search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98113"

    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.
    செட்டிநாடு என்பது தனக்கென பல்வேறு வகையான தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது. பல நூறாண்டுகளுக்கு முன்னரே செட்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்று வந்தார்கள் என்பதை வரலாற்று நூல்கள் மூலம் அறியலாம். கடல் கடந்து சென்று வந்த அவர்கள் பல கலாச்சாரங்களை நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வீடுகள் கட்டுமானம், நகைகள் வடிவமைப்பு போன்றவற்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இன்று வரையிலும் செட்டிநாட்டு நகைகள் உறுதி வாய்ந்தவையாகவும், பாரம்பரியம் மிக்கவையாகவும் கருதப்பட்டு அவர்களது திருமண நிகழ்ச்சிகளில் கட்டாயம் அணியப்படுகின்றன. அதில் கழுத்திரு சோடிப்பு திருமாங்கல்யம், கௌரி சங்கம், வைர மாங்கல்யசரம், கெம்ப்பு செட்டுகள், அட்டிகைகள், காப்புகள், காதணிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    செட்டிநாட்டு நகைகளை மத, சடங்கு மற்றும் அலங்கார நகைகளாக வகைப்படுத்துகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விலையுயர்ந்த வைரம், முத்து ரூபி போன்ற கற்களைக் கொண்டு வந்து தங்களுடைய வீடுகளுக்கே பொற்கொல்லர்களை வரவழைத்து உறுதியான, அழகான மற்றும் பாரம்பரியமான நகைகளை வடிவமைத்து அணிந்து கொண்டவர்கள் செட்டிநாட்டு மக்கள் என்றால் அது மிகையாகது.

    அழகிய கெம்ப்புக் கற்களைக் கொண்டு செய்யப்படும் நகைகளை கைகாளலேயே டிசைன்களை வரைந்து வடிவமைத்து செய்வது தனிச்சிறப்பான விஷயமாகக் கருதப்படுகின்றது. செட்டிநாட்டு நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டு பின்புறம் மூடப்பட்டு வருபவை. உறுதியானவையாகவும், பல தலைமுறைகள் தாண்டி உழைப்பவையாகவும் இருக்கின்றன. கெம்ப்பு அட்டிகைகள், வளையல்கள், கம்மல்கள் மட்டுமல்லாது ஒட்டியாணம், வங்கி போன்றவையும் தனித்தனியாகவும், செட்டாகவும் கிடைக்கின்றன. கெம்புக் கற்களினால் செய்யப்படும் நகைகளை அனு அனுவாக ரசித்து அணிபவர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.

    வைர நகைகளை இன்றளவும் செட்டிநாட்டிற்குச் சென்று வாங்கி வருகிறார்கள் என்றால் அதன் தரமும், விலையும் அந்த நகைகளின் கட்டமைப்புமே அதற்கு காரணம் என்று சொல்லலாம். நகை செய்யக்கூடிய தங்கக் கட்டிகளை குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது அதற்கென இருக்கும் கல்லின் மேல் வைத்து அடித்து தங்கத்தை இறுக்குகிறார்கள். அதன் பின்னர் அந்த தங்கக் கட்டிகளின் மேல் டிசைன்கள் வரையப்பட்டு, துவாரங்களைப் போட்டு வைரக் கற்களானது பதிக்கப்படுகின்றது. இவ்வாறு உறுதியாக செய்யப்படும் வைரநகைகள் எத்தனை ஆண்களானாலும் ஜொலி ஜொலிப்பு குறையாமல் ஒளிர்கின்றன. ஏழு கல் வைரத்தோடு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

    கௌரிசங்கம்:- செட்டிநாட்டிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வழி வழியாக அணியக்கூடிய நகை என்று கூறப்படும் இந்த நகையானது பெரிய ஹாரம் போன்று மார்பை அலங்கரிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வயது எட்டும் ஆண்கள் குருமார்களிடம் மந்திர உபதேசம் பெற்றுக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். உருத்திராட்ச மாலையான இதில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள். பெரிய பெண்டன்ட்டுகள் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகின்றது. இந்த பெண்டன்ட்டில் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதாரராக அமர்ந்திருக்கும் ரிசபருக்கு வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    கழுத்திரு:- திருமணத்தன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யமே கழந்திருவாகும். நகரத்தார தாலி என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த நகையானது இன்றளவும் இருபது முதல் இருபத்தைந்து சவரன் தங்கத்தால் செய்யப்படுவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

    மங்களச்சரம்:- தாலி மட்டுமல்லாது தாலிச் சங்கிலி முழுவதுமே வைரக்கற்களால் பதிக்கப்பட்டு செய்யப்படும் மங்களமான கழத்தாலியாகும்.

