ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் உத்தமர்கோவில் சாமிகள் தீர்த்தவாரி கண்டருளினர்

Published On 2019-02-20 09:09 GMT   |   Update On 2019-02-20 09:09 GMT
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் மற்றும் உத்தமர்கோவில் சாமிகள் தீர்த்தவாரி கண்டருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலிருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார்.

பின்னர் நேற்று காலை புறப்பட்டு 10 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 10 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இன்று காலை (புதன்கிழமை) அன்பில் சென்றடைகிறார்.

மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார்.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள், அன்பில் சுந்தர்ராஜபெருமாள் சாமிகளை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News