null
ரோகித், ஷுப்மன் கில் சதம்... நியூசிலாந்து வெற்றி பெற 386 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இந்தூர்:
இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இஷான் கிஷன் 17 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 54 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாகூர் 25 ரன்கள், குல்தீப் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.