search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad Landslide"

    • நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    வயநாடு:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

    நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது.

    200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை.

    இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும். அதனை அரசு பொறுப்புடன் மேற்கொள்ளும்.

    இந்த பகுதியில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கோழிக்கோட்டில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டிற்கு வந்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடி வயநாட்டில் நிலச்சரிவு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர் மேப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயன் மேப்பாடி, சூரல்மலை பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னா் சூரல்மலையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிட்டார். மேலும் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
    • இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது.

    வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

    பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

    ராணுவத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நேற்று மாலை 5.50 மணிக்கு தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் எந்திரங்கள் பாலத்தில் சென்றன.

    20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் வெற்றிகரமாக அமைத்து உள்ளனர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன.
    • தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அடித்து செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதை உள்ளூர்வாசிகள் பார்த்து உள்ளனர். குறிப்பாக போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் மான்கள் கூட்டம் அடித்து செல்லப்பட்டது.

    மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன. அத்துடன் நிலம்பூர் பகுதியில் 3 காட்டுயானைகள் சாலியாற்றில் தத்தளித்து சென்றன.அதில் ஒரு யானை பாறை மீது ஏறி நின்றது. மீதமுள்ள 2 யானைகள் நீந்தி சென்று கரையேறின. இதனால் அவை உயிர் தப்பின.

    இது தவிர திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே காலடி தோட்ட பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் காட்டுயானை ஒன்று செத்து ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரகர் மேத்யூ தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாழைச்சால் பகுதியில் இரும்பு பாலத்தின் அடியில் காட்டுயானையின் உடல் ஒதுங்கி கிடப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆற்றை கடக்க முயன்ற போதோ அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டோ காட்டுயானை இறந்து இருக்கலாம். இறந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றனர்.

    • மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
    • மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியதோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் மணப்பெண்ணின் சோகம் சொல்லி மாளாது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    மேப்பாடியை சேர்ந்தவர் சிவண்ணன். இவருடைய மனைவி சபிதா. இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என 2 மகள்கள். சுருதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரேயா கட்டப்பனாவில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். சுருதி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் தப்பினார். இதனால் அவர் குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.

    இதுகுறித்து சுருதி கண்ணீர் மல்க கூறும்போது, எனக்கு டிசம்பரில் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரூ.4½ லட்சம், 15 பவுன் நகைகளை பெற்றோர் சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 6 வாரங்களுக்கு முன்பு நாங்கள் புதிய வீட்டில் குடியேறினோம். நிலச்சரிவால் அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெற்றோர், தங்கை இறந்து விட்டதால் எனது வாழ்க்கையே இருண்டு விட்டது என்றார்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் சூரல்மலையை சேர்ந்தவர் சுஜாதா. இவருடைய மகன் ஜிகிஷ். மருமகள் சுஜிதா. பேரன் சூரஜ், பேத்தி மிருதுளா. இவர்கள் 5 பேரும் வீட்டுக்குள் இருந்தபோது, 30-ம் தேதி அதிகாலை வீட்டு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நிலைமையை உணர்ந்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை ஒவ்வொருவராக வீட்டில் இருந்து கயிறு கட்டி வெள்ளத்தை கடந்து சென்றார்.

    அப்போது மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஜிகிஷ் மன உறுதியுடன் தனது குடும்பத்தினரை டார்ச் லைட் வெளிச்சத்தில் மேடான பகுதிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அவர்கள் சென்ற வழியில், எதிரே சற்று தூரத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு புறம் யானைக்கூட்டம், மறுபுறம் காட்டாற்று வெள்ளம். எங்கு சென்றாலும் ஆபத்து காத்திருந்த சூழ்நிலையில், அவர்கள் 5 பேரும் மெதுவாக நகர்ந்து சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

    இதனால் வெள்ளம் மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து அந்த குடும்பம் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் கிராமத்த நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.
    • சாலியார் ஆறு தனது போக்கை மாற்றியதால் கிராமங்கள் நாசமாக்கப்பட்டன.

    கேரள மாநிலம் வயநாட்டில் 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப்பணி இன்னும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், நிலச்சரிவு மீட்புப்பணி, பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து கூறியதாவது:-

    உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதற்கு காரணம் சாலியார் ஆறுதான். இந்த ஆறு நிலச்சரிவு காரணமாக தனது போக்கை மாற்றியது. இதனால் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து சூறையாடிவிட்டன. இருந்தபோதிலும் நிலச்சரிவால் நாசமான முதல் கிராமத்தை இன்னும் நாங்கள் சென்றடையவில்லை.

    ஏனென்றால் நிலச்சரிவால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ராணுவ பொறியாளர்கள் குழு பெய்லி பிரிட்ஜ் (குறுகிய பாலம்) கட்டிக்கொண்டு வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் இந்த பாலம் கட்டும் பணி முடிவடையும். பாலம் கட்டப்படும் வரை சேத அளவை சரியாக மதிப்பிட முடியாது. ஏனென்றால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் இடத்தை நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.

    முதலில் பாதிக்கப்பட்ட கிராமம் ரிமோட் (நகரத்தில் இருந்து மிகத் தொலையில் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில்) கிராமம் கிடையாது. அது மலைப்பகுதி. இருந்தபோதிலும் ரிமோட் கிடையாது. நகரப் பகுதியின் ஒருபகுதி. 100 வருட பழமையாக குடியிருப்புகள் கொண்டது.

    தற்போது மீட்புப்பணி மற்றும் நிவாரணம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆறு தன்னுடைய போக்கை மாற்றியுள்ளது. மீண்டும் பழைய இடத்திற்கு போக்கை மாற்றலாம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. ஆற்றங்கரையோரம் உள்ளவர்களும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், அமித் ஷா ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துபோல் தெரிகிறதே? என்ற கேள்விக்கு "இந்த விஷயங்களைக் கணக்கிடுவதற்கு நேற்று நேரம் இல்லை. எனவே அந்தப் பிரச்சினைக்குள் நான் செல்லக்கூடிய நிலையில் இல்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்களை சந்திக்க, மக்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது..

    உள்துறை மந்திரி அமித் ஷா எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதில் சந்தேகம் அடைய எனக்கு எந்த காரணமும் இல்லை" என்றார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • வயநாட்டில் இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர்.

    இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே, தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கணவர் துணிச்சலாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.
    • ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது.

    நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.

    மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.

    அதுமட்டுமின்றி இன்று அனைத்து கட்சி கூட்டத்தையும் நடைபெறுகிறது. அனைத்து கட்சியினரும் அதில் பங்கேற்றுள்ளனர். 

    இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

    அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முகாமிட்டுள்ள அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினருக்கு ஆணை பிறப்பித்தார். அது மட்டுமின்றி நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது.

    ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கேரள வந்தனர். கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இயற்கைச் சிற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாளை தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன. மேலும் அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ×