search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள்.
    • வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது.

    உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள். நமது இலக்கியங்களும் புராணங்களும் உடை பற்றி நிறையப் பேசுகின்றன.

    பட்டாடை அணிந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ராமனும், சீதையும், லட்சுமணனும் வனவாசம் செல்லும்போது மரவுரியையே ஆடையாகத் தரித்துச் சென்றார்கள். மரத்திலிருந்து உரித்து எடுக்கப்படும் மெல்லிய பட்டையே மரவுரி எனப்பட்டது.

    மரவுரியை எப்படிக் கட்டிக்கொள்வது எனத் தெரியாது சீதை தவித்தாளாம். அப்போது, தான் கட்டிக்கொண்ட மனைவிக்கு மரவுரி கட்டிக்கொள்ளக் கற்றுத் தந்தவன் ராமன்தான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்து மானத்தைக் காத்ததை நாம் அறிவோம். கண்ணனின் இளமைக் காலத்தில் அவன் விரலில் ஒரு காயம் பட்டு ரத்தம் சொட்டியதாம். அதைப் பார்த்துப் பதறினாளாம் பாஞ்சாலி.

    தான் கட்டியிருந்தது விலையுயர்ந்த பட்டுத் துணி என்றும் பாராமல் பட்டென்று அதைக் கிழித்து கண்ணனின் காயத்தின்மேல் அவசர அவசரமாகக் கட்டி மேலும் குருதி பெருகாமல் தடுத்தாளாம்.


    அந்த அன்பில் நெகிழ்ந்த கண்ணன் அதற்குப் பிரதிபலனாகத்தான் கவுரவர் சபையில் அவளது ஆடையை வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தான் என்று ஒரு கதை சொல்கிறது.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் துகில் வளர்ந்ததையும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் -

    கண்ணா

    மணிவண்ணா என்றன்

    மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப்

    போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    முப்பெருந் தேவியரில், கலைமகள் வெள்ளை ஆடை உடுத்திக் காட்சி தருபவள்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்

    பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -

    வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என்று பாடுகிறார் காளமேகப் புலவர். கலை என்பது உடைக்கான பழந்தமிழ்ச் சொல். சரஸ்வதி வெள்ளை ஆடை புனைபவள் என்பதையே `வெள்ளைக் கலை உடுத்து` என்ற சொற்களால் குறிக்கிறார் அவர்.

    சிவபெருமான் புலித்தோலை அணிபவர்.

    `பொன்னார் மேனியனே! புலித்தோலை

    அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை

    அணிந்தவனே!'

    என்று சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். புலித்தோல் அணிந்த தந்தையின் இளைய மகனான முருகன் வெறும் கோவணத்தை மட்டுமே அணிந்த ஆண்டியாகப் பழனியில் காட்சி தருகிறான்.

    புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் நளனுக்கு கார்க்கோடகன் என்ற பாம்பு ஆடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார்.

    நளன் பகைவர்கள் அறியாதவாறு மறைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் கார்க்கோடகப் பாம்பு அவனைக் கடித்து விஷத்தால் அவன் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றுகிறது. முற்றிலும் தன் உரு மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நளனிடம், தான் அவனுக்கு உபகாரமே செய்திருப்பதாக விளக்குகிறது அது.

    இனிப் பகைவர்கள் அவனை அடையாளம் காண இயலாது என்று சொல்லி தன் ஆடை ஒன்றையும் அது நளனுக்குக் கொடுக்கிறது. தோலுரிக்கும் பழக்கமுள்ள பாம்பின் தோலாடையாகத் தான் அது இருக்க வேண்டும்.

    பின்னாளில் நளனுக்கு அவனது பழைய உருவம் தேவைப்படும்போது அந்த ஆடையை அணிந்தால் அவன் மீண்டும் பழையபடி மாறுவான் என அது தெரிவித்து ஊர்ந்துசென்று மறைகிறது.

    கண்பார்வையற்ற கவிஞரான சூர்தாஸ் துவாரகைக் கண்ணன் கோவிலில் ஆஸ்தான பாடகராக நியமிக்கப் பட்டிருந்தார்.

    ஒவ்வொரு நாளும் கிருஷ்ண விக்கிரகத்திற்கு ஆடை மாற்றுவார்கள். அன்றன்று சூர்தாஸ் பாடும் கீர்த்தனைகளில் அந்த ஆடையின் நிறம் எதுவென்று தன் அகக்கண்ணால் தானே கண்டு கீர்த்தனையிலும் ஆடையின் வண்ணத்தைக் குறிப்பிட்டுப் பாடுவாராம்.

    சகோதரி நிவேதிதை தம் குருநாதரான விவேகானந்தர்மேல் அளவற்ற பக்தி செலுத்தியவர். விவேகானந்தர் காலமானபோது துயரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    விவேகானந்தரின் சடலம் எரிகிறபோது தள்ளி அமர்ந்து கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதையின் உள்ளத்தில் ஓர் எண்ணம்.

    `குருநாதரே! இதுவரை நான் வெள்ளை உடைதானே அணிகிறேன். எனக்கு நீங்கள் ஏன் காவி உடை வழங்கவில்லை? நான் துறவின் அடையாளமாக காவி உடை தரிக்கும் அளவு மனப்பக்குவம் பெறவில்லை என்று கருதினீர்களா?` என அவர் எண்ணினார். அடுத்த கணம் விந்தையான ஒரு நிகழ்வு நடந்தது.

    எரிந்து கொண்டிருந்த விவேகானந்தரின் காவி உடையிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி காற்றில் பறந்து நிவேதிதையின் மடியில் வந்து விழுந்தது!

    தன் துறவு மனநிலையை விவேகானந்தர் அங்கீகரித்ததற்கான அடையாளம் அது எனக் கருதிய நிவேதிதை அந்தக் காவித் துண்டைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப் படுத்திக் கொண்டார் என்கிறது நிவேதிதையின் திருச்சரிதம்.

    பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

    அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள ஒரு வெண்பா, எல்லா மனிதர்களுக்கும் உண்பது நாழியளவு தான், உடுப்பது நான்கு முழம்தான், பிறகு அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாழ்வில் சஞ்சலம் கொள்வது ஏன் என்று வினவுகிறது.

    `உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

    எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

    சாந்துணையும் சஞ்சலமே தான்!`

    நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க, எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை ஏன்? மண்கலம்போல் உடையப் போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும் சஞ்சலத்தையே தரும் என்கிறார் அவ்வை.

    மானம் மறைக்க நான்கு முழம் போதுமென்றாலும் மனிதர்கள் பற்பல வகையான உடைகளில் நாட்டம் கொள்கிறார்கள்!

    காந்தி எளிய ஆடைகளை அணிவதென்று, நம் தமிழகத்தைச் சார்ந்த மதுரையில்தான் முடிவெடுத்தார். பின்னர், இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக மட்டுமே காட்சி தந்தார்.

    நம் சுதந்திரப் போராட்ட காலத்தில் உடையும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. கதர் உடையையே அணியுமாறு காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். ஏராளமான மக்கள் கதர் அணிந்தார்கள்.

    இப்போதும் காந்தியச் சிந்தனையின் தாக்கத்தால் கதரே அணிபவர்கள் இருக்கிறார்கள்.

    வள்ளலார் போன்ற மிகச் சில துறவிகள் வெள்ளை ஆடை தரித்தாலும் பொதுவாக இந்தியாவில் துறவுக்கான நிறம் என்று காவியே கருதப்படுகிறது.

    சில வண்ண ஆடைகள் மனத்தில் சில உணர்வுகளைத் தூண்டுகின்றன என்றும் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தின் மூலம் மற்றவர்கள் மனத்தில் நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்புகிறவர்கள் உண்டு.

    அதனால் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இன்னின்ன ஆடை என வகுத்துக் கொண்டு அந்தந்த நாட்களில் அந்தந்த வண்ண ஆடைகளையே அணிபவர்களும் உண்டு.

    கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குக் குளிருமே என அதற்குப் போர்வை போர்த்தினான் என்கிறது சங்கப் பாடல்.

    கிடைத்தற்கரிய நீல நாகத்தின் ஆடை, கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுக்குக் கிடைத்தது. ஆனால் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அதை வழங்கிவிட்டான் அவன். இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையில் காணலாம்.

    ஐதராபாத் அருங்காட்சியகத்தில் ஓர் அபூர்வமான கற்சிலை இருக்கிறது. அது ஒரு பெண்ணின் சிலை. அவள் மெல்லிய சல்லாத் துணியால் தன் முகத்தை மூடியிருப்பதைப் போல் சிற்பி செதுக்கியிருக்கிறான்.

    மெல்லிய துணியின் ஊடாக உள்ளே அவளது விழிகள் நாசி உதடு போன்றவை யெல்லாம் நிழல்போல் தெரிவதாக சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

    கல்லில் உள் உறுப்புக்களைச் செதுக்கிவிட்டுக் கல்லால் ஆன மெல்லிய துணியை மேலே ஒட்டவைப்பதென்பது இயலாது. அப்படியிருக்க இத்தகைய ஜாலத்தை அந்த சிற்பி எப்படித்தான் நிகழ்த்தினான் என்பது இன்றுவரை பார்ப்போரை யெல்லாம் வியக்க வைக்கும் ஒரு சிற்ப அற்புதம்.

    அன்னதானத்தைப் போலவே ஒருவருக்கு வழங்கப்படும் வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது. உணவு உடை உறையுள் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றை அது நிறைவு செய்து விடுகிறது இல்லையா?

    ஆலயத்தில் தெய்வங்களுக்கு வெவ்வேறு ஆடை அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. தெய்வங்கள் மட்டுமல்ல, தெய்வங்களின் அடியவர்களும் ஆடைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்டு தாங்கள் யாருடைய பக்தர்கள் என்பதை அறிவிக்கிறார்கள்.


    ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடையும் முருகனது அடியவர்கள் பச்சை ஆடையும் மேல்மருவத்தூர் பராசக்தி அடியவர்கள் சிவப்பு ஆடையும் அணிகிறார்கள்.

    கேரளத்தில் ஆண்கள் ஆலயத்திற்குள் செல்லும்போது மேலாடை அணியக் கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே அவர்கள் மேலாடையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு தான் கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

    ஆக இந்தியா எங்கும் மக்களின் மனங்களில் ஆன்மிக உணர்வைத் தோற்றுவிப்பதில் அவர்கள் அணியும் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது.
    • மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

    இன்றைய கட்டுரையில் மனிதனின் வயது கூடும் போது ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.

    கருவில் வளரும் காலத்தில் இருந்தே மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் வயது கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. அதனை குழந்தை பருவம், விடலை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என நம் முன்னோர்கள் பிரித்து வைத்தனர்.

    40 வயதில் நாய் குணம் என்றனர். 60 வயதில் ஓய்வு பெறும் காலம் என்றனர். 60-ம் கல்யாணம், 80-ம் கல்யாணம் என்றனர். ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது என்றனர்.


    பிறந்த நாளில் இருந்து வயது கூட கூட நம் வெளித் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படுவதினை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் நம் உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தினை நம்மால் பார்க்க முடிவதில்லை.

    இன்று ஒவ்வொரு நாட்டிலும் மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில ஆய்வுகள் கூறுவது மனித உடலின் மூலக் கூறுகளிலும், நுண்ணுயிர்களிலும் இரண்டு கால கட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஒன்று நாற்பது வயதில். மற்றொன்று 60 வயதில். இந்த கால கட்டங்களில் ஏற்படும் மாறுதல்களால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர்.

    மேலும் புரத அளவின் மாறுபாடு (குறைபாடு) சுமாராக 35 வயது, 60 வயது, 78 வயதுகளில் ஏற்படு வதாக குறிப்பிடுகின்றனர்.

    தலை முடி நரை, சரும சுருக்கம் இவை நமக்கு கண்ணுக்குத் தெரியும் ஒன்று என்றாலும் உடலினுள் உள்ள உறுப்புகள் திசுக்கள், செல்கள் இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தெரிவதில்லை. இந்த மாற்றங்கள்தான் உடல் நல பாதிப்புகளுக்கு காரணம் என்கின்றனர். இருதய பாதிப்பி னையும் குறிப்பிட்டே சொல்கின்றனர்.

    இந்த ஆய்வுக்காக 25 முதல் 75 வயது வரையுள்ள நபர்களை பல வருடங்கள் ஆய்வு செய்தனர். பல ரத்த பரிசோதனைகள் ஒவ்வொரு நபருக்கும் செய்யப்பட்டது.

    வயது கூடுதல் காரணமாக ஏற்படும் மாறுதல்களையும் கண்டறிய முடிந்தது. ஆக முதுமை எப்படி, எதனால் ஏற்படுகின்றது. நோய்களின் பாதிப்பு எப்படி இருக்கும் என பல பிரிவுகளில் கண்டறிய முடிந்தது.

