search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"

    • நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
    • எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன்.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவில் சூரல்மலா கிராமத்தை சேர்ந்த லாட்டரி வியாபாரி பொன்னையன் என்பவர் நிலச்சரிவில் சிக்காமல் குடும்பத்துடன் உயிர்த்தப்பினார்.

    எனது வீட்டின் அருகே நடு இரவில் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு நான் என்னுடைய குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னுடைய மனைவி ஜிசா மற்றும் மகன்கள் ஸ்ரீராக், விகாஸ் ஆகியோருடன் என்னுடைய லாட்டரி கடைக்கு வந்தேன்.

    நாங்கள் தூங்குவதற்கு முன்பாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இடைவிடாத மழை பெய்ததால் அசம்பாவிதம் நடக்கலாம் என மனதிற்குள் தோன்றியது.


    இதனால் எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை. கடையில் குடும்பத்துடன் தங்கி இருந்த நான் நள்ளிரவில் எழுந்து பார்த்தேன்.

    வெளியில் கனமழை பெய்தது. காலையில் கடை ஷட்டரை உயர்த்த முயற்சித்தேன். அப்போது சேற்று நீர் உள்ளே வர ஆரம்பித்தது. சட்டர்களை உடனே இறக்கிவிட்டு கடையின் கூரையின் மீது மனைவி குழந்தைகளுடன் ஏரி அமர்ந்து கொண்டோம்.

    அப்போது அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் பதறினோம்.

    உதவிக்காக சத்தமாக அழுதேன். ஆனால் அருகில் யாரும் இல்லை. அவர்கள் பலியாகி விட்டனர். உயரமான இடத்திற்கு சென்றதால் குடும்பத்துடன் தப்பித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
    • மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நிகிலா விமல், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது. மேலும் சாலைகளில் பாறைகள் உருண்டும், நிலச்சரிவு ஏற்பட்டும் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

    நேற்று அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 128.90 அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 130.45 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2½ அடி உயர்ந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் நீர்வரத்து 3216 கன அடியில் இருந்து 5339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4802 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.38 அடியாக உள்ளது. அணைக்கு 1913 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2780 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு அணை 33.8, தேக்கடி 22.4, சண்முகாநதி 2.4, போடி 0.4, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 4.6, வீரபாண்டி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாளை தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன. மேலும் அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது.
    • தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்த நிலையிலும், மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று பிற்பகலில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,940 கனஅடி நீர் அந்த அணைக்கு வருகிறது. 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 120.10 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது. இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1154 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் மட்டும் நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரையிலும் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 52.50 அடி கொண்ட அந்த அணை நீர்மட்டம் 27 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 47 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 182 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 77 அடியானது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 82 அடியானது.

    குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழியும் நிலையில், அடவிநயினார் அணை பகுதியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 117 அடியை எட்டியுள்ளது.

    மாவட்டம் முழுவதும் இதமான காற்று வீசி வருகிறது. குளங்களுக்கு நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள்.
    • கேரள மாநிலம் அம்பூரியில் கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் பலர் மாண்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * அசாம் மாநிலம் கவுஹாத்தி: கனமழை காரணமாக 1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவால் ஒரு கிராமம் முழுவதும் புதையுண்டது.

    * மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங்: கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 60 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை 91 பகுதிகளாக சிதைந்தது. நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    * உத்தரகாண்ட் மாநிலம் மல்பா: 1998-ம் ஆண்டு ஆகஸ்டு 11 முதல் 17-ம் தேதி வரை இங்கு தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    * மகாராஷ்டிரா மாநிலம் மும்பை: கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள். ரெயில்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின.

    * கேரள மாநிலம் அம்பூரி: கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர். அதே நேரம் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்தன.

    * உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்: கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி உத்தரகாண்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் 5,700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக பயணம் செய்தவர்களும் அடங்குவார்கள். சுமார் 4,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நாட்டின் மிக மோசமான நிலச்சரிவாக கேதார்நாத் சம்பவம் பார்க்கப்படுகிறது.

    * மகாராஷ்டிரா மாநிலம் மாலின்: கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மாலினில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 151 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காணாமல் போயினர்.

    * கேரள மாநிலம் மூணாறு: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 67 பேர் பலியானார்கள்.

    • நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
    • வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'வயநாட்டுக்கு சகோதரி பிரியங்காவுடன் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கனமழை, மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    • மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.

    கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன.

    ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்கியது.

    முண்டகை பகுதியில் மீட்பு பணிக்கு ஏற்பாடு நடந்து வந்த நேரத்தில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.

    அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததாலும் அந்த பகுதி முழுவதும் மணலும், சகதியும், வெள்ளமுமாக காட்சியளித்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

    அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர், குன்னூர் வெலிங்டனில் இருந்து ராணுவத்தினர், திருவனந்தபுரத்தில் இருந்து மாநில மீட்பு படையினரும், 130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    எனினும் கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 143 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. இன்றும் 2-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு வந்தடைந்தனர்.

    முன்னதாக, வயநாடு வந்த தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    • கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×