search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • பழனி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி மலைக்கோவிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் பாதவிநாயகர் கோவில் முதல் படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், குராவடிவேலர் உள்ளிட்ட உபசன்னதிகளில் தெய்வங்களின் திருக்கலசம் அலங்கரிக்கப்பட்டு அருட்சக்தி கொணர்தல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தெய்வ சக்தி கலசங்களும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, நெய்வேத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து உபசன்னதிகளில் யாகம் நிறைவு பெறுகிறது.

    பின்னர் உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு திரு உலா நடக்கிறது. பின்னர் கிரிவீதிகளில் உள்ள 5 மயில் சிலை, பாதவிநாயகர், சேத்ரபாலர், படிப்பாதை விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் கந்தபுராணம், திருப்புகழ், திருமுறை பாடி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கும் கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள், மிராஸ் பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைக்கு சூரிய கதிரில் இருந்து அக்னி எடுத்தல், யாகசாலையில் இடுதல் ஆகியவை நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து தெய்வ சன்னதிகளிலும் கலசத்தில் அருட்சக்தி கொணர்தல் நடந்தது.

    பின்னர் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் உருவத்துக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் திருமறை, கட்டியம், கந்தபுராணம், கந்தர் அலங்காரம் பாடி வழிபட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, கணபதி பூஜை, கலசபூஜை நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள், பக்தர்களால் திருப்புகழ், திருமுறை பாடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பின்னர் ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, ஐந்து மந்திர ஆறங்க யாகம் நடந்தது. அதையடுத்து மூலிகை பொருட்கள், விதை, வேர், தண்டு, இலை, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுவகை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடந்தது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, மலர்களை கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.

    அதையடுத்து நேற்று மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது மூலிகைகள், வாசனை திரவியங்கள், தேன், இலை, தண்டு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகம் நிறைவு பெற்று தீபாராதனை, மலர் வழிபாடு, கட்டியம், கந்தபுராணம், திருமுறை, முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. முடிவில் நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், இந்த விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. 20-ந்தேதி வரை 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். பின்னர் விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குலுக்கல் முறையில் கடந்த 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான 2 ஆயிரம் பேருக்கு செல்போன் எண், இமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் 23, 24-ந்தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் வேலவன் விடுதியில் அடையாள சான்றுடன் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று காலை 10 மணி முதல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தேர்வான பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள தேர்வானவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் இருந்தனர். இதனால் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமதிச்சீட்டை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    இந்த அனுமதிச்சீட்டில் வரிசை எண், நேரம், நாள், எங்கு அமர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் கோவிலின் 'ஹோலோகிராம்' முத்திரை இருந்தது.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கோவில் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமானால் பல மூலிகைகளை கொண்டு தயாரித்த நவபாஷணத்தால் செய்யப்பட்டது.

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. அன்றைய தினம் ராஜகோபுரம், உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தது. மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதற்கிடையே கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதையடுத்து விநாயகர் பூஜை, விதை தெளித்தல், நறும்புகை, படையல், தீபாராதனை, நெய்வேத்தியம் நடைபெற்றது.

    பின்னர் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று மங்கல நாண் அணிதல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் எழுந்தருளும் பொருட்டு ஐந்துவகை நூல் சுற்றி, பட்டாடை உடுத்தி சந்தனத்தால் கலசம் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் ஆனந்தவிநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தங்கவிமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய கலசங்கள் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் அருட்சக்தியை கலசத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். மேலும் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் கலசங்கள் உட்பிரகாரம் வலம்வந்து பாரவேல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட ஆனந்தவிநாயகர், கைலாசநாதர் உள்ளிட்ட சக்தி கலசங்களுடன் மூலவர் கலசம் யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. பின்னர் மங்கல இசையுடன் யாகசாலையில் அங்கரிக்கப்பட்ட கும்ப மேடையில் கலசங்கள் வைத்து பூஜைகள் தொடங்கியது. பின்னர் விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது. பின்னர் மூலவர் கலசம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமறை, சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம் ஆகியவை பாடப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி சூரியனில் இருந்து அக்னி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சூரியக்கதிர்கள் குவிக்கப்பட்டு அக்னி எடுக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட அக்னி கோவிலில் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் அக்னி இடப்பட்டது. பின்னர் நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக உபயதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    • யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
    • கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டன. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் பரிவார தெய்வங்கள் என அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தகுடங்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.

    இவை மேளதாளங்களுடன் திருமுறை ஓதுதலோடு உலாவருகிறது. பின்னர் யாகசாலைக்கு செல்கிறது. அங்கு ஆதவன் வழிபாடு, மங்களஇசை, சூர்யகதிரிலிருந்து வேள்விக்கு நெருப்பு எடுத்தல் உள்பட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைதொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய்கனி, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால்,தயிர், சுண்டல், 12 விதமான மூலிகை குச்சிகளால் வேள்வி நடைபெறுகிறது.

    பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று திருஆவினன்குடி கோவில் திருப்புகழ் மண்டபத்தில் வேழ வழிபாடு, ஆனிறைவழிபாடு, ஏழுபரி வழிபாடு, நறும்புகை விளக்க படையல், திருவொளி வழிபாடு நடைபெற்றது.

    பழனி மலைக்கோவிலில் தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் அடைதல், பேரொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 2 யானைகளுக்கு கஜ பூஜையும், 7 குதிரைகளுக்கும், பசுமாடுகளுக்கு கோபூஜையும் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றுமாலை திருமகள் திருவழிபாடு, 16 திருக்குடங்களில் திருமகளை பூஜித்தல், 16 வித வேள்வி, 16 கன்னியர், 16 மங்கள வழிபாடு நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பழனிகிரி வீதி, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி நகராட்சி, தேவஸ்தானம், வருவாய்த்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த இந்த பணியில் போலீசார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு வருவார்கள். இதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா வருகிற 29-ந்தேதி உபகோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று காப்புக்கட்டு நடக்கிறது.

    தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்குமேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    அடுத்த நாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாத தொடக்கத்திலேயே பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் கும்பாபிஷேகம், தைப்பூசம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பழனியே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பக்தர்கள் வருகின்றனர்.

    பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் புனித நீராடிய பின்பு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். இதனால் இடும்பன்குளம், சண்முகநதி பகுதியிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு போதிய வசதி இல்லை. அதாவது பெண் பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இடும்பன்குளத்தில் ஆபத்து தடுப்பை தாண்டி பக்தர்கள் செல்கின்றனர். எனவே போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினரை கொண்டு சண்முகநதி, இடும்பன்குளத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு நேற்றுமுதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. பழனி மலைக்கோவில் மற்றும் உட்புற சன்னதிகளில் உள்ள 50 கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றுகாலை 9 மணிக்கு நன்மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், விநாயகர் அகவல், முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாமவேள்வி, ஞானசிறுவர்கள் வழிபாடு, நிறைவேள்வி ஆகியவை நடைபெற்றது.

    மேலும் கந்தபுராணம், திருப்புகழ், வேல்விருத்தம், மயில் விருத்தம், திருமுறை முற்றோதல் ஆகியவையும் நடைபெற்றது. இன்றுமாலை 7ம் கால வேள்வி வழிபாடு துவக்கம் ஆணைமுகன் வழிபாடு, முளைப்பாழிகை இறைவழிபாடு, மங்கல இசை, அறுசுவை காரங்கள் சமித்து ஆகிய 96 ஆகுதி வேள்வி ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலிருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்கள் எடுத்து பாதையாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.

    இதேபோல பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இணையத்தில் நேற்று தொடங்கி இன்றுமாலையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இவர்கள் பழனி நோக்கி அரோகரா கோசம் முழங்க வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது.
    • வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக கோவில் முழுவதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியது.

    காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவின ர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிள க்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 23ந் தேதி முதல் தொடங்குகிறது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளுவார்.

    வருகிற 26ந் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ந் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் நபர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அனுமதி அவரவர் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அதனை கோவில் நிர்வாகத்திடம் காட்டி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    நாளை மாலைவரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் வருகை தருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19ந் தேதி) நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நாளை காலை கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிந்துவிட்டது. மேலும் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முருகப்பெருமானின் சிறப்பை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தின் மேல் பகுதியில் முருகனின் ராஜா அலங்கார ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

    இதுதவிர கோபுர கலசம், தங்கக்கவசம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் செப்பனிட்டு, அதில் 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், கோவில் ராஜகோபுர கலசங்கள், தங்கமயில் வாகனம் ஆகியவற்றுக்கு 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இதற்கிடையே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்காக, மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனியில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து திருப்பணிகளும் இரவும், பகலுமாக நடைபெற்று வருவதால் தற்போது கோவில் வண்ணமயமாகி புதுப்பொலிவு பெற்றுள்ளது.

    • பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.

    இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதளம் மற்றும் இத்துறைக்கான வலைதளங்களில் பக்தர்கள் வருகிற 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    21ந் தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். உறுதி செய்யப்பட்ட மின் அஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ந் தேதி முதல் 24ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அந்த கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு வருபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் சேவைக்கு சலுகை வழங்கப்படாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே பழனி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்துக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும் கும்பாபிஷேகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது.

    பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் கும்பாபிஷேகம் குறித்து கோவில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும்.

    இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும், மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும்.

    அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×