ஆன்மிக களஞ்சியம்

வேலை வணங்குவதே வேலை

Published On 2024-01-24 11:59 GMT   |   Update On 2024-01-24 11:59 GMT
  • அவனை ”வேல்வல்லான்” என்று கலித்தொகையும் ”வல்வேல் கந்தன்” என்று புறநானூறும் புகழ்கின்றன.
  • முருகனது வேல் மகிமையுடையது. மேன்மையானது, தெய்வீகத் தன்மையுடையது.

முருகனது ஆயுதங்களில் வேலே சிறப்பாக போற்றப்படுகிறது.

அவனை "வேல்வல்லான்" என்று கலித்தொகையும் "வல்வேல் கந்தன்" என்று புறநானூறும் புகழ்கின்றன.

முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி என்று கூறலாம்.

இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.

பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது.

இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப்பெறுகின்றார்.

"வேல் வாங்குதல்" சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், "சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்" என்ற பழமொழி தோன்றியது.

முருகனது வேல் மகிமையுடையது. மேன்மையானது. தலைமையானது, தெய்வீகத் தன்மையுடையது.

எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது.

பண்டைகாலத்தில் தனிக்கோட்டம் அமைத்து முருகனது வேலை வழிபட்டனர்.

இதற்கு "வேல் கோட்டம்" என்று பெயர்.

முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.

ஆதிகாலத்தில் இந்த ஊர் வேல்கோட்டம் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் செம்பாலும், பொன்னாலும், ஐம்பொன்னாலும் வெள்ளியாலும் வேல்களைச் செய்து போற்றி வழிபடுகின்றனர். இந்த வேல்களின் உயரம் ஆறங்குலத்திற்குள் இருக்க வேண்டும்.

வேலைத்தனியாகவும் வழிபடலாம். அல்லது பீடத்தில் எழுந்தருளச் செய்தும், திருவாசி அமைத்தும் வழிபடலாம்.

சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது.

முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.

சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர்.

வேலைத் தினமும் வழிபடுவது நல்லது.

குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபட வேண்டும்.

மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.

"எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

எழுந்தே மகிழ்ந்து,

தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழுதே உருகி,

அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

அடியேன் சடலம்

விழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

செந்தில் வேலவனே."

-பாம்பன் சுவாமிகள்

Tags:    

Similar News