search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை"

    தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்து, இனி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டிடங்களின் உறுதித்தன்மை சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று, தடையில்லா சான்று ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் பரிந்துரைத்தது.

    மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் பரிந்துரையை ஏற்று, 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வழங்கப்பட்ட அரசாணையின்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது.

    மேலும் இனி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்துக்கு அல்லது கட்டமைப்பு ஸ்திரத்தன்மை சான்றிதழ் அல்லது கட்டிட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இதில் எது முந்தையதோ அதன்படி அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

    ஏற்கனவே 1994-ம் ஆண்டின் அரசாணையின்படி, நிரந்தர அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடரும்.

    அதே சமயம் அந்த பள்ளிகள் தமிழ்நாடு கட்டிடச் சட்டம் 1965-ன் கீழ் பள்ளிக் கட்டிடத்தை பொது கட்டிடமாக பயன்படுத்த அனுமதியளித்த சான்றிதழ், பள்ளி கட்டிடத்துக்கான கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழ், உள்ளூர் சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

    சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படும்.

    இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. #PublicExamination
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கான தேர்வுகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடைகிறது. அதன்பின்னர், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற இருக்கின்றன.

    ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பள்ளி செயல்முறை திட்டத்தின்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி வரை பள்ளிகள் இயங்குவதாக இருந்தது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளை 1.4.2019 முதல் 12.4.2019-க்குள் நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக உடனே அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

    வேலை நாட்களின் இழப்பினை சனிக்கிழமைகளில் ஈடுசெய்யுமாறும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-ம் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் 12.4.2019 என தெரிவித்துகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், தொடக்கப்பள்ளிகளை (1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு) பொறுத்தவரையில் 13.4.2019-க்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் 13-ந் தேதியுடன் நிறைவடைகிறது. #PublicExamination
    அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற துணை செயலாளர் லூதியர், துணைத்தலைவர்கள் பெருமாள், முரளி, பல்கலைக் கழக பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன் மற்றும் இளைஞர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி 4 மாதமாக வழங்கப்படாத சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும். கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசு உயர் கல்வி ஆணையம் அமைக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்றத்தில் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும் நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பெரிதும் ஆபத்தானவை. கண்டனத்திற்கு உரியது.



    உயர்கல்வி ஆணையம், ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை முழுமையாக பறித்துவிட்டு மத்திய அரசே கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது.

    உயர்கல்வித் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலும் மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலும் உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் இருந்து கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    அடிலைடு:

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அந்த நாட்டு கல்வி மந்திரி சைமன் பிர்மிங்காமை அடிலைடில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் இருநாட்டு கல்வி நிறுவனங்களின் பரஸ்பர பங்களிப்பு, பள்ளிக்கல்வி கொள்கையில் ஒத்துழைப்பு, ஆன்லைன் கல்வி, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்வதில் கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் தங்கள் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முதல் ஒப்பந்தத்தில் ஜம்மு மத்திய பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகமும் கையெழுத்து போட்டன. இதைப்போல கர்ட்டின் பல்கலைக்கழகம், கவுகாத்தி ஐ.ஐ.டி. இடையேயும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில், மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையேயும் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

    சைமன் பிர்மிங்காமுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக கூறிய பிரகாஷ் ஜவடேகர், இது இருநாட்டு கல்வி ஒத்துழைப்பை புதிய மட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 
    கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
    சென்னை:

    செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்.

    செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பிளஸ் 2 கணக்குப்பதிவியல் திருத்தும் பணியின் போது திருச்சி மாணவி விடைத்தாளில் 6 பக்கத்தை திருத்தாமல் விட்ட பள்ளி ஆசிரியர் யார்? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #TNHSCResult

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா (வயது 17) . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு படித்தார்.

    பிளஸ் 2 தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்த திவ்யா கணக்குப்பதிவியல் பாடத்தில் தனக்கு அதிகமார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் 200-க்கு 124 மதிப்பெண்களே அவருக்கு கிடைத்தது.

    பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து பார்க்கும் வசதி உள்ளது என்பதால் திவ்யா டவுன் லோடு செய்து பார்த்தார். அப்போது தான் எழுதிய விடைத்தாளில் 6 பக்கங்கள் விடைத்தாள் திருத்திய ஆசிரியரால் திருத்தாமல் விடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அங்கு ஊழியர்கள் பிளஸ் 2 விடைத்தேர்வு மறு மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 6-ந்தேதியோடு முடிந்து விட்டதால் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறையிட கூறினர்.


