search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பெஸ்த வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை காலை கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அன்று முதல் மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை பக்தர்கள் கோவிலுக்கு சாரி வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை விடியற்காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா பக்தர்களும்,பொது மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • விக்கிரமங்கலத்தில் கோவில் பாலாலயம் நடந்தது.
    • சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில் பட்டியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான சிவனேசவல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம கிருஷ்ணா மடாதிபதி நியமானந்த தலைமையில் பாலாலய வழிபாடு நடந்தது.

    கோவிலின் புனரமைப்பு பணிகளை தொடங்கு வதற்காக சிவாச்சாரியார் கார்த்திக் வீரபாகு தலைமையில் யாக பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. சரக ஆய்வர் (பொறுப்பு) தியாகு, தக்கார் சுதா, கணக்கர் முரளிதரன், பூசாரி கருத்தப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பணிக்குழு முயற்சி யாளர்கள் பால சுப்பிரமணி, பழனிவேல், கண்ணன், முத்துராம லிங்கம், மகாமுனி, வீரசிங்கம், சாமி, பூர்வ லிங்கம், தங்கதுரை, தன பாண்டி, காட்டு ராஜா, சக்திவேல், ஜோதி, சிவா, செல்வம், அன்பழகன், ஜெகதீசன், பிச்சைமணி, பாண்டிகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பாலமேடு அருகே உள்ள தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.மேட்டுப்பட்டி உட்கடை பள்ளபட்டி கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கருப்பையா பூசாரி, ஒய்யன் பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
    • இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.

    சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

    கொல்லி மலை, கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லி பாவை கோவிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.

    அறப்பளீஸ்வரர் கோவிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

    கொல்லிப்பாவை கோவில்

    தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு 'கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்" என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோவில் உள்ளது.

    சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.

    கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி" எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் "அறப்பள்ளி ஈஸ்வரன்" என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மேலும் 'அறை' என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் "அறைப்பள்ளீஸ்வரர்" என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.

    இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அறம் வளர்த்த இறைவி பள்ளிகொண்ட தலம் என்பதால் புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்றழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

    சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம்

    உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.

    ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில் வல்வில் ஓரி சிவாலயம் நிர்மாணித்தான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.

    • பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.
    • கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளைக் நிகழ்த்திவிட்டு, பாண்டவ தூதப் பெருமாள் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார். அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன். அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும் என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார். இந்த கிருஷ்ணரின் பெயர் தூதஹரி எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது. இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொரு வரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

    தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

    தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.

    கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

    • சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.
    • கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பல ஆலயங்களில் ஆத்தூரில் அமைந்துள்ள கல்யாண வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இந்த ஊர் `முன்னர் ஆற்று ஊர்' என்ற அழைக்கப்பட்டு பின்னர் மருவி `ஆத்தூர்' என்று வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    பிற்கால பல்லவ மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்த சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். பல கோவில்களை நிர்மாணித்தவர். சிதிலமடைந்த பல கோவில்களுக்கு திருப்பணிகள் பல செய்த பெருமை உடையவர்.

    கோப்பெருஞ்சிங்கன் காஞ்சிக்கு அருகே நடைபெற்ற ஒரு போரில் வெற்றி வாகை சூடி பின்னர் வரதராஜப் பெருமாளை வழிபட்டார். கோவிலில் வரதராஜப் பெருமாள் தரிசனம் கொடுத்தார். அப்போது கோப்பெருங்சிங்கனின் மனதில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் வரதராஜப்பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. இதே எண்ணத்துடன் காஞ்சியில் இருந்து புறப்பட்டு பாலாறு ஓரமாகத் தன் தலைநகரை நோக்கி பயணப்பட்டார்.

    வழியில் நதிபுரம் என்ற ஆத்தூரில் தனது படைகளுடன் தங்குகிறார். தனது கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கோப்பெருங்சிங்கனின் கனவில் வரதராஜர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். பக்திப்பரவசத்துடன் பெருமாளே என்று விழித்துக் கொள்ளுகிறார் மன்னர். உடனே ஆத்தூரில் கல்யாணக் கோலத்தில் வரதராஜருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் ஆத்தூர் என்ற ஊரில் கல்யாண வரதராஜர் கோவில் உருவான வரலாறு இதுதான். சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் இது.

