ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

Published On 2019-04-08 04:34 GMT   |   Update On 2019-04-08 04:34 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் 7.40 மணிக்கு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரை.ராஜசேகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 19-ந் தேதி காலை 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News