search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • 1200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம்.
    • இத்தல அம்பாளின் திருநாமம், கோமதியம்மாள் என்பதாகும்.

    'அர்ச்சுனம்' என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் 'அர்ச்சுனத் தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்' என்றும், 'மத்தியார்ச்சுனம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள ஸ்ரீநாறும்பூநாதர் கோவில், 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது. 1200 வருடங்கள் பழமையான இந்த ஆலயத்தில், மூலவர் ஸ்ரீநாறும்பூநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அம்பாளின் திருநாமம், கோமதியம்மாள் என்பதாகும்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில், தேவர்கள் பலரும் இணைந்து சிவபெருமானை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஈசனிடம், 'காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுங்கள்' என்று முறையிட்டனர். அப்போது ஒரு பிரம்ம தண்டத்தை, தேவர்களிடம் கொடுத்த சிவபெருமான், அதனை பூமியை நோக்கி வீசச் சொன்னார். அதன்படியே தேவர்களும் செய்தனர். அந்த பிரம்ம தண்டம், தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. "ஆற்றில் மிதந்து செல்லும் பிரம்ம தண்டம் எந்த இடத்தில் கரை ஒதுங்குகிறதோ, அத்தலமே காசிக்கு நிகரானது" என்று சிவபெருமான் கூறினார்.

    அந்த பிரம்ம தண்டம் கரை ஒதுங்கிய இடம்தான், தட்சிண காசி என்று அழைக்கப்படும் திருப்புடைமருதூர். ஆற்றங்கரையோரம் அமைந்த இந்தப் பகுதியில் தேவர்கள் வழிபாடு செய்து தவம் இயற்றினர்.

    பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீர மார்த்தாண்ட மன்னன், மருத மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு, அந்த மானை வீழ்த்த அம்பு எய்தினான். மன்னன் விட்ட அம்பு பட்டு காயமடைந்த மான், ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது. குறிப்பிட்ட அந்த மருத மரத்தை வெட்டும்படி, தன்னுடைய காவலர்களுக்கு மன்னன் உத்தரவிட்டான். அதன்படி காவலர்கள், கோடரியால் அந்த மரத்தை வெட்ட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. பின்னர் கோடரியின் தழும்பு பட்ட நிலையில் சுயம்புலிங்கமாக ஸ்ரீநாறும்பூநாதர் அங்கு தோன்றினார். இதைக்கண்டு மனமுருகி வேண்டிய மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான்.

    இத்தல இறைவன் தலையில் கோடரி பட்ட தழும்பு காயத்துடனும், மார்பில் மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட காயத்துடனும் காட்சியளிக்கிறார். திருமணத் தடை, புத்திர தோஷம், தீராத பிணி, குடும்ப கஷ்டம் உள்ளவர்கள், இத்தல இறைவனை வணங்கினால் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் குடும்ப ஐஸ்வரியம் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், வியாபாரம் விருத்தியாகவும் இத்தல இறைவனை வணங்குகிறார்கள்.

    இத்தல இறைவியான கோமதியம்மாள், உலகில் வேறு எங்கும் காண முடியாதபடிக்கு, உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத் திருமேனியுடன் காணப்படுகிறார். தாரகா சக்தி பீடமாக உள்ள இத்தலத்தில், அருளே வடிவாக இறைவி வீற்றிருக்கிறார். பக்தர்களின் வேண்டுலை நிறைவேற்றுவதில், கோமதியம்மனுக்கும் தனிப் பங்கு உண்டு. இங்குள்ள நடராஜர் சிலை, ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் இத்தல தட்சிணாமூர்த்தி, இரண்டு கால்களையும் மடக்கி வைத்த நிலையில் இருப்பதும் சிறப்புக்குரியதுதான்.

    ஐந்து நிலைகளுடன் 11 கலசங்களைக் கொண்டு அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம். கோபுரத்தின் பல்வேறு தளங்களிலும் பல வகையான சுவரோவியங்கள் காணப்படுகின்றன. திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் தொடர்பான சிற்பங்களும், ஓவியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 10 நாள் தைப்பூசம், ஆணி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திைக, மகா சிவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் பிரதோஷ பூஜையில் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளை எழுதிக் கொண்டு வந்து இறைவனிடம் செலுத்தும் வகையில், சுவாமி சன்னிதியில் கீழே இறங்கும் வழியில் பிரார்த்தனைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட உள்ளது. ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரார்த்தனை பெட்டியில் உங்கள் வேண்டுதலை எழுதி செலுத்தினால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள்.

