search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
    • நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது படம் இடம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா.

    இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்தார்த் இரண்டரை வயதில் இருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் அம்பு, டேக்வாண்டோ, பாக்சிங் ஆகிய தற்காப்பு கலைகளை ஆர்வமாக விடாமுயற்சியுடன் கற்று வருகிறார்.

    இதுவரை மூன்று நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

    அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

    இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

    நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    சிறு வயதிலிருந்தே இவரது பெற்றோர் மற்றும் யோகா சிலம்பக்கலை மாஸ்டர்

    முகமதுசபீர் ஆகியோரின் ஆக்கமும் ஊக்கமும் மற்றும் பெரும் முயற்சியால் சித்தார்த் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

    தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது.

    அதில் யோகா போட்டியில் சித்தார்த் கலந்து கொண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளார்.

    இந்த தேர்வின் மூலம் வரும் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியா வீரராக போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    மேலும் வில் அம்பு போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வுக்காக அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியில் சித்தார்த் பங்கேற்க உள்ளார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று சிறுவன் சித்தார்த் நம்பிக்கையுடன் கூறினார்.

    இதுகுறித்து சித்தார்த்தின் பெற்றோர் யோகராஜ் கூறும்போது, செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்துக்கு சித்தார்த் செல்ல உள்ளார்.

    அதற்கான தீவிர பயிற்சி தற்போது மேற்கொண்டு வருகிறார்.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைப்பார் என்றார்.

    பாட்னாவில் இருந்து வந்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் 20 சதவீத செலவில் வீட்டை பழமை மாறாமல் 5 அடி உயர்த்தி கட்டி சாதனை படைத்து உள்ளனர்.
    திருவொற்றியூர் :

    திருவொற்றியூர் கலைஞர் நகர் 9-வது தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதி. இவர்கள் சுமார் 35 வருட பழமையான வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த தெருவில் மாநகராட்சி சார்பில் பலமுறை சாலைகள் போட்டு உள்ளனர். மேலும் இவரது வீட்டின் அருகே புதிய வீடு கட்டுபவர்கள் மேடாக கட்டியதால் இவரது வீடு தாழ்வானது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. அடிக்கடி இதுபோல் நடப்பதால் வீட்டுக்குள் வசிக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன், தனது வீட்டை பழமை மாறாமல், அதே நேரத்தில் 5 அடி உயரத்துக்கு தூக்கி கட்ட விரும்பினார்.

    இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள பாட்னாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் மூலம் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வீட்டின் தரைத்தளத்தை சுமார் 5 அடி உயரம் தூக்கி கட்ட முடிவு செய்தார். அதன்படி 45 ஜாக்கிகளை கொண்டு 40 ஊழியர்கள் வீட்டின் கட்டிடத்தை அறுத்து எடுத்து கான்கிரீட் போட்டு பழமை மாறாமலும், வீட்டில் எந்த விரிசலும் ஏற்படாமலும் தரையில் இருந்து சுமார் 5 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டிமுடித்தனர்.

    இது குறித்து வீட்டின் உரிமையாளர் ராமகிருஷ்ணன் கூறும்போது, “நான் வசித்து வந்த வீட்டை பழமை மாறாமல் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். ஆனால் பாட்னாவில் இருந்து வந்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் 20 சதவீத செலவில் வீட்டை பழமை மாறாமல் 5 அடி உயர்த்தி கட்டி சாதனை படைத்து உள்ளனர்” என்றார்.
    நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார்.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார்.



    மற்ற 2 வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரிதா ஷெர்பா புதிய சாதனையை படைத்தார். இந்த நிலையில் 23-வது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.
    சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த பகுதியை சேர்ந்த பெண் சாதனை படைத்துள்ளார். #CivilServicesExam #Maoisthit #NamrataJain
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள், இம்மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டன. அதில், சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டம் கீடம் நகரைச் சேர்ந்த நம்ரதா ஜெயின் (வயது 25) என்ற இளம்பெண், தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இவர், தண்டேவாடாவில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு, பிலாயில் என்ஜினீயரிங் படித்தவர். இவருடைய தந்தை உள்ளூர் வியாபாரி ஆவார். தாயார் குடும்பத்தலைவி. சகோதரர் ஆடிட்டருக்கு படித்து வருகிறார்.



    நம்ரதா ஜெயின், ஏற்கனவே 2016-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 99-வது ‘ரேங்க்’ பெற்றவர். அப்போது அவருக்கு ஐ.பி.எஸ். (காவல்துறை) ஒதுக்கீடு செய்யப்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

    ஆனால், தற்போது தனக்கு ஐ.ஏ.எஸ். ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்ரதா எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கார் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.   #CivilServicesExam #Maoisthit #NamrataJain
    கருந்துளையை படம் பிடித்தது அசாதாரண சாதனை என இந்திய விஞ்ஞானிகள் பாராட்டி உள்ளனர். #M87 #BlackHole
    புதுடெல்லி:

    வானியல் ஆய்வில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கும் சர்வதேச விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் அதை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அதாவது, அண்டவெளியில் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்த கருந்துளையை முதல் முறையாக படம்பிடித்து வெளியிட்டனர்.