    கண்டசரம், பூச்சரம்:- கழுத்தை ஒட்டி அணியக்கூடிய அட்டிகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டசரமாகும். பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரக்கற்களால் பதித்து செய்யப்படும் கழுத்தணியே பூச்சரம் என்று அழைக்கப்படுகின்றது.

    காப்புகள்:- வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட கை காப்பானது வைரக்காப்பென்றும், தங்கத்தினால் நெளி நெளியாக வளைந்து செய்யப்பட்ட காப்பு தங்கக்காப்பென்றும், நீலக்காப்பு, சிவப்பு கல்லு காப்பு, பச்சைக்கல்லுக்காப்பு, முத்துக்காப்பு, கருகுமணி போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பாசி பதிக்கப்பட்டு வரும் பாசிக்காப்பு என காப்புகளின் பலவகைக் காப்புகளை அந்தக் காலத்திலேயே அணிந்திருக்கிறார்கள்.

    அருப்புதடை:- வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு யானை முடி பதிக்கப்பட்டு செய்யப்படும் விரலில் அணியும் மோதிரம்.

    இவை மட்டுமல்லாமல் ஒற்றை வடசங்கிலி இரட்டை வடசங்கிலி, மாங்காய் மாலை, தலையில் குத்தும் கொண்டை ஊசி, சேலையில் குத்தக் கூடிய ஊக்குகள் என அனைத்திலும் தங்கமானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    இன்று பிரேசிலெட் என்று அழைக்கப்படும் மணிக்கட்டில் அணியப்படும் நகையானது பல நூற்றாண்களுக்கு முன்னரே குருமாத்து என்ற பெயரில் கைக்காப்பாக ெசட்டிநாட்டு மக்களால் அணியப்பட்டிருக்கின்றது.
    சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள்.
    இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் கிரிஸ்டல் நகைகளை விரும்பி அணிகிறார்கள். பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிப்பதால் இது அனைவரையும் கவர்கிறது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பாகும். பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.

    கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளைபோல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம், நடுத்தர நீளம், அதிக நீளம் ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட்டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டிக்கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும்.

    அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வரவேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சுபோட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டர் நகை ரெடியாகி விடும்.

    சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். இந்த கிரிஸ்டல் நகை குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள்.

    தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல் கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர்வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகிறார்கள். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன்மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும்.

    ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன்மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500 கிடைக்கும். ஒருநாள் தயாரித்ததை விற்றபின் அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். விற்பனை அளவுக்கேற்ப உற்பத்தியை அதிகரித்தால் வருவாய் கூடும்.
    வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.
    வைரமானது அணிந்திருப்பவருக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும் என்று நம்பப்பட்டதால் பழங்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லும் பொழுது வைரங்களை அணிந்து சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    * எப்பொழுதும் வைர மோதிரம், வைர மூக்குத்தி, வைரக்கம்மல்களை அணிந்து கொள்பவராக இருந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முகத்திற்கு ஃபேஷியல் செய்து கொள்வது, பாத்திரம் கழுவுவது மற்றும் கெமிக்கல்கள் கொண்டு வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்ற சந்தர்ப்பங்களில் வைர நகைகளைக் கழற்றி வைத்து விடுவது உத்தமமாகும்.

    * அதே போல நீச்சல் குளத்தில் நீராடும்பொழுதும் வைர நகைகளைக் கழற்றி வைத்து விட வேண்டும். ஏனென்றால், நீரில் கலந்திருக்கும் குளோரினானது வைரத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தலாம்.

    * வைர நகைகளைத் தனித்தனியாக அதற்கென்றே கொடுக்கப்பட்ட பெட்டிகளில் வைத்திருப்பது சிறந்ததாகும். என்னதான் வைர நகைகளாகவே இருந்தாலும் ஒரே பெட்டியில் வைக்கும்பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி சேதமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    * வைர நகைகளை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மென்மையான குளியல் சோப்பைக் கலந்து சாஃப்ட் பிரஷ்ஷினால் சுத்தம் செய்யலாம்.

    * கழுவிய பிறகு மென்மையான துணியினால் துடைத்து சிறிது நேரம் காற்றில் ஆறியபின் அணிந்து கொள்ளலாம்.

    * வீட்டில் வைர நகைகளைச் சுத்தப்படுத்த முடியாதவர்கள் நகைக் கடைகளில் கொடுத்தும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

    * வைர நகைகளை வருடம் ஒரு முறையாவது நகைக்கடைகளில் கொடுத்து அதன் தரத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    * வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.

