ஆன்மிக களஞ்சியம்

ஆண்களை அனுமதிக்காமல் பெண்கள் மட்டுமே செய்யும் சிறப்பு விநாயகர் விரதம்

Published On 2024-06-28 11:01 GMT   |   Update On 2024-06-28 11:01 GMT
  • 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
  • மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

தை, ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில், பெண்கள் பிள்ளையார் விரதத்தை தொடங்குவார்கள்.

பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை இருப்பார்கள், ஆண்கள் இவ்விரதத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் அநேகமாக இந்த விரதம் நடக்கும் போது வீட்டை விட்டு வெளியிலோ அல்லது வெளியூருக்கோ சென்று விடுவார்கள்.

5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

பெண்கள் எழுந்து நீராடித் தூய்மையான ஆடைகளை அணிந்து நெல் குத்துவார்கள்.

பிறகு குத்தின அரிசியை மா இடித்து, அதை உப்பில்லாமல் பிசைந்து, தேங்காய் துண்டுகளை அதில் போட்டு இளநீரை விட்டு நன்றாகப் பிசைவார்கள்.

அடையும் உருண்டையுமாகச் செய்து நீராவியில் வைக்கோலைப் பரப்பி அதன் மேல் வைத்து ஆவி போகா வண்ணம் மூடி வேகவைப்பார்கள்.

பிறகு ஈனக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலை ஆகியவற்றைக் கொண்டு சூழல் அமைத்து, அதன் நடுவே பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள்.

பிறகு தேங்காய், பழம், பாக்கு வெற்றிலையை பரப்பி, கொழுக்கட்டைகளையும் பரப்பித் தூபமிட்டு, பிரார்த்தனை செய்து, ஒளவையார் பூஜை செய்யும் வழிமுறையை விளக்கிய கதையை அதன் பயனை கதையைச் சொல்லத் தொடங்குவார்கள். (இந்த கதை பெண்களுக்கு மட்டுமே தெரியும்).

கதை முடிந்ததும் கற்பூர தீபாராதனை காட்டி, நைவேதியம் செய்து, பிறகு அனைவரும் கூடி அவரவர்களுக்குரிய அடைகளை உண்பார்கள். (இரவில் அல்லது மாலை நேரத்தில் தான் செய்வார்கள்).

பொழுது விடியுமுன் நான்கு நாழிகைக்கு முன்பே எழுந்து, இரவு கொழுக்கட்டை வேகவைத்த வைக்கோல் மற்றும் புங்க இலை, புளிய இலை, பூஜை செய்த பூ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விட்டு பிள்ளையாரையும் வழியனுப்பி விட்டு வாய் பேசாமல் நிறை குடத்துடன் மஞ்சள், குங்குமம் அணிந்து வெற்றிலை மென்றபடி வீடு திரும்புவார்கள்.

அன்று முழுவதும் யாருக்கும் காசு, தானியம் ஏதும் கொடுக்க மாட்டார்கள்.

பெண்களால் செய்யப்படும் இவ்விரதம் இன்றும் சிறப்பாக செய்யப்படுகின்றது.

Tags:    

Similar News