ஆன்மிக களஞ்சியம்

அதிசயக் கருடாழ்வார் சொல்லும் செய்தி

Published On 2024-10-23 11:03 GMT   |   Update On 2024-10-23 11:03 GMT
  • எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார்.
  • ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார்.

திருப்பதி கோவிலின் இடப்பக்கத்திலே திருக்குளம் வெட்டும் பொழுது அங்கிருந்த ஒரு மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டிருந்ததாகவும், மரத்தை வெட்டினால் முனிஸ்வரன் வெகுண்டு அத்தலத்திற்குத் தீங்கிழைத்து விடக் கூடுமாதலால், அம்முனீஸ்வரரைப் பாதமாகச் செதுக்கி அம்முனீஸ்வரருக்கு காவலாகத்தான் மூலைக்கெருடனை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இச்செய்தி செவிவழிச் செய்தியாயினும், மூலைக்கெருட பகவானின் அபார சக்தியை நோக்குங்கால், உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.

எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார்.

ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார்.

இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று 'மஹா சுவாதி' என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

பக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர்.

இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல், பில்லி, சூனியம், மனவியாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கருடனின் வீரம்

கருடனின் வீரம் மிகப்பெரியது. இவரை நினைத்தாலே விஷ ஜந்துக்களில் முக்கியமாக பாம்பினால் துன்பம் ஏற்படாது.

கருட பஞ்சாட்சரி மந்திரம் இவரைப் பற்றியது. இம் மந்திரம் மந்திரங்களில் சிறந்தது என்பார்கள்.

"கருடன்" என்றால் சிறகுகளைக் கொண்டு பறப்பவன் என்று பொருள். வைணவர்கள் கருடனை "வரதா, வரதா" என்று சேவிப்பார்கள்.

உண்மையான பக்தர்கள் இறைவனுக்கு ப்ரீதியாகி, உன்னத நிலை அடைவர் என்பதற்கு கருடனே சிறந்த உதாரணம்.

Similar News