    * வைர மோதிரங்கள் மற்றும் சிறிய வைரக்கம்மல்கள் பத்தாயிரம் முதலே கிடைக்கின்றன. வைரத்தை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டியவை.

    * 4Cs அதாவது கேரட் வெயிட், கலர் கிரேடு, க்ளாரிட்டி கிரேடு மற்றும் கட்கிரேடு இவற்றை ஆராய்ந்த பின்னரே வைர நகைகளை வாங்க வேண்டும்.

    * வைர நகைகளை வாங்கும் பொழுது அதனுடன் தரப்படும் தரச் சான்றிதழை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...
    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...

    தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும்.

    அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கும்.

    24 கேரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகைக் கடைகளில் 22 கேரட் தங்க நகை ஆபரணங்கள்தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 கேரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கூடுதல் என்பதைப் போல, அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 கேரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

    ஆபரணத் தங்கம் வாங்கும்போது செய்கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகைக் கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் செய்கூலி சதவீதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்வார்கள். எனவே தங்கம் வாங்கும்போது செய்கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    தங்க நகை வாங்கும்போது அது கையால் செய்யப்பட்டது என்றால் செய்கூலி விலை அதிகமாக இருக்கும். அதுவே எந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய்கூலி குறைவாக இருக்கும்.



    ஆபரணத் தங்கம் எடை அளவினால்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும்போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எமரால்டு போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையை உயர்த்தும்.

    பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகைக் கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    நம் நாட்டில் லட்சக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன. பெயர் தெரியாத சிறு கடைகளில் நகை வாங்கும்போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையை வாங்குவது நல்லது.

    இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்த பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தங்க நகை வாங்கினால், அதன் சந்தோஷம் என்றும் நம் மனதில் தங்கும். 
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.

    ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.

    ரோடியம் என்பது உறுதியானது

    ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.

    ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.

    ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.

    தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்

    தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.

    ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.

    விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர்.
    வைரம் ரத்தின கற்களில் தனிச்சிறப்பு பெற்றது. அதன் ஜொலிப்பும், வெண்மை பிரகாசமும் அனைவரையும் மடக்கிட செய்கிறது. வைரம் பூமிக்கடியில் வெட்டி எடுப்பது முதல் நகையில் பதிப்பது வரை அதிக படியான பணி நிலைகளை கடந்து வருகிறது. ஏனெனில் வைரம் ஜொலிக்க செய்ய பட்டை தீட்டும் பணிகள் அதிக மெனக்கெடல் உடன் செய்யப்படுகிறது.

    தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.

    வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.

    வைரத்தின் உருவ அமைப்புகள்:

    வைர நகைகளில் பதியப்பட்டுள்ள வைரத்தின் வடிவம், உருவ அமைப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்திட வேண்டும். வைரங்கள் வட்டம், ரேடியண்ட், பிரின்ஸஸ், பியர், ஓவல், மார்குயிலி, இதயம், எமரல்டு, குஷன், கிரவுன்ஸ்டார், அஸ்சர் என்றவாறு ஒவ்வொரு விதமான உருவ அமைப்பில் வைரங்கள் பட்டை தீட்டப்ட்டு விற்பனைக்கு வருகின்றன. சர்வதேச அளவில் நிறைய வைர நிறுவனங்கள் நகை தயாரிப்பிற்கு என பிரத்யேகமான சிறிய மற்றும் பெரிய வைரக் கற்களை தயாரித்து வழங்குகின்றன.



    ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்

    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.

    தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.

    சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்

    காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.

    பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்

    சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு நகைகள். வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு அல்லது ரூபி பதிக்கப்பட்ட நகைகள். நவரத்தினங்களில் ஒன்றான ரூபி அல்லது கெம்பு கல் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உலோகங்களில் பதிக்கக்கூடியவை. மேலும் இக்கல் வைரம், பச்சைக்கல், முத்து போன்றவற்றுடன் இணைத்து பதிக்கவும் ஏற்றதாகும்.

    கெம்பு கற்கள் பின்க், பர்ப்புள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றாலும் பொதுவாக கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. இது கொரண்டம் (அலுமினியம் ஆக்சைட்) என்ற தாதுவின் ஒரு வகையாகும். இந்த தாதுவில் உள்ள கிரோமியம் என்ற வேதிப்பொருளினால் சிவப்பு நிறம் இந்த கற்களுக்கு கிடைக்கிறது.

