வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது

Published On 2022-04-08 04:58 GMT   |   Update On 2022-04-08 04:58 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை நடந்தது. காலையில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் கிரிப்பிரகார வீதி வழியாக சுவாமி-அம்பாள்கள் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News