    சித்தருக்காக செவிசாய்த்த ஈசன்

    ஒரு முறை கருவூர் சித்தர், இந்த திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தார். அவர் வந்த நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர் கரையில்தான், திருநாறும்பூநாதரின் ஆலயம் இருந்தது. இதனால் மனம் வருந்திய கருவூர் சித்தர், "இறைவா.. உன்னை தரிசிக்க முடியாதபடி, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உன்னை எப்படி நான் தரிசிப்பது. நான் உன்னைக் காண முடியாமல் வாய்விட்டுப் புலம்புவது உனக்கு கேட்கிறதா? இல்லையா?" என்று ஈசனைப் பணிந்தார்.

    அப்போது திருப்புடைமருதூர் சிவபெருமான், தனது திருமேனியை இடது பக்கம் சாய்ந்து, செவி மடுத்து சித்தரின் வேண்டுதலைக் கேட்டாராம். இதனால் இத்தல இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் அருள்பாலிப்பதை இன்றளவும் காண முடியும். சித்தரின் வேண்டுதலைக் கேட்டதும், சிவனருளால் ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சித்தரும், மறுகரைக்குச் சென்று திருநாறும்பூநாதரை வழிபட்டு மகிழ்ந்தார். பின்னர் இத்தல இறைவனிடம், "இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை செவி சாய்த்துக் கேட்டு, உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" என்று சித்தர் வேண்டிக்கொண்டார். அதற்காகவே இத்தல இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். அங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புடைமருதூர் திருத்தலம் இருக்கிறது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகபூஜை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில்உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்படிபல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில்,முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவிலில் முத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளால் அபிஷேகபூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதே போல பல்லடம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனை பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 10 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு பல்வேறு சமூகத்தினரும் விழாவை கொண்டாடினர்.

    11-வது நாள் பூக்குழி திருவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் தீக்குண்டத்தில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபாடு செய்தனர். மாலையில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜுனர் சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி தீ மிதிக்கும் பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தை வந்தடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இது 500 வருடம் பழமையான கோவிலாகும்.
    • இந்த கோவிலில் உள்ள பைரவர் சுயம்புவாக கிடைத்த சிலையாகும்.

    இந்து மதத்தினா் பல்வேறு வடிவங்களில் இறைவனை வழிபட்டு வருகின்றனா்.

    அந்த வடிவங்களில் சாந்தமான அருள் சுரக்கும் வடிவமும், உக்கிர வடிவமும் பக்தா்களின் மத்தியில் பிரபலமானவை. உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும். அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவன் எடுத்த அவதாரங்களில் ஒன்று தான் காலபைரவா் அவதாரம். வேலூரை அடுத்த செங்காநத்தம் மலையில் உள்ள காலபைரவர் காசிக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி பிரவேசித்து, பத்து கைகளுடன் விளங்குகிறாா்.

    இதுபற்றி கோவில் நிா்வாகிகள் கூறியதாவது:-

    சுயம்புவாக

    வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை அடுத்துள்ள செங்காநத்தம் மலையில் இயற்கை சூழலில் காலபைரவர் கோவில் உள்ளது. இது 500 வருடம் பழமையான கோவிலாகும். முன்னோா்கள் காலத்தில் நிலத்தை செம்மைப்படுத்தும்போது சுயம்புவாக கிடைத்த சிலையாகும். அப்போது விஜயநகர பேரரசின் சந்திரகிாி மண்டலத்தின் ஒரு பகுதி தான் வேலூா். அதன் வடகிழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நோக்கி இருக்கும் வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை நிறுவியவா் விஜய நகர ஆட்சியாளா்கள்.

    காலபைரவரை செங்காநத்தம் ஊரை சோ்ந்த தர்மகர்த்தாக்கள் கேசவலு நாயுடு, நரசிம்மலு நாயுடு, பக்தவச்சலம் என ஒரு குடும்பம் வழிவழியாக பூஜைகள் செய்து பராமாித்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறாா்.

    கால பைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கம்பீரத்துடன் காட்சியளித்துள்ளது. தானாகவே இந்த பைரவா் சிலைக்கு பின்னால் அழிஞ்சில் மரம் உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளது. மரத்தின் அடியில் பத்து கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றாா். அத்துடன் தனது வாகனமான நாய்களுடன் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

    வேண்டுதல்

    முதலில் காலபைரவா் சிலையில் ஒரு கண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதை ஒரு சிற்பியை வைத்து சரி செய்தபோது திடீரென அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காலபைரவா் கோவிலுக்கு அடிக்கடி வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டதை தொடர்ந்து சிற்பி பழைய நிலைக்கு திரும்பினார்.

