என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 107524"

    வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் உணவு தேடி இடம் மாறிச் செல்கின்றன. உணவு கிடைக்காத சமயத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

    இதனை தடுக்கும் வகையிலும்  வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று கூடலூர் வனப்பகுதியில் 1000 மூங்கில் விதை பந்துகளை வீசினர்.

    இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மொத்தம் 10 ஆயிரம் மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1000 விதைப்பந்துகள் வீசப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் எதிர்காலத்தில் மூங்கில் காடுகள் பெருகி விடும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் வராது என்றனர்.

    வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயிலை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடலுக்குள் மரண பாறை ஒன்று உள்ளது. பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான இந்த மரண பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் அந்த மயிலை படம் பிடித்ததோடு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலிபன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், அர்ஜுனன், வனக்காவலர் ஜோயல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் ஒரு குழுவாக அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சுமார் 1 மணிக்கு கடலில் அமைந்து உள்ள மரணப்பாறையில் சிக்கிய அந்த மயிலை நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர்.அதன்பின்னர் அந்த மயிலை பாதுகாப்பான வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் லாரியில் ஏற்றி திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரை நியமித்திருந்தார். மாலா தனது யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார்.

    அவர் உரிய அனுமதியில்லாமல் யானையை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து 30 பேர் அடங்கிய வனக்குழுவினர் நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள மாலா வீட்டிற்கு சென்றனர்.

    வனத்துறையினருடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர். யானைக்குரிய ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானை உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது. அது குறித்து மாலாவிடம் வனத்துறையினர் விசாரித்தனர்.

    அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து மாலா வளர்த்து வந்திருக்கிறார். அதற்கான ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண் யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்டு கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆனால் அதற்கு மாலா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்த அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்டனர்.

    பின்பு அதனை அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அந்த யானையை பராமரித்து வந்த அந்த பாகன் வனத்துறையினர் வந்த போதே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாகன் இல்லாததால் லாரியில் ஏற யானை மறுத்தது. இதனால் யானையை லாரியில் ஏற்ற மாற்று பாகன் வரவழைக்கப்பட்டார்.

    அவரின் உதவியுடன் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது. 

    வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம், ஆயக்கரன்புலம், பன்னாள் தென்னடார் வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பறவையான மயில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மயிலை சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா காப்பாற்ற முயற்சி செய்தார். 

    ஆனால் மயில் இறந்துவிட்டது. இது குறித்து கோடியக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தனர்.
    கோடியக்கரை வனக்காவலர் ரனில்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்தனர். 

    பின்பு வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் முன்னிலையில் இறந்த மயிலை வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா ஒப்படைத்தார். 

    பின்பு வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
    ஆசனூர் அருகே யானைகள் கூட்டமாக ரோட்டில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் மற்றும் வன விலங்குகள் உள்ளன.

    ஆசனூர், தாளவாடி, தலமலை பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வன விலங்குகள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் உள்ள வன குட்டையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

    கடந்த வாரம் வனபகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த மரம் செடிகள் உயிர் பெற்று பசுமையாக காட்சி அளிக்கிறது. கோடை மழை பெய்தாலும் ஆசனூர் பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

    இதனால் யானைகள் ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கூட்டமாக வருகிறது. அவ்வப்போது ரோட்டை கடக்கும் யானைகள் அங்கு உள்ள மூங்கில் மரத்தை உடைத்து சாப்பிட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ அபராதம் விதிக்கபடும் என்று எச்சரித்தனர்.
    திருவோணம் அருகே நள்ளிரவில் வீட்டு முன்பு கட்டிப்போட்டிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே சேவல் விடுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோபால் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப்போட்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம விலங்குகள் 6 ஆடுகளின் கழுத்தில் கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு தப்பி சென்று விட்டன.

    இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கோபால் , தனது 6 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் திருவோணம் போலீசிலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆடுகளை கொன்று ரத்தத்தை குடித்தது சிறுத்தையா? அல்லது நரிகளா? என்று தெரிய வில்லை.

