search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்"

    • 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
    • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


    தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.

    200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.


    காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.

    பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.

    மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

    அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.

    மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.

    • வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம்.
    • 36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி 36-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும்போதே, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது மனம் வலிக்கிறது. எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது.

    வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 10.50 சதவீதம் வன்னியர் இடஓதுக்கீடு, 3.50 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3 சதவீதம் அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15சதவீத, பழங்குடியினருக்கு 7.50 சதவீத இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான்.

    வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10-ந்தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.

    விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்து வரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    • தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை

    இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    • தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.
    • பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர்பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    பின்னர் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.

    பா.ம.க.வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அதுதான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.
    • திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் இறந்தவர்கள் 15,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    * திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    * திமுகவின் விதிமீறல்களை தட்டிக்கேட்ட அதிமுக மற்றும் பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    * இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விதிமீறல்கள், வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விடுகிறது.

    * திமுகவினரின் விதிமீறல்கள் மீது தேர்தல் அதிகாரி சந்திரசேகர் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரி சந்திரசேகரால் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.

    * திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பாமக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை.
    • உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
    • மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.

    தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.

    சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் கூறியிருப்பதாவது:-


    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இன்று ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர் அறிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.

    • 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
    • நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகம் முன் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி . நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடந்தது போனதில்லை. ஆனால் நாங்கள் 2000 முறை சிந்தித்து செயலாற்றி கொண்டு வருகிறோம். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.

    ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியானஅரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்கிகிறது. 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன? சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
    • போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது.

    சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

    இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை அளவில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
    • அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தொண்டர்களுடன் சென்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று தி.மு.க.வினர் நூதனப் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தி.மு.க. பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து அரிச்சுவடி, கமண்டலத்துடன், காட்சி அளித்து விக்கிரவாண்டியில் வீதி, வீதியாக சென்று பாட்டுப்பாடினார். அகத்தியர் வாக்கு பொய்க்காது, பலிக்கும் எனக்கூறிய இவர், முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    நூதன முறையில் அகத்தியர் வேடமணிந்து பிரசாரம் செய்வதை அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்போடு பார்த்தனர்.

    • தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது.
    • பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக 56 வேட்பாளர்கள், 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெற முன்வராத நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் ஒன்றிரண்டு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என தெரிகிறது.

    அதன்பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×