    ஒரு செல்வந்தா் தன்னுடைய 3 மகளுக்கும் திருமணமாகாமல் வயதாகி கொண்டு செல்கிறது என வருந்தியபோது அவரது கனவில் காலபைரவா் தோன்றியதாகவும், பின்னா் அந்த பக்தா் கோவிலுக்கு தினசாி வந்து காலபைரவரை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் 3 மகள்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணமானதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் ஒவ்வொரு மகள் திருமணத்தின் போதும் ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினாா் என்றுகூறப்படுகிறது.

    இயற்கையாக கிடைக்கும் திருநீறு

    இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது. பைரவரை தாிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.

    இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் அபிஷேகம் செய்து பல்வேறு நறுமண மலா்களால் அலங்காிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சித்திரை திருநாளில் கோவிலில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடக்கிறது. பெண்கள் பொங்கலிட்டும் , வீட்டில் இருந்து நோ்த்திகடனாக நெய்வேத்தியம் செய்தும் படைக்கின்றனா்.

    பொங்கலிட்டு கோழி, ஆடு பலியிடுவதற்கு முன்பு காலபைரவரின் தலை மீது மல்லிகை மற்றும் பல்வேறு வகையான பூக்களால் பூச்சரம் கட்டப்பட்டு அதன் மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்தப் பழம் தானாகவே அருகில் நின்றிருக்கும் ஊர் நாட்டாமை கையில் விழும். அப்போது தான் கோழி, ஆடுகளை பலியிட காலபைரவர் சம்மதித்ததாக கருதப்பட்டு அதன் பின்னர் பொங்கலிட்டு ஆடு பலியிடுவது நடக்கிறது.

    சனிக்கிழமையன்று காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா் தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும். இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 ராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.

    வழிபடும் முறைகள்

    திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டுதல் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி சாமி அருகே உள்ள பழைமையான மரத்தில் மஞ்சள் கயிறு மற்றும் தொட்டில் கட்டி பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா். அதுபோக கோவில் முன்பு பக்தா்கள் எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு, பூசணியில் திாி விளக்கு மற்றும் மிளகில் திாியிட்டு விளக்கேற்றி வழிபடுகின்றனா். இதனால் பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    ஒரு சில பக்தா்கள் பணக்கஷ்டம் நீங்கவும் மற்றும் இழந்த செல்வத்தை மீட்டெடுக்கவும் 108 ஒரு ரூபாய் நாணயம் மூலம் அபிஷேகம் செய்வதன் மூலம் பயன் பெறலாம். இடப்பிரச்சினை தீர தேங்காய் திரி விளக்கு ஏற்றலாம். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய மிளகு தீபம் ஏற்றலாம்.

    உக்கிரமானவர்

    காலபைரவரை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கே கட்டப்பட்டுள்ள மணியை அடித்து ஓசை எழுப்பும் போது எங்கிருந்தோ வரும் நாய்கள் வடக்கு நோக்கி வரிசையாக அமர்ந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு பக்தர்களோடு பக்தராக பைரவரை வணங்குகின்றன. மணியோசை நின்றவுடன் நாய்கள் வந்த வழியே சென்று விடுகின்றன. இதேபோல் ஒவ்வொரு அஷ்டமி பூஜையின் போதும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு கால பூஜையின் போது நாய்கள் ஒன்று சேர்ந்து மூலவர் முன்பு வந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு வணங்குகின்றன. காலபைரவர் உக்கிரமான தெய்வம் என்பதால் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். பெண்கள் பைரவர் பாதங்களை தொட்டு வணங்கக்கூடாது.

    வெளி மாவட்ட பக்தர்கள்

    பல்வேறு பிரச்சினைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரியான உடன் மன நிம்மதியுடன் அவர்களின் நேர்த்தி கடன்களை காலபைரவருக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். அந்த வகையில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காலபைரவரை தாிசிக்க வருகின்றனர். மேலும் திருச்சி, சென்னை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரு சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோழி, ஆடுகளை பலியிடுகின்றனர். இந்த கோவிலில் அன்னதானம், சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத்திற்கான உதவிகளை ரங்காபுரம் லட்சுமி ஸ்டீல் உாிமையாளா் ஆா்.மணி செய்து வருகிறாா். மேலும் சில பக்தர்களும் காலபைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் அன்னதானம் வழங்கும் பொறுப்பை செய்து வருகின்றனா்.

