாதம் அமெரிக்காவை மையமாக கொண்ட பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார். அதன் பெயரை டுவிட்டர் என்பதிலிருந்து எக்ஸ் என மாற்றி வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ஆனால், மஸ்க் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
இந்நிலையில், எலான் மஸ்கின் நிகர மதிப்பு $189 எனும் அளவில் உள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்லாவின் பங்கு சந்தை மதிப்பு, கடந்த ஒரு வருடமாக சரிய தொடங்கி இதுவரை 29 சதவீதம் விழுந்துள்ளது. டெஸ்லாவில் எலான் மஸ்க் வைத்திருக்கும் 21 சதவீத பங்குகள்தான் அவரது வருவாயில் பெரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைமை செயல் அதிகாரியான பராக் அக்ரவாலை மஸ்க் நீக்கினார்
- தர வேண்டிய தொகையை தராமல் இருப்பது மஸ்கின் வழிமுறை என நால்வரும் குற்றம் சாட்டினர்
டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (52), கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழி உரையாடல்களுக்கான சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) எனும் வலைதளத்தை, $44 பில்லியனுக்கு வாங்கினார்.
டுவிட்டரின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், எலான் மஸ்க், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
அவற்றில் ஒன்றாக அதுவரை இருந்து வந்த தலைமை செயல் அதிகாரியான "பராக் அக்ரவால்" (Parag Agrawal) எனும் இந்தியரை அப்பதவியில் இருந்து நீக்கினார்.
மேலும், டுவிட்டர் பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார் மஸ்க்.
எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் குறைய தொடங்கியதை அடுத்து, பல நடவடிக்கைகள் மூலம் அதனை லாபகரமானதாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மஸ்க் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளான பராக் அக்ரவால், நெட் சீகல், விஜய கட்டே, ஷான் எட்ஜெட் உள்ளிட்ட 4 பேர், தங்களை பணிநீக்கம் செய்ததற்கு ஈடாக மஸ்க் வழங்க வேண்டிய $128 மில்லியன் தொகையை வழங்கவில்லை என அவர் மீது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும், டுவிட்டரை விலைக்கு வாங்கிய சில நிமிடங்களிலேயே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தங்களை வெளியேற்றியதாக இந்த நால்வரும் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
தான் திருப்பி தர வேண்டிய தொகையை தராமல் பிறரை அவர் மீது வழக்கு தொடுக்க செய்து காலம் கடத்துவதுதான் மஸ்கின் வழிமுறை என தங்கள் குற்றச்சாட்டில் அந்த நால்வரும் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வரை இது குறித்து எக்ஸ் நிறுவனம், அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- 2022ல் எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி எக்ஸ் என பெயரை மாற்றினார்
- குழந்தைகள் குறித்த வீடியோக்களை ஆஸ்டின் அலுவலகம் கண்காணிக்கும்
பயனர்களின் உரையாடல்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளம், எக்ஸ் (X).
எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ள பயனர்கள் ஒருவருக்கொருவர் உரை, புகைப்படம், வீடியோ, கோப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் செய்திகளை பிறருடன் பரிமாறி உரையாட முடியும்.
கடந்த 2022ல், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
சில தினங்களுக்கு முன் உலக புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) தோன்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டீப்ஃபேக் (deepfake) வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகியது. எக்ஸ் நிறுவனத்தில் உடனடியாக புகார்கள் அளிக்கப்பட்டும் அவற்றை நீக்கவே பல மணி நேரங்கள் ஆனது.
இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு வீடியோக்களால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக இத்தகைய தளங்களை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், எக்ஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில ஆஸ்டின் (Austin) நகரில் தளத்தின் உள்ளடக்கத்தில் இது போன்ற வீடியோக்கள் வெளியாகாமல் தடுக்க ஒரு அலுவலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.
100 பணியாளர்களுக்கும் மேல் இந்த அலுவலகத்தில் குழந்தைகள் குறித்து இடம் பெறும் தகாத உள்ளடக்கங்களை கண்டறிந்து உடனுக்குடன் நீக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
- அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
- 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.
உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.
ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.
இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.
அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.
எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.
அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.
சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.
அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.
2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
While it is trivial to enter the United States illegally, it is insanely difficult for legal immigrants to move to the United States.