    மூலக்கூறுகளும், நுண்ணுயிர் மாற்றங்க ளும் 81 சதவீதம் வரை 40 வயதிலும், 60-ஐ நெருங்கும் போதும் ஏற்படுவது உறுதி செய்ய முடிந்தது. பொதுவில் 60 வயதில் ஏற்படுவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வின் பொறுப்புகளை, சவால்களை சந்திக்கும் காலம் என்பதால்தான். மேலும் முறையான உணவு, உடற்பயிற்சி இன்மையும் முக்கிய காரணம் ஆகின்றது என்றனர்.

    ஆய்வில் அவர்கள் மேலும் குறிப்பிட்டு உள்ளது 40 வயதிலேயே மாறுதல்கள் ஏற்படுவதற்கான காரணம் மது, டீ, காபி, அதிக கொழுப்பு இவைகளை அதிகமாக எடுத்து கொள்வதினை காரணமாக சுட்டிக் காட்டினர். சதை, சருமம், இருதயம் இவை பாதிப்பினை அடைவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.


    60 வயதில் மூலக் கூறுகளில் ஏற்படும் மாறுதல்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இருதய பாதிப்பு, சிறு நீரக செயல்பாடு, மாவு சத்து உணவு அதிகம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.

    ஆரோக்கியமான முதுமை என்ற கருத்தினைக் கொண்டுதான் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் தொடர்கின்றன. சர்க்கரை நோய், மறதி நோய் இவைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் பாதிப்புகளை மிக அதிக அளவில் குறைத்து விடலாம் என்கின்றனர்.

    'நம் உடலில் மூலக் கூறுக ளும், நுண்ணுயிர்களும் ஏராள மான வேகமான மாறுதல்களை மேற்கொள்கின்றன. காரணம்- வளர்ச்சி, வாழும் முறை, சூழ் நிலை, மரபு, நோய் ஆகியவை ஆகும். இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உணவு முறை குடல் நுண்ணுயிர்களுக்கு பாதுகாப்பானதாக அல்லது பாதிப்பானதாக அமையலாம்.

    பாதிப்பானதாக அமையும் போது ஹார்மோன் சுரப்பதில் குறைபாடுகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். இதனால தான் உடலை நோ யின்றி பாதுகாப்பது மிக முக்கியமாகின்றது.

    ஆயுளும், ஆரோக்கியமும் கூடிய வாழ்க்கையினை நாம் மேற்கொள்வது அவசியம் ஆகின்றது. ஆதி காலம் முதலே.

    இளமையின் அடிப்படை என்பது (இங்கு இளமை என குறிப்பிடப்படுவது ஆயுளும், ஆரோக்கியமும்தான்) மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. சமீப கால ஆய்வுகள் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் எனும் வாழும் முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூல மாக அதிக நன்மைகளைப் பெற முடியும் என்கின்றன.

    இருதய ஆய்வு விஞ்ஞானிகள் 8 வகை யான மாற்றங்கள் உடலில் நல்ல மாற்றங் களை கொண்டு வரும் என்கின்றனர்.

    * சீரான எடை, புகையிலை தவிர்த்தல் (பீடி, சிகரெட் உள்பட), 7 முதல் 9 மணி நேர தூக்கம், சுகாதாரம், கொழுப்பு, உயர் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இன்றி இருத்தல்.

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருத்தல் ஆகியவையே அதிக நன்மைகளை தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

    2023-ல் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் நாம் பொதுவில் கூறும் பயிற்சிகளான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சற்று வேகமாக பயிற்சிகள் எடுத்தல், (உதாரணம்) ஓடுதல் போன்றவை தசைகளை வலுவாக, உறுதியாக வைக்கின்றன. எடை தூக்குதல் என்பது சிறிய அளவு எடைதான்.

    பயில்வான் போல் அல்ல? இவைகள், இப்பயிற்சிகள், இள வயதின் இறப்பு விகிதத்தினை வெகுவாய் குறைக்கின்றன என 10 வருட கால ஆய்வின் முடிவாக கூறுகின்றனர்.

    சுமார் 150 முதல் 225 நிமிடங்கள் ஒரு வாரத்திற்கு நடைபயிற்சி, சைக்கிள் போன்ற பயிற்சிகள், வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமான உடற் பயிற்சிகள், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் போன்றவை இருதய நோய் பாதிப்பு போன்றவற்றினை வெகுவாக குறைக்கின்றன. இவை அனைத்தும் விழிப்புணர் விற்காக கூறப்பட்டுள்ளவை. தானே மனம் போல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

    தகுந்த பயிற்சியாளரின் ஆலோசனை இன்றி எந்த பயிற்சியினையும் மேற்கொள்வது தவறு.

    வயது கூடும்பொழுது உடல் நலியத்தானே செய்யும். இது பலரது வாதம். ஆனால் இங்கு கூறப்படும் செய்திகள் ஆரோக்யமாய் வாழவும், தானே ஒழுக்கமின்றி வரவழைத்துக் கொள்ளும் நோய்களை தவிர்க்கவும் மற்றும் முறையாய் சில பயிற்சிகள் மூலம் உடலை பாதுகாக்கவும் இத்தகைய பாதுகாப்பு முறைகள் ஒருவரின் ஆயுளை 7.5 சதவீதம் அதிகரிக்க செய்யுமாம்.

    வயது கூடிய பொழுது சர்கார்டியன் ரிதம் அன்றாட செயல் சுழற்சிக்கான வட்டம் சற்று மாறுபடும். நாம் விழித்திருக்கும் பொழுது தூக்கம் வருகிறது என்று தூங்க சென்று விடுவோம். தூக்கத்தில் இனி விழித்துக் கொள்ளலாம் என்று தோன்றும் இந்த ரிதம் முறையில் இடையூறுகள் ஏற்படும் பொழுது அன்றாட சுழற்சி வட்டமும் மாறுபடும்.

    இது தூக்கத்தினையும் பாதிக்கும். இது தவிர முதியோருக்கு பொதுவில் காணப்படும் மூட்டு தேய்மானம், மூட்டுவலி போன்றவை உடல் நல பாதிப்பினை ஒருவருக்கு ஏற்படுத்து வதால் தூங்குவதற்கும், விழித்திருப்பதற்கும் அதிகமாக இயலாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு இவையும் தூக்க முறையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    வயதானவர்கள் உடல் நல பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் ஒரு சில மருந்துகளும் தூக்கத்தினை பாதிக்கலாம். பொதுவில் இரவில் 7 முதல் 9 மணி நேர உறக்கம் முதிய வர்களுக்கு அவசியமே.

    வயது கூடும் பொழுது எலும்பு பலவீனம் அடைகின்றது. இது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கின்றது.

    மூன்றில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு ஆணும் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவுகளை சந்திக்கின்றனர். இன்று கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், வைட்டமின் டி சத்து மாத்திரை என மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.


    சற்று ஞாபகம் மறந்து விட்டது என்பது வேறு. மறதி நோய் என்பது வேறு. மறதி என்பது (Dementia) நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவு. Alzheimer நோய் என்பது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படுவது. இது காலம் கூடும்பொழுது அதிக பாதிப்பினைக் கூட உருவாக்கும்.

    இன்று மருத்துவத்தில் முன்னேற்றமான மருந்துகள், இதற்காக வந்துள்ளன. சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுகளை மருத்துவர், சத்துணவு நிபுணர் மூலம் அறிவுரை பெற்று கடைபிடிப்பதே இதற்கு சிறந்த தீர்வு.

    60 முதல் 65 வயதில் இருதய நோய் பாதிப்பு என்ற காலம் மாறி 4 முதல் 10 சதவீத மக்களுக்கு 45 வயதிற்குள்ளாகவே மாரடைப்பு நோய், இருதய பாதிப்பு என ஏற்படு கின்றன.

    இவற்றையெல்லாம் தடுக்கவே இன்று மிக அதிகமாக உணவு முறைகள், உடற்பயிற்சி முறைகள் பற்றி பேசப்படுகின்றது. எழுதப்படுகின்றது. அறிந்து பலன் பெற வேண்டியது அனைவரின் கடமையாகும்.

    • விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.
    • விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் வழிபடுவது உத்தமம்.

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

    புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!

    நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை விரதமாகும்.

    விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். விரதங்களை கடைபிடிப்பதால் ஆன்மிக ரீதியான பயன்களுடன் அறிவியல் ரீதியாக உடலும், உள்ளமும் நலம் பெறும்.

    பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விரத நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம்.

    திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி உள்ளதால் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களை வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

    திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதிதேவதைகளை வழிபட்டால் எத்தகைய கடுமையான பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம்.

    திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி, பீடை, கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும்.

    பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை.

    அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதி தேவதை விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

    இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களில் முதன்மை யானது விநாயகர் வழிபாடு.கணபதியை வழிபட்டுத் துவங்கும் அனைத்தும் சித்தியாகுவதுடன் நற்காரி யமாக மாறும் என்பது நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விரதம் குரோதி வருடம் ஆவணி மாதம் 22-ம் நாள் சனிக்கிழமை 7.9.2024 அன்று சித்திரை நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் விரதம் இருந்து விநாயகரை வழிபட ஜனன கால ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அகலும்.


    விநாயகரின் சிறப்புகள்

    இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபாடு செய்யப்படுபவர் விநாயகர். விநாயகர் எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்.

    ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர்.

    ஓங்கார நாயகனாக திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம்.அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும் ,வலது மேல் கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிர பகவானும், இடது மேல் கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு.

    விநாயகர் சதுர்த்தி விரதத்தால் விலகும் தோஷங்கள்


    சனி தோஷம்

    கர்ம வினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் வழங்குபவர் சனி பகவான். அதாவது பூர்வ ஜென்ம கணக்குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனி பகவான். அதனால் தான் நியாயத்தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில் உச்சம் அடைகிறார்.

    சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் இவற்றை ஒரு மனிதன் பெற முடியும். சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.

    வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்கு காரக கிரகம். சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தவர்கள் சனிக்கிழமை பிறந்தவர்கள் 8,17, 26ம் தேதி பிறந்தவர்கள்.

    சனிக்கிழமை பிறந்தவர்கள், சனிதசா, சனி புத்தி நடப்பில் இருப்பவர்கள், தீராத நோய் கடன், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் போன்றவைகள் விலகும்.


    நாகதோஷ நிவர்த்தி

    சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் 4,13,22,31ம் தேதியில் பிறந்தவர்கள், ராகு, கேது தசை நடப்பவர்கள், ஜனன கால ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி , ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன்,பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    திருமணத்தடை நீங்கும்,தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு . வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும்.


    மாங்கல்ய தோஷம்

    ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிட கேது , செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்,

    செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும். சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும். விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, சூரைத்தேங்காய் உடைத்து வழிபட அனைத்து தடை தாமதங்களும் விலகி சுப பலன் தேடி வரும்.


    கேது தோஷம்

    ஜாதகத்தில் கேது திசை மற்றும் கேது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகார மாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்க ளுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.

    ஜனன ஜாதகத்தில் கேது சந்திரன் சாரம், சந்திரன் கேது சாரம், சந்திரன் வீட்டில் கேது,சந்திரன் கேது சேர்க்கை, சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கேது, திரிகோணம் மற்றும் கோட்சார கேது, சந்திரன் தொடர்பால் பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கும் மீள முடியாத கோர்ட்,கேஸ் பிரச்சினை உள்ளவர்களும் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யும் விநாயகர் வழிபாடு அதிக நன்மை தரும்.


    செவ்வாய் தோஷம்

    செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஆனால் தனித்த செவ்வாய் திருமணத்திற்கு திருமண வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தாது.

    செவ்வாய், சனி ராகு/ கேது சம்பந்தம் திரு மணத்திற்கு முன், பின் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அல்லது கடன், நோய் பகை போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமையும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையிலும் வருவதால் அன்று விரதம் இருந்து ருண விமோசன கணபதி மந்திரம் சொல்லி வணங்க, தீராத கடன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நோய், பகை தீரும்.

    "ஓம் கணேசாய ருணம்

    சிந்தி வரேண்யம்

    ஹூம் நம்; பட்ஸ்வாஹா"

    கிழக்கு முகமாக அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி 108 தடவை இந்த மந்திரத்தை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.

    விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்து 90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.

    90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.அஷ்டம சனி, ஏழரை சனி, சனி தசையால் பாதிப்படைபவர்கள் விநாயகரின் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் தேடி வரும்.

    விருட்சமும் விநாயகரும்

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரக தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூனியங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.

    விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்

    அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும்.

    பூஜையறையை சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்க வேண்டும்.

    விநாயகருக்கு கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு ,வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.

    நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி பூக்களால் அலங்காரம் செய்து 21 வகை இலைகள் மற்றும் அறுகம்புல்லி னால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம்.

    விநாயகர் அகவல், காரிய சித்திமாலை,விநாயகர் கவசம் படிப்பது விசேஷமான சுப பலன்களைத்தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இயன்ற உணவுகளை தான தர்மங்களை செய்ய பலன் இரட்டிப்பாகும்.

    சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரித்து பவுர்ணமிக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்தால் நினைத்தது நிறைவேறும்.

    • மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது.
    • அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    இன்றைய கால கட்டத்தில் மருத்துவ ரீதியாக அதிகரித்து வருகிற பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வயதான பிறகு ஏற்படுகிற பலவிதமான தேய்மானங்கள் மற்றும் வயதான பிறகு ஏற்படும் பாதிப்புகள் ஆகிய அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களில் ஏதாவது ஒன்று பழுதானாலோ அல்லது வயது மாற்றங்களினால் தேய்மானம் அடைந்தாலோ அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் திசுக்கள் சேதம் அடைந்தாலோ அதனை சீர் செய்வதற்கான அடிப்படையே ஸ்டெம் செல் தான்.

    ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்:

    அதன் ஆரம்பம் பிளேட்லெட் ஆக இருந்தாலும், முடிவானது ஸ்டெம் செல் தான். ஸ்டெம் செல் நன்றாக இருக்கிற திசுக்களில் பழுது பார்க்கும் வேலை, மீளுருவாக்கம் மற்றும் புதிய திசுக்களை உருவாக்குதல் ஆகிய அனைத்துமே ஸ்டெம் செல்களால் மட்டும்தான் ஏற்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே ஸ்டெம் செல் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகிறது.

    ஆரம்பத்தில் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சியானது, அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை தொடர்ந்து மனிதர்களிடையே நடத்தப்பட்டது. அதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ ரீதியான விஷயங்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

    ஆரம்ப கால கட்டத்தில் ஸ்டெம் செல் தெரபி என்பது குறிப்பாக ரத்த புற்றுநோய் பாதித்தவர்களுக்கான தீர்வாக அமைந்தது.

    இது தொடர்பாக கடந்த காலங்களில் பல ஆய்வுகளும் நடந்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் எல்லாவிதமான வயதான மாற்றங்களுக்கும் இந்த ஸ்டெம்செல் தெரபி என்பது மிக முக்கியமானதாக கருதப்படு கிறது.

    இதில் மீசன்கைமல் என்கிற ஸ்டெம் செல் தான் மனிதனின் உடல் உறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி செயல்படுகிறது. அதாவது மீசன்கைமல் ஸ்டெம் செல்லை எடுத்து ஒரு பெண்ணின் தோலில் செலுத்தினால் தோல் பகுதி புத்துணர்வு பெறும். தோல் பகுதியில் ஏற்பட்டுள்ள வயதான மாற்றங்கள் மாறும். வயதான தோற்றத்துடன் கூடிய அந்த தோலை இளமையாக மாற்றும் தன்மை கொண்டது.


    வயதான மாற்றங்களை சரி செய்வதற்கான வழிமுறை:

    பொதுவாக ஒருவருக்கு வயது கூடும் போது வயதான மாற்றங்கள் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும். அதாவது மனிதர்களுக்கு வயதாகும் போது தோல், முடி, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் வயதாகும்.

    அந்த செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செயலிழக்க ஆரம்பித்து, அதனுடைய ஆற்றல் குறைவாகும் போது, அந்த செல்லின் ஆற்றலும் குறைவாகி, செல்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

    இதுபோன்று அனைத்து செல்களும் ஒரு கட்டத்தில் இறக்கும்போது தான், ஒரு மனிதனின் இறப்பு என்பது முடிவாகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வயதாகும் போது அவர்களின் உறுப்புகளில் இருக்கும் திசுவில் உள்ள செல்களுக்கும் வயதான மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த வகையில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது நமது உடலில் ஏற்படும் வயதான மாற்றங்களை சரிசெய்து, உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதற்கான ஒரு அருமையான வழிமுறையாகும்.

    ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி பலருக்கும் பலவிதமான பயம் இருந்தது. ஸ்டெம் செல் சிகிச்சையால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ, பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதோ, நீண்ட நாள் பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது.

    ஆனால் இதை பற்றி தெளிவாக சிந்தித்தால் அச்ச உணர்வு ஏற்படாது. மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் ஏற்றுகிறோம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.

    அதே போலத்தான் நமது உடலில் உள்ள செல்லை எடுத்து நமது உடலிலேயே செலுத்தும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. இதனை அடிப்படையாக கொண்டே ஸ்டெம் செல் பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து வருகிறது.

    பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் உடலில் பலவி தமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடலியல் மாற்றங்களை சீர் செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு நல்ல வழிமுறையாகும். ஸ்டெம் செல் தெரபி என்பது பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

    சினைமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஸ்டெம் செல்:

    பெண்களின் மிக முக்கியமான ஒரு விஷயமே குழந்தைபேறு தான். ஒரு பெண் குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று சினை முட்டைகள், மற்றொன்று பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவை ஆகும்.

    சினை முட்டைகள் சீரான அளவில், நல்ல எண்ணிக்கையில், நல்ல தரத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த சினை முட்டைகளால் ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும். இந்த குழந்தை பேறு என்பது இயற்கையான முறையிலோ அல்லது செயற்கையான முறையிலோ அமையலாம்.

    ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் சினை முட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மீசன்கைமல் ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலமாக சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் சினை முட்டைகளின் தரமும் மேம்படுத்தப்படுகிறது.

    சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது. சினை முட்டைகள் குறைவாக உள்ள பல பெண்கள், ஸ்டெம் செல் சிகிச்சை மூலமாக சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் இயற்கையாகவே கருத்தரித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.

    என்னிடம் ஒரு பெண், குழந்தை பேறு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவர் ஏற்கனவே மூன்று முறை ஐவிஎப் சிகிச்சை பெற்று அது தோல்வியில் முடிந்ததாக என்னிடம் தெரிவித்தார். என்னிடமும் ஐவிஎப் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.

    அந்த பெண்ணுக்கு முதலில் ஸ்டெம் செல் சிகிச்சை அளித்தோம். வழக்கமாக ஸ்டெம் செல் தெரபி கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து, மூன்றாவது மாதத்தில் தான் கருத்தரிப் பதற்கான சிகிச்சையை ஆரம்பிப்போம். ஆனால் இரண்டாவது மாதத்தில் காத்திருப்பு காலத்தின் போது அவருக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தோம்.

    ஆனால் அவர் இயற்கையாகவே கருத்த ரித்திருந்தார். இப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினை முட்டைகளின் எண்ணிக்கை, வளர்ச்சி, தரம் ஆகிய அனைத்தையுமே ஸ்டெம் செல்லானது மேம்படுத்தியுள்ளது. கருமுட்டைகள் அதிகரிப்பதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாகும்.


    கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியில் ஸ்டெம் செல் சிகிச்சையின் பங்கு:

    குழந்தை பேறுக்கு இரண்டாவது விஷயம் கர்ப்பப்பை ஆகும். கர்ப்பப்பையின் உள் சுவரில் உள்ள செல்கள் வரிசை தான் கரு ஒட்டி வளருவதற்கு தேவையான ஒன்றாகும். இந்த செல்கள் வரிசை சீராக இல்லாத நிலையில் கருத்தரிக்க முடியாமல் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை உள்சுவரானது சிதைந்து விடும். அல்லது சில நேரங்களில் அழிந்து விடும். இப்படிப்பட்ட பெண்களுக்கு இதை சரி செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

    இவர்கள் அனை வருக்கும் குழந்தை பேறு பெறு வதற்கு இப்போதைய காலகட்டத்தில் உள்ள ஒரே முறை ஸ்டெம் செல் சிகிச்சை தான். கர்ப்பப்பையில் உள்ள பழுதான சுவர் பகுதியை சீராக்குவதற்கு மீசன்கைமல் ஸ்டெம் செல்லை கர்ப்பப்பை உள் சுவர்களில் செலுத்துகிறோம்.

    இதனை செலுத்தும் போது கர்ப்பப்பை உள்சுவரில் உள்ள பழுதான திசுக்கள் அனைத்தும் சீராகி கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சி சரியாகும்.

    இதன் மூலம் ஸ்டெம் செல் சிகிச்சையானது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கான இரண்டு முக்கியமான பணிகளை இந்த ஸ்டெம் செல் தெரபி செய்கிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் ஆண்களுக்கும் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் குழந்தை பேறு என்பது ஆண்களுக்கு முக்கியம்தான். அந்த வகையில் ஆண்களின் விந்து பையில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தும் போது, விந்து உற்பத்தியே இல்லாத ஆண்களுக்கும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் விந்தணுக்கள் உருவாகிறது.

    ஒரு விந்தணு இருந்தாலே போதும், முட்டையுடன் செலுத்தி கருத்தரிப்பு செய்ய முடியும். இந்த வகையில் விந்தணுக்களே இல்லாத ஆண்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் விந்தணுக்களை உருவாக்கி, முட்டையில் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். 

    • இரவு 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
    • அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.

    ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

    ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார்.

    எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து கேலி செய்தான்.

    இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது.

    பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.

    மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

    சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

    மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

    சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மவுலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியையே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

    மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்து–வதற்கே பெரியவர்கள் இதைக்காண வேண்டும் என்று கூறினார்கள்.மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

    சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

    சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

    மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும். சந்திரனுக்கும் ஆயு–ளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது.

    எனவே ஜாதகத்தில் சந்திரன் 6/8/12 வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி/ராகு/கேது போன்ற அசுப கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

    சந்திர தரிசனம் செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதேபோல் சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.

    அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.

    மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

    மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர். மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

    ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

    பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும். கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் இன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

    ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான் என்பவர் மனதிற்கு காரணமானவர் என சொல்லப்படுகிறது. ஒருவர் தெளிவான மனநிலையில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு சந்திரனின் அருள் அவசியம் தேவை.

    சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மவுலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மவுலீஸ்வரா போற்றி" என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

    சந்திரனை வணங்கும் முறை :

    ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாக பாவித்து வணங்க வேண்டும். பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும்.

    தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு மற்றும் தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும். மேலும் சந்திரனிடமும், வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது ஆகும்.

    இவ்வாறு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தை யாவது செய்வது நலம். ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.

    ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி எனச் சொல்லப்படுகிறது.

    • ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை.
    • நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    மன அமைதி, தெளிவு, நிம்மதி இவற்றிற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை அல்லது சில முயற்சிகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை 50 வயதில் கடைபிடிப்பது ரொம்ப லேட். எனவே 20 வயதிற்குள் அதை கடைபிடிக்க இளைய தலைமுறைக்கு சொல்லித் தரலாமே.

    * பல நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது நல்லது. நன்கு பேசும் கிளியினைத்தான் கூண்டில் அடைக்கின்றார்கள். மறவாதீர்கள்.

    * ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை. அமைதி போதும்.

    * அநேக மக்களுக்கு வாழ்வின் நோக்கம், வாழ்வின் பாதையினை நிர்ணயிக்க முடிவதில்லை. தெரிவதில்லை.

    * நீங்கள் வந்த குடும்பம் பெரிய முக்கியம் அல்ல. நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    * குடும்பம்தான் உங்களை ஊக்கப்படுத்தும், உறுதுணையாய் நிற்கும்.

    * உங்கள் வெற்றியில் மகிழும் ஒரு நண்பர் இருந்தாலும் போதும். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

    மேலும் இந்த வழக்கங்களும் நடைமுறையும் உதவும்

    * பிறரைப் பற்றி குறை கூறாது இருப்பதும், புறளி பேசாது இருப்பதும் மிகுந்த மன அமைதி தரும்.

    * நீங்கள் பேசுவதை நீங்களே பதிவு செய்து பின்னர் நீங்களே அதனை கேட்டுப் பாருங்கள். உங்களை அழகாய் செதுக்கிக் கொள்ள இந்த பழக்கம் உதவும்.

    * எங்கெங்கு தவறுகள் ஏற்படுகின்றன என்பதனை உணர உங்களுக்கு முழு உண்மையான உள்வட்ட நபர்கள் தேவை.

    * யாரையும் பிறர் எதிரில் அவர்களது தவறுகளைக் கூறாமல் தனியே கூறிப்பாருங்கள்.

    * மற்றவர்கள் பெயர்களை ஞாபகத்தில் வைத்து பேசுவது ஒரு தனி கலை.

    * ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியாது என்றால் 'தெரியாது' என்று சொல்லி விடுவது நிம்மதி தரும். நமக்கு சாதாரண ஆசைகள் இப்படியும் இருக்கலாமே?

    * ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் இவை அனைத்தையும் சிறு வயதிலேயே படித்து அறியலாமே?

    * தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாழ்நாளில் படித்து அறிந்து கொள்வோமே.

    * சூரிய அஸ்தமனம் செவ்வாயில் நீலமாகத் தெரியுமாம். அழகாய் இருக்கும். சென்று பார்த்து வரலாமா.

    * பிரபஞ்சம் நிசப்தமாக இருக்குமாம். நாமும் நிசப்தமாக இருந்து பிரபஞ்ச சக்தியாக மாற முயற்சிப்போமா.

    * அகத்திய மகரிஷியினைப் பார்த்து இன்றும் ஏதோதோ வைரஸ் வகைகளை சொல்கின் றார்களே. அதற்கெல்லாம் அவருக்குத் தெரியாத மருந்தா? கேட்டு வர முடியுமா?

