கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி

Published On 2024-07-01 11:10 GMT   |   Update On 2024-07-01 11:10 GMT
  • இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

சென்னை:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.

ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சினே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் கடைசி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்வார்ட் 122 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நாடின் டி கிளர்க் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 37 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சுபா- ஷபாலி ஜோடி விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்தது. இதனால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக சினே ரானா தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News