ஆன்மிக களஞ்சியம்

கஞ்சனூர் சுக்கிரன் சுவாரசிய தகவல்கள் - 16

Published On 2024-05-16 11:49 GMT   |   Update On 2024-05-16 11:49 GMT
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.
  • அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

1. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலாகும்.

2. இது மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது.

3. காவிரியின் வடகரை ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாக விளங்கி வருகிறது.

4. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன.

5. பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரி என்னும் பல பெயர்களால் கஞ்சனூர் அழைக்கப்படுகிறது.

6. 1,500 ஆண்டு காலத்திற்கு முன்னதாக, மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய சீர்காழியில் அவதரித்த சைவசமயக்குரவர் நால்வரில் முதல்வரும், சைவ சமயத்தின் தனிப்பெருந் தலைவருமான திருஞான சம்பந்தப்பெருமான் எழுந்தருளி தரிசித்த தலம் இது.

7. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளில் இத்தலம் "விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றார், நாட்டுக் கஞ்சனூர் என்றும், இறைவன் அக்னீஸ்வரம் உடையார் என்றும்" குறிக்கப்பெற்றுள்ளன.

8. இத்தலத்தின் மூர்த்தியின் நாமம் சுக்கிர பகவான் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆகும். அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

9. ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்து அற்புதங்கள் பல செய்த திருத்தலம் இது. இந்த ஸ்தலத்தில் பராசர முனிவருக்கு ஏற்பட்ட சித்தப்பிரமை நீங்கியது.

10. பிரமதேவருக்கு திருமணக்கோலக் காட்சி கிடைத்தது. அக்னிக்கு பாண்டுரோகம் தீர்ந்தது. கம்சனுக்கு மூத்திர நோய் தீர்ந்தது.

11. மாண்டவ்யப் புத்திரர்களுக்கு மாத்ரு ஹத்தி தோஷம் நீங்கி மோட்சம் கிடைத்தது. சந்திரனுக்கு சாபம் நீங்கியது. கலிக்காம நாயனாருக்குத் திருமணம் நடந்தது.

12. விருத்தன் என்ற பிராமணனுக்கும், காளகண்டன் என்ற வேடனுக்கும் மோட்சம் கிடைத்தது. சித்திரசேனன் என்ற கந்தர்வனின் சாபமும் விஷ்ணுவின் சாபமும் நீங்கின.

13. மானக்கஞ்சாறர், ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் துறையூர் வீரமார்த்தாண்ட மன்னன், மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னன், பாண்டியப் பேரரசி மங்கையர்க்கரசியார் முதல் அமைச்சர், குலச்சிறையர் வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகள், மார்க்கண்டேயர், சுரைக்காய் பக்தர், அக்னிசிங்க மகாராஜா போன்ற பெருமக்கள் கஞ்சனூர் தலத்தில் வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள்.

14. மூலவராகிய சுக்கிர பகவானாக விளங்கும் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தி, பலாச வனத்தில் பூமியின் உள்ளிருந்து தானே தோன்றியவர்.

15. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.

16. மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 284ம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த குருமகா சன்னிதானம் முதல் 288வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வரை, அவர்களால் திருப்பணிகள் பல செய்விக்கப் பெற்றன.

Tags:    

Similar News