    இதனால் திவ்யா மன உளைச்சல் அடைந்துள்ளார். திருத்தாமல் விடுபட்ட 6 பக்கங்களில் அவருக்கு 60 மதிப் பெண்கள் வரை கிடைக்கும். மேலும் தேர்வுத்தாளில் 12 மதிப் பெண்கள் கொண்ட கேள்விக்கு சரியான விடை அளித்திருந்தும் அதற்கு விடைத்தாள் திருத்திய ஆசிரியர் 6 மதிப்பெண்கள் மட்டுமே அளித்திருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது மதிப்பெண் குறைந்திருப்பதால் உயர் கல்வி வாய்ப்பில் திவ்யாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு மாணவி ஹர்ஷினி என்பவரின் கணிதப்பாட விடைத்தாளில் 6 மதிப்பெண் வினாவிற்கான விடை திருத்தப்படாமலேயே அருகில் 0 போடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதால் மற்ற மாணவ, மாணவிகளும் தங்களுக்கு உரிய மதிப்பெண்கள் குறைந்ததற்கும் விடைத்தாள் சரியாக திருத்தப்படாதது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மற்ற மாணவ, மாணவிகளும் விடைத்தாள் நகல்களை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவி திவ்யா, மற்றும் ஹர்ஷினியின் விடைத்தாள்கள் எந்த விடைத்தாள் திருத்தும் தேர்வு மையத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவற்றை திருத்திய பள்ளி ஆசிரியர்கள் யார்? என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விடைத்தாளில் உள்ள ஆசிரியர்களின் கையெழுத்து மூலம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. #TNHSCResult

    கல்வித் துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியை செலவிடுவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    சாந்திநிகேதன்:

    நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 49-வது பட்டளிப்பு விழா மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் அருகே உள்ள சாந்திநிகேதனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சாந்திநிகேதனுக்கு கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அவரை வரவேற்க ஹெலிகாப்டர் தளம் அருகே மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதி மட்டுமே காத்திருந்தார். மரபுப்படி பிரதமரை கவர்னரும், மாநில முதல்-மந்திரியும் வரவேற்கவேண்டும்.

    ஆனால் திறந்த வெளிபகுதியில் வெயில் கடுமையாக இருந்ததால் மம்தா பானர்ஜி சற்று தள்ளியே நின்றிருந்தார். பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் அவரை வரவேற்க குண்டும் குழியுமான பாதை வழியாக மம்தா பானர்ஜி வேக வேகமாக நடந்து சென்றார்.

    அதைப் பார்த்ததும் மோடி, பாதை சீரற்று இருக்கிறது கவனமாக வாருங்கள் ஒன்றும் அவசரமில்லை என்று கூறியவாறே மம்தா பானர்ஜியை நோக்கி நடந்தார். அதற்குள் விரைந்து வந்த மம்தா பானர்ஜி, மோடிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் மோடி, கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மம்தா பானர்ஜி மூவரும் விழா மேடைக்கு ஒன்றாக சென்றனர்.

    விழாவில் பேசிய மோடி, முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் பேசியதாவது:-


    இங்கு நான் வந்தபோது சில மாணவர்கள் என்னிடம் இங்கே சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று முறையிட்டனர். அதற்காக மாணவர்களிடம் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வித இடர்ப்பாடுகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

    இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தாகூரின் லட்சியங்களை முன்னெடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் அவருடைய கல்விச் சொத்து இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதையும் கடந்து நிற்கிறது. அதனால்தான் ரவீந்திரநாத் தாகூர் இன்றும் உலகளாவிய குடிமகனாக போற்றப்படுகிறார்.

    மாணவர்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மட்டுமே போதாது. காலத்துக்கேற்ப பொருத்தமாக எதைக் கற்றுக் கொண்டோம் என்பது அதை விட முக்கியம். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கோவில் போன்றது. இங்கு குருவாக(வேந்தர்) நான் வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.

    இங்கே விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2021-ம் ஆண்டில் 100 முதல் 200 கிராமங்களை தத்து எடுக்கப் போவதாக தெரிவித்தார்கள். இந்த கிராமங்கள் சுய சார்பு கொண்டவையாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், மின்னணு கல்வி முறை கொண்டதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும். கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடியை செலவிடுதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BangladeshBhavan #SantiNiketan #PMModi
    ×