    கோவில் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வராஜ் யாதவ், ராகவன் நாயுடு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • 247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது.

    இன்று (14.4.2023) சித்திரை-1, தமிழ்ப் புத்தாண்டு.

    தமிழுக்கு பெருமை சேர்க்க பாண்டிய மன்னர் ஆட்சிக்காலத்திலேயே மலையில், 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 படிகளை அமைத்து, அதில் பக்தர்கள் ஏறிச்சென்று பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது.

    வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அந்த தலம் எங்கிருக்கிறது என ஆவல் ஏற்படுவதும் சகஜம்தான். இந்த கட்டுரையின் மூலமாக அந்த தலத்தை தரிசிப்போம்.. வாருங்கள்...!

    பெருமாளின் சயன கோலத்தில் ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதன் அருகேதான் காட்டழகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 9 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக சென்றால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமான செண்பகத் தோப்பை அடையலாம். அங்கிருந்து 7 கி.மீ. மலைப்பகுதியில் நடந்து சென்றால், பெருமாள் மலை வரும். அந்த மலை அடிவாரத்தில்தான் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள மலை தோற்றத்தை பார்த்தால் பெருமாள் சயன கோலத்தில் இருப்பது போலவே காட்சி அளிக்கும்.

    பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர், சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    சுந்தரராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் 247 படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 247 படிக்கட்டுகள் என்பது தமிழ் எழுத்துகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

    247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த தீர்த்தத்தில் இரும்பு மற்றும் கந்தக சத்துகள் நிறைந்துள்ளன.

    இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி விட்டு தமிழ் எழுத்துக்களுக்கு பெருமை சேர்க்கும் படிக்கட்டுகளில் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷமிட்டுக் கொண்டே படிகள் ஏறி, மூலவரை தரிசித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலானது வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் பூஜைகள் நடக்காது.

    அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

    சித்திரை, புரட்டாசி மாதங்களில் அன்னதானமும் நடைபெறும். இக்கோவிலின் மகிமை அறிந்து, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.

    இன்று சிறப்பு பூஜை

    தமிழ் வருடப்பிறப்பான இன்று (14.4.2023) காட்டழகர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதேபோல மழை பெய்து இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் பெருகினால் அழகருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பொதுவாக இந்த படி பூஜை மார்கழி மாதம் நடைபெறும்.

    • முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
    • தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாரதா நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டு, சக்தி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    அம்மனுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், அதன் பின்னர் மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், மகாலட்சுமி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், ஐஸ்வர்ய லெட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கனகதுர்க்கை, மூகாம்பிகை உள்ளிட்ட அலங்காரம் செய்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    இன்று காலை சிலம்பணி விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி திருப்பத்தூர் சாலை, மின்சாரம் வாரிய அலுவலகம் வழியாக கோவில் சென்றடைந்தனர்.  

    • அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
    • திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர்.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முற்காலத்தில் இரணியன் என்ற அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    5 நரசிம்மர்கள்

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர். இந்த நரசிம்மர்களை அவர்கள் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத்தன்று அல்லது சனிக்கிழமைகளில் ஒரே நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும் என்பதில் ஐயம் இல்லை.

    திருமங்கை மன்னன் என்பவர் திருக்குரவலூரை தலைமை இடமாக கொண்டு அரசாட்சி புரிந்ததாகவும், ஒரு கட்டத்தில் மேற்கண்ட நரசிம்மர் மீது கொண்ட பற்றால் துறவறம் பூண்டு திருமங்கை ஆழ்வாராக திருநாமம் கொண்டு 5 நரசிம்மர்களுக்கும் பணிவிடை செய்ததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இன்றளவும் திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற பெருமாள் கோவில்கள் 108 வைணவ திவ்ய தேச கோவில்களாக அழைக்கப்படுகிறது.

    திருமங்கையாழ்வார்

    திருமங்கையாழ்வார் திருகுரவலூர் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர நரசிம்மர் மங்கை மடத்தில் கோவில் கொண்டு வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இவரை வணங்குபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குவதோடு வீரத்தை தருபவர் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் தினமும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த கோவிலில் அன்னதானம் வழங்கியதால் மங்கையர் மடம் என்றும் தற்போது அது மருவி தற்போது கோவில் உள்ள இடம் மங்கைமடம் என அழைக்கப்படுகிறது.