    ஏற்கனவே திருவோணம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் மேல்மலையில் புலி தாக்கி அடுத்தடுத்து 5 மாடுகள் பலியான சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் வனப்பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    வனத்துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய்து வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கூக்கால் வனப்பகுதியில் 4 காளை மாடு மற்றும் ஒரு பசு மாடு என 5 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாடுகளின் உடலில் வன விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருப்பதால் புலி தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.இதனையடுத்து வன அதிகாரி பழனிக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர் தங்கராஜ் தலைமையில் இன்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே புலி தாக்கித்தான் இறந்ததா? அல்லது வேறு வன விலங்குகள் கடித்ததா? என தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    தொண்டாமுத்தூர் அருகே கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்ற 7 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
    பேரூர்:

    கோவை தொண்டாமுத்தூர் இருட்டுபள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதி மலையடிவார கிராமத்தில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சிறுத்தை கடந்த வாரம் பூலுவம்பட்டி கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்றது. எனவே இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் எந்த பகுதியில் உள்ளது என ஆய்வு செய்தனர். அப்போது இருட்டுப்பள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க பச்சினாம்பதி பகுதியில் கடந்த மாதம் 26-ந் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கி இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் சோழமன்னன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். அப்போது இந்த சிறுத்தை 7 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி பன்னாரி வனச்சரகத்துக்குட்பட்ட தெங்குமரகடா வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள காளிமங்கலத்தில் ஒரு சிறுத்தை சிக்கியது. தற்போது 2- வது முறையாக இந்த பகுதியில் சிறுத்தை சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    புளியங்குடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. #tamilnews
    புளியங்குடி:

    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விளை நிலங்கள், தோட்ட பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் புளியங்குடியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமாக பள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் இன்று காலை 4 வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானை புகுந்தது. அது வழி தெரியாமல் திரிந்த போது அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    கிணற்றுக்குள் கிடந்த தண்ணீரில் குட்டி யானை தத்தளித்து கொண்டிருந்தது. அதனை அந்த தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் புளியங்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.



    யானையை மீட்க கிணற்றில் ஒரு புறத்தில் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து, யானை மேலே வருவதற்கு வசதியாக ஜே.சி.பி. மூலம் வழியை ஏற்படுத்தினர். பின்னர் குட்டி யானையை கயிற்றால் கட்டி பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து வெளியே மீட்டு கொண்டு வரப்பட்டது.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டது. பின்பு அந்த குட்டி யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர். #tamilnews
    கொடைக்கானல் கீழ்மலையில் கஜா புயலை காரணம் காட்டி மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தமிழகத்தை சுருட்டி வாரிய கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.

    மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்தனர். தற்போது குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதிபெற தாமதமாவதால் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவுப்படி தனி தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ கையொப்பமிட்ட அனுமதிசீட்டுடன் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் சாய்ந்த மரங்களுடன் நன்றாக இருக்கும் மரங்களையும் வெட்டி கடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    புயலால் சாய்ந்த மரங்களை வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும் லாரிகளில் அதிகளவு மரங்கள் கொண்டு செல்வது வாடிக்கையாகி உள்ளது. சித்தரேவு சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மணலூர், கே.சி.பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து புயலால் சாய்ந்த மரங்களை ஏற்றி வருவதாக கூறினர்.

    ஆனால் அந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விலை உயர்ந்த சில்வர்ஓக், தீக்குச்சி செய்ய பயன்படுத்தும் மலைமுருங்கை மரங்கள் இருந்ததால் லாரிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற உரிய அனுமதிவாங்கி மரங்களை வெட்டினார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உரிய அனுமதி சீட்டு இருந்தால் லாரிகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் யானைக்கூட்டம் தினந்தோறும் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அதனை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் தமிழக எல்லைக்குள் நுழைந்த யானைக்கூட்டம் தினந்தோறும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

    இந்த யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாத வனக துறையினரை கண்டித்தும், யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டி யானை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயிர் சேதாரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் தேன்கனிக்கோடடை பழைய பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.
    தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
    இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    ×