    ராஜகோபுரமின்றி காணப்படும் இத்தலத்திற்குள் நுழைந்தால் விளக்குத்தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. இத்தலத்தின் மூலவர் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். துவாரபாலகர்கள் அமைந்திருக்கும் இடத்தில் தும்பிக்கையாழ்வாரும் நாகராஜரும் காட்சி தருகிறார்கள். அர்த்த மண்டபத்தில் தேசிகர், உடையவர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் முதலானோர் சிலா ரூபங்களில் எழுந்தருளியுள்ளார்கள். அருகில் விகனச மகரிஷியின் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே உள்ள அந்தராளத்தில் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத கல்யாண வரதராஜர், பெருந்தேவித் தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நர்த்தனக்கண்ணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    கருவறையில் வரதராஜப் பெருமாள் கல்யாண வரதராஜராக ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கல்யாணக் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இடது திருக்கரம் ஊருஹஸ்தமாகவும், கீழ் வலது திருக்கரம் அபயஹஸ்தமாகவும் அமைய பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கல்யாண வரதராஜரை தரிசித்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறுவதாக பலர் கூறுகிறார்கள்.

    சுற்றுப்பிரகாரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த சன்னிதியில் பெருந்தேவித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். மற்றொரு புறத்தில் ஒரு தனி சன்னிதியில் ஆண்டாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தெருவில் சற்று தள்ளி ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் இத்தலத்தில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது. இந்த ஆகம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விகனச மகரிஷி. இவருக்கு இத்தலத்தில் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

    நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, ராமநவமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி முதலான பல உற்சவங்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனி மாதத்தில் கருட சேவை உற்சவமும் விகனசமகரிஷிக்கு ஆடிமாதம் திருவோண நட்சத்திரத்தில் உற்சவமும் நடைபெறுகின்றன.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பட்டாச்சார்யாரின் வீடு அருகிலேயே உள்ளது.

    செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆத்தூர் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பூப்பல்லக்கு பவனி நாளை நடக்கிறது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேரகன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஏராள மான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பூக்குழி இறங்கி னர். விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இன்று மாலை பட்டு பல்லக்கில முருகன் எழுந்த ருளி கோவில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்து கள்ளர் திருக்கண் வந்து அடைவார்.

    நாளை அங்கிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் முருகன் பூப்பல்லக்கில் எழுந்தருளு கிறார். தொடர்ந்து வீதி உலா வந்து நள்ளிரவு 12 மணிக்கு ேகாவிலை வந்தடைகிறார்.

    • வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29-ந் தேதி விக்னேசவர பூஜை, தன பூஜை உடன் தொடங்கி கணபதி ஹோமம் வாஸ்து சாந்திகள் நடைபெற்று, நேற்று முன்தினம் அதிகாலை பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை கடம் புறப்பாடாகி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கும்பாபிஷேகம், மகிஷாபிஷேகம் ஆகியவை நடந்தன.

    இதில் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது.
    • இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசன், உத்திரசேனன், பாடலநாதர், கரையேற்றும்பிரான் போன்ற பல்வேறு பெயர்களாலும், அம்பாளை பெரியநாயகி, லோகாம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

    12 வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் செப்பு தகடுகளால் வேயப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமை வாய்ந்த மரமாக உள்ளது. இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கெடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

    இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும், அதையடுத்து 7 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலை கடந்து உள்ளே சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் மற்றும் நந்தியும் உள்ளது. இங்கிருந்தே இறைவனை தரிசிக்கலாம்.

    வெளிபிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, 2-வது வாசலை கடந்து இடது புறமாக திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இந்த கோவிலில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும் போது 63 நாயன்மார்கள் சன்னதியை பார்த்து தரிசிக்கலாம்.

    தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்பாலிக்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவ திருமேனிகளின் சன்னதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    திருநாவுக்கரசர் வழிபட்ட பாடலீஸ்வரர் கோவில்

    சைவ பெரியவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பண்ருட்டி அருகே திருவாமூரில் பிறந்தவர். சமண சமயத்தை சேர்ந்த அவர் சைவ சமயத்துக்கு மாறியதால், அவரை கொல்ல சமணர்களும், சமண சமயத்தைச்சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவனும் திட்டமிட்டனர். சமணர்கள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, மகேந்திர வர்ம பல்லவன் பிடித்து துன்புறுத்தினார். இதற்கெல்லாம் சற்றும் கலங்காத அப்பர் பெருமான் சிவபெருமானை வணங்கி, அந்த துன்பங்களில் இருந்து மீண்டார். இருப்பினும் பல்வேறு துன்பங்களில் இருந்து மீண்ட, அவரை கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு செய்த, சமண சமயத்தவர், அவரை ஒரு கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தனர். ஆனால் அவரோ இறைவனை நினைத்து நெஞ்சுருகி, சொற்றுணை வேதியன் சோதிவானவன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். அப்போது அந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. பின்னர் அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார் என்று வரலாறு கூறுகிறது.

    பாதிரி மரம்

    இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படி பாடிய அடியார்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் திருக்கோவில். பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற் காக பறிக்க விரும்பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களை பெற்றார். இதனால் இவர் 'புலிக்கால் முனிவர்' என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே 'பெரும்பற்ற புலியூர்' என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்றானது.