    * இங்கிருந்து விடாது நடந்தால் 9 அல்லது 12 வருடத்தில் நிலவுக்கு சென்று விடலாம் என்கின்றனர். என்ன பிரமாதம். போக 9 வருடம், திரும்பி வர 9 வருடம். மொத்தம் 18 வருடம் தானே கண் சிமிட்டும் நேரத்தில் சென்று வந்து விடலாமே. செய்யலாமா?

    * கருந்துளை, கருந்துளை என்கின்றார்களே. விண்வெளியில் நிலவும் கருந்துளை ஆற்றல் மிக்க ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி உட்பட எதுவும் அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். எண்ணற்ற கருந்துளை உள்ளனவாம். மெதுவாக உள்ளே விழுந்து விடாமல் உள்ளே எட்டி பார்த்து விட்டு வருவோமா.

    * என்னிடம் ஒரு பெண்மணி கூறியது. எனக்கும் ஒரே ஒரு சின்ன ஆசைதான். கடவுளைப் பார்த்து கேட்கணும். 'கடவுளே. எனக்கு ஒரு சின்ன ஆசை. உன்னிடம் எல்லா சக்தியும் இருந்தும் ஏன் இவ்வளவு அசடா இருக்கே. உன் சக்தியை என் கிட்ட கொஞ்ச நேரம் மட்டும் கொடு. கெட்டவனை எல்லாம் தீர்த்து கட்டி விட்டு உன்னிடமே உன் சக்தியினை திரும்ப கொடுத்து விடுகின்றேன்" என்றார். இதுவும் மிகச் சிறிய ஆசை தானே.

    * சித்தர்களாலும், யோகிகளாலும் தூசியினைக் கூட ஒரு பொருளாக, சக்தியுள்ளதாக மாற்ற முடிகின்றதே. நமக்கு அந்த அளவு வேண்டாம். செய்யும் வேலை, படிக்கும் படிப்பு இவற்றில் முழு கவனம் செலுத்தி சாதிக்க விழிப்புணர்வும், கவனமும் வேண்டுமே.

    * உங்களுக்கென என்ன வேண்டும்? ஒரு நல்ல தோட்டமும், நூலகமும் இருந்து விட்டால் போதும். அநேக நன்மைகள் கிடைத்ததற்கு இவை சமம்.

    ஜென் புத்திசம்

    இது புத்தர் வழி பின்பற்றுபவர்களின் ஒரு பிரிவு எனலாம். ஜென் என்றால் ஜப்பானிய மொழியில் தியானம் என்று பொருள். தியானத்தின் மூலம் உள்ளுணர்வு மற்றும் ஞானத்தினை அடையும் மார்க்கமாக இதனைக் கூறுவர்.

    இவ்வழி பின்பற்றும் சில துறவிகள், ஞானிகளின் கருத்தினை கேட்கும், படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

    மார்க்கம் எதுவானாலும் மனிதனின் நோக்கம் ஒன்றுதான். தீயவை அகல வேண்டும். நல்லவை வந்து சேர வேண்டும். நல்லது என்று ஒன்று இருக்கும். அந்த தீயதனை நாம் நீக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

    அப்போதுதான் நன்மை தடங்கல் இன்றி வந்து சேரும் என்ற விதமாக இவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவர்களின் பல கருத்துக்கள், பழக்க வழக்க முறைகள் நம் பழக்க வழக்கங்களை ஒத்து உள்ளன.


    உதாரணமாக

    உப்பு: இங்கு உப்பு என்று குறிப்பிடப்படுவது கல் உப்பை பற்றித்தான். நம்ம ஊரில் சாதாரண சமையல் முதல் பதப்படுத்தும் ஊறுகாய் வரை உப்பு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. சிறிய அளவில்தான் என்றாலும் இது இல்லாமல் சமையல் இல்லை.

    அதிக உப்பு கூடாது எனும் மருத்துவ உலகம் உடலில் உப்பின் அளவு குறைந்தால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகின்றது. நரம்பு மண்டலம், தசைகளின் இயக்கம், உடலின் திரவ சமநிலை இவற்றிற்கு உப்பு அவசியமான ஒன்றே.

    உப்பின் அளவு உடலில் குறையும் போது வாந்தி, மயக்கம், சக்தியின்மை என கொண்டு சென்று விடும். இது ஆரோக்கிய, மருத்துவ முறை.

    வீட்டில் ஏதேனும் புனித நீராடல் என்றால் கடலில் சென்று குளித்து வருவார்கள். அனைத்து தீய சக்திகளை நீக்கும் ஆற்றல் உப்பிற்கு உண்டு. வீட்டில் கண் திருஷ்டி எனச் சொல்ல உப்பு சுற்றி போடுவார்கள். இதனை நம்புபவரும், நம்பாதவரும் உண்டு. இது அவரவர் விருப்பம்.

    மேலே குறிப்பிட்ட ஜென் முறையில் உப்பிற்கு நமக்கு ஆக்கப் பூர்வமான சக்தியிைன ஊட்டி வாழ்வினை வளமாக்கும் சக்தி உண்டு என்கின்றனர். இதனை எந்த மதசார்பும் இன்றி அனைவருமே வலியுறுத்தி உள்ளனர்.

    கடற்கரையை ஒட்டி நடக்கும் போது ஒரு புத்துணர்ச்சி வருவதன் காரணம். உடலின் தீய சக்திகள் உப்பு காற்றின் மூலம் நீக்கப்படுகின்றன என்கின்றனர்.


    உப்பு மனதினை மகிழ்வாக்கும் செரடோனின் சுரக்க உதவு கின்றது. இவர்கள் உப்பினை (ராக்சால்ட், ஸ்ரீமாலயன் சால்ட்) இவைகளை அதிகம் உணவிற்காக சிறிய அளவில் பயன்படுத்துகின்றனர்.

    கல் உப்பினை ஒரு கிளாசில் 2 அல்லது 3 பங்கு நிரப்பி கால்பங்கு நீர் சேர்த்து நீங்கள் இருக்கும் அறையில் உங்களுக்கு அருகில் தரையில் வைத்து விடுங்கள். 24, 48 மணி நேரம் அந்த கிளாஸ் அங்கேயே இருக்கட்டும். உங்களை சுற்றியுள்ள தீய சக்திகள் நீங்கும் என்கின்றனர்.

    • வருகிற 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி.
    • பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் கும்பகோணம் செல்பவர்கள் அருமையான சில விநாயகர் தலங்களை தரிசனம் செய்து வரலாம்.

    நமது நற்காரியங்கள் நல்லபடியாக நிறைவேற விநாயகரை வழிபடச் சொல்கின்றன புராணங்கள். காரியங்கள் சித்தி பெற அருளும் தெய்வம் அவர். உள்ளத்தில் நல்லதையே நினைக்கச் செய்து அந்த நற்செயல்களை ஒரு குறையும் இன்றி திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலை நல்குவதால் பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    அந்த வகையில் கும்பகோணத்துக்கு வட மேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார்.

    கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்த தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடல் பொங்கி எழுந்து உலகை அழிக்கும் காலமே 'ஊழி' எனப்படும். இதை, 'யுகப்பிரளய' காலம் என்றும் அழைப்பார்கள். அப்போது தோன்றும் பெரும் ஊழிக் காற்றாலும், தீயாலும் உலகம் அழிக்கப்படும்.

    பின்னர், உலகத் தோற்றத்துக்கான தாண்டவத்தை மேற்கொள்வார் இறைவன். இவ்வாறு ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் துவங்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவபெருமான் ஆடுவது பிரளய தாண்டவம் எனப்படும்.


    சிவபெருமானைப் போலவே விநாயகரும் பிரளயத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காத்தருள்கிறார். இவரை பிரளயம் காத்த விநாயகர் என்பார்கள். இதே பெயருடன் இவர் அருளும் இடம்தான் திருப்புறம்பியம்.

    புறம் வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம். அந்த பெயர் புறம்பியம் என்று மருவி விட்டது. அதாவது பிரளயத்துக்கு புறம்பாய் இருந்ததால் இப்பெயர் வந்தது.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புறம்பியப் போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினான். இந்த தலத்தில் அவன் திருப்பணி செய்த கோவிலுக்கு ஆதித்தேச்வரம் என்று பெயர்.

    செட்டிப் பெண் ஒருத்திக்காக இந்த தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடப்பள்ளி அனைத்தும் மதுரையில் சாட்சி சொன்னதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சி நாதர் எனும் சாட்சீஸ்வரர். அம்பிகை பெயர் கரும்படு சொல்லி.

    ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்த பிரளயத்தை அடக்கிக் காத்தாராம்.

    அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டார். பிரளயத்தில் இருந்து ஊரை காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.

    கோவிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயம் காத்த விநாயகர் கோவில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.

    அடுத்த வாரம் (செப்டம்பர் 7-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சி விடுவார். இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.


    மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுவதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் நடக்கிறது.

    அரசமர விநாயகர் என்ற பெயரில் ஆனைமுகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

    ஆரம்பத்தில் வெட்டவெளியில் பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்த ஆல, அரசமரங்களுக்கு அடியில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த விநாயகருக்கு காலப்போக்கில் கிழக்கு நோக்கி ஆலயம் உருவானது.

    உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் சுவாமிநாத சுவாமியும், வலதுபுறம் ஐயப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.

    அழகான பிரகாரத்தில் நாகர்கள் மற்றும் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, திருக்குளத்தைப் பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட காட்சி அபூர்வம் என்கின்றனர் பக்தர்கள்.

    பிரகாரத்தில் மேல்புறம் சனீஸ்வரரும், வடபுறம் துர்க்கை அம்மனும் அருள்கின்றனர். தலவிருட்சமான ஆல, அரச மரத்தை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.

    நவகன்னியருக்கும் இந்த ஆலயத்திற்கும் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உண்டு.

    ஒருசமயம், நவகன்னியருக்கு ஓர் ஆசை வந்தது. தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் யாவும் தங்களை விட்டு விலகி, தாங்கள் தூய தேவதைகளாக விளங்க வேண்டும் என்பதுதான் அது.

    சிவபெருமானிடம் சென்று "பிரபோ, நாங்கள் செய்த பாவங்கள் யாவும் விலக வேண்டும். இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.

    'கும்பகோணம் செல்லுங்கள். அங்குள்ள குளத்தில் நீராடி, குளத்தின் வடகரையில் இருக்கும் அரசரடி விநாயகரை வழிபடுங்கள். உங்கள் பாவம் யாவும் விலகும் என்றார் பரமன்.

    அதன்படியே நவ கன்னியர் பூலோகம் வந்தனர். மகாமக குளத்தில் நீராடினர். அருகே வடக்கு திசையில் அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டனர். பாவ விமோசனம் பெற்றனர். இது செவிவழிக்கதை.

    விநாயகர் சதுர்த்தியின்போது இங்கே 10 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று வீதியுலாவும் உண்டு.

    நவராத்திரி நாட்களில் இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். விஜயதசமி அன்று துர்க்கை அம்மன் வீதியுலா வருவதுண்டு. சித்திரையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று இங்கு விசேஷ ஹோமம் நடைபெறுவது உண்டு. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவர்.

    தன்னை வணங்கும் பக்தர்களின் சகல பாவங்களையும் போக்கி, அவர்களுக்கு நற்பேறு அருள்கிறார் இங்குள்ள அரசமர விநாயகர்.

    கும்பகோணம் அருகே பாபநாசத்தில் இருக்கும் இரட்டை பிள்ளையாரும் சக்தி வாய்ந்தவர்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர்கள் தங்களை தாங்களே வெளிப் படுத்திய அற்பு தம் நடந்தது.

    ஒரு நாள் இரவு தன் பக்தரான முதியவர் ஒருவரின் கனவில் தோன்றினார் பிள்ளையார். குடமுருட்டி ஆற்று வெள்ளம் மூலம் நான் உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். என்னை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யவும், நான் இந்த ஊரையும், என்னை வழிபடும் மக்களையும் காப்பேன்! என்றார்.

    திடுக்கிட்டு எழுந்தார் பெரியவர். 'தான் கண்டது ' கனவா? உண்மையா? புரியவில்லை.

    பொழுது விடிந்ததும் ஊர் மக்களிடம் தான் கண்ட கனவை சொன்னார். பின் ஊர் மக்களை அழைத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்றார்.

    இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடிந்திருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஓரிடத்தில் ஒன்றல்ல, இரண்டு பிள்ளையார் சிலைகள் இருந்தன. அனைவருக்கும் ஆச்சரியம்!

    ஊர் மக்கள் உதவியுடன் அந்தச் சிலைகள் எடுத்து வரப்பட்டு ஓர் அரச மரத்தடியில் நிறுவப்பட்டது. காலப்போக்கில் அங்கு கருவறையுடன் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு, அதில் இரட்டைப் பிள்ளையார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.

