குழந்தை பராமரிப்பு
null

குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெற்றோரின் பங்கு!

Published On 2024-07-28 03:18 GMT   |   Update On 2024-07-29 09:27 GMT
  • வீட்டு சூழல் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையானதாகும்.
  • பாதுகாப்பை உணரும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் முகத்தில் வெளிப்படும் புன்னகை மட்டுமே தீர்மானித்து விடாது. அவர்கள் மகிழ்ச்சியான சூழலில் வளர்வதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியமானது. அதற்கு வித்திடும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

பாதுகாப்பு

பாதுகாப்பான மற்றும் ஆதரவான வீட்டு சூழல் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையானதாகும். பெற்றோருடன் பாதுகாப்பான தொடர்பையும், பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்ளும் சூழலில் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணரும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு நன்கு ஆராய்ந்தும், பெற்றோரிடம் தயக்கமின்றி கலந்தாலோசித்தும் முடிவுகளை எடுப்பார்கள். சிறந்த சமூக திறன்களையும் வளர்த்துக் கொள்வார்கள்.

நேர்மறை எண்ணங்கள்

குழந்தைகள் நேர்மறையான எண்ணங்கள், செயல்பாடுகளை பின்பற்றுவதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. அவ்வாறு செயல்படுவதற்கு ஊக்குவிப்பது மகிழ்ச்சியுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டது. பெற்றோரிடம் இருந்து அடிக்கடி பாராட்டுகளையும், ஊக்கத்தையும் பெறும் குழந்தைகள் தனித்திறன்மிக்கவர்களாக வளர்வார்கள். சுயமரியாதை உணர்வோடு செயல்படுவார்கள்.

விளையாட்டு

குழந்தைகள் விளையாடுவதற்கென்றே தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அத்தகைய விளையாட்டு நேரம் குழந்தைகளின் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால் அதனை தீர்க்கும் திறனை வளர்க்க உதவும். குழந்தைகள் தங்களின் திறன் மற்றும் உடல் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான சூழலை விளையாட்டு வழங்குகிறது.

நட்புகள்

சக உறவுகள் மற்றும் சக நண்பர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு அதிக ஆதரவும், மதிப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. நெருக்கமான நட்பை கொண்ட குழந்தைகள் அதிக சுயமரியாதையை கொண்டுள்ளனர். அவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சமச்சீர் ஊட்டச்சத்து

குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சமச்சீரான, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு முக்கியமானது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ளும் குழந்தைகள் சிறந்த மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கொண்டுள்ளனர். சரியான ஊட்டச்சத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலைக்கு முக்கிய பங்களிக்கும்.

உடல் செயல்பாடு

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மனநலத்தையும் மேம்படுத்தும். குழந்தைகள் தினமும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் குறைக்கும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிடுகிறது.

சுதந்திரம்

குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட விடுவதும், அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு ஊக்குவிப்பதும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க அனுமதிப்பது, அவர்களை திறமையானவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் வளர வழிகாட்டும். அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.

குடும்ப நேரம்

குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து விளையாடுவது, சேர்ந்து படிப்பது, உணவு உட்கொள்வது போன்ற செயல்பாடுகள் குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும். குடும்பத்தினருடன் தவறாமல் நேரத்தை செலவிடும் குழந்தைகள் அதிக மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் வாழ்வது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News