ஆன்மிக களஞ்சியம்
null

பராமரிப்பாளன் பணக்காரன் ஆன கதை

Published On 2024-06-25 12:15 GMT   |   Update On 2024-06-26 05:32 GMT
  • பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
  • வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.

ஒரு தேவாலயத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பில் இளைஞன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து அவன் வயோதிகப் பரவத்தையும் அடைந்து விட்டான்.

புதிதாகப் பொறுப்பேற்க அந்த தேவாலயத்துக்கு ஒரு பாதிரியார் வந்தார்.

தேவாலயத்தைப் பராமரிக்கின்றவன் எழுதப்படிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டுமென அவர் எண்ணினார். இந்த வயோதிகனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.

ஆறு மாதத்துக்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவன் வேலையிலிருந்து விலக வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார்.

அந்த வயதில் அவனால் எழுத படிக்க முடியவில்லை. எனவே ஆறு மாதத்துக்குப் பிறகு வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டான்.

பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.

இரண்டு மைல் நீளமுள்ள அந்த சாலையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் கடை இல்லை.

தன்னைப் போல் எத்தனை பேர் தண்ணீர் இல்லாததால் அவதிப்பட்டிருப்பார்கள் என்று யோசித்த அவன், அந்தச் சாலையில் தண்ணீர் கடை வைக்க எண்ணி, உடனடியாக வைத்தும் விட்டான்.

வியாபாரம் பெருகி விரைவில் பெரும் பணக்காரனாகி விட்டான். கணக்கு விஷயமாக ஒருநாள் வங்கிக்கு சென்றிருந்தான். வங்கி அறிக்கை ஒன்றினைப் படித்து அவன் கையெழுத்திட வேண்டியிருந்தது.

படிக்கத் தெரியாது எனச் சொல்லி படித்துக் காட்டும்படி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி, "எழுதப் படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி இருக்கிறீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்" என்றார்.

எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளாகவே இருந்திருப்பேன் என்றான் அவன்.

Tags:    

Similar News