    கெம்பு கற்களில் மியான்மார் அல்லது பர்மாவில் கிடைக்கும் கற்களுக்கு விலை அதிகம் இருக்கிறது. பொதுவாக ஒரு கேரட் எடையுள்ள கற்களுக்கு 7 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையில் அதன் நிறம், எடை, அளவு, சுத்தம் மற்றும் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல. மிகவும் மெல்லிய வகை நகைகளை விட சற்று எடை கூடுதலான நகைகளில் கெம்பு அருமையாக இருக்கும். டெம்பிள் ஜூவல்லரி நகைகளிலும், ஜிமிக்கி போன்ற பிரதான நகைகளிலும் பதிக்கப்படும்போது கெம்பு கற்கள் மிக நேர்த்தியாகவும், எடுப்பாகவும் இருக்கும். பொதுவாக பச்சை மற்றும் நீல நிற கற்கள் சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு அதிக எடுப்பாக இருக்கும். ஆனால் கெம்பு கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற கற்கள் கொண்ட நகைகள் மாநிறம் மற்றும் கருத்த நிறம் உள்ள பெண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

    கெம்பு கற்கள், பச்சை நிற கற்கள், முத்து போன்றவற்றுடன் சேர்த்தும் பதிக்கப்படுகிறது. கெம்பும், முத்தும் பதித்த ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற நகைகள் செட்டாக அணியும்போது மிக நேர்த்தியாகவும், அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.

    இன்று பல நகைக்கடைகளில் மணமகளுக்கு திருமண நகைகளாக முழு கெம்பு செட் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், தொங்கட்டான் அல்லது ஜிமிக்கி, வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம், மாங்காய் மாலை போன்ற மாலைகள், ஒட்டியானம், நெத்திச்சுட்டி, டாலர் என்று ‘ப்ரைடல் ரூபி செட்’ நகைகள் கிடைக்கின்றன. பழமையும், புதுமையும் கலந்து நகைகள் அணிய விரும்பும் இளம் பெண்களுக்கும் பல புதுமையான டிசைன்களில் கெம்பு பதித்த நகைகள் அருமையான தேர்வாக இருக்கும். 
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன.
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். அதிக விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. பாரம்பரிய திருமண நகைகளின் வகையில் இந்த பெரிய வளையல்கள் பழங்கால வடிவமைப்பு மற்றும் தற்கால வடிவமைப்பு என்றவாறு கூடுதல் மெருகுடன் வடிவமைக்கப்படுகின்றன.

    இந்த பெரிய வளையல்கள் அனைவரின் கவனத்தை தன் வண்ணம் ஈர்க்கும் வகையில் இருப்பதுடன், அணிபவரின் கையின் கவுரவத்தையும், அழகையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து வயதுள்ள பெண்களும் இதனை விரும்பி அணியலாம். குறிப்பாக இளம்வயதினர் மற்றும் மத்திய வயதுள்ள பெண்களே விரும்பி வாங்கி அணிகின்றனர்.

    ஆசிய நாடுகள் பலவற்றிலும் புதிய நவநாகரீக அணிகலனான இந்த பெரிய ஒற்றை தங்க வளையல்கள் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. இந்த பெரிய வளையல்கள் அனைத்தும் பெரும்பாலும் அணிபவரின் கையில் நுழைந்து சென்று விடாது. காரணம் கையில் கச்சிதமாக அமர்வதற்கு ஏற்ப பிரித்து மாட்டி கொள்ளும் கொக்கியுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வளையல்கள் எவ்வளவு பெரியதாகவும், மெல்லிய மற்றும் தகடு அமைப்பில் இருப்பினும் அணியும் போது வளைவோ, சேதமோ ஏற்படாது. அதிக வேலைப்பாடு மற்றும் எனாமல், கற்கள் பதித்த வளையல்கள் என்பதால் விழாகளுக்கு அணிந்து சென்று உடனே கழற்றி பாதுகாத்திடுவது நலம்.

    தங்கமணி குஞ்சரங்கள் தொங்கும் பிலிகிரி வளையல் :

    அற்புதமான தங்க நகை வேலைப்பாடு நிறைந்த இந்த வளையல் பெண்களின் கரங்களில் ஓர் நடன சாம்ராஜ்யத்தையே நிகழ்த்திடும். ஆம் அந்த அளவிற்கு வளையலின் இரு ஓரப்பகுதிகளிலும் தங்க மணி குஞ்சரங்கள் தொங்குகின்றன. அதில் பட்டையிலான வளைபின்னல் வேலைப்பாட்டின் இடையஇடையே மூன்று தங்க மணிகள் ஊஞ்சலாடுகின்றன. பட்டையான அமைப்பில் வளைவுகளாய் தங்க முத்துக்கள் மேலெழும்பியவாறு இடையில் சல்லடை அமைப்பும் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.



