search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர்"

    இந்த திருவிழாவின் போது இங்கு மழை பெய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அழகர்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.
    தென் திருப்பதி, திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழா தனிச்சிறப்புடையது. இந்த திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. அன்று மாலை சுந்தரராஜபெருமாளுக்கு தைல காப்பு விழா நடந்தது. தொடர்ந்து மறுநாள் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நூபுரகங்கையில் பெருமாள் நீராடல் நடந்தது. இதையொட்டி கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், தனது இருப்பிடத்தில் இருந்து காலை 9 மணியளவில் நூபுர கங்கைக்கு புறப்பாடாகினார்.

    அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி எழுந்தருளி மலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டார். மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்ற பெருமாளுக்கு வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்கையில் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.

    மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி, சந்தனாரி, திருத்தைலங்கள் சாத்தப்பட்டன. மதியம் 1 மணியளவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் பெருமாள் நீராடினார்.

    பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    நேற்று மாலையில் மீண்டும் வந்த வழியாக பல்லக்கில் சென்ற பெருமாள், அழகர்கோவிலில் தனது இருப்பிடம் சேர்ந்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் காரணமாக, பக்தர்கள் இந்த விழாவில் அனுமதிக்கப்படவில்லை. யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தைலக்காப்பு திருவிழா பக்தர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    வருடம் ஒருமுறை கள்ளழகர் பெருமாள் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் ஐப்பசி மாதம் சென்று நீராடி வருவது தனிச்சிறப்பாகும். இந்த தைலக்காப்பு திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ராக்காயி அம்மன் கோவில் மற்றும் மண்டப பகுதிகள் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளாலும், பிச்சி, கோழிக்கொண்டை, ரோஜா உள்ளிட்ட பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த திருவிழாவின் போது இங்கு மழை பெய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அழகர்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் இணை கமிஷனர் அனிதா உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். அப்பன்திருப்பதி, சத்திரப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    நாளை (16-ந் தேதி) அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் நூபுர கங்கையில் தைலக்காப்பு உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று தைலக்காப்பு உற்சவம் தொடங்கியது. இதில் அங்குள்ள மேட் டு கிருஷ்ணன் சன்னதியில் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வைகுண்டநாதர் சேவையில் காட்சி தந்தார். பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள,தாளங்கள் முழங்க தீபாராதனை பூஜை நடந்தது.

    இன்று அதே சன்னதியில் சீராப்தி நாதர் சேவை நடைபெறும். நாளை (16-ந் தேதி) அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் நூபுர கங்கையில் தைலக்காப்பு உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் அனுமதி இல்லாமல் இந்த திருவிழா நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தைலக்காப்பு திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நாளை (14- ந் தேதி) 1-ம் திருவிழாவாக தொடங்குகிறது. அன்று மாலையில் 6.15 மணிக்குமேல் 7.15 மணிக்குள் மிதுனம் லக்கினத்தில் சுந்தர ராச பெருமாளுக்கு தைலக்காப்பு நடத்தப்படும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் 15-ந் தேதி 2-ம் திருநாள். இதில் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நிகழ்ச்சி நடைபெறும்.

    16-ந் தேதி 3-ம் திருநாள் அன்று காலையில் 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகர லக்கினத்தில் இருப்பிடத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் மலை பாதை வழியாக செல்கிறார்.

    அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் காலை 11 மணிக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து 12 மணிக்குள் கும்ப லக்கினத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டு அங்குள்ள நூபுர கங்கையில் தீர்த்தவாரி நடைபெறும்.

    மேலும் இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். தவிர தீர்த்தவாரி நிகழ்வு முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வந்த வழியாகவே சென்று சாமி கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார்.

    இந்த திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப், முகநூல் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்கினார்.

    இதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலாக மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மதுரை அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள்-ரெங்கமன்னார் குறடு மண்டபத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
    கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
    மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். சிகர நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந்தேதி வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 20-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந்தேதி இரவு பூப்பல்லக்கு விழாவும் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர், தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வந்தார். அங்கு “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷத்துடன் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    இந்த விழாவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.

    இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகர்மலைக்கு புறப்பட்ட அவர், இன்று காலை அங்கு சென்றடைகிறார்.
    மதுரை சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கிடையே அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 17-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    அதை தொடர்ந்து கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந் தேதி எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது. அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கிருந்து கருப்பணசாமி கோவிலில் இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அழகர்மலை நோக்கி புறப்பட்டார். தல்லாகுளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட அவர் அவுட்போஸ்ட், ரிசர்வ் லைன், புதூர், முன்றுமாவடி வழியாக இரவு அப்பன்திருப்பதியை சென்றடைந்தார். அங்கு விடிய, விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து மலைக்கு வழியனுப்பினர்.

    பின்னர் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர்கோவில் மலையை அடைகிறார். அங்கு அவரை பக்தர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கள்ளழகர் மலைக்கு சென்றதும் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
    அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா.என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

    வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி வரப் போறாரோ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
    பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். #Kallalagar #ChithiraiThiruvila
    மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இது விழா மட்டுமல்ல. வைணவம் - சைவம் இணையும் முத்திரை பதிக்கும் வைபவமாகும்.

    சிவபெருமான் - விஷ்ணு பெருமாள் இருவரையும் மக்கள் ஒன்றாக தரிசித்து விழா எடுத்ததுதான் சித்திரை திருவிழா. இந்த விழாவைக்காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரை வருவதுண்டு.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கலயாணம், தேரோட் டம் 12 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாக்களின் போது ஏராளமான சிறுவர்-சிறுமிகள், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மற்றும் பல்வேறு கடவுள் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.