    நினைத்த காரியம் நிறைவேற பாடலீஸ்வரரை வழிபடுங்கள்

    பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தேரின் சிறப்பு

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் முடிவடைந்து, முதன் முதலில் கடந்த 22.5.2005-ம் ஆண்டு வைகாசி மாத பெருவிழாவையொட்டி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இந்த தேர் 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டது. இந்த தேரின் அமைப்புகள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

    தேர் சக்கரத்தின் மேல் தாமரை வடிவத்தில் பூலோகம் பஞ்சபூதமாக காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சூரியன், சந்திரன் 2 தேர் சக்கரங்களாக உள்ளது. மண்ணுலகம் பரந்த காட்சியை விளக்குகிறது. ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில், அதில் உள்ள இலுப்பை, காட்டு வாகை, தேக்கு, வேங்கை மரங்கள் உணர்த்துகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் தேரில் ஒரு நாள் வலம் வரும் காட்சியை குறிக்கிறது. இறைவன் இருப்பிடம் ஆகாய லோகமாகவும், கும்ப கலசங்கள் ஈர்ப்பு சக்தியாக உள்ளது. கும்ப கலசம் தாமிரத்தால் உருவாக்கப்பட்டது. தாமிரம் இழுக்கும் சக்தி, கடத்தும் சக்தியை குறிக்கிறது.

    தேரின் மொத்த எடை 45 டன் ஆகும். 4 சக்கரங்கள் 5 டன் எடை கொண்டது. இரண்டு அச்சுகள் 2½ டன் எடை, நீளம், அகலம் தலா 25 அடி, வடம் 200 அடி வரை உள்ளது. தேரின் 57 கால்கள் 57 தத்துவங்களை குறிக்கிறது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இறைவனே நேரில் வந்து காட்சி அளிக்கும் வகையில் இந்த தேர்த்திருவிழா நடக்கிறது.

    பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    சித்திரை- இளவேனில் வசந்த விழா (அப்பருக்கு 10 நாட்கள் விழா)

    வைகாசி - வைகாசி பெருவிழா

    ஆனி - மாணிக்கவாசகருக்கு 10 நாட்கள் விழா

    ஆடி - அம்பிக்கைக்கு ஆடிப்பூர விழா (10 நாட்கள்)

    புரட்டாசி - நவராத்திரி விழா

    ஐப்பசி - அன்னாபிஷேகம்

    கார்த்திகை - சோமவார விழாக்கள்

    மார்கழி - திருவாதிரை மற்றும் தனுர்மாத விழா

    தை - பெண்ணையாற்றில் தீர்த்தவாரி மற்றும் தை அமா வாசை கடல் தீர்த்தவாரி

    மாசி - மாசி மக தீர்த்தவாரி

    உபமன்னியர் முயல் வடிவம் நீங்கப்பெற்ற தலம்

    பாதிரியை தல விருட்சமாகவும், புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு உபமன்னியர் முனிவர் வழிபட்டு, தன்னுடைய முயல் வடிவத்தில் இருந்து சாப விமோசனம் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இது தவிர அக்தியர், மங்கணமுனிவர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது.

    வைகாசி பெருவிழாவும், எல்லை கட்டுதல் நிகழ்ச்சியும்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதில் பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் குறிப்பிட்ட தூரம் வரை 4 திசைகளிலும் ஓடிச்சென்று எல்லை கட்டுவர்.

    அதாவது, பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவைகளுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பாடலீஸ்வரருக்கு அபிஷேகம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. குறிப்பாக சாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோசாலையின் பாலில் இறைவனுக்கு அபிஷேகம்

    பாடலீஸ்வரர் கோவிலில் கோசாலை உள்ளது.இந்த கோசாலையில் பசு, கன்றுகள் என 85 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளில் இருந்து கறக்கும் பாலை பாடலீஸ்வரருக்கு 5 கால பூஜைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவற்றை கன்று குட்டிகள் குடிப்பதற்காக விட்டு விடுகிறார்கள். இதனால் இந்த பால் கோவிலை தாண்டி எங்கும் கொடுப்பதில்லை.

    இந்த கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பக்தர்கள் பசுந்தீவனம், வைக்கோல் வழங்கி பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் அகத்தி கீரைகளை பக்தர்கள் வழங்கி வருகின்றனர். விரும்பும் பக்தர்கள் கோவில் திறந்திருக்கும் நேரம் பசுகளுக்கான தேவையான தீவனங்களை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தோஷம் நீக்கும் பாதிரி மரம்

    கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

    இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

    தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    • முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்க னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நந்தி, பலிபீடத்திற்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, கோழிப்பட்டி கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • மதுரை அருகே திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த திரளான கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் மேலூரில் உள்ள மண்டக படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 9 மணியளவில் திருமறைநாதர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், வேதநாயகி அம்பாள் சட்ட தேரிலும் எழுந்தருளினர்.

    அதன்பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். கோவில் ரத வீதியில் பக்தி கோஷத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேரோ ட்டத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்க ணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×