    எனாமல் பட்டாம்பூச்சி பறக்கும் வலை பின்னல் வளையல் :

    பெரிய அகலமான வளைபின்னல் அதிக செதுக்கல்களுடன் இருக்க அதன் மேல் அழகிய வண்ண பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளாக பிரித்து அணியும் வகை என்பதால் இருபக்கமும் இதே வடிவமைப்பு பிரம்மாண்ட வளையல் அமைப்பை தருகிறது. நேர்த்தியான வளைவுகளுடன் பிலிகிரி வேலைபாட்டுடன் இவ்வளையல் உள்ளது.

    டெம்பிள் வளையல்கள்:

    டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்ட இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன.

    கல்பதித்த ஒற்றைவளையல்கள் :

    நடுவில் கயிறு போன்ற அமைப்பும், ஓரப்பகுதிகள் இருபுறமும் ஓவல் வடிவில் நடுப்பகுதி மரகத கல்லும் சுற்றி சிறு சிறு மாணிக்க கல்லும் பதியப்பட்ட அமைப்பும், இடைவெளிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சதுர அமைப்பும் அதில் வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. இதன் கீழ் ஓரப்பகுதிகள் சிறு சிறு முத்துக்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அழகிய முத்து, மாணிக்க, மரகத தோரணம் இருபுறமும் உள்ளவாறு அழகுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை கற்கள் மட்டும் பதித்த பட்டை வடிவ பூ வளையல் மற்றும் பிலிகிரி வளையல்கள் அதிஅற்புதமாக உள்ளன. ஒற்றை பெரிய வளையல்கள் பெண்களின் அழகிய கலைசின்னயமாய் வலம் வருகின்றன.
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர்.
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர். இந்த கொக்கி பின்னலாடைகள் பார்க்க அழகாகவும், இடைவெளியுடன் காட்சி தரும் உருவங்களும் மனதை கவரும். அதுபோலவே கொக்கி பின்னல் வடிவமைப்பில் க்ரோசெட் நகை வடிவமைப்பிலும் வந்துள்ளன.

    அதாவது மெல்லிய வடிவில் பலதரப்பட்ட உருவங்கள் பின்னப்பட்ட அமைப்பில் அழகுடன் தங்க நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பழைய வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறுபட்டவாறு உள்ளது. அதாவது தங்க தகடுகளில் உருவம் பதியப்பட்டு, எம்போஸ் செய்யப்பட்டவாறும் தான் நகைகள் உருவாயின. சில மெல்லிய தங்க கம்பிகள் மற்றும் தற்போதைய இயந்திர உதவியுடன் நகைகள் வடிவமைக்கப்பட்டு ஆனால், க்ரோசெட் நகைகள் என்பது தங்க தகட்டில் உருவம் அழுத்தப்பட்டு வேண்டாத பகுதி தங்கம் வெளியேற்றப்பட்டு ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலும் மற்றும் துளைகள் உள்ளவாறும் உள்ளன.

    இதில் அதிக தங்கம் சேர்க்கப்படாமல் எடை குறைவான நகையாகவே காட்சிப்படுத்தப்படும். பெரிய அளவிலான நகைகள் முதல் சிறிய நகைகள் வரை இந்த க்ரோசெட் எனும் கொக்கி பின்னல் வடிவமைப்பில் அழகுடன் உருவாக்கி தரப்படுகின்றன. வலை பின்னல் ஓவியமாய் காட்சி தரும் இந்நகைகள் இளவயதினரை அதிகமாக கவர்கின்றன.

    க்ரொசெட் காதணிகள்

    மெல்லிய வலலைப்பின்னல் காதணிகள் என்பது சிறு கம்மல் மற்றும் தொங்கும் அமைப்பு என்றவாறு உள்ளது. இதில், தொங்கும் பகுதி என்பதில் அழகுடன் பூக்கள், கொடிகள், இலைகள் போன்றவை வலை பின்னல் அமைப்புடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த காதணிகள் அதிக எடையின்றி தினசரி அணிய ஏற்றவாறு உள்ளது. அதாவது கூண்டு அமைப்பில் தொங்கு பகுதி இருபுறமும் இடைவெளியுடன் கூடிய டிசைன் அமைப்பில் காணப்படுகிறது. ஒரு பக்கமுள்ள அதே டிசைன் பின்பகுதியில் இருப்பதால் தூர இருந்து பார்க்கும்போது காதணி ஜொலிப்புடன் அழகிய உருவ அமைப்பில் வெளிப்படுத்தும். சில காதணிகள் மிக இறுக்கமாக பின்னப்பட்டு பூ அமைப்பிலும், உட்புறம் வெற்றிடமாக அதே நேரம் வெற்வேறு உருவ தோற்ற பொலிவை மாற்றி தரும் வகையிலும் காட்சி தருகின்றது. இதில் தொங்கும் அமைப்பில்லாத ஸ்டெட் காதணிகளும் கிடைக்கின்றன.