    அந்த தலம், பாபநாசம். தற்போது ஊரின் மேல வீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடம். வடமேற்கு மூலை லட்சுமி குடியிருக்கும் இடம் என்பார்கள். அந்த இடத்தில்தான் இரட்டைப் பிள்ளையார் தரிசனம் கிடைக்கிறது.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென் திசையிலும் ஒரு வாயில் உள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயிலையே பயன்படுத்துகின்றனர்.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் மகா மண்டபம், பலிபீடம், மூஞ்சூறு ஆகியவை உள்ளன, அர்த்த மண்டப நுழைவாயிலின் இடது புறம் வள்ளி, தெய்வானையுடன் தனி சன்னதியில் முருகன் அருள்பாலிக்க, எதிரே மயிலும் பலி பீடமும் உள்ளன.

    வலதுபுறம் ஆதி கும்பேஸ்வரரின் தனிச்சன்னதி உள்ளது. இவர் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். வடக்கில் மங்கம்மாளும், வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் அருள்கின்றன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் ஹோமம் சிறப்பு ஆராதனை, விநாயகர் வீதியுலா எல்லாம் உண்டு. சங்கடஹர சதுர்த்தியின் போதும், வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் வேண்டி காத்திருப்போர் இங்குள்ள இரட்டை பிள்ளையாருக்கு 9 வகை தானியங்களால் அர்ச்சனை செய்தால் அவர்களுக்கு விரைந்து திருமணம் நடக்கிறது என்பது நம்பிக்கை. தவிர இங்கு நடைபெறும் ராகு கால பூஜை யில் கலந்துகொண்டால் கடன் தொல்லை களில் இருந்தும், பில்லி சூனிய பாதிப்புகளில் இருந்தும் மீண்டு நலம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.
    • ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும்.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும்.


    உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.

    அதாவது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும்.

    நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும். நீச்ச வீட்டில் அதன் பலத்தை முற்றிலும் இழக்கும்.

    ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.மனித வாழ்க்கைக்கு சந்தோஷம், இன்பம் தருகின்ற நிகழ்வுகள் அனைத்தும் சுக்ரனுடைய காரகத்திற்கு உட்பட்டது என்றால் மிகைப்படுத்தலாகாது.

    அதனால் தான் வாழ்க்கையில் நல்ல வீடு, மனை, வாகனம், நல்ல அழகான வாழ்க்கைத் துணை போன்ற அமைப்புகளோடு வாழ்பவர்களை பார்த்து அவனுக்கு என்ன சுக்கிர திசை நடக்கிறதா? என்று சொல்கிறார்கள்.

    இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது கோட்சாரத்தில் அசுர குருவான சுக்ரன் கன்னி ராசியில் 25.8.2024 முதல் நீசம் பெறுகிறார்.

    18.9.2024 வரை நீடிக்கும் இந்த கிரக நிலவரம் எந்த ராசிக்கு நன்மை தரப் போகிறது? எந்த ராசிக்கு தீமை வழங்கப் போகிறது? இந்த கட்டுரையில் கிரகங்கள் நீசம் பெறுவது நல்லதா? என்பது பற்றி பார்க்கலாம்.

    சுக்ரன்

    சுக்ரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் பரவசம் பெருகும். வயது வித்தியாசமின்றி ஒருவரின் மனதில் இன்ப அலைகளை பரவ விடுவதில் சுக்ரனுக்கு நிகர் சுக்ரனே. காதலுக்கும், காமத்திற்கும் அடிமையாகாத நபரை உலகில் பார்ப்பது அரிது.

    எல்லா மனிதனுக்கும் பொதுவான, சிற்றின்பமான காதல் மற்றும் காமத்தை கொடுக்கும் கிரகம் சுக்கிரன். சில நிமிடங்கள் நீடிக்கக்கூடிய சிற்றின்பமான, காதல், காமத்திற்கும் பெண் ஆசைக்கும் பல கோட்டைகள் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு உள்ளோம்.

    அந்த காமத்தை, ஆசையை தூண்டுவது சுக்கிரன் தான். ஒரு மனிதனுக்கு அழகு, கவர்ச்சியை கொடுப்பதும் சுக்கிரன் தான். ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன்.


    சுக்கிரன், வாழும் வரை ஜாலியாக வாழ்ந்து விட்டு போக வைக்கும் கிரகம். பணம் மட்டும் இருந்தால் போதும், அதை எப்படி வேண்டு மானாலும், அனுபவித்து செலவழிக்க கூடிய கிரகம் சுக்ரன்.

    ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில், பணம் இருந்தாலும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும், கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமய மான வாழ்க்கை இத்தனையையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன்.

    சுக்ரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்களான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை,கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.

    கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரத்தையும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் நீசம் பெற்றால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும்.

    சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். ஒரு மனிதன் யோகமான வாழ்க்கை வாழ்ந்தால், அவனுக்கென்னப்பா சுக்கிர திசை, பிச்சுகிட்டு கொட்டுகிறது என்று படிக்காத பாமரனும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

    உண்மையைச் சொன்னால் சுக்கிரன், எல்லோருக்கும் நல்ல பலனை அள்ளி கொடுத்து விடுவதில்லை. சுக்கிரன் தன்னுடைய நண்பர்களான புதன் , சனியின் லக்னங்களுக்கு யோக கிரகமாக வரும் பொழுது, அவருடைய திசையில் மிகச் சிறப்பான யோக பலன்களை கொடுக்கும்.

    சுக்கிரனின் பகை கிரகமான குருவிற்கு, சுக்கிரன் எந்த விதத்திலும் நல்ல பலனைத் தருவதில்லை. அதேபோல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.

    நீச்ச சுக்ரனால் ஏற்படும் பொதுவான பலன்கள் : 25.8.2024 முதல் 18.9.2024 வரை

    ஒரு கிரகம் நீசம் பெறும் போது இயல்பான தனது காரகத்துவ ஆதிபத்திய ரீதியான பலனை தரத் தவறுகிறது. நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பங்கம் பெற்றால் நூறு மடங்கு ராஜயோகத்தை வழங்கி குப்பை மேட்டில் இருப்பவரை கோடிஸ்வர யோகம் வழங்கி மாளிகையில் வாழ வைக்கிறது.

    ஆண்களின் களத்திர காரகன் சுக்ரன் நீச்சம் பெறுவதால் அதீத திருமணத் தடை இருக்கும். வாழ்க்கைத் துணையால் மன உளைச்சல் மிகுதியாகும்.

    பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய முடியாது. பொன், பொருள் சேராது. நகைகள் அடமானத்திற்கு செல்லும். இனிமையான இல்லறம் அமையாது. தனித்த கிரகங்கள் வழங்கும் பலன்களை விட கூட்டு கிரகங்களால் உண்டாகும் பலன்களில் சாதகம், பாதகம் அதிகம் உண்டு. நீச்சம் பெற்று சுக்ரன் கேதுவுடன் இணைகிறார்.

    நீச்ச சுக்ரன் மேல் குருவின் 5-ம் பார்வையும் செவ்வாயின் 4-ம் பார்வையும் பதிகிறது. பொதுவாக கேதுவுடன் இணையும் கிரகம் தனது காரக, பாவக, ஆதிபத்திய ரீதியான பலன்களை முற்றிலும் இழக்கும். தற்போது கோட்சாரத்தில் நீசம் பெறும் கேதுவுடன் இணைந்த சுக்ரனை குரு மற்றும் செவ்வாய் பார்ப்பது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல.

    அதே நேரத்தில் சுக்ரன் சித்திரை நட்சத்திரத்தில் நீசம் பெறுவார். 12.9.2024 முதல் 18.9.2024 வரையான 7 நாட்கள் மட்டுமே சுக்ரன் பரம நீசம். இந்த காலகட்டத்தில் திருமணம் சம்பந்தமான நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.

    இனி 12 ராசிக்கு நீச சுக்ரன் கேது+ குரு மற்றும் நீச சுக்ரன் கேது + செவ்வாய் இணைவால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.


    மேஷம்:

    ராசிக்கு 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானமான கன்னியில் நீச சுக்ரன் கேது சேர்க்கை இருப்பதால் கடன் தொல்வை, நோய் தாக்கம் குறையும். மாற்றுமுறை வைத்தியம் பலன் தரும்.வீடு வாகன கடன் விண்ணப்பிக்க உகந்த காலம். திருமணத் தடை அதிகமாகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

    ரிஷபம்:

    ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். பங்குச்சந்தை, காதல் தொடர்பான விசயங்களில் அவமானம் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான வம்பு வழக்குகள் இழுபறியாகும். பிள்ளைகளின் திருமணம் கல்வி போன்ற தேவைக்காக கடன் பெற நேரும்

    மிதுனம்:

    ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் கேதுவுடன் இணைகிறார். காதல் கை கொடுக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளைகளின் எதிர்காலம், அதிர்ஷ்டம், பூர்வீகம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். ஆரோக்கியம் தொடர்பான விசயங்களில் கவனம் தேவை

    கடகம்:

    ராசிக்கு 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் பாதகாதிபதி சுக்ரன் நீசம் பெறுகிறார். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். தாய்வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்து மறையும். விவசாயிகளுக்கு, பண்ணை யாளர்களுக்கு சாதகமான பலன் உண்டு. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்கு 2-ம்மிடமான தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்ச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. கற்ற கல்வியால் பயன் உண்டு. ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணியாளர்கள் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். ஞாபகசக்தி குறையும். பாகப் பிரிவினையை தவிர்க்க வேண்டும்.

    கன்னி:

    ராசியில் 2, 9 ம் அதிபதியாகிய சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். சிலர் பூர்வீகத்தை விட்டு எதிர்கால தேவைக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை ஒத்தி வைக்கவும்

    துலாம்:

    ராசி மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரன் ராசிக்கு 12ல் நீசம் பெற்று கேதுவுடன் இணைகி றார். சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும். நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும்.

    விருச்சிகம்:

    ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும். சிலருக்கு முதல் மனைவி இருக்கும் போதே மறு திருமணம் நடக்கும். தம்பதிகளிடம் நெருக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நம்பியவர்களே நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்

    தனுசு: ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நீச சுக்ரன், கேது சேர்க்கை உள்ளது. பொருளாதார வெற்றி,வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும். கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை குறையும். வராக்கடன்கள் வசூலாகும்.

    மகரம்:

    மகரம் ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸதா னத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. காதலிப்பது தவறு என்ற உண்மை புலப்படும். நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். பதவி, புகழ், அந்தஸ்து குறையும்.

    கும்பம்:

    ராசிக்கு 8-ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார்.நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும்.

    மீனம்:

    ராசிக்கு 7-ம்மிடமான களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்ரன் நீசம் அடைந்து வலு குறைவது மிகச் சிறப்பு. வாழ்க்கைத் துணையால் கூட்டாளிகளால் அதிர்ஷ்டம் உண்டு. புரிதலின்றி பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். காதலில் வெற்றி உண்டு.. அலைச்சல் மிகுந்த பயணம் மிகுதியாகும்.


    பரிகாரம்

    புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம். புதன் என்றால் புத்தி அறிவு. சுக்ரனுக்கு காமம் மற்றும் ஆசை காரகமாகும். புத்தி தெளிந்த இடத்தில் ஆசைக்கு இடமில்லை. ஆசை (காமம்) அதிகமுள்ள இடத்தில் புத்திக்கு இடமில்லை என்பது புலனாகிறது.

    நீச்ச சுக்ரனால் இன்னல்களை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    • கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும்.
    • சூரியனின் நட்சத்திரமாகும்.

    கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும். இது சூரியனின் நட்சத்திரமாகும். இதன் முதல் பாதம் செவ்வாயின் மேஷ ராசியிலும் 2, 3, 4ம் பாதங்கள் சுக்ரனின் வீடான ரிஷபத்திலும் உள்ளது. இந்த நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் கூரிய கத்தி போல் காட்சியளிப்பதால் இதற்கு கிருத்திகை என்று பெயர் வைக்கப்பட்டது.

    இதன் தமிழ் பெயர் ஆரல் என்பதாகும். ஆரல் என்றால் தீச்சுடர் என்று பொருள்.இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4ம் பாதங்கள் கழுத்து, தாடை, முகம் போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது.

    கிருத்திகை நட்சத்திர பலன்கள்

    இது சூரியனின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் என்பதால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு.

    சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொழிவு நிறைந்தவர். முன் கோபமும் அதிகமிருக்கும். ஆடம்பரமான, பகட்டான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும்.

    புத்திக் கூர்மை, விவேகம் நிறைந்தவர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.

    தந்தையின் ஆதரவு உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள் . பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். முன்னோர் வழி குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள்.

    எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு டையவர்கள். தொட்டது துலங்கும்.

    நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.தொழிலுக்கு அரசு ஆதரவு உண்டு.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. மற்றவர்களிடம் எதற்காவும் கையேந்த விரும்ப மாட்டார்கள். தங்களின் தேவைகளை தாங்களே சமாளிக்கும் திறமை உள்ளவர்கள். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் வாழ்க்கையில் சில இடர்களை சந்திக்க நேரும்.