— Elon Musk (@elonmusk) January 4, 2024
This is madness! We should shut down illegal immigration and greatly increase legal immigration. https://t.co/ElW9PZaIqh
- முன்னதாக டுவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றினார் மஸ்க்
- விளம்பர வருவாய் மஸ்க் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைந்தது
உலக புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) நிறுவனத்தை, 2022ல் உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். 2023ல் மஸ்க் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை வளர்க்கவும் பல அதிரடி முயற்சிகளை எடுத்தார். முன்னதாக "டுவிட்டர்" பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார்; நிறுவன இலச்சினையை (logo) மாற்றினார்; பல உயர்மட்ட அதிகாரிகளையும், கடைநிலை மற்றும் இடைநிலை ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார்; தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார். ஆனால், இதுவரை "எக்ஸ்" விளம்பர வருவாய் அவர் எதிர்பார்த்தது போல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, எக்ஸ் குறித்த தனது திட்டங்களை மஸ்க் மாற்றியமைப்பார் என தெரிகிறது.
- 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
- யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்
கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.
ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.
அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.
இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.
இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹமாஸ்- இஸ்ரேல் போரில் காசாவின் வடக்குப் பகுதி மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
- இருதரப்பில் உள்ள மருத்துவமனைகளும் பாதிப்படைந்துள்ளன.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஐந்து நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவின் வடக்குப் பகுதி சீர்குலைந்துள்ளது. மேலும், அல்-ஷிபா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
- பிரீமியம் பிளஸ், பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் வாங்கிக் கொள்ள முடியும்.
- மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
எக்ஸ் வலைதளத்தில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் என இரண்டு புதிய சந்தா முறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் பிரீமியம் பிளஸ் சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம் எக்ஸ் தளத்தில் பயனர்கள் தற்போது மூன்று விதமான சந்தா முறைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய எக்ஸ் பேசிக் சந்தாவின் விலை மாதம் ரூ. 243 (வலைதள பதிப்பு) என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்தாவில் விளம்பரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இத்துடன் பதிவுகளை எடிட் செய்வது, மாற்றிக் கொள்வது, எஸ்.எம்.எஸ்., கஸ்டமமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரியேட்டர் அம்சங்கள் மற்றும் டிக் மார்க் உள்ளிட்டவை வழங்கப்படாது. ஏற்கனவே உள்ள பிரீமியம் சந்தா விலை மாதம் ரூ. 650 (வலைதள பதிப்பு) ஆகும். இதில் அனைத்து விதமான பிரீமியம் மற்றும் கிரியேட்டர் அம்சங்கள், குறைந்த விளம்பரங்கள் வழங்கப்படும்.
விளம்பரங்கள் தேவையில்லை எனில், மாதம் ரூ. 1300 (வலைதள பதிப்பு) செலுத்தி பிரீமியம் பிளஸ் சந்தாவை பெற்றுக் கொள்ளலாம். புதுவித சந்தா முறைகளில் பிரீமியம் பிளஸ் மற்றும் பேசிக் ஆகிய இரண்டும் வலைதள பதிப்பில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.
- எக்ஸ் வலைதளத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
- எக்ஸ் வலைதளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்ற எலான் மஸ்க் விருப்பம்.
எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் அம்சம் பற்றிய தகவலை லிண்டா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிறுவன வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் யார் யார் தனக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை தேர்வு செய்வதற்கான வசதியும் பயனருக்கு வழங்கப்படுகிறது. இதில் அட்ரஸ் புக்கில் இருப்பவர்கள், யார்யார் ஃபாளோ செய்கிறார்கள் மற்றும் அனைவரும் என மூன்று நிலைகளில் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
ஆடியோ, வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?
அழைப்புகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய எக்ஸ் செயலியின் செட்டிங்ஸ் -- பிரைவசி & சேஃப்டி -- டைரக்ட் மெசேஜஸ் -- எனேபில் ஆடியோ & வீடியோ காலிங் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ளலாம்.
- ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
- சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம்.
எக்ஸ் வலைதளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்து இருக்கும் நிலையில், இவை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றின் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, எக்ஸ் தளத்தில் சந்தா முறைகளை பேசிக், ஸ்டாண்டர்டு மற்றும் பிளஸ் என மூன்று நிலைகளில் பிரிப்பது பற்றி எக்ஸ் தலைமை செயல் அதிகாரி லிண்டா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது எலான் மஸ்க் தெரிவித்து இருக்கும் இரண்டு சந்தா முறைகள் பேசிக் மற்றும் பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் சந்தா முறை ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய சந்தா முறைகளின் படி பிளஸ் சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்