ஆன்மிக களஞ்சியம்

விஷேச பலன்களை அருளும் கருட வழிபாடு

Published On 2024-10-23 12:15 GMT   |   Update On 2024-10-23 12:16 GMT
  • கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
  • கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

1. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். "காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ" என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

2. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

3. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

4. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

5. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

6. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

7. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

8. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

9. கருடன் மட்டுமே இறக்கையை அசைக்காமல் பறக்கும். கருடனின் நிறம் பழுப்பு.

10. கழுத்து வெள்ளை. பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

11. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

12. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

13. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

14. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

15. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

16. விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷயங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் தானே கருடன் என்ற கருடோஹம் பாவனையில் பலவகை கருட மந்திரங்களையும் லட்சக்கணக்கில் ஜபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

17. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

18. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

19. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. கருடனுக்குக் கோபம் வந்தால் சிறகுகளை உதறிப் பறக்கும்.

20. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!

ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

Similar News