    கல்வி

    கல்வியில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார்கள். கிருத்திகை சூரியனின் நட்சத்திரம் என்பதால் நிர்வாகம் சம்பந்தமான படிப்பு, பொருளாதாரம், வணிகவியல், மருத்துவம், ஜெம்மாலஜி, ஜோதிடம் போன்ற படிப்பில் அதிக நாட்டம் உண்டு.

    தொழில்

    முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடம் கூட வேலை பார்க்க மாட்டார்கள். நானே ராஜா, நானே மந்திரி என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். அதிகார பதவிகள், அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும்.

    சுய தொழில், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், அதீத ஆர்வம் உள்ளவர்கள். ஜோதிடம், ஆன்மிகம் போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டு.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. வாழ்க்கைத் துணையுடன் கெத்தாக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

    தொழில் சம்பந்தமாக அடிக்கடி குடும்ப உறவுகளை பிரிந்து வாழ்வார்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணிகலன்கள் மிகவும் மதிப்பாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப கவுரவத்தை காப்பாற்றவதில் அதீத அக்கரையுடன் இருப்பார்கள். தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும்.

    திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு.

    தசா புத்தி பலன்கள் சூரிய தசா:

    இவர்களுக்கு முதல் தசா சூரிய தசாவாகும். இது 6 வருடம் உள்ள சிறிய தசா. பிறப்பில் மீதம் உள்ள தசா வருடத்திற்கு ஏற்ற பலன் நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரம். இது பால் பருவம் என்பதால் சிறு சிறு உஷ்ண நோய் தாக்கம் இருக்கும். தந்தையின் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். தந்தைக்கு அரசு உத்தியோகம் அரசியல் ஆதாயம் உண்டு.

    சந்திர தசா

    இதன் கால அளவு 10 வருடம். பள்ளிப்பருவம். இது தன தாரையின் நட்சத்திரம் என்பதால் சந்திரன் பலம் பெற்றால் இளம் பருவத்திலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். பெற்றோர்கள் நல்ல தொழில், உத்தியோகத்தில் பணியாற்றுவார்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது.

    குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும்.வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.

    செவ்வாய் தசா

    இது 7 வருடம் கொண்ட தசாவாகும். வாலிப பருவம். பள்ளி, கல்லுரி படிப்புகளை கடக்கும் பருவம். பேச்சிலும் முடிவெடுப்பதிலும் வேகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்கு புரியவில்லை என்றால் கோபம் எளிதில் வந்து விடும். வீரதீரச் செயலினால் புகழ் உண்டு. விபத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ராகு தசா

    இதன் தசா வருடம் 18. பல விதமான முதல் திருமணம் குழந்தை, வேலை, தொழில் என முக்கிய சம்பவங்கள் நடக்கும் காலகட்டம்.சேஷம தாரையின் தசை என்பதால் புதிய மனிதர்கள் ஆதரவு உண்டு.

    புதுப்புது கருத்துக்களை தன்னையறியாமல் வெளிப்ப டுத்துபவர். பிறர் யோசனைப்படி நடக்க மாட்டார்கள். சமயோசிதபுத்தி,வேடிக்கையாக பேசும் திறன், மேதாவித் தனம் இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை க்கு செல்வார்கள். எந்த வயதினராக இருந்தாலும் நிச்சயம் காதல் வலையில் சிக்குவார்கள். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற பிரமாண்ட விருப்பம், திட்டமிடுதல் இருக்கும். காதல் திருமணத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.

    குரு தசா

    இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். இது பிரத்யக் தாரையின் தசாவாகும். ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லாத் துறையிலும் தனித் தன்மையுடன் ஜொலிப்பவர்கள் பலர். வீடு, வாசல் என நிலையாக வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள்.

    சனி தசா

    இது 19 வருட காலம் உள்ள பெரிய தசாவாகும். சாதக தாரை ஏனும் 6-வது தசாவாகும். இந்த தசை முடியும் முன்பு பெரும்பான்மை யாக 70 வயதை கடப்பார்கள். வயோ திகத்தால் ஓய்வை மனம் விரும்பும். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர்.

    புதன் தசா

    இதுவும் 17 வருடம் கொண்ட தசாவாகும். இது வரை தாரையின் தசா. சற்று முன் கோபம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு, காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியம் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேது, சுக்ர தசை நடக்கும் வாய்ப்புகள் குறைவு.

    கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள் கத்தி அல்லது வாள் போன்ற உருவத்துடன் காட்சி தருவதால் மரம் வெட்ட, மண் தோண்ட, சுரங்கம் தோண்ட சிறந்த நட்சத்திரமாகும். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் சுப காரியம் செய்ய உகந்ததல்ல. ஆனால் பரிகாரங்கள் செய்வதற்கு உடைபட்ட நட்சத்திரங்களே சிறப்பு உடையது.

    இந்த நட்சத்திரம் கடனுக்கு காரக கிரகமான செவ்வாயின் வீட்டிலும் பண வரவிற்கு காரக கிரகமான சுக்ரன் வீட்டிலும் உள்ளது. மீள முடியாத கடன் தொல்லையில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும் ஆண் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.

    திருமணத் தடை இருப்பவர்கள் தொடர்ந்து 6 மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வர திருமணத் தடை அகலும். செவ்வாய், சுக்ரன் வீட்டை இந்த நட்சத்திரம் இணைப்பதால் திருமணம் ஆகி பிரிந்து வாழும் இந்த நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிபட தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.

    கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் பெறுவதால் உயிர் குல பெண்மணிகள் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்களை சந்திக்க உகந்த நட்சத்திரமாகும்.கலைத்துறையினர் மற்றும் கவிஞர்கள் கிருத்திகை விரதமிருந்து சென்னை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட்டால் நிச்சயமாக அவர்களுடைய எண்ணம் நிறைவேறும். புகழின் உச்சிக்குச் செல்வார்கள்.

    நட்சத்திர பட்சி: மயில்

    யோகம்: ஆயுஸ்மான்

    நவரத்தினம்:மாணிக்கம் தலை

    உடல் உறுப்பு:தலை

    திசை:கிழக்கு

    பஞ்சபூதம்:நிலம்

    அதிதேவதை:அக்னி தேவதை

    நட்சத்திர மிருகம்: பெண் ஆடு

    நட்சத்திர வடிவம்: கத்தி, வாள்

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை:ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    சேம தாரை: திருவாதிரை, சுவாதி, சதயம்

    சாதக தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

    பரம மிக்ர. தாரை: பரணி, பூரம், பூராடம்.

    பரிகாரம்

    இது சூரியனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம். ஜென்ம நட்சத்திர நாளில் வறிய நிலையுள்ள ஆடு அல்லது மாடு வளர்ப்பவர்களின் தேவையறிந்து இயன்ற உதவி செய்ய வேண்டும். முருகன் மற்றும் சிவ வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    சந்தர்ப்பம் கிடைக்கும் போது முருகவழிபாடு செய்தல், ரத்த தானம் செய்தல், தாழம்பூ குங்குமம் தரித்தல் போன்றவை சிறப்பான பலன் தரும். இவர்களின் சாதக தாரையான 6வது நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும்.

    • ஜடாயு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது.
    • ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை.

    ஜடாயு என்கிற வீரக் கழுகு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது. ராமனுக்காக யுத்த காண்டத்தில் நிறையப்பேர் உயிர் துறக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக முதன்முதலில் ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை அது.

    அலகிலா விளையாட்டு உடையானுக்காக, அவன் மனைவியைக் கவர்ந்த ராவணன் முகத்தில் அலகினால் விளையாடிய பறவை.

    ராமன் ஜடாயுவின் நண்பரான தசரதரின் புதல்வன் என்பதே ஜடாயு ராமனிடம் பாசம் கொள்ளக் காரணம். தசரதர் ஜடாயு நட்பு எப்படி ஏற்பட்டது என்றொரு கதை உண்டு.

    கோசலைக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தால் பிறக்கும் குழந்தை மூலம் தான் வதம் செய்யப்படுவோம் என்ற ரகசியத்தை பிரம்மனிடமிருந்து அறிந்துவிடுகிறான் ராவணன். எனவே கோசலையைக் கவர்ந்து, தசரதர் பார்க்க இயலாதவாறு அவளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி நதியில் உருட்டி விடுகிறான்.

    தசரதர் தற்செயலாகப் பெட்டியைப் பார்க்கிறார். பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டவராய்ப் படகில் பெட்டியைத் தொடர்ந்து செல்கிறார். பெட்டி நீரில் மிதந்தவாறே விலகி விலகிச் செல்கிறது. படகோட்டிய தசரதர் பெரிதும் களைப்படைகிறார்.

    அப்போது மேலே பறந்து வருகிறது ஜடாயு. களைத்திருந்த தசரதரைப் பார்த்துப் பரிவுகொள்கிறது அது. தன் முதுகில் அவரை ஏற்றிக் கொண்டு நீரில் மிதந்து செல்லும் பெட்டியைத் தொடர்ந்து வானில் பறந்து செல்கிறது. பெட்டி கரை ஒதுங்கிய இடத்தில் தசரதரை ஜடாயு இறக்கி விடுகிறது.

    பெட்டியைத் திறந்தால் உள்ளே கோசலை! அவள் மலங்க மலங்க விழித்தவாறே பெட்டியை விட்டுக் கீழே இறங்குகிறாள். அங்கே தோன்றுகிற நாரதர் அவர்களுக்குத் திருமால் மகனாகப் பிறக்கப் போகிற விஷயத்தைச் சொல்லி, இருவருக்கும் ஜடாயு சாட்சியாகத் திருமணம் செய்துவைக்கிறார்.

    தான் மணம் செய்துவைத்த தசரதருக்கும் கோசலைக்கும் பிறந்த மைந்தன் என்பதால்தான் ராமன் மேல் ஜடாயுவுக்கு அலாதி பாசம்.

    ராவணன் சிவனிடம் வரம்பெற்று வாங்கிய வாள் சந்திரஹாசம் என்கிற மகாசக்தி நிறைந்த வாள். அதுமட்டும் ராவணன் கையில் இருந்தால் ராமனால் அவனை வென்றிருக்க முடியாது.

    ஆனால் அந்த அபூர்வமான வாளை அவனுக்குத் தந்தபோது சிவன் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். போர் தர்மப்படிப் போர் செய்தால்தான் ராவணனிடம் வாள் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால் அவனை விட்டு அது விலகிச் சென்று விடும்.

    ஜடாயுவுடன் போர்புரிந்து அதன் சிறகுகளைச் சந்திரஹாச வாளால் வெட்டிய பின் அசோக வனத்தில் சீதையை விட்டுவிட்டு மண்டோதரி இல்லம் தேடிப் போகிறான் ராவணன்.

    மண்டோதரி, `பிரபே! போகும்போது சந்திரஹாச வாளை எடுத்துச் சென்றீர்களே? உங்கள் உயிரைக் காக்கும் வாள் அல்லவா அது? இப்போது அதைக் காணவில்லையே? அது எங்கே?` என்று கவலையோடு கேட்கிறாள்.

    ராவணன் திகைக்கிறான். சந்திரஹாச வாள் அவனை விட்டு மறைந்து விட்டது! `அது எப்படி மறைந்தது, நான் போர் தர்மப்படித் தானே போர் செய்தேன்?` என்கிறான் ராவணன்.

    அவன் ஜடாயுவுடன் செய்த போர் பற்றி அவனிடமே கேட்டறிந்த மண்டோதரி அவன் போர் தர்மப்படிப் போர் செய்யவில்லை என்ற உண்மையைத் துயரத்தோடு விளக்குகிறாள்.

    ஆயுதத்தால் போர் செய்பவர்களை ஆயுதத்தால் தாக்கலாம். ஆனால் உடலால் தாக்குபவர்களை கை கால் முதலிய உறுப்புகளைக் கொண்டே தாக்க வேண்டும்.

    ஜடாயு அதன் உடலின் உறுப்பான அலகால் தானே தாக்கியது? அப்படியானால் போர் தர்மப்படி ராவணனும் தன் உடல் உறுப்புகளால் தானே அதைத் தாக்கியிருக்க வேண்டும்? எப்படி ஆயுதமான வாளால் தாக்கலாம்?

    போர் தர்மப்படிப் போர் நிகழ்த்தாததால்தான் சந்திரஹாச வாள் ராவணனை விட்டுச் சென்றுவிட்டது என்பதை மண்டோதரி வருத்தத்தோடு தெரிவித்தபோது அவள் மனம் மிகுந்த சோர்வடைகிறது.

    என்றைக்கு ராவணனிடமிருந்து அந்த வாள் மறைகிறதோ அன்றிலிருந்து ராவணன் வீழ்ச்சி ஆரம்பம் என்ற ரகசியம் அவளுக்கு ஏற்கெனவே அவள் வழிபடும் சிவபெருமானால் சொல்லப் பட்டிருக்கிறது.

    ராவண வதமே ராம அவதாரத்திற்கான நோக்கம். அதற்கு ராவணனை பலவீனப்படுத்துவது முக்கியம். சந்திரஹாச வாளை அவனிடமிருந்து அகற்றியதன் மூலம் ராவண வதத்திற்கான பிள்ளையார் சுழியைப் போட்ட பெருமை ஜடாயுவுக்கு உண்டு.