    நாம் வாழும் பால்வழி மண்டலத்தை போல ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் அண்டவெளியில் அடங்கி இருக்கின்றன. அவற்றின் மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியை கருப்பு நட்சத்திரம் என்றும், கருந்துளை என்றும் விஞ்ஞானிகள் அழைத்து வந்தனர்.

    தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியை கூட வெளியேறவிடாமல் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல்களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும், அதை படம் பிடிக்க முடியவில்லை. வெறும் கணினி வரைபடமாக மட்டுமே காண முடிந்தது.



    எனினும் அதை நேரடியாக படம்பிடிக்க நீண்ட காலமாக முயன்று வந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

    ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, ஹவாய், அரிசோனா போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ரேடியோ தொலைநோக்கிகளின் உதவியால் இந்த கருந்துளை தற்போது படம்பிடிக்கப்பட்டு உள்ளது. ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் எனப்படும் இந்த சர்வதேச தொலைநோக்கி திட்டம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

    பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மேசியர் என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ள கருந்துளையைத்தான் விஞ்ஞானிகள் படம்பிடித்து உள்ளனர். எம்87 என பெயரிடப்பட்டு உள்ள இந்த கருந்துளை சூரியனை விட 6500 கோடி மடங்கு எடை உடையது ஆகும்.

    ஒளி வெள்ள பின்புலத்தில் கருப்பு கோள வடிவமாக காணப்படும் இந்த கருந்துளையின் புகைப்படத்தை நேற்று முன்தினம் வெளியிட்ட விஞ்ஞானிகள், பார்க்க முடியாது என நினைத்த ஒன்றை பார்த்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகளும், ‘இது ஒரு அசாதாரண சாதனை’ என பாராட்டி இருக்கின்றனர்.

    இது குறித்து மும்பை டாடா ஆய்வு நிறுவன இணை பேராசிரியர் சுதிப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘கருந்துளை பற்றிய முதல் நேரடி ஆதாரம் இது. இது ஒரு மைல்கல் சாதனை. இதன்மூலம் கருந்துளை இருப்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று விட்டன. கருந்துளை இருப்பதற்கான 99 சதவீத ஆதாரங்கள் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

    ஒளியின் பின்புலத்தில் இருக்கும் கருப்பான அந்த பொருள் நம்ப முடியாத ஒன்று என்று கூறிய அவர், இதுதான் கருந்துளைகளின் நேரடி ஆதாரம் என்றும் குறிப்பிட்டார்.

    இதைப்போல இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சவுதாம்ப்டன் பல்கலைக்கழக வானியல் குழும இணை பேராசிரியர் கோஷாக் காந்தி கூறும்போது, ‘கண்ணால் பார்ப்பதே மெய்யானது. அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கருந்துளைகள் பற்றிய முக்கியமான நேரடி ஆதாரம்’ என்று தெரிவித்தார்.
    தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் புதிய சாதனை படைத்தான். #SwimminginSea #TheniBoy
    ராமேசுவரம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார்-தாரணி. இவர்களுடைய மகன் ஜெய் ஜஸ்வந்த் (வயது 10). தேனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நீச்சலில் பல சாதனைகளை படைத்துவரும் இவன், இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை நிகழ்த்தி உள்ளான்.

    அதற்காக ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், அவருடைய தந்தை ரவிக்குமார், பயிற்சியாளர் விஜய்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோஜர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர். பின்னர் இலங்கை தலைமன்னார் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து சரியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் நீந்த தொடங்கினான். இந்திய கடல் எல்லையை காலை 9.45 மணிக்கு கடந்த அவன், அங்கிருந்து தொடர்ந்து நீச்சல் அடித்து பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்தான்.



    28 கிலோமீட்டர் தூரத்தை சரியாக 10 மணி 30 நிமிட நேர்த்தில் கடந்து உலக சாதனை புரிந்துள்ள சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை அவருடைய பெற்றோர் ரவிக்குமார், தாரணி மற்றும் உறவினர்கள் முத்தமிட்டு வரவேற்றனர்.

