என் மலர்
நீங்கள் தேடியது "Murder"
- பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.
நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
- வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாழப்பாடி:
இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.
இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், லஷ்மி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி (வயது 55). இவர் சந்திரசேகர ராவின் பி.ஆர். எஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் ரெட்டி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஸ்ரீதர் ரெட்டியை கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் ரெட்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதர் ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
- இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்ட அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரிடமும் நண்பர்களாக பழகியவர்களே இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
போதைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்டிருந்த மோதலே பூதாகரமாக வெடித்து கொலையில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அதன் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் தமிழரசனை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட மோதலில்தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.
சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அரி சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் சவாரிக்கு வந்தவர்கள் திரும்பி வராததால் சுடு காட்டுக்கு சென்று அவர் பார்த்தபோதுதான் அண்ணாமலையும், தமிழரசனும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.
இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடிய டிரைவர் அரி இதுபற்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
- கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.
இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.
இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.
இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). பாத்திர வியாபாரி.
இவர் நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை-கூட்டாம்புளி சாலையில் மனைவியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில், தூத்துக்குடி சிப்காட் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்த மாரிதங்கம்(23) என்பவரை முன்பகை காரணமாக பாத்திர வியாபாரி முருகன் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த ஆண்டு மடத்தூர் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக மாரிதங்கம் மற்றும் சிலர் சேர்ந்து தற்போது முருகனை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலை கும்பலை சேர்ந்த மாரிதங்கம் மற்றும் அவரது கூட்டாளிகளான புதுக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த வினித்(22), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரீஸ்வரன் என்ற மாதேஷ் ஆகியோர் மறவன்மடம்-புதுக்கோட்டை இடையே உள்ள தட்டப்பாறை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு தப்பி செல்ல முயன்றனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டப்பாறை சாலை பகுதிகளை முழுமையாக சுற்றி வளைத்தனர். இதனால் அந்த கும்பல் காட்டுக்குள் தப்பி ஓடினர். போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து பிடிக்க சென்றபோது ஓடியபோது தடுமாறி கீழே விழுந்ததில் மாரிதங்கத்திற்கு கை முறிவும், மாதேஸ்வரனுக்கு கால் முறிவும் ஏற்பட்டது. வினித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து 3 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ், முன்னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதியினருக்கு ரமேஷ் ராவ், சீனிவாச ராவ் என்ற மகன்களும், லட்சுமிபாய் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து சந்திராபாய், மகள் லட்சுமி பாய் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பாய் வழக்கம் போல் தனது தாய் சந்திரா பாய்க்கு இன்று காலை 7 மணி அளவில் போன் செய்தார்.
அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமிபாய் உடனடியாக, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் அண்ணன் ரமேஷ் ராவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரமேஷ் ராவ் மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தனர்.
அப்போது சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுவற்றில் ரத்த காயங்கள் இருந்தது. அவரது ஆடைகளும் கலைந்து கிடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, மங்கையர்கரசி, பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-
மூதாட்டி தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மகும்பல் திட்டமிட்டு, மூதாட்டியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். இறந்தகிடந்த சந்திராபாயின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருப்பதோடு, வீட்டின் சுவற்றில் ரத்தக்கரைகளும் படிந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.
இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.
மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கஜுலுரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சின்னி, பேரன் ராஜு. இவர்கள் 3 பேரும் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களுடைய கைகளில் அரிவாள்கள் இருந்தன.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
- 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் குப்பனூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் (45) இவர் நேற்று முன்தினம் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள தனது பீரோ பட்டறைக்கு காரில் சென்றார். அப்போது அயோத்தியாபட்டணம் அடுத்த அரூர் மெயின்ரோடு பனங்காடு பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் சரவணன் ஓட்டி வந்த கார் மீது மோதி நின்றது.
பின்னர் அந்த கும்பல் காரில் இருந்து சரவணனை வெளியே இறக்கி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தெரியவந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட காட்டூர் ஆனந்தன் கொலையாளிகளுக்கு பட்டறை சரவணன் பண உதவி செய்ததும், இதனால் பழிக்கு பழியாக காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் தலைமையிலான கும்பல் சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கும்பல் சரவணனை வெட்டி கொலை செய்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பட்டறை சரவணன் கொலை வழக்கு தொடர்பாக காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்யா (38), அவரது மற்றொரு தம்பி கணேஷ் (30), பொன்னமா
பேட்டையை சேர்ந்த ஜீவன்ராஜ் (24), கருப்பூரை சேர்ந்த சாரதி (21), சூர்யா (25), காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் பட்டறை சரவணனை தீர்த்து கட்டுவதற்கு ஒன்று சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் மேலும் 10 பேர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
முன்னதாக கைதான 7 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
- இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்டுப்புத்தூர் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் பாரதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கஸ்தூரிபாய் புரம், கோவில் தெரு காமாட்சி மகன் பாலகிருஷ்ணன் (வயது 24) என தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. பாலகிருஷ்ணனும், அவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய இருவரும் கரூர் அருகே உள்ள மோகனூரில் தங்கி பர்னிச்சர் வேலை செய்து வந்தனர். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பத்தன்று 2 பேரும் மோகனூர் டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அருகே தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி உள்ளனர். இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் பாலத்தின் கீழ் சென்று மயங்கி விழுந்து இறந்தார். ரமேஷ் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனங்களின் உதவியுடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா மேற்குவார் பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த தாசில்ராஜா மகன் சதீஷ்குமார் (21), மலைச்சாமி மகன் புவனேஸ்வரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்பு உடைய மேலும் 6 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.