கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆனி மாத ராசிபலன்

Published On 2024-06-13 02:54 GMT   |   Update On 2024-06-13 02:55 GMT

நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரது வக்ர காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். உற்சாகம் குறையும். உடல்நல தொல்லை அதிகரிக்கும். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருப்பதால் அதிகச் செலவு செய்யும் சூழலும் உருவாகும்.

சனி வக்ரம்

ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரப் பற்றாக் குறையின் காரணமாக ஒரு சிலருக்கு கைமாற்று வாங்கும் சூழல் கூட உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம். சாதாரண சிகிச்சையிலேயே குணம் பெற வேண்டிய உடல்நிலை, இப்பொழுது ரண சிகிச்சை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படும். சனிக் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட்டால் பணியில் இருக்கும் தொய்வு அகலும்.

கடக - புதன்

ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான அவர், 6-ல் வரும்பொழுது எதிரிகள் விலகுவர். இல்லம் தேடி ஒரு நல்ல தகவல் வரலாம். ெவளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்லது நடக்க வழிகாட்டுவர். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

கடக - சுக்ரன்

ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தாய்வழி ஆதரவு உண்டு. பெற்றோர், உற்ற துணையாக இருப்பார்கள். பிரபலங்களின் தொடர்பால் பெருமை காண்பீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்நிலை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மொத்தத்தில் இக்காலம் இனிய காலமாகவே அமையும். பணிபுரியும் இடத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

ரிஷப - செவ்வாய்

ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. 'வாசல் தேடி வந்த வரன்கள் திரும்பிச் சென்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடையும் விதத்தில் மணமாலை சூடும் வாய்ப்பு வரப்போகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.

பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு அதை விரிவு செய்ய போதுமான பொருளாதாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு நிதிப் பற்றாக்குறை அகலும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரிய பெருமக்களின் அறிவுரை முன்னேற்றம் வழங்கும். பெண் களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூன்: 17, 18, 22, 23, 29, 30, ஜூலை: 3, 4, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News