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் சிறு வயதில் நீச்சலில் புதிய சாதனை புரிந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேரில் வந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கடலோர போலீஸ் ஏ.டி.எஸ்.பி. இளங்கோ மற்றும் கடற்படை அதிகாரிகள், மத்திய-மாநில புலனாய்வு பிரிவுஅதிகாரிகள், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    சாதனை படைத்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுதொடர்பாக அவன் கூறியதாவது:-

    தலைமன்னார் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நீச்சல் அடிக்க தொடங்கினேன். குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்து 10½ மணி நேரத்தில் நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

    இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து நீந்தியபடி தலைமன்னார் சென்று விட்டு மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்திவர திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவன் கூறினான்.

    நீச்சல் பயிற்சியாளர் விஜய்குமார் கூறும் போது, “இதே தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடந்த 1994-ம் ஆண்டில் 12 வயதில் குற்றாலீசுவரன், 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளார். அதன்பின் பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும் மிகவும் குறைந்த வயதில் 10½ மணி நேரத்தில் கடந்து சிறுவன் ஜெய்ஜஸ்வந்த் உலக சாதனை புரிந்துள்ளார்” என்று கூறினார். #SwimminginSea #TheniBoy
    குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். #MohammedShami
    நேப்பியர்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி அபார பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தது.

    நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி ஆட்டமிழக்கச் செய்தார். நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் விக்கெட், முகம்மது சமிக்கு 100-வது விக்கெட்டாக அமைந்தது.



    இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார். #MohammedShami
    நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.13.5 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 188 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது. 

    குடிமகன்கள் ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.13.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும். 

    இதில் பீர் 16 ஆயிரத்து 400 பெட்டிகளும், பிராந்தி, ரம் உள்ளிட்டவைகள் 21 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையானது. 
    டெல்லியில் நடந்து வரும் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். #Chess #Gukesh #Grandmaster
    சென்னை:

    சர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

    கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். குகேசின் தந்தை ரஜினிகாந்த், தாயார் பத்மா ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

    இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து இருக்கும் குகேஷ் அளித்த பேட்டியில், ‘கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய செர்ஜி கர்ஜாகின் சாதனையை தகர்க்க முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார். #Chess #Gukesh #Grandmaster

    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்தார். #AUSvIND #ViratKohli #Tendulkar
    பெர்த் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்து சதம் கண்டதோடு, நிறைய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    * டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 25-வது சதம் (127 இன்னிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 25 சதங்களை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் தங்களது 25-வது சதங்களை முறையே 130 மற்றும் 138 இன்னிங்ஸ்களில் எடுத்தனர்.



    * ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 6-வது செஞ்சுரியாக இது பதிவானது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய இந்தியரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (9 ), வாலி ஹேமன்ட் (7) ஆகியோருக்கு அடுத்து தெண்டுல்கர், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்கிளிப் (தலா 6 சதம்) ஆகியோருடன் 3-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார்.

    * 30 வயதான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்டில் பங்கேற்று அதில் 19 இன்னிங்சில் பேட் செய்து 1,152 ரன்கள் (சராசரி 60.63) சேர்த்துள்ளார். அங்கு குறைந்தது 15 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் அதிக சராசரியை பெற்றுள்ள ஆசிய நாட்டவர் கோலி தான். #AUSvIND #ViratKohli #Tendulkar

    கேரளாவில் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் சாதனை படைத்த 96 வயது மூதாட்டிக்கு மாநில கல்வித்துறை சார்பில் லேப்டாப் பரிசு வழங்கப்பட்டது. #KarthiyaniAmma #Aksharalaksham
    ஆலப்புழா:

    கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷரலக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல்,  கணிதம் ஆகியவற்றின்  அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி அம்மா, 100-க்கு 98 மார்க் எடுத்து  சாதனை படைத்துள்ளார். இதற்குப் பிறகு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.



    இந்நிலையில், எழுத்தறிவு இயக்கத்தில் முதலிடம் பிடித்த கார்த்தியாயினி அம்மாவின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு மாநில கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசை கல்வி அமைச்சர் நேற்று வழங்கினார். லேப்டாப்பை ஆன் செய்து காட்டிய அமைச்சர், அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.  #KarthiyaniAmma #Aksharalaksham
    சென்னை பல்கலைக் கழக தடகள போட்டியில் பிருந்தா, ரகுராம் ஆகியோர் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். #UniversityofMadras #AthleticChampionship
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம்.பிருந்தா 47.73 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் எத்திராஜ் வீராங்கனை சாந்தி 46.96 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சி.சி. வீரர் எம்.ரகுராம் 1 நிமிடம் 52.2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 2016-ம் ஆண்டில் லயோலா கல்லூரி வீரர் வெள்ளையதேவன் 1 நிமிடம் 53.1 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. சாதனை படைத்த பிருந்தா, ரகுராம் ஆகியோர் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

    தங்கம் வென்ற வினோதா உயரம் தாண்டிய காட்சி.

    பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர்.  #UniversityofMadras #AthleticChampionship
    ×