    இந்த விழாவை கண்டு தரிசனம் பெற்றமக்கள் அடுத்து எதிர்பார்த்தது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை தான். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும் மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணவும் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் கடந்த 17-ந்தேதி தோளுக்கினியான் வேடத்தில் புறப்பட்டார்.

    அழகர் கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமியிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்த சுந்தர்ராஜ பெருமாள் அங்கிருந்து கள்ளர் திருக்கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டார்.

    அவருக்கு முன்பாக கள்ளர் வேடமணிந்த பக்தர்கள். துள்ளல் ஆட்டம் போட்டு ஆடிப்பாடி வந்தனர். மதுரை வந்த கள்ளழகரை ஏராளமான மண்டகப்படிகளில் பக்தர்கள் வரவேற்றனர்.

    நேற்று காலை மூன்று மாவடியில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர் சேவை கொண்டு வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் புதூர் மாரியம்மன், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை மற்றும் அங்கவஸ்திரம் பெரு மாளுக்கு அணிவிக்கப் பட்டது. இதனை ஏராள மான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர்.

    இன்று அதிகாலை 2.30 மணிக்கு அங்கி ருந்து புறப்பட்ட கள்ள ழகர், தல்லாகுளம் கருப் பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். நள் ளிரவு மட்டுமல்ல அதி காலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டு அழகரை தரிசித்தனர். இதனால கோரிப்பாளையம், தல்லாகுளம் வைகை ஆற்றுப் பாலம் என எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளே காணப்பட்டன.

    அதிகாலை 3 மணிக்கு கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு புறப் பட்டார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... நாராயணா... என பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.



    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவே வைகை ஆற்றை வந்தடைந்தது. இன்று காலை 5.50 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர் தங்க குதிரை வாகனத்தில் துள்ளிக்குதித்து வருவதைப் போல சீர்பாத தூக்கிகள் தங்கள் உள்ளங்கைகளில் தூக்கி போட்டு பிடித்தபடி ஆட்டம் போட்டது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்தது.

    நீண்ட தூர பயணம் செய்து வந்த கள்ளழகரை குளிர்விக்கும் வகையில், கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் துருத்தி நீரை அழகர் மீது பாய்ச்சி குளிர வைத்தனர்.

    கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கியதால், நாட்டில் விவசாயம் செழித்து நாடு செழிப்பாக இருக்கும் என அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வைகை ஆற்றின் கரையிலே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் சிலர் நாட்டுச்சர்ககரை நிரப்பப் பட்ட செம்பில் சூடம் ஏற்றி வழிபட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாநகரில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. #Kallalagar #ChithiraiThiruvila

    ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது. அழகர் சூடுவதற்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மாலை நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் முடிவடைந்தவுடன் ஒரு கூடையில் வைத்து ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam
    கூடலூர்:

    மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது.

    மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் தேனி மாவட்ட குடிநீருக்கு கூட போதவில்லை. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.

    சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி, குடிநீருக்கு 60 என மொத்தம் 1560 கன அடி வீதம் வைகை ஆற்றில் செல்கிறது.

    தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 19-ந் தேதி காலை மதுரையை சென்றடையும். இதன்மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 40.45 அடியாக குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.35 அடியாக உள்ளது. வரத்து இல்லை 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு 14.4, கூடலூர் 1.2, வைகை அணை 6.2, சோத்துப்பாறை 7, கொடைக்கானல் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam

    தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவி லாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, அழகரின் சித்திரை பெருந்திருவிழாவாகும்.

    இந்த திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை தொடங்கியது. இன்று (புதன் கிழமை) காலை சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்கப் பல்லக்கில் 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

    வழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி அன்று அதிகாலையில், புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிகொடுத்த திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.

    தொடர்ந்து காலை 7.25 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நடைபெறும்.

    20-ந் தேதி காலையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.

    பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெறும்.

    21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பூப்பல் லக்கு விழா நடைபெறும். 22-ந் தேதி இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.

    23-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    கள்ளழகர் எழுந்தருளும் 445 மண்டகபடிகளும் தயார் நிலையில் உள்ளது. அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தண்ணீர் பீய்ச்சும் வைபவத்தின்போது கள்ளழகர் மீது வேதிப்பொருட்கள் கலந்த நீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என்று கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

    இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை வந்தபிறகு கள்ளழகர் மீண்டும் 23-ந்தேதி இருப்பிடம் திரும்புவார். இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். இதில் பக்தர்கள் அவரவருக்குரிய வழக்கப்படி விரதமிருந்து இயற்கையான தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சாமி மீது தண்ணீர் பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறிய செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதிப் பொருட்களை கலந்து பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் சாமி, சாமியின் வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வேதி பொருட்கள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை பீய்ச்சுகின்றனர். இதுபோன்ற செயல் ஐதீகத்தை மீறும் வகையில் உள்ளன.

    எனவே எதிர்வரும் சித்திரை திருவிழாவில் செயற்கையான தோல் பையில் அதிக விசையான குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது. தண்ணீர் பாக்கெட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது. விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பைகளை பயன்படுத்தி, சிறிய குழாய் பொருத்தி வேதிப் பொருட்கள், திரவியம் ஏதும் கலக்காமல் சுத்தமான தண்ணீரை மட்டும் சாமி மீது பீய்ச்சி அடிக்க வேண்டும். இந்த தகவலை கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

    ×