    ராவணனால் சிறகுகள் முறிக்கப்பட்டு மண்ணில் சாய்ந்த ஜடாயு, ராமனின் வருகைக்காக உயிரைப் பிடித்துவைத்துக் கொண்டு காத்திருந்தது.

    சீதையைத் தேடியவாறு ராம லட்சுமணர்கள் ஜடாயு வீழ்ந்து கிடக்கும் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

    வழியில் வீணைக்கொடி ஒன்று சிதைவுற்றுக் கிடப்பதைக் கண்டார்கள். எனவே வீணையைக் கொடியாகக் கொண்ட அரக்கனின் தேர் அங்கு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

    அரக்கனது வில் முறிந்து கிடப்பதையும் பார்த்தார்கள். அது ஜடாயு வாழும் பிரதேசமாகையால் ஜடாயுதான் தன் அலகால், வந்த அரக்கனின் வில்லை முறித்திருக்க வேண்டும் என்பதையும் யூகித்து அறிந்துகொண்டார்கள்.

    அரக்கனின் அம்பறாத் துணி, கவசம் போன்றவையும் ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்ததைக் கண்டார்கள். திகைப்புடன் அதே பாதையில் தொடர்ந்து நடந்தார்கள். ஓர் இடத்தில் அரக்கனது குண்டலங்கள் சிதறிக் கிடப்பதையும் கூடக் கண்டார்கள்.

    ஜடாயுவுக்கும் வந்த அரக்கனுக்கும் இடையே கடும் போர் நடந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் அவர்கள் கால்வைத்த இடங்களில் எல்லாம் தென்பட்டன.

    ராம லட்சுமணர்கள் ஜடாயு எங்கே என்று அந்தக் கழுகைத் தேடிப் பாசத்தோடு ஓடினார்கள். அந்த வீரம் நிறைந்த கழுகு குற்றுயிரும் குலை உயிருமாக அவர்களின் வரவை எதிர்பார்த்துத் தன் சிறிய விழிகளைத் திறந்தவாறு மண்ணில் கிடந்தது.

    ஜடாயுவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான் ராமபிரான். நடைபெற்ற அனைத்தையும் மரணப் படுக்கையில் இருந்த ஜடாயுவிடம் முழுமையாகக் கேட்டு அறிந்தார்கள் ராம லட்சுமணர்கள்.

    வந்தவன் பத்துத்தலை அரக்கன் என்பதையும் அவன் சென்ற வழி தென்திசை என்பதையும் அவர்களிடம் பெருமூச்சு வாங்கச் சொன்னது அந்தக் கழுகு. ஜடாயு இறக்கப் போகிற தருணம்.

    ஜடாயு சொன்ன விவரங்களைக் கேட்ட ராமனுக்குச் சீற்றம் பொங்கியது. `இவ்வளவு நடந்திருக்கிறது, இந்த உலகம் சும்மா இருந்து விட்டதே? இந்த உலகை என்ன செய்கிறேன் பார்!` என அவன் வில்லை வளைத்தான்.

    ஜடாயு நகைத்தது. உயிர் போகிற தறுவாயில் கூட, யாருக்காக உயிரை விடுகிறதோ அவரிடமே நியாயத்தை தைரியமாக எடுத்துச் சொல்ல அது மறக்கவில்லை.

    `கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` என்று ஜடாயு கேட்டதாக எழுதுகிறார் கம்பர்.

    சீதையை அருகே இருந்து காப்பாற்றாமல் தவறு செய்துவிட்டு உலகைக் கோபிப்பது என்ன நியாயம் என்ற ஜடாயுவின் கேள்வி ராமன் நெஞ்சைச் சுட்டிருக்க வேண்டும். ராமன் தலை குனிந்தான். ஜடாயுவின் தலை மண்ணில் சாய்ந்தது...

    அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் வியப்பளிப்பவை. மனித ராமன் பறவையான ஜடாயுவுக்கு ஈமக்கடன் செய்ய முற்பட்டான். மணலால் பெரிய மேடை அமைத்தான்.

    லட்சுமணன் உதவியோடு சந்தனக் கட்டைகளைக் காட்டிலிருந்து வெட்டிவந்தான். மணல் மேடையின் மேல் நறுமணம் கமழும் அந்தக் கட்டைகளை அடுக்கினான்.

    கானகமெங்கும் விளைந்திருக்கும் தருப்பைப் புல்லைப் பறித்து அந்தக் கட்டைகளின் மீது சமமாகப் பரப்பினான். அந்த தருப்பைப் படுக்கையின் மேல் வண்ண வண்ண மலர்களைப் பறித்து வந்து பரப்பி ஒரு மலர்ப் படுக்கை அமைத்தான்.

    பின்னர் நதியிலிருந்து நீர் எடுத்துவந்து ஜடாயுவின் உடலை நீராட்டினான். அப்போது ராமன் விழிகளிலிருந்து பெருகிய நீரும் அந்த நதி நீரோடு சேர்ந்தே ஜடாயுவை நீராட்டியது.

    தன் மனைவியைக் காப்பாற்றும் பொருட்டாகக் கடுமையாய்ப் போரிட்டு அந்தப் போரில் உயிரையே துறந்துவிட்ட அந்த வீரப் பறவையின் உடலை மெல்லத் தன் நீண்ட கரங்களால் பூப்போல அள்ளி எடுத்து, மலர்ப் படுக்கையில் கிடத்தின ராமனின் தாமரைப்பூங் கரங்கள்.

    பின்னர் சந்தனம், மலர், நீர் முதலியவற்றை ஜடாயுவின் உடலின் மீது சொரிந்த ராமன் மந்திரங்களை உச்சரித்தவாறு, தன் தந்தைக்குக் கொள்ளி வைப்பதுபோன்ற நெகிழ்ச்சியுடன் ஜடாயுவின் உடலுக்குக் கொள்ளி வைத்தான். நெருப்பு கணகணவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    ஒரு பறவைக்குக் கடவுளே கொள்ளி வைக்கும் பெரும்பேறு கிடைத்த மகத்துவத்தை எண்ணி வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வியந்தார்கள்.

    அதன்பின்னர் ராமனும் லட்சுமணனும் அருகேயிருந்த ஒரு காட்டாற்றில் குளித்தார்–கள். நதிக்கரையில் ராமன் ஜடாயுவுக்கு மிகுந்த பாசத்தோடு நீர்க்கடன் செய்தான்.

    `நம் தந்தைக்கு நாம் செய்ய இயலாமல் போன ஈமக் கடனை நம் தந்தையை போன்ற ஜடாயுவுக்குச் செய்து நாம் ஆறுதல் அடைகிறோம் லட்சுமணா!` என ராமன் சொன்னபோது லட்சுமணன் விழிகளிலும் கரகர–வெனக் கண்ணீர், வெள்ளமாய்ப் பெருகியது.

    பின்னர் ஒருவாறு தங்கள் மனத்தைத் தேற்றிக் கொண்டு அவர்கள் இருவரும் சீதையைத் தேடித் தொடர்ந்து நடக்கலானார்கள் என்கிறது ராமாயணம்.

    ஒரு சிறிய பறவைப் பாத்திரமான ஜடாயுவை படிக்கும் நம் மனத்தில் பறந்துபோகாமல் நிலையாக நிற்கும்படிச் செய்துவிட்டது ராமாயணம்...

    தொடர்புக்கு- thiruppurkrishnan@gmail.com

    • இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி.
    • பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன்.

    பரணி

    இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன். இதன் ராசி அதிபதி செவ்வாய். பரணி என்றால் தாங்கிப்பிடிப்பது அல்லது தாங்குவது என்று பொருள்.

    வானில் முக்கோண வடிவ அடுப்பு போல் நமது கண்ணிற்கு காட்சி தருவதால் இதற்கு பரணி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் நீச்சமடையும் கிரகம் சனி.

    பரணி என்பது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இப்பெண் நட்சத்திரம் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது.

    பரணி நட்சத்திர பொது பலன்கள்

    செவ்வாயின் வீட்டில் உள்ள சுக்ரனின் நட்சத்திரம் பரணி என்பதால் இதில் பிறந்தவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்றிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் பிறரை கவரும் வீரம், தைரியம் அழகு நிரம்பியவர்கள்.

    பரணி, தரணி ஆளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பார்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்துவார்கள். தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள், மனோ தைரியம் உள்ளவராகவும், அனைத்து விஷயங்களை யும் அறிந்தவராகவும் திகழ்வார்கள் இசை,நடனம், நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள். வாசனைத் திரவியங்கள் ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவார்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவற்றை ரசித்துச் சாப்பிடுவார்கள்.

    ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றால் சிறு வயது முதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சுயமுயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணங்கள் ஏற்படும்.

    மிகுந்த செல்வச் செழிப்புடன் பொருளாதார கஷ்டம் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.

    வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத்தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்பட செய்யும் ஆற்றல் உண்டு. விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றவர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள்.

    சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் இளம் வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால் வாலிப வயதில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீராத நோய், கடனில் உழல்கிறார்கள். இளம் வயதில் வறுமையை அனுப வித்தவர்கள் வாலிப வயதில் பொறுப்பான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறார்கள்.

    கல்வி

    அழகிற்கு முக்கியத்துவம் தரும் இவர்கள் கல்வியை இரண்டாம் பட்சமாகவே நினைப்பார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் பலம் பெற்றால் நன்றாக அரசியல், நிர்வாகம், மருத்துவத்துறையில் கண், முகம் சார்ந்த படிப்பு, சிவில் என்ஜினியரிங், விவசாயம் சார்ந்த படிப்புகள், அழகுக் கலை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற படிப்புகள் பலன் தரும்.கலை மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள்.

    தொழில்

    தொழில் நெளிவு, சுழிவுகள் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள். கடின உழைப்பு மற்றும் ஆர்வ மிகுதியால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த தொழிலிலும் சிறந்து விளங்குவார்கள்.

    நிர்வாக வேலைகள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வணிகம் , கலைத்துறை போன்றவை அவர்களுக்கு மிகவும் விருப்பமான துறையாகும்.எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள், தம்மை பின்பற்றும் வகையில் ஒரு வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பதவிகளை வகிக்கும் வல்லமை பெற்றவர்கள்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப பிறவியில் நல்ல வசதியான சுகமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். சுக, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பான்மையாக இல்லை என்ற நிலை இருக்காது. இவர்கள் பேச்சில் காதலும், கவர்ச்சியும் நிரம்பி இருக்கும். வசீகரமான பேச்சால் அனைவரையும் வசப்படுத்தும் தந்திரவாதிகள். உணவுப் பிரியர்கள். ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் நிறைய ஆர்வம் உள்வர்கள்.

    சுக்ரன், செவ்வாய் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். இளம் வயதில் திருமணம் உண்டு. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தை அரவணைத்து வழி நடத்தும் பண்பாளர்கள். வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பார்கள்.

    சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொள்ளும் குணம் கொண்டவர்கள். அறிவுத் திறனும், திறமையும் உண்டு. சிறுசிறு உடல் நல பாதிப்பு இருக்கும். தீர்க்க ஆயுள் உள்ளவர்கள். எந்த விசயத்தையும் திட்டமிட்டு செயல்ப டுத்துவார்கள். வீடு, வாகனம், சொத்து சேர்க்கை உள்ளவர்கள்.

    தசாபலன்கள்

    சுக்ர தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ர தசா முதலில் வரும். இது 20 வருடம் உள்ள மிகப் பெரிய தசாவாகும்.

    ஒவ்வொருவருக்கும் பிறந்த காலத்தில் ஆரம்பமாகும் முதல் தசை ஜன்ம நட்சத்திரத்தின் முழு காலமும் இருக்காது. அந்த நட்சத்திரம் கடக்கும் விநாடியை பொருத்தது. கர்ப்ப செல் இருப்பை கணிப்பை வைத்துதான் தசா நாட்கள் கண்டறிய முடியும்.

    இளமை கால வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலோ மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    சூரிய தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டாவதாக வருவது சூரியதசா. மொத்தம் 6 ஆண்டுகள். இது சம்பத்து தாரையின் நட்சத்திரம். பிறப்பில் சுக்ர தசா அதிக வருடம் நடப்பில் இருந்தால் இளம் பருவத்தில் சம்பாதிக்க துவங்குவார்கள். பால்ய வயது மற்றும் பள்ளிப் பருவமாக இருந்தால் தந்தைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். படிப்பில் சுட்டியாக இருப்பார்கள். நல்ல தேக சுகம், ஆரோக்கியம் நிறைந்தவர்கள்.

    சந்திர தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவதாக சந்திர தசா நடக்கும். இது விபத்து தாரையின் தசாவாகும்.எதிலும் எதிர் நீச்சல் போட்டு திட்டமிட்டு முன்னேற வேண்டும். இந்த தசையில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். நல்ல விருப்பமான மனதிற்கு பிடித்த இடப்பெயர்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்களின் அனுசரணை இருக்கும். மத்திம வயதினருக்கு பாகப்பிரிவினை சொத்து கிடைக்கும்.

