ஆன்மிகம்

பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2018-08-28 03:32 GMT   |   Update On 2018-08-28 03:32 GMT
நெல்லிக்குப்பத்தில் உள்ள பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கோவிலில் எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோவில் கும்பாபிஷேக 9-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 25-ந்தேதி மாலையில் பிரசன்ன வெங்கடாசலபதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுதர்சன யாகம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோக நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 2-ம் காலயாகசாலை பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே இடத்தில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயலட்சுமியும், பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News