    பூமியின் வடிவம்

    உக்கிர நரசிம்மர், திருமங்கையாழ்வார் பிறந்த திருக்குரவலூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உக்கிர நரசிம்மரை வழிபட்டால் பித்ருக்கள் தோஷம், எதிரிகளால் பயம் நீங்கி செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகம். இவருக்கு மாதம்தோறும் அமாவாசை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    யோக நரசிம்மர் திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பூமியின் வடிவமாக கருதப்படும் இவரை வணங்கினால, பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்குவதோடு, வாழ்வில் மிகப்பெரிய யோகத்தை இவர் அருள்வாா் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ேயாகநரசிம்மருக்கு வில்வத்தை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்படும். இந்த நரசிம்மருக்கு வெல்ல பானகத்தை நெய்வேத்தியம் செய்து வழிபடுவது மிக உகந்ததாகும்.

    ஹிரண்ய நரசிம்மர், திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் ஆகாயத்தை நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டிருப்பது மிகவும் விசேஷமானது. இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவர், 8 கைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

    மகாலட்சுமி

    லட்சுமி நரசிம்மருக்கு திருவாலியில் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி வலதுபுரத்தில் அமர்ந்து கைகூப்பி காட்சியளிக்கிறார். தீர்த்த வடிவமான இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்கி, வேலைவாய்ப்பு கிடைப்பது நிச்சயம்.

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் வழிபடுவது பல்வேறு சிறப்புகளை தரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

    முக்கிய விழாக்கள்

    மங்கை மடம் வீர நரசிம்மர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம், திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும்.

    சர்வ தோஷங்களையும் நீக்கும் பஞ்சநரசிம்மர்கள்

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர். தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் பஞ்ச நரசிம்மர்களை தரிசனம் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வருகிறார்கள்.

    கோவில்களுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    • புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)

    தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

    தல விருட்சம்: முல்லைக்கொடி

    தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)

    முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.

    இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள். அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள்.

    முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இவ்வாறு பூவுலகத்தில் முதல் 'கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன். இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

    முல்லை வன நாதர் :

    முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வனநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

    சோமாஸ்கந்தர் :

    இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப்பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது. கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், 'ஷீரகுண்டம்' (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.

    குழந்தைச் செல்வம் :

    உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.

    மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

    இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

    அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

    நன்றிக் கடன் :

    பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது. சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு. அமைவிடம் :

    அமைவிடம் :

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    • பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    இன்றைய திருக்கோவில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

    தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)

    தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்

    தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்

    விமானம்: பத்ர விமானம்

    கிரகம்: சுக்ரன் ஸ்தலம்

    திருத்தல வரலாறு:

    வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

    அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

    அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.

    வருணன் பாசம் பெற்ற வரலாறு:

    ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

    விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:

    முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

    பிரம்மனுக்கும், ஈசான்யருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோவிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோவிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.

    இத்திருக்கோவிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108 அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.

    மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வது அந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

    திருக்கோவில் அமைவிடம்:

    இந்த தென்திருப்பேரை திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்,திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அய்யனார் கோவில் சேமக்குதிரைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோவில் உள்ளது. இதன் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேமக் குதிரை சிலை, அய்யனார், மடப்புரம் காளி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவில் வளாகத்தில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. சேமக் குதிரைக்கும், அதன் மீது எழுந்தருளியுள்ள அய்யனார் சுவாமிக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை காண கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் உள்ள சோனையா சுவாமி, மாயாண்டி சுவாமி மற்றும் அய்யனார் சுவாமிக்கும் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கார் வேன்களில் சென்ற ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அய்யனார், சோனையா சுவாமிகளையும், சேமக் குதிரையையும் தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்தின் தலைவரும், கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலருமான காளீஸ்வரன் செய்திருந்தார்.

    • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மின்விளக்கு அலங்கார தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் 8 -ம் நாளில் மின்விளக்கு அலங்காரத் தேரோட்டம் நடந்தது.

    இந்த கோவிலில் நடை பெற்று வரும் பங்குனி திருவிழாவில் பொங்கல் வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிலில் திரண்டு விடிய, விடிய தீச்சட்டி எடுத்தும், குழந்தை களுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், ஆடு கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நேர்்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

    நேற்று முன்தினம் இரவு நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் முத்து மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடாகி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினார்.

    சம்பிரதாய பூஜைகள் முடிந்து இரவு 8 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவிலைச் சுற்றி வந்து தேர் நிலை சேர்ந்தது. தேரோட்ட விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பங்குனித் திருவிழாவின் 9-வது நாளான ேநற்று காலை பால்குடம், மாலை யில் ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கில் முத்து மாரியம்மன் பவனி வருதல் நடந்தது.

    ×