    அழகிய க்ரோசெட் பென்டன்ட்

    செயின்களில் மாட்டக்கூடிய பெரிய மற்றும் பென்டன்ட் அழகுடன் கொக்கி பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய பென்டன்ட்களை விட க்ரோசெட் பென்டன்ட் அணிபவருக்கு கூடுதல் பொலிவை தருகின்றது. வித்தியாசமான உருவ அமைப்பு மற்றும் பின்னல்கள் கொண்டவாறு நீள் சதுரம், வட்டம், இதயம், கூம்பு வடிவிலான பென்டன்ட்கள் கிடைக்கின்றன. சில பென்டன்ட்கள் இரட்டை வளையங்கள், இரட்டை முத்துகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

    க்ரோசெட் மோதிரங்கள்

    க்ரோசெட் மோதிரங்கள் முந்தைய மோதிரம் போன்ற வடிவமைப்பில் இல்லாத மாறுபட்டவாறு உள்ளன. வட்டம், சிமிழ், சதுரம், நீள்சதுரம் என்றவாறு கீழ் பகுதி தங்க தகடு என்றவாறு மேல் மூடியப்பகுதி காட்சி தருகிறது. பூ மற்றும் அழகிய பின்னல்கள் இருபுறமும் உள்ளவாறும் மோதிரட் கிடைக்கிறது. இந்த க்ரோசெட் மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நாம் உண்ணும் உணவு துகள்கள் உட்புறம் சேர வாய்ப்பு அதிகம்.

    க்ரொசெட் நெக்லஸ்கள்

    கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும் சோக்கர் நெக்லஸ்களாக க்ரோசெட் நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அழகிய கிறுக்கல் ஓவியங்கள் போல் காட்சி தரும் வகை விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளதுடன் அனைவர் பார்வையும் க்ரோசெட் நெக்லஸ் மீது தான் விழும். இதில் மஞ்சள் உலோக பின்னணி மட்டுமல்லாது சில ரேடியம் பூசப்பட்ட மாடல்களும் கிடைக்கின்றன.

    பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். தங்க ஒட்டியாணங்கள் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்றவாறு எடை, நீள அகலம் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.
    பாரம்பரிய நகை வகைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனிப்பட்ட வகையிலும் உடல் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். இடுப்போடு ஒட்டி கொண்டிருக்கும் வகையில் அணியும் ஆடையின் மேல் அணிகின்ற நகைதான் ஒட்டியாணம்.

    முந்தைய நாள்களில் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், திருமணமான பெண்டீர் என அனைத்து வயது பெண்களும் ஒட்டியாணம் அணிந்து வந்துள்ளனர். நாளடைவில் ஒட்டியாணம் என்பது அதிக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. சிலர் குடும்ப நகையாக ஒட்டியாணத்தை பாதுகாத்து தொடர்ந்து அணிந்து வந்தனர். அதன்பின் தங்க ஒட்டியாணங்கள் என்பது மாறுபட்டு வெள்ளியில் செய்து தங்க முலாம், கவரிங் என்றவாறும், பிற மணிகள், முத்துகளால் செய்யப்பட்ட இமிடேட் ஒட்டியாணங்களாக கிடைக்கின்றன. ஒட்டியாணங்கள் தற்போது மீண்டும் விரும்பி அணிகின்ற நகைாயய் இருக்கின்றன. இதனால் நகை விற்பனையாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் அதிநவீன வடிவமைப்பு மற்றும் கூடுதல் கலைதன்மை கொண்டவாறு ஒட்டியான்களை உருவாக்கின்றனர்.

    ஒட்டியாணங்கள் என்பது தற்போது மிக எடை குறைந்த அளவிலும், அதே நேரம் பெரிய பாந்தமான தோற்ற அமைப்பிலும் உருவாக்கப்படுகின்றன. தங்க ஒட்டியாணங்கள் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்றவாறு எடை, நீள அகலம் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.

    அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள்

    அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள் என்பவை ஒவ்வொரு லட்சுமி உருவங்கள் இணைந்தவாறு உள்ளன. அதாவது ஆறு இதழ் பூ அமைப்புடன் கூடிய தட்டு பகுதியின் நடுவில் மகாலட்சுமியும் இதன் வலது புறம், இடது புறமாக மற்ற லட்சுமிகளும் வரிசை கிரமமாக ஒரே அளவில் இணைக்கப்படும். இதன் பிறகு தகடு அமைப்பும் இணைத்து கட்டும் கயிறு பகுதியும் உள்ளன. லட்சுமியின் அழகை மேம்படுத்த சிகப்பு, பச்சை கற்கள் ஆங்காங்கே பதியப்பட்டும், கீழ் சிறு மணிகள் தொங்க விடப்பட்டும் உள்ளன. அப்படியே தத்ரூபமான மகாலட்சுமியும், அதனுடன் இணைந்த அஷ்டலட்சுமியும் சிற்ப வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன.



    மகாலட்சுமியும் அன்னபட்சியும் இணைந்த ஒட்டியாணங்கள்

    ஒட்டியாணத்தின் நடுப்புறம் பெரிய மகாலட்சுமி இரு பக்கமும் யானையுடன் காட்சி தருகிறார். அதன் இருபுறமும் அன்னபட்சிகள் அழகுடன் சிற்பங்களாய் அணிவகுக்கின்றன. டெம்பிள் ஜுவல்லரி அமைப்பில் கலைநய செதுக்கல்கள் மட்டுமின்றி தகடு அமைப்பின் மேற்புறம் மகாலட்சுமி உருவம் மற்றும் அன்னபட்சி இணைக்கப்பட்ட ஒட்டியாணம் கிடைக்கின்றன. இதில் மகாலட்சுமி மற்றும் தன்னபட்சிகள் அனைத்தும் அழகிய கற்கள் பதித்தவாறும் ஒட்டியாணம் உள்ளன. வெள்ளை, பச்சை, சிகப்பு கற்கள் பதியப்பட்ட லட்சுமி உருவம் அதிக ஜொலிப்புடன் காட்சி தருகின்றன.

    விதவிதமான பேன்சி ஒட்டியாணங்கள்

    பழைய ஒட்டியாண அமைப்பில் இருந்து மாறுபட்டு செயின் அமைப்பிலான பேன்சி ஒட்டியாணம் இளம் வயது பெண்களை அதிகம் கவர்கின்றன. இந்த ஒட்டியாணம் இடுப்போடு இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இல்லாது இருப்பினும் வலது புறம் சற்று தளர்வாக தொங்கும் அமைப்பில் உள்ளன. சில நடுப்பகுதியில் கற்கள் பதித்த டிசைன் செய்யப்பட்டு முற்றிலும் செயின் கயிறு அமைப்புடன் உள்ளன. சில பேன்சி ஒட்டியாணங்கள் மெல்லிய பட்டை செயினுடன் நடுப்பகுதி அழகிய எனாமல் பூக்கள் மற்றும் தொங்கும் குஞ்சரங்கள் உள்ளவாறு காட்சி தருகின்றன.

    கற்கள் பதித்த ஒட்டியாணங்கள்

    முற்றிலும் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் மெல்லிய அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இதில், பூக்கள், மயில், அன்னபட்சி அழகுடன் உள்ளவாறும் அதில் பல வண்ண கற்கள் பதித்து மெருகேற்றப்பட்டுள்ளன. சில அகலமான வலை பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே பெரிய இரட்டை மயில் கற்கள் பதித்தவாறும் அதன் சுற்று பகுதிகள் கொடிகள், பூக்கள் உள்ளவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு என தனிப்பட்ட சிறிய அளவிலான தங்க ஒட்டியானங்கள் கிடைக்கின்றன. ஒட்டியாணம் பெண்களின் இடுப்பழகை மேம்படுத்தும் நகையாக உள்ளது. 
    அன்னூர் அருகே வங்கியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடி விட்டான். ரூ.2 கோடி மதிப்புள்ள பணம்-நகைகள் தப்பியது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது.

    இங்கு கெம்பநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் டெபாசிட் செய்து வருகிறார்கள். மேலும் நகைகளை அடகு வைத்து கடனும் பெற்றுள்ளனர்.

    இந்த வங்கி கிளை மேலாளராக அரிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வேலை நேரம் முடிந்து வங்கியை பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் அங்கு வந்தான். அவன் வங்கிக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பினான். வங்கியில் 2 ‌ஷட்டர் உள்ளது. அதில் ஒரு ‌ஷட்டரில் மட்டும் சென்டர் லாக் உள்ளது. மற்றொரு ‌ஷட்டரில் சென்டர் லாக் இல்லை. அதனை மர்ம நபர் உடைத்தான். அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தான்.

