வழிபாடு
நாராயணன் நாமம் உணர்த்தும் உண்மை

நாராயணன் நாமம் உணர்த்தும் உண்மை

Published On 2022-05-12 07:15 GMT   |   Update On 2022-05-12 09:50 GMT
நாராயணரின் திருநாமத்தை ‘நாராயண நாராயண’ என்று நொடிக்கு ஒரு முறை உச்சரித்தபடியே இருப்பவர் என்று புராணங்கள், நாரத முனிவரைப் பற்றி கூறுகின்றன.
நாராயணன் என்ற சொல்லில் உள்ள ‘நாரம்’ என்ற பதத்திற்கு, ‘தண்ணீர்’, ‘தீர்த்தம்’ என்று அர்த்தம். பெருமாள் கோவில்களுக்குச் சென்றால், அங்கு துளசி தீர்த்த பிரசாதம் வெகு பிரசித்தம். தீர்த்தம் என்பது நாராயணரின் பெயரில் பாதி என்பதால்தான், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாராயணன் என்ற சொல்லின் மறுபாதியில் உள்ள ‘அயணன்’ என்பதற்கு, ‘படுக்கை உடையவன்’ என்று அர்த்தம். ‘பாற்கடலாகிய தீர்த்தத்தில் படுத்திருப்பவன்’ என்பதே ‘நாராயணன்’ என்ற சொல்லுக்கு விளக்கமாகும்.

நாரம் என்ற சொல்லிற்கு, ‘பிரம்ம ஞானம்’ என்ற பொருளும் உண்டு. ‘இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது’ என்ற தத்துவத்தையே நாராயணனின் நாமம் நமக்கு உணர்த்துகிறது.

நாராயணரின் திருநாமத்தை ‘நாராயண நாராயண’ என்று நொடிக்கு ஒரு முறை உச்சரித்தபடியே இருப்பவர் என்று புராணங்கள், நாரத முனிவரைப் பற்றி கூறுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக நாரதர் இருக்கிறார். அவர் தோன்றியபோது, இந்த உலகத்தில் நீரின் அளவு குறைவாகவே இருந்ததாகவும், அவர் பிறப்புக்குப் பின், அவர் உச்சரித்த ‘நாராயண நாராயண’ என்ற நாமத்தின் காரணமாக உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் பெருகியதாகவும் சொல்லப்படுகிறது.

Similar News