ஆன்மிகம்
கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனிதிருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தபோது எடுத்தபடம்

அம்பை-கல்லிடைக்குறிச்சி கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-04-06 03:57 GMT   |   Update On 2019-04-06 03:57 GMT
அம்பை, கல்லிடைக்குறிச்சி கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சத்யசீலன், ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சிவராமன், காசிநாதர் பக்தர் பேரவை சங்கர நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 7-ம் திருநாளன்று காலையில் பச்சை சாத்தியும், தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வருதலும், கும்பிடு நமஸ்காரம், அங்கபிரதட்சணம் ஆகியவையும் நடக்கிறது.

பின்னர் மாலையில் அன்னம் சொரிதல், இரவில் அகஸ்தீஸ்வரருக்கு, சிவபெருமான் திருமண காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. இதேபோல் அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலிலும் 8-ம் திருநாளன்று மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் இரவில் பூக்கடை பஜாரில் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அம்பை, கல்லிடைக்குறிச்சி செங்குத்தர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News