    அந்த சமயத்தில் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் தப்பியது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வங்கி மேலாளர் அரிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வங்கிக்கு விரைந்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்தார். சூலூர் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரண நடத்தினார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் இல்லை. ஆனாலும் வங்கியில் இருந்த யூ.பி.எஸ். மூலம் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் இயங்கி வந்தது. கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் கொள்ளை அடிக்க வந்தவன் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வந்தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பற்றி தெரியவந்ததும் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். #bankrobbery #staffarrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    32 கிலோ எடை உள்ள அந்த நகைகள் அனைத்தும் அடகு நகைகளாகும். அவற்றை திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் அடகு வைத்திருந்தனர்.

    வங்கிக் கதவுகள் மற்றும் லாக்கர் உள்ளிட்ட எதையும் உடைக்காமல் கள்ளச் சாவிகளை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை நடந்திருந்தது வங்கி மேலாளர் சேகர், உதவி மேலாளர் பானு இருவரும் நேற்று காலை வங்கிக்கு வந்தபோது தான் இந்த கொள்ளை பற்றி தெரிய வந்தது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் அந்த வங்கிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வங்கி லாக்கரில் நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கியில் மொத்தம் 7 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த 7 கேமிராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் மூலம் ரூ.9 கோடி நகைகளை யாரோ ஒரு வங்கி ஊழியர்தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு வங்கி ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த கைரேகை பதிவுகளை, வங்கி வாசல் கதவு மற்றும் லாக்கர்களில் ஏற்கனவே பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.

    அந்த கைரேகை ஆய்வில் 5 வங்கி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 5 பேரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் விசாரணை தொடங்கியது.


    இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடந்தது. 5 ஊழியர்களில் 3 பேரை போலீசார் விடுவித்தனர். 2 பேரிடம் தீவிர விசாரணை நீடித்தது. அந்த 2 பேரில் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என்பதை நள்ளிரவில் தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.

    அந்த முக்கிய குற்றவாளியின் பெயர் விஸ்வநாதன். இவர் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முதலில் இவர் வங்கியை சுத்தம் செய்யும் பணிக்காகத்தான் வேலையில் சேர்ந்தார்.

    ஓராண்டுக்கு முன்பு அவரை அலுவலக உதவியாளராக மாற்றினார்கள். அதன் பிறகே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை லாக்கரில் எடுத்து வைக்கவும், லாக்கரை பூட்டவும் அவர் உதவியாக இருந்துள்ளார்.

    நகைகளைப் பார்த்ததும் அவருக்கு அவற்றை கொள்ளையடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் புதிய வீடு ஒன்றை சில லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அந்த கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் அவருக்கு பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து லாக்கரில் உள்ள அடகு நகைகளை திருட முடிவு செய்தார். இதுபற்றி வங்கியின் கீழ் தளத்தில் உள்ள தனது கூட்டாளிகளான சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் ஜெய்கணேஷ், காவலாளி கவுதம் இருவரிடமும் தெரிவித்தார். உடனே அவர்களும் இந்த கொள்ளையில் சேர சம்மதித்தனர்.

    இதையடுத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் கொள்ளைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுலபமாக நகைகளை திருடுவதற்கு வசதியாக வங்கி கதவு மற்றும் லாக்கர்களின் சாவிகளை நைசாக எடுத்துச்சென்று கள்ளச் சாவிகளைத் தயாரித்தனர்.

    அதன் பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரொக்கப் பணத்தில் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் ரூ.25 லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் கைரேகை பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன.

    முதலில் பியூன் விஸ்வநாதன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை. நல்லவன் போல நடித்தார். ஆனால் கைரேகை பதிவு ஆதாரத்தைக் காட்டியதும் அமைதியாகி விட்டார். இனியும் தப்ப முடியாது என்ற நிலை வந்த பிறகே அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.

    அதன் பிறகே அவருக்கு ஜெய்கணேசும், கவுதமும் உதவியாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தான் 32 கிலோ அடகு நகைகள் இருந்தன. அந்த 32 கிலோ நகைகளையும் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.

    விஸ்வநாதன், ஜெய் கணேஷ், கவுதம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி இடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் மிகத் திறமையாக செயல்பட்டு 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்ததுமே போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, இந்த கொள்ளை வங்கி ஊழியரின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அந்த கோணத்தை நோக்கியே அவர் 5 தனிப்படைகளை உருவாக்கி விசாரணையை முடுக்கி விட்டார்.

    வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இறுதியில் அது பியூன் விஸ்வநாதன் செய்த கைவரிசை என்பதை கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 32 கிலோ நகைகளையும் மீட்பதற்காக எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்தனர்.

    இன்று அதிகாலை 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட பிறகே, குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு, ரூ.9 கோடி அடகு நகைகளையும் மீட்ட போலீசாரை திருவள்ளூர் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.. #bankrobbery #staffarrested
    ×