    செவ்வாய் தசா

    நான்காவதாக செவ்வாய் தசை வரும். இது சேஷம தாரையின் நட்சத்திரம். இந்த தசையில் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். அரசு வேலை வாய்ப்பு, அரசாங்க காண்டிராக்ட், அரசு வழி ஆதாயம், அரசியல் பதவி என அவரவரின் வயதிற்கு ஏற்ற சுப பலன்கள் உண்டு.

    பிறவியில் சுக்ர தசை மிக குறுகிய காலம் மட்டும் இருந்தால் திருமணம், குழந்தை, நல்ல தொழில், உத்தியோகம் என நல்ல யோகங்கள் கூடி வரும்.எந்தத் துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியை போல் செயல்படுவார்கள்.

    ராகு தசா

    ராகு தசாவின் பலனை ஐந்தாவது தசையாக பரணி நட்சத்திரதாரர்கள் அனுபவிப்பார்கள். இது பிரத்யக் தாரையின் நட்சத்திரம்.சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் பெரும் வாழ்வியல் மாற்றம் உண்டு. எதிர்பாராத பல சம்பவங்கள் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.

    பிறரை அடக்கியாளும் எண்ணம் அதிகமாகும்.வெற்றி வீரராக லட்சியவாதியாக முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர்கள் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள்.துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள்.

    குரு தசா

    பரணி நட்சத்திரதாரர்கள் ஆறாவது தசையாக 16 வருடம் குரு தசையை சந்திப்பார்கள். இது சாதக தாரையாகும்.இந்த காலகட்டத்தில் பிறந்த கால சுக்ர தசைக்கு ஏற்ப 40 முதல் 60 வயது வரையில் இருப்பார்கள்.தோல்வியால் சரிந்து போன நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

    வணிகவியல், காது, கண் ஆகிய துறைகளிலும் பைனான்ஸ், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்ட வர்களாக இருப்பார்கள்.

    சனி தசா

    ஏழாவது தசையான சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். இது தாரை நட்சத்திரமாகும்.

    வைராக்கியம் மிகுதியாக இருக்கும். மனதிற்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை புரிந்து கொண்டு வாழ்வார்கள். பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் முன்னோர்களின் பரம்பரை நோய் தாக்கம் உண்டாகும்.

    ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான எண்ண ஓட்டம் இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எட்டாவது தசையான புதன் தசையும், 9-வது தசையான கேது தசையும் பெரும்பான்மையானவர்கள் சந்திப்பதில்லை.

    பரணி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்.

    மேஷ ராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு , முக்கோணம் போன்று காட்சியளிக்கிறது .

    இந்த நட்சத்திரதாரர்கள் முதன் முதலாக. புதியதாக கட்டிய வீட்டில் அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு, சாந்தி முகூர்த்தத்திற்கும், செங்கல் சூளைகளில் நெருப்பிடுவதற்கும், மாந்திரீக சக்கரம் வரைவதற்கு மாந்திரீக தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கும், ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும் ,போர் புரிவதற்கும் உகந்த நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் நீசம் அடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது பரணியில் வேலைக்கு அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள்.

    தொழிலாளர்களால் பிரச்சினைகள் வரும் போதும் தொழிலாளர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர் போராட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரம் ஆகும். இதில் திருமணம் செய்வது சிறப்பல்ல. ஆனால் திருமண தடைகள் நீங்க வழிபாடு செய்யலாம்.

    பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிக்கு தொடர்ந்து 3 மாதங்கள் சென்று காமாட்சியை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

    நட்சத்திர பட்சி: காகம்

    யோகம்: ப்ரீதி

    நவரத்தினம்: வைரம்

    உடல் உறுப்பு:கீழ் பாதம்

    திசை: கிழக்கு

    பஞ்சபூதம்: நிலம்

    அதிதேவதை: துர்க்கை

    நட்சத்திர மிருகம்: ஆண் யானை

    நட்சத்திர வடிவம்: அடுப்பு, முக்கோணம்

    பரணிக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்

    தாரைகள் சம்பத்து தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    சேம தாரை: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.

    சாதக தாரை: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

    பரம மிக்ர. தாரை: அஸ்வினி, மகம், மூலம்.


    பொதுவான பரிகாரங்கள்

    பரணி சுக்ரனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சுக்ர ஓரையில் மகாலட்சுமி அல்லது பெண் தெய்வ வழிபாட்டை கடைபிடிப்பது அம்மன் சுலோகங்களை கேட்பதாலும், படிப்பதாலும் மேன்மையான பலன்கள் உண்டு. இவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பால், தயிர், சந்தனம், வைரம் போன்றவற்றை, தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

    தினமும் வலம்புரிச் சங்கில் புனித நீர் தயாரித்து காமாட்சியம்மன் படத்தின் முன்பு வைத்து அருந்த வாழ்க்கை வளம் பெறும்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். நெல்லிக்காய் மரக் கன்று தானம் செய்யலாம். காகம், யானைக்கு உணவிடலாம்.

    ஓயிட் ஜெர்கான் ரத்தின மோதிரம் அணியலாம். உங்களின் சாதக தாரையான 6-வது நட்சத்திரமான புனர்பூசத்தன்று ஸ்ரீ ராமரை வழிபட வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

    • அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
    • குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள்.

    கொஞ்ச நாளாக ஆன்மீகமே தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் மருத்துவ கருத்துக்கள் விட்டுப் போகின்றதே என்ற கவலையும் நெருடலாய் இருக்கின்றது.

    இரண்டும் கலந்து ஒரே கட்டுரையில் கொண்டு வருவது என்பதும் சரிப்படாது. ஆகவே அவ்வப்போது மாற்றி எழுதலாம் என்ற நினைப்பேன் இம்முறை மருத்துவக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஒரு நிகழ்வு. நன்கு அறிந்த ஒரு பெண்மணி. தனது தோற்றத்திற்கு அதிக கவனம் கொடுப்பவர். அதாவது சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு என எல்லாவற்றிலும் கவனமாய் இருப்பவர். அவரை சில வருடங்களுக்கு பிறகு நான் சந்திக்க நேர்ந்தது.

    முகத்தில் வயதுக்கு மீறிய கோடுகள், சுருக்கங்கள், முதுமை தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே மாறி இருந்தது. பார்த்தாலே ஏதோ உடல் நலம் இல்லாதவர் போல் இருந்தார்.

    காரணம் கேட்டபோது வாழ்வில் ஏற்பட்ட சில பாதிப்புகள், வேதனைகள் அதிக மன உளைச்சலை தந்ததாகவும் இதனால் சர்க்கரை உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றார்.

    சிலருக்கு காலையில் எழுந்தவுடனேயே ஜிலேபி மற்றும் பால் அருந்துவது வழக்கம். சிலர் இட்லி, தோசை, உப்புமா, கஞ்சி என எதற்கும் சர்க்கரை போட்டுக் கொள்வர். சிலர் டீ, காபியினை கூட பாயாசம் போல் சர்க்கரை சேர்த்து அருந்துவர்.

    இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கொலாஜன் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.

    * கொலாஜன், எலாஸ்டின் இரண்டுமே சரும கட்டமைப்பிற்கு காரணமாகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்து கின்றது. இந்த வீக்கம் சரும திசுக்களை பாதிக்கின்றது. தொடர் வீக்கம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

    * உடலுக்குரிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தியினை உடல் இழக்கின்றது.

    * இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகின்றது.

    * சருமம் சொர சொரப்பாக இருக்கும்.

    * சருமத்தில் திட்டு, புள்ளிகள், கறுப்பு போன்றவை ஏற்படுகின்றது.

    * சருமம் தொய்ந்து வலுவிழந்து காணப்படுகின்றது.

    எனவே சர்க்கரையைத் தவிர்ப்பதே பல நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள். இதில் அனைத்து பிரிவுகளும் அடங்கும். வெள்ளை சர்க்கரை கூடுதல் பாதிப்பினைக் கொடுக்கும். மற்ற பிரிவுகளை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் ஒரு மாதம் இவ்வாறு இருந்து பாருங்கள். கேக், சாக்லேட், பிஸ்கட், வெள்ளை சர்க்கரை இனிப்பு இவை அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்தித்தான் பாருங்களேன்.


    கடந்த சில மாதங்களாக வெய்யிலின் கடுமை தாங்காது மயக்கம், ஜுரம், சோர்வு என பாதிப்புக் கடுமையாய் இருந்தன. இதில் 'மைக்ரேன்' பாதிப்பு தலைவலி எனக் கூறியவர்களும் அதிகம்.

    இந்த தலைவலி வருவதற்கு முன், வந்த பிறகு, தலைவலி போன பிறகு என்ன அறிகுறிகளைக் காட்டும். முதலில் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * உடைக்கும் தலைவலி அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம், சத்தம், நல்ல மனம் இவை கூட தொந்தரவாக இருக்கும்.

    * எரிச்சலுடன் இருப்பர். முகம், கழுத்து, மண்டை இவற்றில் வலி இருக்கும்.

    * மூக்கடைப்பு இருக்கும்.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

    * வயிறு உப்பிசம், ஜீரண கோளாறு இருக்கலாம்.


    மைக்ரேன் தலைவலி:

    * மைக்ரேன் தலைவலி துடிக்கும் தலைவலியாக இருக்கும்.

    * அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம் ஆகாது. தலை வலியுடன் வயிற்று பிரட்டல் வாந்தி என இருக்கும்.

    * சற்றும் நகரக் கூட முடியாது.

    * காரணமற்ற சோர்வு, அதிக கொட்டாவி இருக்கும்.

    இந்த அறிகுறிகள் சாதா தலைவலியில் இருந்து மாறுபட்டவை. அதிக முறை சிறுநீர் போகும். கொட்டாவி வரும். சிலர் சாக்லேட் சாப்பிட்டவுடன் ஏற்படும். இவை அனைத்தும் 'நான் வந்து விட்டேன்' என மைக்ரேன் சொல்லும் அறிகுறிகள்.

    * மனச்சோர்வு, திடீரென்று உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினை, கலங்களான பார்வை. இவை கூட மைக்ரேன் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உணர்ந்து கொள்ளும் அறிகுறிகளாகத் தெரியும்.

    * இந்நேரங்களில் நெய், வெண்ணை, சீஸ், கொட்டை வகைகள், மது, புளித்த உணவுகள், ஊறுகாய் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

    இது மைக்ரேன் தான் என உணர்ந்தவர்கள் வெளிச்சம், இல்லாத அறையில் இருப்பது, வெகு வெதுப்பான நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பது. மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றினை செய்யலாம். ஆயினும் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    * தலைவலி ஆரம்பிக்கும் முன்போ அல்லது அப்போதோ பார்வையில் மாறுதல்கள் ஏற்படலாம்.

    * கை, கால், முகம் இவற்றில் குறுகுறுப்பு உணர்வு இருக்கலாம்.

    * பேச்சு தடுமாற்றம் இருக்கலாம்.

    * காதில் சத்தம், ஒரு பக்க முகம், உடல் பலமிழந்தது போல் இருக்கலாம்.

    * இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவை.

    * மைக்ரேன் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.

    * குடும்ப ரீதியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஏற்படுகின்றது.

    * அதிக மன உளைச்சல், படபடப்பு, தூக்கமின்மை இவை இந்த பாதிப்பினை கூட்டலாம்.

    * ஹார்மோன் மாறுபாடு ஏற்படும் காலங்கள், சீதோஷ்ண நிலை மாறுபடும் காலங்கள், சில வகை மருந்துகள் அதிக உடற்பயிற்சி, புகையிலை, சிகரெட், சில வகை உணவுகள் ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

    மருத்துவ கருத்துக்கள் விழிப்புணர்விற்காக எழுதப்படுபவை தானே தவிர, தானே முடிவு செய்து தானே சிகிச்சை செய்து கொள்வ தற்காக அல்ல. ஆக படியுங்கள். அறிந்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாதீர்கள்.


    * நீங்கள் முயற்சி செய்யாமல் வேகமான எடை குறைவு ஏற்படும் போது

    * தொடர் சோர்வு இருப்பது. போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாகவே இருப்பது.

    * தொடர்ந்து வலி எந்த காரணமும் இன்றி இருப்பது, சாதாரண வலி நிவாரணிகள் மூலம் பயன் இல்லாது இருப்பது.

    * உடல் மஞ்சள் நிறம், கண்ணில் மஞ்சள் நிறம், உடல் அரிப்பு போன்றவை (இது மஞ்சள் காமாலை பாதிப்பால் இருப்பதுதான். என்றாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது)

    * சரும மரு, மச்சம் இவற்றில் மாற்றம், சரும புண்கள் ஆறாது. ரத்தம் கசிதல்.

    * கழிவு வெளிப் போக்கில் ரத்தம், அடிக்கடி வயிற்றுப் போக்கு அடிக்கடி மலச்சிக்கல்.

    * சிறுநீர் செல்லும் போது வலி நிற மாற்றம்.

    * விழுங்குவதில் கடினம்.

    * மாத விலக்கு சுற்றில் மாற்றம் போன்றவை உடனடி யாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.

    ×